சனி, 26 செப்டம்பர், 2015

1000 ரூபாய் ஹெர்குலிஸ் சைக்கிளில் தொடங்கி  
ஒரு கோடி ரூபாய் பி.எம்.டபிள்யு கார் வரை! 
1G முதல் 5G வரை ஓர் அறிவியல் பயணம்!
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-3)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------  
2G ,3G போன்ற தலைமுறை மாற்றங்கள் எல்லாம் 
வயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா மொபைல் 
சேவைக்கு மட்டுமே பொருந்தும். நிலைத்த 
தொலைபேசியான  நிலவழித் தொலைபேசியில் 
(Landline Telephone) இத்தகைய தலைமுறை 
மாற்றம் எதுவும் கிடையாது.

உலகம் முழுவதும் 4G பெருவாரியான நாடுகளில் 
பயன்பாட்டில் உள்ளது. கடந்த மாதம் (ஆகஸ்ட் 2015) 
இந்தியாவில் நாடு தழுவிய அளவில் 4G சேவையை 
(4G LTE எனப்படும் 4G யை விடக் குறைந்த சேவை)
ஏர்டெல் நிறுவனம் அறிமுகப் படுத்தியதால், இந்தியாவும் 
4G பயன்பாட்டுக்கு நெருக்கமாக வந்து விட்டது.

ஐந்தாம் தலைமுறை வந்து விட்டதா? உலகில் 
எங்கெல்லாம் 5G இருக்கிறது என்கிற கேள்விகள் 
எழுவது இயற்கையே.
உலகில் எங்கும் 5G இல்லை என்பதே இதற்கு விடை.

2010-2011 காலக்கட்டத்தில் 4G வளர்த்தெடுக்கப் பட்ட 
உடனேயே, 5Gயை உருவாக்கும் பணிகள் தொடங்கி 
விட்டன. ஐரோப்பியத் தொலைதொடர்பு தரநிர்ணயக் 
கழகம் (European Telecomn Standards Institute) என்ற அமைப்பு 
5Gயை வளர்த்தெடுத்து அதற்கான தரநிர்ணயத்தை 
உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. பல்வேறு 
மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுவனங்களும் மொபைல்  
சேவை நிறுவனங்களும் இப்பணியில் துணை புரிந்து 
வருகின்றன.

2019இல் 5Gக்கான தரநிர்ணயம் இறுதியாகும் என்றும்,
அவ்வாறு இறுதியானால் 2020-2021  ஆண்டுகளில் 
5G சேவை தொடங்கும் ( Commercial Rollout of 5G service)
என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. எப்படிப் பார்த்தாலும் 
உலகில் 5G வருவதற்கு இன்னும் 6,7 ஆண்டுகள் ஆகும்.

அப்படியானால் இந்தியாவில் 5G வருவதற்கு இன்னும் 
எத்தனை ஆண்டுகள் ஆகும்? கால தாமதம் ஆகுமோ 
என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம். ஏர்டெல் 
இருக்கும்போது கவலைப் படலாமா? இருக்கிற ஒண்ணே 
முக்கால் ஜி, ரெண்டேமுக்கால் ஜி ஆகியவற்றை 
வைத்துக் கொண்டு 5G, 6G என்று சேவை வழங்கத்தான் 
ஏர்டெல் தயாராக இருக்கிறதே! பின் ஏன் கவலை? 

5G என்பது பிக்காசோவின் நவீன ஓவியம்!
--------------------------------------------------------------------
ஆண்டுதோறும் பார்சிலோனா நகரில் உலக மொபைல் 
காங்கிரஸ் (World Mobile Congress) நடைபெறும். வயர்லெஸ் 
தொழிலில் உள்ள அனைவரும் இங்கு கூடி, தங்களின் 
கருவிகள் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பகிர்ந்து 
கொள்வர். கடந்த மார்ச் 2015இல் நடைபெற்ற காங்கிரசில் 
பேசிய ஒரு தொழில் (நுட்ப) அதிபர், 5Gயை பிக்காசோவின் 
நவீன ஓவியத்துக்கு ஒப்பிட்டார்.

(ரவிவர்மா மரபான ஓவியர்; பிக்காசோ நவீன ஓவியர்.
மரபான ஓவியம் என்பது பார்த்ததை அப்படியே வரைவது.
நவீன ஓவியம் என்பது பார்த்ததை வரையாமல் 
உணர்ந்ததை வரைவது. இது நவீன ஓவியத்திற்கான ஒரு 
இலக்கணம் என்பதை ஓவிய ஆர்வலர்கள் அறிந்திருக்கக் 
கூடும்).

5G யின் ராட்சச வேகம்!
----------------------------------------
5G வரும்போது, அதன் வேகம் அசுரத்தனமாக இருக்கும்.
10 Gbps வரையிலான வேகம் கிடைக்கும். இதுவரையிலான
2G, 3G, 4G சேவைகளில் நாம் உணர்ந்த வேகம் Kbps மற்றும் 
Mbps தான். 5Gஇல்தான் Gbps வேகத்தை உணரப் போகிறோம்.

தொழில்நுட்ப விவரங்களைத் தவிர்த்து விட்டு,
சராசரி நுகர்வோர் 5Gயை எப்படிப் புரிந்து கொள்வது?   
ஒரு முழுநீள ஹாலிவுட் சினிமாவை பதிவிறக்கம் 
செய்து முடிப்பதற்கு, 3Gயில் பல மணி நேரம் ஆகும்.
4Gயில் பல நிமிடங்கள் ஆகும். 5Gயில் சில நொடிகள் 
ஆகும்.

இன்னும் எளிமையாகச் சொல்வதானால், 
2G என்பது சைக்கிள்.
3G என்பது ஸ்கூட்டர்.
4G என்பது  மாருதி ஏ.சி கார்.
5G  என்பது பி.எம்.டபிள்யு கார். 
1000 ரூபாய் சைக்கிளில் தொடங்கிய அறிவியலின் 
பயணம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள BMW காரில்
தொடர இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------
தொடரும் 
***************************************************************        

    


              

        

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக