செவ்வாய், 29 செப்டம்பர், 2015

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
பித்தலாட்ட ஏர்டெல்லின் குறுக்குவெட்டுத் தோற்றம்!
---------------------------------------------------------------------------------------
அலைக்கற்றை பற்றிய அறிவியல் கட்டுரை (பகுதி-5)
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------ 
ஏர்டெல் நிறுவனத்தின் 4G பித்தலாட்டம் குறித்த எமது 
கட்டுரை வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை 1430 பேர் அக்கட்டுரையைப் பகிர்ந்துள்ளனர்.
இது எதைக் காட்டுகிறது?  ஏர்டெல் மீதான வாடிக்கை
யாளர்களின் கடும் அதிருப்தியைக் காட்டுகிறது.

கிராமத்தில் ஒன்று சொல்வார்கள், "மடுவைக் கறந்து பால் 
சாப்பிடலாம், மடுவை அறுத்துப் பால் சாப்பிடலாமா?" என்று. 
அதைப்போல், ஏர்டெல் மடுவை அறுத்துப் பால் சாப்பிடும்
 நிறுவனம். 800 ரூபாய் பிளான் என்று நம்ப வைத்து, 
ஏர்டெல் பிராட்பேன்ட்டில் நம்மைச் சேர்ப்பார்கள். 
பில் வரும்போது 1500 ரூபாய்க்கு வரும்.

மறைமுகக் கட்டணங்களுக்குப் பெயர் பெற்றது ஏர்டெல்.
இவர்களின் Billing முறையில் வெளிப்படைத் தன்மை மிகவும் 
குறைவு. இவர்களின் billஐ விளக்க ஒரு பரிமேலழகரோ 
கோனாரோ தேவைப்படுவார்கள்.

கிராமத்தை எட்டியும் பார்க்காத ஏர்டெல்!
------------------------------------------------------------------ 
நகர்ப்புறங்களில் மட்டும் இவர்கள் பிராட்பேண்ட் சேவை 
அளிப்பார்கள்; கிராமப்புறங்களை எட்டியும் பார்க்க மாட்டார்கள்.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். நெல்லை மாவட்டம்,
அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள வீரவநல்லூர் 
20000 மக்கள்தொகையைக் கொண்டது. இது ஒன்றும் 
பட்டிக்காடோ அல்லது கிராமமோ அல்ல; சிறு நகரம்.
இங்குள்ளது தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும். இந்த ஊரில்
BSNL மட்டுமே பிராட்பேண்ட் சேவையை அளிக்கிறது. 
இதுபோன்ற சிறு நகரங்களை ஏர்டெல் எட்டியும் 
பார்ப்பதில்லை. BSNL இல்லாவிட்டால் வீரவநல்லூரில் 
ஒரு பிரவ்சிங் சென்ட்டர்கூட இருக்காது. 

பிராட்பேன்ட்டைப் பொறுத்த மட்டில், கிராமப்புறச் சேவையை 
குறைந்த அளவிலேனும் வழங்க வேண்டும் என்பது  எல்லா நிறுவனங்களுக்கும் அரசு விதிக்கும் நிபந்தனை. இந்த 
நிபந்தனையை ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 
நிறைவு செய்வதில்லை;அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை.

BSNL இல் நஷ்டம்! ஏர்டெல்லில் லாபம்!
------------------------------------------------------------------
சேவையே எங்கள் குறிக்கோள் (Service is our motto) என்று 
இயங்கும் BSNL நஷ்டம் அடைவதும், லாபமே எங்கள் 
குறிக்கோள் (profit is our motto) என்று இயங்கும் ஏர்டெல் போன்ற 
தனியார் நிறுவனங்கள் கொழுப்பதும் இந்த சமூக 
அமைப்பின் சாபக்கேடு.   

BSNL சிறுகக் கட்டிச் சிறுக வாழும் நிறுவனம். பெருக வாழத்
தெரியாத, இயலாத நிறுவனம். சுரண்டத் தெரியாத நிறுவனம்.
பிராட்பேன்ட் (wired) சேவையில், இன்றும் சந்தையில் 
60 சதத்துக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்ட 
நிறுவனம். மிகச் சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்குநர்
என்ற விருதை (CNBC AWAAZ Awards) பெற்ற நிறுவனம்.
கொள்ளை அடிக்காத நிறுவனம். என்றாலும், ஏர்டெல் 
மீது கடும் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்கள்  
எவரும் BSNLஐத் திரும்பியும் பார்ப்பதில்லை.

BSNLஇல் இல்லாதது ஏர்டெல்லில் இருக்கிறதா?
----------------------------------------------------------------------------- 
என்ன காரணம்? வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
பிராட்பேண்ட் சேவை வேண்டும் என்று BSNLஇல்  பதிவு 
செய்யவே பயம். ஏனென்றால், பதிவு செய்தால் எப்போது 
சேவை கிடைக்கும் என்று தெரியாது. ஒரு வாரம் ஆகலாம்; 
கூடவும் ஆகலாம். ஆனால், ஏர்டெல்லில் காலையில் 
பதிவு செய்தால் மாலைக்குள் கனெக்ஷன் கொடுத்து விடுவார்கள்.

அடுத்து, பழுது நேர்ந்தால், ஏர்டெல்லில் சொன்னவுடனே 
வந்து விடுவார்கள்; பழுது பார்ப்பார்கள். BSNL என்றாலோ,
பழுது  நேர்ந்தால் நம் கதை முடிந்தது. பழுதைச் சரிசெய்ய 
பல நாட்கள் ஆகும். இதுதான் வாடிக்கையாளர்களின் 
மனதில் BSNL பற்றிப் பதிந்திருக்கும் சித்திரம்.

1) தனியாரை விடஅதிகமான  தொழில்நுட்பத் தரம் 
2) குறைந்த கட்டணம் 3) வெளிப்படையான  billing
என்று சாதகமான அம்சங்கள் பல இருந்தும்,  BSNL 
ஏர்டெல்லிடம் தோற்கக் காரணமே மேற்கூறியவைதான்.    

ACT Fibernet நிறுவனத்திடம் எச்சரிக்கை தேவை!
------------------------------------------------------------------------------
சென்னையில் புதிதாகக் கடை விரிக்க வந்திருக்கும் ACT 
Fibernet செயல்படத் தொடங்கும்போது ஏர்டெல்லின் கொட்டம்
அடங்கும் என்று வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.
ACT Fibernetக்கு கட்சிமாறத் தயாராக இருக்கிறார்களே தவிர  
தாய்க்கழகத்துக்குத் திரும்ப, BSNLக்கு வரத் தயாராக இல்லை. 

யார் இந்த ACT Fibernet? இது ஒரு ஆந்திர நிறுவனம்.
ஹைதராபாத்திலும் பெங்களூருவிலும் பிராட்பேண்ட் 
(wired) சேவை வழங்கி வரும் நிறுவனம். இது ஒரு non-telco
நிறுவனம். அதாவது மொபைல் சேவை எதுவும் வழங்காத 
நிறுவனம். நகரங்கள், அதுவும் தலைநகரங்கள் மட்டுமே 
இவர்களின் குறி. சதைப்பற்று மிகுந்த நகர்ப்புற வாடிக்கை 
யாளர்களை இவர்கள் கவர்ந்து சென்று விடுவார்கள்.
அப்புறம் BSNLஇன் கதி? கிராமங்களோடு முடங்க 
வேண்டியதுதான்!   

ஏர்டெல்லின் 4G பித்தலாட்டத்தை நாங்கள் அம்பலப் 
படுத்தி விட்டதில் சிலருக்கு எங்கள் மீது வருத்தம்.
அதை நேரடியாகச் சொல்லாமல், நாம் ஆதரிக்கும் BSNL 
மீது குற்றப்பட்டியலை வாசிக்கிறார்கள் அந்த சிலர்.
BSNL மீது ஆயிரம் குறைகளைக் கூறுங்கள். அவை 
உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் ஒன்றை 
உறுதியாகக் கூற முடியும் எங்களால்: BSNL ஒருநாளும் 
உங்களை பிக்பாக்கட் அடிக்காது.அடித்ததும் கிடையாது.  

நீங்களே சோதனை செய்து உண்மையை உணருங்கள்!
--------------------------------------------------------------------------------------
ஏர்டெல்லின் 4G பித்தலாட்டத்தை வாசகர்கள் தாங்களே 
நேரடியாகச் சோதித்துப் பார்த்து அறியலாம். சர்வதேச 
தொலைதொடர்புச் சங்கத்தின் (ITU-Radio sector) இலக்கணப்படி 
4G என்றால் 100 Mbps வேகம் இருக்க வேண்டும். LTE என்றால் 
குறைந்தது 30 Mbps வேகம் இருக்க வேண்டும். ஏர்டெல்லின் 
பித்தலாட்ட 4G (LTE) எவ்வளவு வேகம் தருகிறது என்று நீங்களே 
சோதித்துப் பாருங்கள். இந்த சோதனை மிக மிக எளிது. இந்த 
இணையதள முகவரியைக் கீழே தந்துள்ளோம்.
http://www.speedtest.net/

வாஷிங்டன்னில் உள்ள speedtest.net என்ற இணையதளம் 
இந்த வேகச்சோதனையை நடத்துகிறது. 2006 தொடங்கி 
இன்று வரை 700 கோடி speed testகளை நடத்தி உள்ளது 
இந்த நிறுவனம்.( wire,wireless, mobile, fixed). நீங்களே இந்த 
டெஸ்ட் செய்து பார்த்தவுடன் ஒரு முடிவுக்கு வருவீர்கள்;
அது இதுதான்: Airtel 4G is neither 4G nor LTE.      
-----------------------------------------------------------------------------------------------
தொடரும் 
********************************************************************           
  
   
    



       

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக