திங்கள், 21 செப்டம்பர், 2015

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?
திமுக நாத்திகக் கட்சி அல்ல!
திமுகவின் கடவுள் கொள்கை நாத்திகம் அல்ல!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------------------
1949இல் அறிஞர் அண்ணா திமுகவைத் தொடங்கிய போது 
திமுகவின் கடவுள் கொள்கையாக "ஒன்றே குலம், ஒருவனே தேவன்"
என்று அறிவித்தார். இதன் பொருள் கடவுள் உண்டு என்பதை 
திமுக ஏற்றுக் கொள்கிறது என்பதாகும். அதாவது, கடவுள் 
நம்பிக்கை உள்ளவர்கள் திமுகவில் தயக்கமின்றிச் சேரலாம் 
என்பதாகும்.
**
திமுக என்பது ஒரு வெகுஜனக் கட்சி (mass party) ஆகும். எந்த ஒரு 
வெகுஜனக் கட்சியும். கட்சியில் உறுப்பினராகச் சேர்வதற்கு 
நாத்திகராக இருக்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை 
விதிக்க முடியாது.  
**
என்றாலும் அண்ணா காலத்தில் திமுகவின் முதல்நிலைத் 
தலைவர்கள் அனைவரும் நாத்திகர்களே. கணிசமான கட்சி 
உறுப்பினர்களும் நாத்திகர்களே. இதனால்தான் தைரியமாக 
அண்ணா கூறினார்:
"நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்,
பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்" என்று. 
**
திமுகவில் கிறிஸ்துவ இசுலாமியர்கள் கணிசமாக உள்ளனர்.
அவர்களில் யாரும் (ஒருவர் கூட) நாத்திகர் அல்லர்.
ஒரு கிறித்துவரோ இசுலாமியரோ நாத்திகராக இருக்க 
வேண்டுமெனில், அவர் மதத்தை விட்டு வெளியேற வேண்டும்.
ஏனெனில், கிறித்துவ இசுலாமிய மதங்கள் நாத்திகத்தை 
அனுமதிப்பதில்லை. 
**
தற்போது தென்சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகன் 
விநாயகர் விழாவில் பங்கு கொண்டது குறித்து விமர்சனங்கள் 
எழுகின்றன. இந்த விமர்சனங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.
**
எந்நேரமும் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் காட்சி அளிக்கும் 
மறைந்த பி டி ஆர் பழனிவேல்ராஜன் கலைஞரிடம் 
சபாநாயகராகவும் அமைச்சராகவும் இருந்தவர். கலைஞரோ 
பேராசிரியரோ அவரின் குங்குமப் பொட்டை  அகற்றுமாறு 
சொன்னதில்லை: சொன்னாலும் அவர் கேட்டிருக்க மாட்டார்.  
பழனிவேல் ராஜனுக்கு ஒரு நியாயம், தோழர் அன்பழகனுக்கு 
ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. 
**
கிறித்துவ இசுலாமிய மத விழாக்களில் பங்கேற்பதும்,
இஃப்தார் விருந்துகளில் பங்கேற்பதும், கிறிஸ்துமஸ் ரம்ஜான் 
பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதும் நாத்திகம் ஆகாது.
நாத்திகத்தைப் பேணுவதாக இருந்தால், இது போன்ற மதப் 
பண்டிகைகளில் இருந்து திமுக தன்னைக் கறாராகத் 
துண்டித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி 
கறார் நிலையில் திமுக என்றுமே இருந்தது இல்லை. ஏனெனில் 
திமுகவின் கொள்கை நாத்திகம் அல்ல.
**
திமுகவின் முதல் தலைமுறைத் தலைவர்களோடு, திமுகவில் 
நாத்திகம் காலாவதி ஆகி விட்டது. கலைஞரும் பேராசிரியரும் 
மட்டுமே திமுகவில் இன்னும் நாத்திகர்களாக எஞ்சி இருக்கின்றனர்.
இரண்டாம் தலைமுறையில் நாத்திகர்கள் இல்லை ஓரிருவரைத் 
தவிர. இந்த ஒளிவீசும் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் 
தோழர் அன்பழகனை விமர்சிக்கக் கூடாது.
**
 தோழர் அன்பழகன் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியைச் 
சேர்ந்தவர். தென்சென்னை மாவட்டச் செயலாளர். அவரின் 
தொகுதியும் சரி, அவரின் மாவட்டமும் சரி, பெருமளவு 
பிராமண சமூகத்தவரைக் கொண்டவை. மேலும் இந்து மதத்தில் 
ஆழ்ந்த பிடிப்பு உடைய மக்கள் அவரின் தொகுதியில் கணிசமாக 
உள்ளனர். அவர்களின் ஆதரவைப்  பெறாமல் அன்பழகனால் 
வெற்றி பெற இயலாது. எனவே வாக்குவங்கி அரசியலில் 
கைதேர்ந்த அன்பழகன் விநாயகர் விழாக்களில் பங்கேற்கிறார்.
**
இதனால், நிர்ப்பந்தம் காரணமாகவே அன்பழகன் விநாயகர் 
விழாவில் பங்கேற்கிறாரே தவிர, அவருக்குக் கடவுள் நம்பிக்கை 
கிடையாது என்ற முடிவுக்கு யாரும் வந்து விட வேண்டாம்.
அவர் கடவுள் நம்பிக்கை உடையவரே.
**
மேலும், அண்மைக் காலமாக இந்து முன்னணி ஒரு சமூக 
நிர்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. இந்துப் பண்டிகைகளை 
விமர்சனம் செய்பவர்களோ புறக்கணிப்பவர்களோ இந்துக்களின் 
ஆதரவைப் பெற முடியாது என்ற நிர்பந்தத்தை வெற்றிகரமாக 
உருவாக்கி விட்டது இந்து முன்னணி. இதுதான் இன்றைய 
தமிழ்ச் சமூகத்தின் தேர்தல் அரசியலின் புறவயமான யதார்த்தம்.
(objective reality).எனவே இன்று அன்பழகனைத் தொடர்ந்து, நாளை 
வேறு பல திமுகவினரும் இந்து மத விழாக்களில் பங்கேற்பர்.
இது உறுதியாக நடக்கும்.
**
ஏற்கனவே திமுக தலைமை உட்பட திமுகவினர் அனைவரும்
கிறித்துவ இசுலாமிய விழாக்களில் பங்கேற்றபோதே, 
நாத்திகம் பரணில் ஏறி விட்டது. எனவே முழுக்க நனைந்த 
பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில்தான் திமுக இருக்கிறது.
**
ஒரு காலத்தில், அன்று திமுகவில் இருந்த சிவாஜி கணேசன் 
திருப்பதி சென்று வழிபட்டுத் திரும்பியபோது, "திருப்பதி கணேசா 
திரும்பிப்போ" என்று ஒவ்வொரு ஊரிலும் கண்டனங்கள் 
எழுந்தன. அதுபோன்ற நிலையை இன்று கற்பனை செய்வது 
பாட்டி பழைய ஞாபகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்த 
கதையாய் ஆகும்.
**
அப்படியானால் கடவுள் உண்டு என்று ஏற்றுக் கொண்டுதான் 
ஆக வேண்டுமா? ஆத்திகத்துக்கு அடி பணிந்துதான் ஆக 
வேண்டுமா? இல்லை; தேவையில்லை. கடவுள் கொள்கைக்கு 
மரண அடி கொடுக்க முடியும். உலகம் முழுவதும் கடவுள் 
நம்பிக்கை குறைந்து வருகிறது; தகர்ந்து வருகிறது.
**
திராவிட இயல், பெரியாரியல் ஆகிய சித்தாந்தங்களால் 
கடவுளை  ஒழிக்க முடியாது. இவை குட்டி முதலாளித்துவ 
சித்தாந்தங்களே. இவற்றைக் கடவுள் சுலபத்தில் வீழ்த்தி 
விடுவார்; வீழ்த்தியும் விட்டார்.  மார்க்சிய லெனினியத் 
தத்துவம் கூறும் பொருள்முதல்வாதம் என்ற புரட்சிகரத் 
தத்துவத்தால் மட்டுமே கடவுள் என்னும் மூடத்தனத்தை 
ஒழிக்க முடியும்.
**
வியட்நாம் என்ற சிறிய நாட்டைப் பாருங்கள். இதன் 
மக்கள்தொகை எட்டுக்கோடி. தமிழ்நாட்டின் அளவுதான்.
இந்த நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட சென்சஸ்படி
எண்பது சதம் மக்கள் நாத்திகர்கள். அதாவது எட்டுக் கோடி 
மக்களில் ஏழு கோடிப் பேர் நாத்திகர்கள். இது எப்படி
சாத்தியமானது? புரட்சிகர மார்க்சிய லெனினியத்தால் 
சாத்தியமானது.
*****************************************************************   

     
          
   


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக