ஞாயிறு, 17 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்!
பெண்கள், குழந்தைகள் மீது இழைக்கப்படும்
பாலியல் குற்றங்கள் பெருகி வருதல்!
மார்க்சியத்தைப் பிரயோகித்து தீர்வு காண்பது எப்படி?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
முன்குறிப்பு:

இப்பொருளில் அமைந்த மூன்றாவது கட்டுரை
இது. "வேண்டும் வேண்டும் விபச்சார விடுதிகள் வேண்டும்" 
என்ற கட்டுரையும் "விபச்சாரம் குறித்து மார்க்சியம் கூறுவது
என்ன?"  என்ற கட்டுரையும் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளன.
அடுத்து நான்காவது மற்றும் இறுதிக் கட்டுரை வெளியிடப்படும்..
--------------------------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை
எழுதினர். இந்த 1848 என்பதே கம்யூனிசத்தின் அதிகார
பூர்வத் தொடக்கம் ஆகும். 1848க்கும் 2018க்கும் இடையில்
170 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று இந்த 2019ல் 
மார்க்சியம் 171ஆவது வயதைத் தொட்டு நிற்கிறது.

இந்த 170 ஆண்டுகளில் உலக அளவிலும் சரி, இந்திய,
தமிழக அளவிலும் சரி, பிரம்மாண்டமான பாரதூரமான
மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அறிவியலின் வளர்ச்சியும்
உற்பத்திக்கு கருவிகளின் வளர்ச்சியும் அசுரத் தனமாகவும்
பேரளவிலும் நடந்தேறி உள்ளான.

மார்க்சின் காலம் மின்சாரம் பயன்பாட்டுக்கு வராத காலம்.
1883ல் மார்க்ஸ் மறைந்தார். 1895ல் எங்கல்ஸ் மறைந்தார்.
மார்க்ஸ் எங்கல்ஸ் இருவருமே மெழுவர்த்தி ஒளியிலும்
எண்ணெய் விளக்குகளின் ஒளியிலுமே தங்களின்
மகத்தான படைப்புகளை எழுதினார்கள்.

தமிழ் மார்க்சிய உலகில் இந்த உண்மையை முதன் முதலில்
எடுத்துச் சொன்னது நியூட்டன் அறிவியல் மன்றமே.
இதை நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கூறி இருக்கிறேன்.

மார்க்சின் காலத்தில் இருந்தவை பெரும்பாலும் பட்டறைத்
தொழில்களே. முதலாளித்துவம் தன் குழந்தைப் பருவத்தில்
இருந்த காலம் மார்க்சின் காலம். மின்சாரத்தால் இயங்கும்
எந்தத் தொழிலும் மார்க்சின் காலத்தில் கிடையாது.

மார்க்சின் காலத்தில்  உலகின் ஆகப் பெரும்பான்மையான
நாடுகளில் முதலாளிய ஆட்சிமுறையோ முதலாளித்துவப்
பாராளுமன்றங்களோ கிடையாது. அநேகமாக எங்கும்
மன்னராட்சியே நிலவிய காலம். மார்க்சின் மறைவுக்கு
வெகுகாலம் கழித்து 1917ல் நடந்த ரஷ்யப் புரட்சியின் போதுகூட
ரஷ்யாவில் மன்னராட்சிதான் (ஜார் மன்னனின் ஆட்சி)
நடந்து கொண்டு இருந்தது என்பதை வாசகர்கள்
நினைவு கூரவும்.

மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதிய 1848ல்
இந்தியாவில் யாருடைய ஆட்சி நடந்து கொண்டிருந்தது,
மன்னராட்சி முறையா அல்லது முதலாளித்துவ
நாடாளுமன்ற ஆட்சி முறையா என்ற கேள்விக்கு வாசகர்கள்
பதில் சொல்ல வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மிண்டோ மார்லி சீர்திருத்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு
சீர்திருத்தம், மாகாண சுயாட்சிச் சட்டம் ஆகியவை எல்லாம்
எந்த ஆண்டு வந்தன என்று அறிய பத்தாம் வகுப்பு
வரலாறு பாடப்புத்தகத்தைப் படித்துப் பார்க்கலாம்.
படித்துப் பார்த்தால் கேட்ட கேள்விக்குப் பதில் கூற இயலும்.

மார்க்ஸ் எங்கல்ஸ் மட்டுமின்றி லெனின் காலத்திலும்
ஐரோப்பாவில் பெண்களின் நிலைமைகள் எப்படி
இருந்தன என்று வாசகர்கள் அறிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தக் கட்டுரையைச் சரியாகப் புரிந்து
கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு
சொல்கிறோம்.

மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில்
பெண்களுக்கு வாக்குரிமை உண்டா? கிடையாது.
மார்க்ஸ் 1883ல், ஏங்கல்ஸ் 1895ல் மறைந்தனர் என்று
ஏற்கனவே முன்பத்திகளில் கூறி இருப்பதை
வாசகர்கள் நினைவு கூரவும்.

சரி, லெனின் காலத்தில், அதாவது ரஷ்யப் புரட்சி
நடைபெற்ற 1917ல் ஐரோப்பாவில் இங்கிலாந்தில்
பெண்களுக்கு வாக்குரிமை உண்டா? இந்தக் கேள்வி
முக்கியமானது. இதற்கான விடையும் முக்கியமானது.
இதற்கா விடை தெரியாதவர்களால் மார்க்சியத்தைப்
புரிந்து கொள்ள முடியாது.

ரஷ்யப் புரட்சி நடைபெற்ற காலத்தில், அதாவது 1917ல்
இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.
இதுதான் உண்மை. அமெரிக்காவிலும் பெண்களுக்கு
வாக்குரிமை கிடையாது.

லெனின் மட்டுமே ஆணும் பெண்ணும் சமம் என்று முதன்
முதலில் சட்டம் செய்தவர். பெண்ணுரிமைச் சட்டங்களை
உலகிலேயே முதன் முதலில் ரஷ்யாவில் கொண்டு
வந்தவர் லெனின்.

ரஷ்யாவைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொண்ட பிறகுதான்
இங்கிலாந்து 1918ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது.
அமெரிக்கா 1920ல் வழங்கியது. சுவீடன் 1921ல் வழங்கியது.
அப்போதும்கூட பிரான்சு பெண்களுக்கு வாக்குரிமை
வழங்கவில்லை. பின் எப்போதுதான் பிரான்சு பெண்களுக்கு
வாக்குரிமை வழங்கியது? இதற்கான விடையை வாசகர்கள்
தங்களின் சொந்த முயற்சியில் அறிந்திட வேண்டும்.
spoon feedingஐ நியூட்டன் அறிவியல் மன்றம் விரும்பவில்லை.

மார்க்சும் எங்கல்சும் சேர்ந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை
எழுதிய 1848க்கும் இன்றைய 2019க்கும் இடையிலான
170 ஆண்டுகளில் ஏற்பட்ட பாரதூரமான மாற்றங்களில்
இரண்டே இரண்டை மட்டுமே சுருக்கமாகச் சொல்லி
இருக்கிறோம். வாசகர்கள் தங்கள் சொந்த முயற்சியில்,
நிகழ்ந்துள்ள அனைத்து மாற்றங்களையும் பற்றி
அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்ளாமல்
இருந்தால், மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

இந்த 170 ஆண்டுகளின் அறிவியல் வளர்ச்சியைப் பற்றி
தனியாக ஒரு புத்தகமே எழுத வேண்டும். எனவே இந்தக்
கட்டுரையில் அறிவியல் வளர்ச்சி குறித்து எழுதவில்லை.

தமிழ் மார்க்சிய உலகம் எப்படி உள்ளது? இந்த 170 ஆண்டுகளில்
நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி அறிந்தவர்கள் எத்தனை பேர்
என்று பார்த்தால், 0.0000000000000000000000000000000001 சதம் என்று
மட்டுமே சொல்ல முடியும். இதுதான் உண்மை.

எனவே தமிழ் மார்க்சியச் சூழலில், மார்க்சியத்தை ஒரு
மதமாகப் பார்க்கிற பார்வையே மேலோங்கி நிற்கிறது.இந்தப்
போலி மார்க்சியர்கள் மார்க்சியத்தை தேங்கிய குட்டையாக
ஆக்கி விட்டார்கள். இந்த 170 ஆண்டுகளின் மாற்றம் பற்றி
எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாதவர்களே இங்கு
மார்க்சியர்கள் என்று வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் போலி மார்க்சியர்கள். எனவே
இவர்கள் மார்க்சியத்தின் எதிரிகள்.

இன்று இந்த 2019ல் மார்க்சியத்தைப் பிரயோகிப்பது
எப்படி? இந்த 170 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள
மாற்றங்களை உள்வாங்காமல் மார்க்சியத்தைப்
பிரயோகிக்க இயலுமா? மார்க்சியப் பிரயோகம்
என்பது மார்க்ஸ் ஏங்கல்ஸின் மேற்கோள்களை மனனம்
செய்து ஒப்பிப்பதா? இல்லை.

இந்த 170 ஆண்டுகளின் அறிவியல் வளர்ச்சியை
உள்வாங்காமல் மார்க்சியத்தைப் பிரயோகிக்க
இயலுமா? நிச்சயமாக இயலாது.
------------------------------------------------------------------------
தொடரும்
****************************************************


     







  



   
    
 



   


       ..

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக