வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

உலகத் தாயமொழி நாள்!
என்ன செய்தால் தமிழ் மேம்படும்? உயரும்?
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
1950 முதலே  மின்சாரத்தால் இயங்கும் வீட்டுப்
பயன்பாட்டுக்குக்கான பொருட்கள் மக்களிடம்
அறிமுகமாகி விட்டன; காலப்போக்கில் வெகுவாகப்
புழக்கத்துக்கு வந்து விட்டன.

மிக்சி, கிரைண்டர், பிரஷர் குக்கர், வாஷிங் மெஷின்,
பிரிட்ஜ் போன்ற பொருட்கள் இல்லாமல் தமிழ்க் குடிகளின்
அன்றாட வாழ்வு இல்லை. தெர்மாஸ்  ஃபிளாஸ்க், கேஸ் ஸ்டவ்
போன்ற பொருட்களும் இன்று இன்றியமையாதவை
ஆகி விட்டன.

ஆனால் தமிழர்களிடம்  மேற்கூறிய பொருட்கள்
எவற்றுக்குமான தமிழ்ப்பெயர்கள் இல்லை. ஐம்பது
ஆண்டாகியும், மிக்சி கிரைண்டர் என்றே தமிழ்த்
தாய்மார்கள் உச்சரிக்கிறார்கள். அந்த ஆங்கிலப்
பெயர்கள் நிலைபேறு உடையன ஆகி விட்டன.

தமிழ்ப்பற்று இல்லாத காரணத்தால்தான் தமிழ்த்
தாய்மார்கள் மிக்சி கிரைண்டர் என்று ஆங்கிலப்
பெயர்களை ஏற்றுக் கொண்டார்கள் என்று யாராவது
சொன்னால் அதில் அணுவளவும் உண்மையில்லை
என்று நாம் அறிவோம். ஆங்கிலமே தெரியாத தமிழ்ப்
பெண்களும் மிக்சி கிரைண்டர் என்று பேசக் காரணம்
என்ன?

மிக்சி கிரைண்டர் போன்றவை உற்பத்தியாளர்கள்
சூட்டிய பெயர்கள். உற்பத்தி மொழியாக ஆங்கிலமே
இருப்பதால், அவற்றுக்கு ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்
படுகின்றன. இது இயல்பானது. உற்பத்தி எந்த மொழியில்
இருக்கிறதோ, அந்த மொழியில்தான் உற்பத்திப்
பொருட்கள் இருக்கும்.

ஆலையில் உற்பத்தியாகி, முதல் மிக்சி சந்தைக்கு
வந்த உடனேயே, அந்தக் காலத்தில் உள்ள தமிழறிஞர்கள்
மிக்சி என்பதற்குரிய பொருத்தமான தமிழ்ப் பெயரைக்
கண்டறிந்து சூட்டி இருக்க வேண்டும். அக்காலத்தில்
மிகவும் சிறந்த தமிழறிஞர்கள் தமிழ்நாட்டில்
செல்வாக்குடனும் வசதியுடனும் வாழ்ந்து வந்தார்கள்.

யாரும் சக்திமுற்றப் புலவர் போல,
"கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளன்" போல வறுமையின் உச்சத்தில்
வாடவில்லை. செல்வந்தர்களாகவே வாழ்ந்தார்கள். எனினும்
அவர்கள் தமிழுக்கு வறுமையைக் கொடுத்து விட்டுச்
சென்றார்கள்.

இந்தியாவும் சரி, தமிழகமும் சரி, நிலவுடைமைச்
சமூக அமைப்பில் இருந்து வெகுவாக மாறி, முதலாளிய
உற்பத்தி முறைக்கு மாறி வந்த காலம் நாம் கருத்தில்
கொள்ள வேண்டிய முற்காலம். முதலாளிய உற்பத்தி
முறை என்பதில் உற்பத்தி மொழியாக ஆங்கிலமே
இருந்தது; இன்றும் இருக்கிறது.

எனவே உற்பத்தியாகும் பொருட்கள் ஆங்கிலப்
பெயர்களையே கொண்டிருக்கின்றன. இப்பொருட்கள்
சந்தைக்கு வந்தவுடன் இவற்றுக்கு தமிழ்ப் பெயர்கள்
வைக்கலாம்தான். யார் வைப்பது? தமிழறிஞர்களால்
வைக்க இயலாது. அவர்கள் தமிழ் தவிர வேறு எதையும்
கல்லாதவர்கள்.

எனவே தமிழின் மீது சுமத்தப் பட்டிருக்கும்
அடிமைத்தனமும் இழிவும் எப்போது நீங்கும்?
தமிழ் உற்பத்தி மொழியாக ஆகும்போது மட்டுமே நீங்கும்.

2000, 3000 ஆண்டுக்கு முந்திய தமிழ் இலக்கணம்
இன்று பொருந்தாது. எனவே புதிய உற்பத்தி முறைக்கு
ஏற்றவாறு தமிழுக்குப் புதிய இலக்கணம் சமைக்க
வேண்டும்.

பண்டிதத் தமிழ், பாமரத் தமிழ், தீண்டாமைத் தமிழ்
என்றெல்லாம் தமிழைக் கருவறுக்கும் முயற்சிகள்
முறியடிக்கப் பட வேண்டும். மார்க்சிய இலக்கணப்படி,
ஒரு மொழியானது தொடர்புறுத்த வல்லதாக communicable)
இருக்க வேண்டும். மக்களால் தீண்டத் தகாத மொழியாக
தமிழை ஆக்க முயலும் செயல்கள் தடுக்கப்படவும்
ஒடுக்கப் படவும் வேண்டும்.

கிரந்த எழுத்துக்கள் தேவையான அளவு எடுத்துக்
கொள்ளப்பட வேண்டும். நடைமுறையில் இருக்கிற
கிரந்த எழுத்துக்களைப் புறக்கணிப்பது தமிழை
அழிக்கும் செயலாகும்.

கிரந்தம் பற்றி ஆளாளுக்கு ஒரு கருத்து என்று சொல்லிக்
கொண்டு இருக்கக் கூடாது. தமிழக அரசு கிரந்தத்தை
ஏற்று ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

குட்டி முதலாளிய மொழிக்கொள்கை ஒருபோதும்
ஏற்கப் பட மாட்டாது. மார்க்சிய மொழிக்கொள்கைப்
படியே தமிழ் சார்ந்த அனைத்து மொழிக்கொள்கைகளும்
முடிவெடுக்கப் பட வேண்டும்.


எல்லாவற்றுக்கும் மேலாக, மொழி என்பது
தொடர்புறுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
இதுவே மொழி பற்றிய கொளகைகள் அனைத்திலும்
தலையாய கொள்கை ஆகும்.


மருதுபாண்டியன்


********************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக