சனி, 20 ஜனவரி, 2018

மார்க்சியப் பார்வையில் அத்வைதம்!
ஓர் எளிய அறிமுகம்! பகுதி-4.
----------------------------------------------------------------
சமகாலத்தில் அத்வைதம்!
----------------------------------------------
18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஆங்கில
ஆட்சியின் விளைவாக, கிறிஸ்துவம் பெரும்
வேகத்துடனும், அரசின் ஆதரவுடனும் மொத்த
இந்திய சமூகத்தையும் ஆக்கிரமிக்கத்
தொடங்கியது. அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சர்,
விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர்
கிறிஸ்துவத்தைக் களத்தில் சந்திக்க அத்வைதத்தைக்
கையில் எடுத்தனர். ஆபிரகாமிய மதங்களான யூதம், கிறித்துவம்,இஸ்லாம் ஆகியவற்றை தத்துவ அரங்கில் எதிர்கொள்ளவல்ல  வலிமை கொண்டதாக விவேகானந்தர் அத்வைதத்தைக் கருதினார். அத்வைதம் படைப்புக்
கொள்கையை ஏற்பதில்லை.இது விவேகானந்தரைக்
கவர்ந்தது. எனவே படைப்புக் கொள்கையை உயிராகக்
கொண்ட கிறித்துவத்தைச் சந்திக்க அத்வைதம்
பயன்படும் என்று கருதினார் விவேகானந்தர்.

விவேகானந்தர் வெளிநாடெங்கும்
அத்வைதத்தை அறிமுகப் படுத்தினார். இதன்
விளைவாகவே அத்வைதம் தத்துவ அரங்கில்
ஒரு செகண்ட் ரவுண்ட் (second round) வந்தது.
அத்வைதத்திற்கு இன்றுள்ள கொஞ்ச நஞ்ச
செல்வாக்கிற்கு ஆதிசங்கரர் விவேகானந்தருக்கு
கடமைப் பட்டுள்ளார்.

ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக
எடுக்கப்பட்டது. சம்ஸ்கிருத மொழியில் அமைந்த
இத்திரைப்படம் 1983ல் வெளியானது. இந்திய
மாநிலங்களில் சமஸ்கிருதத்தை ஆதரிக்கும்
மாநிலமாகக் கருதப்படும் கேரளத்தில் இப்படம்
முதன் முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தை
இயக்கியவர் ஜி வி ஐயர். 1983ஆம் ஆண்டிற்கான
மிகச் சிறந்த திரைப்படம் என்பதற்கான விருதை
(Best film award 1983) இப்படம் பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம்
என்ற நாவல் அத்வைதக் கருத்துக்களைப்
பேசும் நாவலாகும்.ஜெயமோகன் ஒரு அத்வைதி
ஆவார்.

சேக்கிழாரின் பெரிய புராணம் பயின்றவர்கள்
பூசலார் நாயனார் பற்றி அறிந்திருக்கக் கூடும்.
இவர் சென்னை ஆவடிக்கு அருகில் உள்ள
திருநின்றவூரில் ஒரு சிவன் கோவில் கட்ட
விரும்பினார். ஆனால் கோவில் கட்டத் தேவையான
பணம் இல்லாமல் மனதிலேயே கோவில் கட்டினார்.
பூசலாரின் மனக்கோவில் என்பதுதான் அத்வைதம்!

1970களில் இந்தியாவில் இரண்டு ஆன்மிகவாதிகள்
மிகவும் பிரபலம். ஒருவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (1895-1986).
இன்னொருவர் ஆச்சார்ய ரஜனீஷ் (1931-1990).

இருவரில் ரஜனீஷ் இளையவர். இருவருமே பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் பிறந்தவர்கள். இருவரும் உலகம்
முழுவதும் சுற்றி தங்கள் சித்தாந்தத்தைப்
பரப்பியவர்கள். இருவருக்கும் அமெரிக்க சீடர்கள்
அதிகம். அமெரிக்காவில் ஆசிரமம் நடத்தியவர்
ரஜனீஷ்.

இந்த ஆச்சார்ய ரஜனீஷ்தான் பின்னாளில் ஓஷோ
என்று அழைக்கப்பட்டார்.ஓஷோ என்ற சமஸ்கிருதச்
சொல்லுக்கு ஆசான் என்று பொருள்.

ஓஷோ ஒரு கருத்துமுதல்வாதி. சிந்தனைக்கு கட்டற்ற
சுதந்திரத்தை அவரின் சித்தாந்தம் அளிக்கிறது.
அந்த வகையில் ஆதிசங்கரரின் அத்வைதத்திற்கு
இவரின் சித்தாந்தம் மிக நெருக்கமாக வரும்.

ஆதிசங்கரரைப் போலவே ஓஷோவும் மதங்களை
எதிர்த்தார்; சடங்குகளை எதிர்த்தார். சங்கரரைப் போல
ஓஷோவும் கடவுளுக்கு பெரிய முக்கியத்துவம்
எதையும் அளிக்கவில்லை. பொருள் என்பதையே
முற்றிலுமாக மறுத்த ஆதிசங்கரரைப் போல்
அல்லாமல், ஓஷோ புறஉலகை, பொருளின் பங்கை
மறுக்கவில்லை. இதனால் ஓஷோவின் தத்துவத்தில்
அப்பாலைத் தன்மைக்கு இடமில்லை. அதே நேரத்தில்
ஓஷோ கட்டற்ற இன்ப நுகர்ச்சியை வலியுறுத்தினார்.
ஆடம்பரமாக வாழ்ந்து காட்டினார். எனவே அவரின்
தத்துவம் மேட்டுக்குடிச் சீமான்களுக்கான தத்துவமாகும்.
அது உழைக்கும் மக்களை விடுவிக்க இயலாத
தத்துவமாகும்.

ஆக சமகால இந்தியாவில், தத்துவ அரங்கில்
அத்வைதத்திற்கு எவ்வித செல்வாக்கும் இல்லை.
வரலாற்றில் வாழ்ந்த ஒரு தத்துவமாக மட்டுமே
அத்வைதம் அருங்காட்சியகப் பொருளாக உள்ளது.
அத்வைதத்தின் இந்த வீழ்ச்சிக்குப் பிரதான
காரணம் மெய்யான புறஉலகை மாயை என்று
கூறி .மறுத்ததுதான். அத்வைதம் ஒரு  வாழ்வு மறுப்புத்
தத்துவம் (Life negation philosophy). இதற்கு மாறாக,
3000 ஆண்டுத் தொன்மை மிக்க பொருள்முதல்வாதம்
இன்றளவும் தத்துவ அரங்கில் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம்,
பொருள்முதல்வாதம் ஒரு வாழ்வு ஏற்புத் தத்துவம்
(Life affirmation philosophy) என்பதே.
**************************************************************
முற்றியது
-----------------------------------------------------------------------------------------    






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக