வியாழன், 25 ஜனவரி, 2018

தமிழ் மீதும், தமிழர் மீதும் வன்மத்தை விதைக்கும் பெரியாரின்  ‘தமிழும் தமிழரும்’.
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது  திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் ” உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?” (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார்.
தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் “தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?”.  பிறகு அந்த நூலின் தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப்பட்டது. 
தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில்  வெளி வந்துள்ளது. “தமிழ் நீசபாஷை” என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், “பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
அந்த நூலிலிருந்து சில பகுதிகள் பின் வருமாறு:
” தமிழ்மொழியை நான் காட்டுமிராண்டி மொழி என்று 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும் அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.
ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில்  இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும் எழுதியும் முயற்சித்தும் வந்து இருக்கிறேன். 
தமிழை தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்று 1927வாக்கில் கருத்து கொடுத்தேன். வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்க வில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக்கொண்டார்கள். நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்க வில்லை. 
பிறகு தமிழ்மொழிக்கு கமால் பாட்சா செய்தது போல் ஆங்கில எழுத்துகளை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக் கால எழுத்துகளைத் தள்ளிவிடு என்றேன்.
இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்?
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?
இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு, மூன்று தமிழ்ப்புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1)தொல்காப்பியன் (2)திருவள்ளுவர் (3)கம்பர் இம்மூவரில் 1. தொல்காப்பியன் ஆரியக் கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்து விட்ட மாபெரும் துரோகி.
 2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான். 3. கம்பன் தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான். முழுப் பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்… உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் இருக்கிறது என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.”
  
பெரியாரின் இந்த நூல் பார்ப்பன எதிர்ப்பு வேடங் கட்டி தமிழ் மொழி மீதும், தமிழ்ப்புலவர்கள் மீதும் தமிழுக்கு உழைத்த நம் முப்பாட்டன்களின் மீதும் கடும் நஞ்சைக் கக்குகிறது.
இந்தி எதிர்ப்புப்போரில் தமிழுக்கு சிறிது இடம் கொடுத்ததன் மூலம் தமிழ்ப்பற்றால் இந்தியை  எதிர்க்க வில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்.
தமிழ் எழுத்துகளை கைவிட்டு ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தச் சொல்வதன் மூலம் தமிழின் அடையாள வேர் அழியட்டும் என்னும் விருப்பத்தை மறைமுகமாகச் சொல்கிறார்.
ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவன் ஆரியக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவனாம். அதுவும் மத உணர்ச்சியோடு கூறியவனாம். 1948இல் திருவள்ளுவர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் “திருக்குறள் ஆரிய தர்மத்தை மனுதர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் ” என்று  பேசினார். 
1948 இல் பேசியது சரியா? 1968 இல் பேசியது சரியா? முரண்பாட்டின் தொகுப்பு மூட்டை பெரியார் என்பதற்கு திருக்குறள் ஒன்றே போதும்.
தமிழையும், தமிழ்ப்புலவர்களையும் இழித்துப் பேசும் பெரியார் 1924 இல் திருவண்ணாமலை காங்கிரசு மாநாட்டில் தமிழ் குறித்து பேசியுள்ளார். சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூலில்  இது உள்ளது.  
“ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாயப்பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்றிராதாரிடத்து தேசப்பற்றிராதென்பது நிச்சயம்.  வங்காளிக்கு வங்க மொழியில் பற்றுண்டு, ஆந்திரனுக்கு ஆந்திரமொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை இது பொய்யோ? தாய்மொழியில் பற்று செலுத்தாதிருக்கும் வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்.” 


1924 இல் தமிழர்களுக்கு மொழிப்பற்று வேண்டும் என்றார். 1968இல் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் முன்னேறுவதற்கு வழி இல்லை என்றும் மாற்றிப் பேசுகிறார். இது தான் பெரியாரின் முரண்பட்ட மொழிக் கொள்கை.
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டமென்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? என்று கேட்கும் பெரியாருக்கு தமிழர்கள் திருப்பிக் கேட்போம்.
கர்நாடாகவிற்கு சென்று கன்னடத்தை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? என்று பேசிவிட்டு வீடு திரும்பியிருக்க முடியுமா? ஆந்திரத்திற்கு சென்று தெலுங்கிலிருக்கும் பெருமை என்ன? என்று கேட்டு விடும் துணிச்சல் இவருக்கு இருந்தது உண்டா?
 தமிழ்மொழியிலேயே பகுத்தறிவு பரப்புரை செய்து விட்டு பிறகு தமிழையே திட்டுவது என்பது பெரியார் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்திட்ட கொடிய செயலாகும். தமிழ் மீதும் தமிழர் மீதும் அவருக்கிருக்கும் வன்மத்தை இந்நூல் நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக