ஞாயிறு, 28 ஜனவரி, 2018

வள்ளுவரும் இயேசுவும் கூறும் அறமும்
மார்க்சியம் கூறும் அறமும்!
----------------------------------------------------------------
தமிழ்நாடு அறம் வளர்த்த பூமி. கற்கத் தொடங்கும்
ஒரு தமிழ்க் குழந்தை முதலில் அறத்தைத்தான்
கற்கிறது."அறம் செய விரும்பு" என்ற ஒளவையின்
ஆத்திசூடியுடன்தான் குழந்தையின் கல்வி
தொடங்குகிறது.

ஆத்திசூடி கொன்றைவேந்தன் மட்டுமல்ல திருக்குறள்
உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
அனைத்துமே அறநூல்கள்தாம். உலகின் வேறெந்த
பகுதியையும் விட தமிழகமே அறநூல் செழுமையிலும்
அறத்தொடு நிற்றலிலும் முதலிடத்தில் உள்ளது. எனவே
தமிழ்மண்ணில் அறம் குறித்த ஓர்மை விஞ்சி நிற்பதில்
வியப்பில்லை.

மேற்கூறிய அறநூல்கள் கூறும் அறம் அனைத்தும்
தனிமனித ஒழுக்கத்தைக் கற்பிப்பவை. ஒவ்வொரு
சூழலிலும் ஒரு தனிமனிதன் எங்ஙனம் நடந்து
கொள்ள வேண்டும் என்று இந்நூல்கள் தனிமனித
நடத்தையை வரையறுக்கின்றன.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார் வள்ளுவர். இது தனிமனிதனுக்குக்
கற்பிக்கப்படும்  ஒழுக்க நெறி; தனிமனித அறம்.

வலது கன்னத்தில் அடித்தால் நீ உன் இடது
கன்னத்தையும் காட்டு என்கிறார் இயேசு.
உன்னைப் போலவே உன் அண்டை
வீட்டுக்காரனையும் நேசி என்கிறார் மேலும் இயேசு.
ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்ற வேண்டிய
அறக்கோட்பாடே இது.

இத்தகைய தனிமனித ஒழுகலாறுகள் மார்க்சியத்தில்
உள்ளனவா? தனிமனித நடத்தை குறித்த அறத்தை
மார்க்சியம் போதிக்கிறதா? மார்க்சியத்தைப்  பின்பற்றுவோருக்கான அறபோதனை என்ன?
பரிசீலிப்போம்.

கம்யூனிஸ்டுகள் தனியொரு பொருளால் வார்க்கப்
பட்டவர்கள் என்றார் ஸ்டாலின்.
(The communists are of a special mould). இதன் பொருள் என்ன?
எந்த நிலையிலும் கட்சி நலனுக்கு, புரட்சியின்
நலனுக்கு, மக்களின் நலனுக்கு தன் சொந்த நலனைக்
கீழ்ப்படுத்துபவனே கம்யூனிஸ்ட் என்று இதற்குப்
பொருள்.மக்களின் நலனுக்குக் கீழாகவே
தன் குடும்ப நலனை தன் சொந்த நலனை எப்போதும்
வைப்பது என்பதுதான் கம்யூனிஸ்டுகளுக்குப்
போதிக்கப்பட்ட தனிமனித அறம்; ஒழுகலாறு.

உலக வரலாற்றில் இதற்கு பல்லாயிரம்
உதாரணங்களைக் காட்ட முடியும். இந்தியாவில்
நக்சல்பாரி வரலாற்றிலேயே இதற்கு ஆயிரம்
உதாரணங்களைக் காட்ட முடியும். இந்திய
அரசு தூக்கிலிட்ட பூமையா, கிஷ்ணா கவுடா
ஆகிய தோழர்களை நினைத்துப் பாருங்கள்.
இவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக
முதன் முதலில் தூக்கிலிடப்பட்டவர்கள்
இவர்கள் இருவருமே. மார்க்சியத்தையும்
பாட்டாளி வர்க்க அறத்தையும் உயர்த்திப்
பிடித்தபடி, தூக்குமேடையில் தியாகிகளான
இவர்களின் அறம் மார்க்சியம் கற்பித்த அறம்
அல்லவா?

சிகாகோவின் மேதினத் தியாகிகள் நால்வரும்
இந்தியாவில் பகத்சிங்கும் பற்றி ஒழுகியது
மார்க்சிய அறம் அல்லவா? இவர்கள் அனைவரும்
தங்களின் சொந்த நலனை கீழேயும் மக்களின்
நலனை மேலேயும் வைத்தனரா இல்லையா?     

மார்க்சியத்தில் அறம் இல்லை. மார்க்சியர்களுக்கு
என்று தனிமனித ஒழுகலாறுகள் எதையும்
மார்க்சியம் கற்பிக்கவில்லை என்று
சொல்கிறார்களே மார்க்சிய எதிரிகள். அதில்
உண்மை துளியும் இல்லை என்பதையே மேற்கூறிய
உதாரணங்கள் நிரூபிக்கின்றன.

புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, எவ்வுயிர்க்கும்
தீங்கு எண்ணாமை என்பன போன்ற நடைமுறை
சாத்தியமற்ற செயற்கையான அறம் பற்றி
மார்க்சியம் பேசவில்லைதான். ஆனால் இத்தகைய
அறம் எதனினும் உயர்ந்த அறத்தை அல்லவா
மார்க்சியம் போதித்துள்ளது! சுயநலத்தைத் துற,
பொதுநலனைப் பேண் என்று கூறும் மார்க்சிய
அறத்தை விட உயர்ந்த அறம் வேறு எதுவும் உள்ளதா? 

மதங்களும் நீதிநூல்களும் கூறும் அறம் முழுவதும்
தனிமனித அறமே. சமூக அறம் பற்றி எந்த மதமோ
நீதிநூல்களோ கூறியதில்லை. சமூக அறம்
என்பது மொத்த சமூகத்துக்குமான அறமாகும்.
இது கூட்டுத்தன்மை (collective but not individualistic)
வாய்ந்த அறமேயன்றி தனிமனித நடத்தைக்கான
அறமல்ல.

ஆனால் உலகில் எந்த மதத்திலும் நீதிநூலிலும் சமூக
அறம் பற்றி எதுவுமே இல்லை. அஷ்டாங்க மார்க்கத்தை
(எட்டு ஒழுக்க நெறிகள்) கூறுகிற பெளத்தம்
சமூக அறம் பற்றி எதையும் கூறவில்லையே ஏன்?
ஆனால் மார்க்சியம் மட்டுமே சமூக அறம் பற்றிப்
பேசுகிறது. தனிமனிதனுக்கான அறத்தை மட்டுமின்றி
சமூகம் முழுமைக்குமான அறத்தைப் பற்றிப்
பேசும் ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே.

மனைவியை வைத்துச் சூதாடினான் தருமன்.
இது தனிமனித அறம் குன்றல் ஆகும்.
செய்யாத குற்றத்துக்காக அநீதியாக
கொலையுண்டான் கோவலன். செய்தியறிந்த
கண்ணகி "பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும்
உண்டுகொல்"  என்றும் "சான்றோரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்" என்று அழுது
புலம்புகிறாள். மதுரையைத் தீவைத்து எரிக்கிறாள்.

மதுரை மாநகரில்  சமூக அறம் குன்றியிருக்கிறது
என்று கருதினாள் கண்ணகி. தவறு கண்ட இடத்து
அதைத் தட்டிக் கேட்பது சமூக அறம். அவ்வாறு
தட்டிக் கேட்பதன் மூலமே தவறு நிகழாமல்
தடுக்க முடியும். ஆனால் மதுரைச் சமூகத்திடம்
அந்த அறம் இல்லை. சமூக அறம் குன்றியதன்
விளைவே கோவலன் படுகொலை என்று கருதுகிறாள்
கண்ணகி. சமூக அறம் குன்றிய மதுரையை
கண்ணகி தண்டிக்கிறாள்.

ஆக தனிமனித அறமும் வேண்டும், சமூக அறமும்
வேண்டும் என்பதை மேற்கூறிய உதாரணம்
மூலம் நன்கறியலாம். மதங்கள் அல்ல, மார்க்சியம்
மட்டுமே தனிமனித அறம், சமூக அறம் ஆகிய
இருவித அறம் பற்றிப் பேசுகிறது. மார்க்சியம் கூறும்
சமூக அறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.

உலகில் இதுவரை நிலவிய எந்தவொரு சமூக
அமைப்பையும் விட அறத்தில் சிறந்து விளங்கும்
சமூக அமைப்பு மார்க்ஸ் கனவு கண்ட கம்யூனிச
சமூக அமைப்பே.
---------------------------------------------------------------------------------------

.




        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக