திங்கள், 16 ஜனவரி, 2017

இழைகளும் அதிர்வுகளும்
--------------------------------------------------
இழைகளும் அவற்றின் அதிர்வுகளுமே இந்தப் பிரபஞ்சம்
என்கிறது இழைக்கொள்கை. இழைகள் என்பவை
அனைத்துக்குமான அடிப்படை அலகுகள். இழைகள்
ஒற்றைப் பரிமாணம் உள்ளவை; வரம்பில்லாத அளவு
மெல்லியவை (infinitely thin). இவற்றின் அதிர்வுகளால்
(vibrations) துகள்கள் உண்டாகின்றன. இழைகள் ஒரு குறிப்பிட்ட
விதத்தில் அதிர்ந்தால் எலக்ட்ரான்களும். வேறொரு
விதத்தில் அதிர்ந்தால் ஃபோட்டான்களும் உண்டாகின்றன.      


பொருள்சார் துகள்களும் (குவார்க்கு போன்றவை)
ஆற்றல்சார் துகள்களும் (ஃபோட்டான் போன்றவை)
இழைகளின் அதிர்வுகளின் விளைவே என்கிறது
இழைக்கொள்கை. தரமாதிரிச் சித்திரம் (standard model)
கூறுவதில், "பொருட்கள் துகள்களால் ஆனவை" என்பது
வரை இழைக்கொள்கை ஏற்றுக் கொள்கிறது. அதற்கு மேல்
ஒருபடி சென்று, "துகள்கள் ஆரம்ப அலகுகள் அல்ல"
என்றும் இழைகளின் அதிர்வுகளாலேயே துகள்கள்
உண்டாகின்றன என்றும் கூறுகிறது.

இழைகளைப் புரிந்து கொள்ள அவற்றை ஒரு வீணையின்
தந்திகளுடன் ஒப்பிடலாம்.  வீணை என்பது மூன்று அல்லது
நான்கு அடி நீளமுள்ள ஒரு நரம்புக் கருவி ஆகும். இதில் உள்ள தந்திகள் வெவ்வேறு இழுவிசையுடன் (tension) இருபுறமும்
இழுத்துக் கட்டப் பட்டிருக்கும். வெவ்வேறு தந்திகளை
மீட்டும்போது, வெவ்வேறு விதமான இசை பிறக்கும்.
அதாவது, வீணையின் தந்திகளை விரல்களால் வருடும்போது,
இசை பிறக்கிறது. அதைப்போல இழைகளில் அதிர்வு ஏற்படும்போது, துகள்கள் உண்டாகின்றன.

ஒரு எலக்ட்ரானை துகள் என்று மட்டுமே கருதுகிறது
தரமாதிரிச் சித்திரம். ஆனால் இழைக்கொள்கை
எலக்ட்ரானை மட்டுமின்றி, ஒவ்வொரு துகளையும் இழையாகக் கருதுகிறது. துகள் என்று சொன்னால் அது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயரும்; அதாவது நகரும்.
இதைத்தவிர ஒரு துகளால் வேறெதுவும் செய்ய இயலாது.
ஆனால் ஒரு இழையோ ஆடும், அசையும், அதிரும்.
வெவ்வேறு விதமாக அதிரும். இந்த ஒட்டு மொத்தப்
பிரபஞ்சமே இழைகளின் அதிர்வுகளால் ஆனதுதான்
என்கிறது இழைக்கொள்கை.

திறந்த இழைகளும் மூடிய இழைகளும்
-----------------------------------------------------------------------
இரண்டு வகையான இழைகளை இழைக்கொள்கைகள்
குறிப்பிடுகின்றன. 1) திறந்த இழை (open string) 2) மூடிய இழை
(closed string). திறந்த இழை என்பது ஒரு கயிற்றுத் துண்டு
போன்றது. இதற்கு இரண்டு முற்றுப்புள்ளிகள் (end points)
உண்டு. மூடிய இழை என்பது ஒரு வளையம் (closed loop) ஆகும்.
இது ஒரு ரப்பர் பாண்ட் போன்றது. இதற்கு முற்றுப் புள்ளிகள்
இல்லை.

எனினும் திறந்த மற்றும் மூடிய இழைகளுக்கு இடையில்
பெரிய வேற்றுமை இருப்பதாகக் கருத வேண்டியதில்லை.
அதிர்வுகளின்போதும்  ஊடாட்டங்களின்போதும்  (interactions)
திறந்த இழைகள் மூடிக் கொள்ளும்; மூடிய இழைகளாக மாறும். மூடிய இழைகள் உடைந்து திறந்த இழைகளாக மாறும்.
இலைகளின் அதிர்வு காரணமாகவே துகள்கள் உண்டாகின்றன.
ஈர்ப்புவிசையின் புலத்துகளான கிராவிட்டான் (graviton) என்ற துகள்
மூடிய இழைகளின் ஒரு குறிப்பிட்ட விதத்திலான அதிர்வு
காரணமாகவே உண்டாகிறது என்று இழைக்கொள்கை
கூறுகிறது.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக