வியாழன், 19 அக்டோபர், 2017

பொருள்முதல்வாதப் பார்வையில் தீபாவளி!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
1) தீபாவளியை ஏன் கொண்டாடக் கூடாது என்பதற்கான
அறிவு சார்ந்த எந்தக் காரணத்தையும் இதுவரை
தீபாவளி எதிர்ப்பாளர்கள் கூறவில்லை.  நரகாசுரன்
கதையை ஆதாரமாகக் கொண்டே தீபாவளியை
எதிர்க்கிறார்கள்.

2) நரகாசுரன் கதை அதிகம் போனால் 300 ஆண்டுகளாக
புழக்கத்தில் உள்ள கதை. நாயக்க மன்னர்களின்
ஆட்சிக் காலத்தில், 17ஆம் நூற்றாண்டில், முதன் முதலாக
நரகாசுரன் கதை உருவாக்கப்பட்டது.

3) தீபாவளி அதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில்
கொண்டாடப் பட்டு வருகிறது. 15ஆம் நூற்றாண்டில்
நரகாசுரன் கதையே கிடையாது. ஆனால் தீபாவளி
உண்டு. அப்படியானால் நரகாசுரன் கதையே
இல்லாத தீபாவளியை எப்படி எதிர்க்க முடியும்?

4) இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப் படுகிறது.
ஆனால் நரகாசுரன் கதை இந்தியா முழுவதும் கிடையாது.
ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு என்னும் பிரதேச
எல்லைக்குள் மட்டுமே முடங்கிக் கிடக்கிறது
நரகாசுரன் கதை.

5) ராம ராவணப் போரில் வெற்றி பெற்று நாடு
திரும்பிய ராமரை வரவேற்கும் பொருட்டு அயோத்தி
மாநகர மக்கள் ஏற்பாடு செய்ததே தீபாவளி என்பது
உத்தர பிரதேச மாநிலத்தின் நம்பிக்கை.

6) சக்கரவர்த்தி நளன் சூதாட்டத்தில் அனைத்தையும்
இழந்து நாடு திரும்பிய நாளே தீபாவளி என்பது
பஞ்சாப் மாநிலத்தில் புழங்கும் கதை.

7) இந்து மதம் மட்டுமின்றி சமண பௌத்த மதங்களும்
தீபாவளியை சொந்தம் கொண்டாடுகின்றன.
சமண மத நிறுவனர் வர்த்தமான மகாவீரர் முக்தி
அடைந்த நாளே தீபாவளி என்று சமணர்கள்
கருதுகின்றனர். புத்த மதப் பண்டிகையே தீபாவளி
என்று பண்டித அயோத்திதாசர் கூறுகிறார்.

8) மேற்கூறிய விவரங்களால், தீபாவளி என்றாலே
நரகாசுரன் கதைதான் என்ற பொய்மை அடிபட்டுப்
போய் விடுகிறது.

9) தமிழகத்தைப் பொறுத்த மட்டில் தீபாவளி
என்பது தொல்குடித் தமிழர்களின் கொண்டாட்டம்.
குறைந்த பட்சமாக, தீபாவளிக்கு இரண்டாயிரம்
ஆண்டு கால வரலாறு உண்டு. சமண பௌத்த மதங்கள்
தோன்று முன்னரே தொல்குடித் தமிழர்கள்
தீபாவளியைக் கொண்டாடி வந்தனர். இந்து மதம்
இன்றைய வடிவம் எடுக்கு முன்னரே தொல்குடியினர்
தீபாவளியைக் கொண்டாடி வந்தனர். மதங்களுக்கு
அப்பாற்பட்டும், மதங்கள் தோன்றி நிறுவனமயம்
ஆவதற்கு முன்னரும் மக்களால் தீபாவளி கொண்டாடப்
பட்டு வந்தது.

10) ஆயின் தீபாவளி என்பது என்ன? தொல்குடித்
தமிழர்கள் தீபாவளியை ஏன் கொண்டாடினர்?
இதற்கு விடை காண்போம்.

11) தமிழ்ச் சமூகம் வேட்டுவச் சமூகமாக இருந்தபோதும்
கால்நடை வளர்ப்புச் சமூகமாகவும் இருந்த காலத்தில்
தீபாவளி என்ற கொண்டாட்டம் இல்லை. வேளாண்
குடிச் சமூகமாக தமிழ்ச் சமூகம் உயர்ந்தபோது,
தீபாவளி தோன்றியது.சங்க காலச் சமூகம் வேளாண்
குடிச் சமூகமே; இனக்குழுச் சமூகமே.

12) விளைந்த வயலில் விலங்குகள் கூட்டம் கூட்டமாக
வந்து பயிர்களை அழித்து விடுவது அக்கால நிகழ்வாக
இருந்தது. விலங்குகளின் எண்ணிக்கை இன்று போல்
அல்லாமல் அன்று மிகவும் அதிகம். விளைந்த
வயல்களில் ஆயிரக்கணக்கில் வந்து விழும்
விலங்குகளை சாதாரணமாக அடித்து விரட்டி
விட முடியாது. விரட்ட விரட்ட அவை மீண்டும் வரும்.

13) குறிப்பாக ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இது
நிகழும். அப்போதெல்லாம் அடைமழை பெய்யும்.
எனவே வெள்ளாமையைப் பாதுகாக்கவும்.
விலங்குகளை அடித்து விரட்டவும் பெரும் பெரும்
தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டும், இசைக்
கருவிகளால் பேரோசை எழுப்பிக் கொண்டும்
இருப்பார்கள் வேளாண் குடிகள். இது ஓர் வேளாண்
செயல்பாடு. இதை உற்சாகமாகச் செய்யும் பொருட்டு
இதை ஒரு கொண்டாட்டமாக ஆக்கியது பண்டைய
தொல்குடிச் சமூகம்.

14) இவ்வாறு தீபாவளி என்பது ஒரு வேளாண்
செயல்பாடாகத் தோன்றி, கொண்டாட்டமாக
ஆக்கப்பட்டது. கொண்டாட்டமாக ஆக்குவதன்
மூலமே இச்செயல்பாடு காலங்காலமாக நிலைத்து
நிற்க முடியும். காலப்போக்கில் மதங்கள் இவற்றை
ஆட்கொண்டு பண்டிகையாக மாற்றி விட்டன.

15) 1958இல் சீனாவில், மாபெரும் பாய்ச்சலின் போது
தானியங்களை உண்டு அழிக்கும் சிட்டுக் குருவிகளைக்
கொல்ல மாவோ சீன விவசாயிகளுக்கு
ஆணையிட்டார். 1958ஆம் ஆண்டிலேயே சிட்டுக்
குருவிகளால்  தானிய விளைச்சல் அழியும் என்றால்,
இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு
விலங்குகளால் எவ்வளவு மோசமாக பயிர்கள்
அழிந்திருக்கும் என்பதை வாசகர்கள் உணரலாம்.  

16) ஆக, தீபாவளியின் பிறப்பு என்பது வேளாண்
குடியினரின் உழைப்பு தொடர்பானது. உழைப்பில்
இருந்தே மக்களின் அத்தனை கொண்டாட்டங்களும்
பிறந்தன. காவிரியாற்றில் ஆடி மாதம் பதினெட்டாம்
நாள் ஆடிப்பெருக்காக எப்படிக் கொண்டாடப்
படுகிறதோ, அதைப் போன்ற ஒரு கொண்டாட்டம்தான்
தீபாவளியும்.

17) பட்டாசுகள் தமிழகத்திலும் இந்தியாவிலும்
உற்பத்தி செய்யப்பட்டபோதும், சீனாவில் இருந்து
இறக்குமதி செய்யப்பட போதும், தீபாவளியின்
போது பட்டாசுகள் முக்கிய இடத்தைப் பிடித்தன.
பட்டாசுகள் வெடிக்கும் ஒலியில் விலங்குகள் அஞ்சி
ஓடின. பட்டாசுகள் சமீபத்திய வரவு அல்ல என்பதும்
அவற்றுக்கு பல நூற்றாண்டு கால வரலாறு உண்டு
என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

18) இந்து மதப் பண்டிகைகள் அனைத்தும் சைவ
உணவுப் படையல்களைக் கொண்டவை. தீபாவளியில்
மட்டுமே அசைவ உணவு அனுமதிக்கப் படுகிறது.
இது பரந்துபட்ட உழைக்கும் மக்களின் பண்டிகை
என்பதற்கு இதுவே ஆதாரம் ஆகும்.

19) நரகாசுரன் கதை உழைக்கும் மக்களின் முகத்தில்
பிற்போக்குக் கருத்தியல் வீசி எறிந்த மலம் ஆகும்.
அதைக் கழுவிக் கொண்டு முகத்தைச் சுத்தம்
செய்து கொள்வதே அறிவுடைமை. அதற்கு மாறாக,
அந்த மலத்தைச் சந்தனமாகக் கருதி மார்பிலும்
முகத்திலும் பூசிக் கொள்கிறார்கள் திராவிடப்
போலிப் பகுத்தறிவுவாதிகள்.

20) உழைக்கும் மக்களின் பண்டிகையில் எங்கிருந்தடா
நரகாசுரன் வந்தான் என்று கேள்வி எழுப்பி
பிற்போக்குக் கருத்தியலை அடித்துத்  துவைப்பதற்குப்
பதிலாக, நராகாசுரன் தமிழ் மன்னன் என்று
ஒப்புக் கொள்பவன் பிற்போக்காளர்களை விட
மோசமானவன். இந்த இழிநிலைக்குக் காரணம்,
பொருள்முதல்வாதம் பற்றிய அறிவின்மையே.
*********************************************************      
                  
  
   

    
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக