வியாழன், 12 அக்டோபர், 2017

done (2)மார்க்சியப்  பார்வையில் அத்வைதம்!
கருத்துமுதல் வாதத்தின் உச்சமே அத்வைதம்!
இந்தியத் தத்துவஞானத்தின் உச்சகட்ட ஆக்கம் எது
என்ற கேள்விக்கு அத்வைதம் என்று விடை தரலாம்.
எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் அத்வைதத்திற்குப்
பிறவியளித்தார் என்ற போதிலும், நூற்றாண்டுகளைக்
கடந்தும் அத்வைதம் தன்னை ஒரு வலுவான தத்துவப்
பள்ளியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கான
காரணங்களில் ஒன்றாக, ஆதிசங்கரருக்கு முன்பே
அத்வைத சிந்தனை இந்திய மரபில் உருவாகி
இருந்தமையை உணர வேண்டும்.

கழிந்து போன இந்த 12 நூற்றாண்டுகளில், ஆதிசங்கரரின்
அத்வைதம் தொடர்ந்து வளர்சிதைமாற்றம்
(metabolism) அடைந்து கொண்டே வந்துள்ளது.
புறக்கணிக்க முடியாத ஒரு சிந்தனைப் பள்ளியாக
அத்வைதம் நிலைபேறு அடைந்தமைக்குக் காரணம்
நிகழ்ந்த இந்த வளர்சிதை மாற்றமே.

எனினும், தமிழகச் சூழலில் அத்வைதத்திற்கு ஒரு
எதிர்மறை முத்திரை (negative connotation) இருப்பதையும்
கவனம் கொள்ள வேண்டும். மிகவும் அழுத்தமாக
விழுந்துள்ளது இந்த எதிர்மறை முத்திரை.

"காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே" என்னும்
ஆய்வு முறைமையைக் கைக்கொண்டு அத்வைதம்
குறித்து ஆய்வோம்.

உலகின் எந்த மூலையில் எந்தவொரு தத்துவம்
தோன்றினாலும், தத்துவங்களின் இருபெரும்
வகைமையில் (classification) அது ஏதேனும் ஒன்றில்
அடங்க வேண்டும். பொருள்முதல்வாதம், கருத்து
முதல்வாதம் என்னும் இரு பெரும் வகைமையில்,
அத்வைதம் கருத்துமுதல் வாதம் என்னும்
வகைமையில் அடங்குகிறது.

உலகில் இதுவரை தோன்றிய கருத்து முதல்வாதத்
தத்துவங்கள் அனைத்திலும், ஆக உயர்ந்ததும்
கருத்து முதல்வாதத்தின் சிகரமாகக் கருதத் தக்கதுமான
தத்துவம் அத்வைதம் ஆகும். இன்று இந்த 2017ஆம்
ஆண்டிலும்கூட, அத்வைதத்தை மிஞ்சுகிற ஒரு
கருத்து முதல்வாதத் தத்துவம் தோன்றவில்லை.
தோன்றவும் இயலாது. ஏனெனில், கருத்தின் முழுமுதல்
தன்மையை (absoluteness), அதன் மாண்பை infinity அளவு
உயரத்தில் வைத்து விட்டது அத்வைதம். இதற்கு மேல்
உயரம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் இல்லை.

"பிரும்மம் ஒன்றே மெய்; பிரபஞ்சம் பொய்" என்கிறது
அத்வைதம். "உயிர் என்பது பிரும்மமே; வேறு எதுவும்
இல்லை" என்கிறது அத்வைதம். ஆதிசங்கரரின்
சொற்களில் கூறுவதானால்,  
"ப்ரம்ம ஸத்ய ஜகன் மித்ய ஜீவோ ப்ரம்மைவ நா பர"
என்பதே. இந்த சுலோகம் அத்வைதத்தின் மஹா சாரம்
ஆகும்.

(பிரும்ம சூத்திரத்திற்கு ஆதி சங்கரர் எழுதிய பாஷ்யம்
(Sankara Bhasya on Brahma Sutra) மற்றும் விவேக சூடாமணி
ஆகிய ஆதிசங்கரரின் மூல நூல்களில் இருந்தே
இக்கட்டுரைத் தொடர் முழுவதிலும் இடம் பெறும்
மேற்கோள்கள் சுலோகங்கள் எடுத்தாளப் படுகின்றன).

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தை, ஒட்டு மொத்த
இயற்கையை, ஒட்டு மொத்தப் பருப்பொருளை
(matter) மாயை (illusion) என்றும் பொய் என்றும்
கூறுகிறது அத்வைதம். பிரும்மம் மட்டுமே மூல
ஆதாரமானது, முழுமுதல் ஆனது, மாற்றங்களுக்கு
ஆட்படாதது, நித்தியமானது (eternal), எனவே ஆதியும்
அந்தமும் அற்றது என்று கூறுகிறது அத்வைதம்.

சதாசர்வ காலமும் இயங்கிக் கொண்டும், இயக்கத்தின்
போக்கில் மாறிக்கொண்டும் இருக்கின்ற
பருப்பொருளால் ஆன பிரபஞ்சம் ( ஜகத்) மெய்யாக
நின்று நிலவவில்லை (unreal; does not exist) என்கிறது
அத்வைதம். பிரும்மம் மட்டுமே மெய்; அது மட்டுமே
நின்று நிலவுவது என்கிறது அத்வைதம்.

ஆயின், அத்வைதம் கூறுகிற பிரும்மம் என்பது எது?
கடவுளா? இல்லை. தூய அறிவே பிரும்மம் என்கிறது
அத்வைதம். இதன் பொருள் சிந்தனையே பிரும்மம்
என்பதாகும்; கருத்தே முழுமுதலானது (absolute)
என்பதாகும். சுருங்கக் கூறின், அத்வைதம் என்ற
தத்துவம் கருத்து முதல்வாதத்தின் அதி உச்சம் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------

2) மார்க்சியத்தின் தோற்றுவாய்களில் ஒன்று
பொருள்முதல் வாதமாகும். அது போலவே,
அத்வைதத்தின் தோற்றுவாய் பிற்கால வேதாந்தம்
ஆகும். அதாவது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை
என்பதாக அறியப்படும் இரண்டில் உத்தர மீமாம்சையே
அத்வைதத்தின் தோற்றுவாய் ஆகும். பூர்வ மீமாம்சை
கடவுளை, கடவுளர்களை வழிபட வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தும் தத்துவம் ஆகும்.

3) ஆதிசங்கரரின் அத்வைதம் கடவுளைச்
சிறப்பிக்கவில்லை. முழுமுதல் அறிவையே
எதனையும் விட உயர்ந்ததாக முன்வைக்கிறது.          
*********************************************************

     


  

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக