சனி, 21 அக்டோபர், 2017

done (8) கால்களுக்குப் பதிலாக தலையின் மீது
நின்று கொண்டிருக்கும் ஆதி சங்கரர்!

பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பொருள் என்றால் என்ன என்ற கேள்வி எழுந்தது.
கருத்துமுதல்வாதிகள் இந்தக் கேள்வியை மிகவும்
வலுவாக எழுப்பினார்கள். குறிப்பாக இருபதாம்
நூற்றாண்டின் கருத்துமுதல்வாதிகள்
பொருள்முதல்வாதிகளை நோக்கி இந்தக்
கேள்வியைத் தொடுத்தார்கள். எனவே பொருள்
என்பதை அதவாது பருப்பொருள் என்பதை
வரையறுக்க வேண்டிய தேவை எழுந்தது
(matter had to be defined).

ஆயின் அதற்கு முன்பு, அதாவது இருபதாம்
நூற்றாண்டுக்கு முன்பு, பருப்பொருள் என்பது
வரையறை செய்யப்பட வில்லையா? பண்டைக்காலம் தொட்டே பருப்பொருள் என்பது வரையறுக்கப்பட்டு
இருந்தது. பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம்,
அதாவது பருப்பொருள் என்ற கருத்தை இந்தியாவில்
பௌத்தர்கள் உள்ளிட்ட பொருள்முதல்வாதிகள்
முன்மொழிந்து இருந்தனர். கிரேக்கத்தில்
அரிஸ்ட்டாட்டில் நான்கு மூலக் கொள்கையை
(four elements theory) முன்மொழிந்து இருந்தார். நிலம், நீர்,
தீ, காற்று. ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின்
சேர்க்கையே இவ்வுலகம் என்று பௌத்தர்களும்,
ஏனைய பண்டையப் பொருள்முதல்வாதிகளும்
கூறியிருந்தனர். இந்த ஐந்து பஞ்ச பூதங்களில்,
ஆகாயம் என்பதை மட்டும் தவிர்த்து விட்டு,
நான்கு மூலக் கொள்கையை (Earth, water, fire, wind)
உருவாக்கி இருந்தார் அரிஸ்ட்டாட்டில்.

இவை அனைத்தும் அறிதல் முறை சார்ந்த அதாவது
epistemological வகைப்பட்ட வரையறைகளாகவே
இருந்தன. அறிவியலின் வரையறையாகவும் இதுவே
இருந்தது. அரிஸ்ட்டாட்டில் அவர் காலத்திய (கி.மு 384-
கிமு 322) பௌதிக விஞ்ஞானி (Physicist) மட்டுமல்ல
அவர் காலத்தின் சிறந்த தத்துவஞானியும் ஆவார்.
ஆக,  கெளதம புத்தர் காலத்திலும், அரிஸ்ட்டாட்டில்
காலத்திலும், இவர்களுக்கெல்லாம் வெகுவாகப்
பின்தங்கிய எட்டாம் நூற்றாண்டின் ஆதிசங்கரர்
காலத்திலும் பஞ்ச பூதக் கொள்கையே பருப்பொருள்
பற்றிய கொள்கையாக உலகம் முழுவதும் நிலவி
வந்தது.

பரிசோதனை அறிவியல் (experimental science) என்பது
அரிஸ்டாட்டில் காலத்தில் மேற்கத்திய அறிவியலில்
கிடையாது. கலிலியோ காலத்தில்தான் (1564-1642)
முதன் முதலாக பரிசோதித்து உண்மையை
அறியும் முறைமை நடைமுறைக்கு வந்தது.

நவீன அறிவியல் கணக்கற்ற பரிசோதனைகள்
மூலம் பருப்பொருள் (matter) என்பதை மிகவும்
கறார் ஆகவும் துல்லியமாகவும் வரையறுத்துள்ளது.
அது பற்றிய முழுமையான விவரங்கள் இக்கட்டுரையின்
வரம்புக்கு அப்பாற்பட்டவை.

எனினும், பருப்பொருள் என்பது, அது நுண்பொருள்
ஆயினும் பெரும்பொருள் ஆயினும் (micro or macro)

அ) அண்டவெளியில் தனக்கென ஓர் இருப்பை
உடையது; அண்டவெளியில் நின்று நிலவுவது
(matter does exist)
ஆ) அண்டவெளியில்  ஓர் இடத்தை அடைக்கும்
தன்மையது (occupies space)
இ) நிறை (mass) உள்ளிட்ட பல்வேறு பண்புகளை
உடையது.

பருப்பொருள் என்றால் என்ன என்பதற்கு அறிவியல்
தரும் சுருக்கமான வரையறை இதுவே.

தம் காலத்திய கருத்துமுதல்வாதிகளின், குறிப்பாக
மாஹ் (Mach) போன்றவர்களின் கேள்விக்கு விடையாக
பொருள் என்பதை லெனின் பின்வருமாறு
வரையறுத்தார். "பொருள் என்பது மனிதனின்
சிந்தனைக்கு அப்பால், புறநிலையில் நின்று நிலவும்
ஒரு யதார்த்தம்" என்பதே பொருள் பற்றிய லெனினின்
வரையறை.

உங்கள் வீட்டுக் கொல்லையில் ஒரு முருங்கை மரம்
நிற்கிறது. அந்த மரம் உங்கள் கொல்லையில் இல்லை
என்று நீங்கள் நினைத்தாலும், அது இருக்கத்தான்
செய்கிறது. உங்கள் தெருவில் ஒரு கோவில் இருக்கிறது.
அது அங்கே இல்லை என்று நீங்கள் நினைப்பதால்,
அது அங்கே இல்லாமல் போய்விடுவதில்லை.

உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
 என்பதைப் பொறுத்ததல்ல பொருளின்
இருப்பு. நீங்கள் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும்
பொருள் இருப்பது இருக்கத்தான் செய்யும். அதாவது
உங்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை
யதார்த்தமாக (objective reality) பொருள் இருக்கிறது.
பருப்பொருளுக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு
என்ற அறிவியலின் வரையறையையே லெனினும்
கூறுகிறார். லெனினின் வரையறையின் முக்கிய
அம்சம் பொருள் என்பது ஓர் அகநிலை அம்சம் அல்ல
(matter is not subjective) என்பதுதான்.

புத்தர் உள்ளிட்ட  பண்டைய பொருள்முதல்
வாதிகளுக்கு பொருள் பற்றிய நவீன அறிவியலின்
வரையறையோ லெனினின் வரையறையோ
தெரியாது எனினும் பொருள் என்பது மனித
சிந்தனையைச் சாராத சுயேச்சையான
இருப்பு உடையது என்பது நன்கு தெரியும்.

பொருள் பற்றிய வரையறையைப் பொறுத்து
ஆதிசங்கரர் மிகவும் தனித்துவத்துடன் திகழ்கிறார்.
பருப்பொருள் என்ற ஒன்று இல்லவே இல்லை;
அது வெறும் மாயையே என்கிறார் ஆதிசங்கரர்.

மண்ணும் மரமும் செடியும் கொடியும் மலையும்
கடலும் காற்றும் நீரும் நிலவும் ஆகிய இவை யாவும்
மாயை என்கிறார் ஆதிசங்கரர். மனிதன் மட்டுமல்ல
ஐந்தறிவு நான்கறிவு உடைய குறையறிவு
உயிரினங்களும் புறவுலகம் உண்மை என்ற
கருத்தின் மீதுதான் வாழ்கின்றன. காலையில்
சூரிய உதயத்தில் கூட்டை வீட்டுக் கிளம்பும்
பறவைகள் மாலையில் சூரிய அஸ்தமனத்தின்போது
கூட்டை அடைகின்றன. கூட்டை விட்டுஇரைதேடக்  கிளம்புவதற்கும்  மீண்டும் கூடு அடைவதற்கும்
பறவைகளுக்கு வழி காட்டுவது எது? பிரம்மமா,
இல்லை சூரியனா?

வேட்டைக்குச் செல்லும் நாய்கள் தங்களின் மோப்ப
சக்தியை எங்கிருந்து பெறுகின்றன? காவல்
துறையின் நாய்கள் குற்றம் நடந்த இடத்தை முகர்ந்து
பார்த்து விட்டு குற்றவாளி எங்கு போயிருந்தாலும்
அந்த இடத்தைக் கண்டு பிடிப்பது எப்படி?
இதற்கு பொருள் பற்றிய அறிவு காரணமா அல்லது
பிரம்மம் காரணமா?

பருப்பொருளை புறவுலகை முற்றிலுமாக மூர்க்கத்
தனமாக மறுக்கும் அத்வைதம் எப்படி உலகிற்கு
வழிகாட்டும் தத்துவம் ஆகும்? பெர்க்லி பாதிரியாரின்
அகநிலைக் கருத்து முதல்வாதம் பற்றி ஏற்கனவே
பார்த்துள்ளோம். புறவுலகு என்பது மனதின்
சிருஷ்டியே என்பதுதான் பெர்க்லி பாதிரியாரின்
கருத்துமுதல்வாதம். அதைப்  போன்றதுதான்
ஆதிசங்கரரின் அத்வைதமும்.

என்றாலும் பிற கருத்து முதல்வாதத் தத்துவங்களுக்கும்
அத்வைதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு உண்டு.
பொருள், கருத்து என்ற இரண்டின் உண்மையை
(உண்மை=உள்ள தன்மை, இருப்பு) பல்வேறு கருத்து
முதல்வாதப் பிரிவுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
பொருள் இருக்கிறது, கருத்தும் இருக்கிறது,
இவ்விரண்டில் கருத்தே முதன்மையானது
என்பதுதான் கருத்து முதல்வாதம். ஆனால்
அத்வைதத்தைப் பொறுத்தமட்டில், பொருள் கருத்து
என்னும் இவ்விரண்டில், கருத்து மட்டுமே இருக்கிறது
பொருள் என்பது இல்லவே இல்லை. எனவே அத்வைதம் கருத்துமுதல்வாதம் அல்ல, வெறும் கருத்துவாதம் ஆகும்.

பொருளின் உண்மையை மறுத்து, பொருளே மாயை,
(பொருளே இல்லை) என்பதன் மூலம் அத்வைதம்
பொருள்முதல்வாதத்தின் நேர் எதிர் துருவத்தில்
தன்னை இருத்திக் கொண்டுள்ளது. பொருள்முதல்
வாதத்தின் ஒரு ஒற்றை அம்சத்தோடு கூட உடன்பட
முடியாத நிலையை சிருஷ்டித்துக் கொண்டுள்ளது
அத்வைதம்.இதன் மூலம் உலகியலுக்கு நேர் எதிரான
ஒரு  பொய்மையில் குடிகொண்டுள்ளது அத்வைதம்.

சென்னை அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளை
ஒட்டிக் கொண்டு செல்லும் ஒருவருக்கு திடீரென்று
அத்வைத மனநிலை வாய்த்து விடுகிறது என்று
வைத்துக் கொள்வோம். அவரால் ஒழுங்காக வீடு
போய்ச்  சேர முடியுமா? அல்லும் பகலும் அனவரதமும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கிற புறவுலகை இல்லை
என்று மறுப்பதன் மூலம் யார்தான் என்ன பயனை
அடைய முடியும்?

இந்த உலகின் பிரச்சினைகளுக்கு இந்த உலகில்
தீர்வு காண்பதே ஒரு தத்துவத்தின் பயன்.அத்வைதம்
யதார்த்த உலகின் இருப்பையே அங்கீகரிக்காத
நிலையில், யதார்த்த உலகின் பிரச்சினைகளுக்கு
அதில் எங்ஙனம் தீர்வு இருக்க இயலும்? துன்ப
துயரங்களில் சிக்குண்டு அலைக்கழிக்கப்படும்
மக்களுக்கு அத்வைதத்தில் என்ன தீர்வு உள்ளது?

புறவுலகை பருப்பொருளை மறுத்து ஆதிசங்கரர்
முன்வைக்கும் வாதங்களின் வெறுமையை
இப்போது பரிசீலிப்போம்.

பொருள் என்பது சதா சர்வ காலமும் மாறிக்கொண்டே
இருக்கிறது. அது ஒரு நிலையில் இருப்பதில்லை.
மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றுக்கு (பொருளுக்கு) சுயேச்சையான இருப்பு என்பது எப்படி இருக்க முடியும்?
எனவே பொருள் என்பது மாயை என்கிறார்
ஆதிசங்கரர்.

தண்ணீர் என்பது ஒரு பொருள். இது  இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும்
கொண்டுள்ள ஒரு மூலக்கூறு. இதை H2O என்பர்.
சென்னையில் நம் வீட்டில் குடத்தில் உள்ள நீர் அறை வெப்பநிலையில் 30 டிகிரி செல்சியசில்
இருக்கும். இதை ஒரு பாத்திரத்தில்
வைத்து சூடு படுத்தினால், 100 டிகிரி செல்ஸியசை
எட்டியதும் நீராவியாகி விடும். இதே தண்ணீரை ஒரு
குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குளிர்வித்தால்
அது பனிக்கட்டியாக மாறிவிடும். இந்த நிகழ்வுகளை
நவீன அறிவியல் "கட்ட மாற்றம்" (change of phase)
என்கிறது. இந்தக் கட்ட மாற்றத்தால் தண்ணீர்
என்பது மாறி விடுவதில்லை. அதாவது தண்ணீரில்
உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையோ
அல்லது ஆக்சிஜன் எண்ணிக்கையோ மாறி
விடுவதில்லை. தண்ணீர் தண்ணீராகத்தான்
இருக்கிறது. தண்ணீர் அமோனியாகவோ
மீத்தேனாகவோ மாறி விடுவதில்லை.

ராமசாமி என்பவருக்கு 102 டிகிரி (ஃ பாரன்ஹீட்)
காய்ச்சல் வந்து விடுகிறது. பின்னர் குணமாகி
விடுகிறது. குணமாகியபின் உடலின் வெப்பநிலை
98.4 ஃபாரன்ஹீட்டுக்கு வந்து விடுகிறது. காய்ச்சல்
வந்ததால் ராமசாமி துலுக்காணமாக மாறி
விடுவாரா? இல்லை அல்லவா? அது போலவே
கட்ட மாற்றத்தால் (வெப்பநிலை மாற்றத்தால்)
பொருள் மாறி விடுவதில்லை. பொருள் மாறி
விடுவதில்லை என்பதன் அர்த்தம் பொருள் நிலையாக
இருக்கிறது என்பதுதான். எனவே பொருள்
நிலையானதல்ல என்ற ஆதிசங்கரரின் வாதம்
அடிபட்டுப் போய் விடுகிறது.

எலக்ட்ரான் என்பது ஒரு நுண்ணிய துகள். இது
ஒரு பருப்பொருள். இதன் அளவு (SIZE), அதாவது
எலக்ட்ரானின் ஆரம் 2.81 X 10^minus 15 ஆகும்.
இதன் நிறை 9.1 X 10^ minus 31 ஆகும். ஆக எலக்ட்ரான்
என்பது மிகவும் நுண்ணியது; மிகவும் குறைந்த
நிறை உள்ளது. என்றாலும் இந்த அண்ட வெளியில்
எலக்ட்ரான் இல்லையென்று எவராலும் கூற
இயலுமா?

இந்தக் கட்டுரையை எழுதும் நான் சென்னையில்
இருக்கிறேன். சென்னை நகரின் அட்ச ரேகை
(latitude) 13.067 439 N; தீர்க்க ரேகை (longitude) 80.237 617 E.
சென்னை நகரம் 13 மீட்டர் உயரத்தில் (elevation from MSL,
MSL = Mean Sea Level), இந்தக் கட்டுரையை மதுரையில்
இருந்து வாசிக்கும் ஒருவர் 9.939 093 அட்ச ரேகையிலும்
78.121 719 தீர்க்க ரேகையிலும் 137 மீட்டர் உயரத்திலும்
(elevation) இருப்பார். இதன் மூலம் பொருட்களுக்கு
இருப்பு உண்டு என்பது நிரூபிக்கப் படுகிறது.
இந்த நிரூபணம் அத்வைதத்தின் மாயையை
சம்மட்டியால் அடிக்கிறது.

படுபயங்கரமான அப்பாலைத் தத்துவமான
அத்வைதம் கூறும் பிரம்மம் இந்த பிரபஞ்சத்தில்
எங்கே இருக்கிறது? அதன் அச்சுகளை (coordinates)
எவரேனும் சுட்ட இயலுமா? இயலாது. ஏனெனில்
பிரம்மம் என்பதற்கு மொத்தப் பிரபஞ்சத்திலும்
எந்த இடமும் கிடையாது. அது ஆதிசங்கரரின்
மூளையில் மட்டுமே குடிகொண்டிருந்த ஒரு
கருத்து; சிந்தனை. ஆதிசங்கரரின் பிரம்மம்
என்பது ஒரு பொருள் அல்ல. உண்மையில்
பிரம்மம் என்பதுதான் மாயை. பிரம்மம் என்பதுதான்
பொய்.பிரம்மம் என்பதுதான் எந்த பௌதிக இருப்பும்
அற்றது.உண்மையில் இல்லாதது.

ஆதிசங்கரர் தம் தலையின் மீது நின்று கொண்டு
இருக்கிறார். அவரை அவரின் கால்களின் மீது நிறுத்த
வேண்டும்.அதற்கு அவரின் அத்வைதத்தைத் திருத்த
வேண்டும். புறவுலகம் பொய், பருப்பொருள் மாயை
என்ற ஆதிசங்கரரின் கருத்தியலை, பருப்பொருள்
மெய் என்றும் புறவுலகம் மெய் என்றும் திருத்த
வேண்டும். அப்போது அது ஒரு கருத்து
முதல்வாதமாகவேனும் நிலைக்கும். இல்லையேல்
யார் எவருக்கும் பயனற்ற வெற்று அப்பாலைத்
தத்துவமாக, வீணானதாக, அகற்றப் பட வேண்டிய
கழிவாக மட்டுமே எஞ்சும்.
-----------------------------------------------------------------------------------------------         
     
  

     
            
          


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக