திங்கள், 23 அக்டோபர், 2017

தந்தை பெரியார் அவர்களின் உழைப்பை மதிப்போம்...!!!
ஆனால் அவர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வரல்ல...!!!
----------------------------------------------------------------
தமிழகத்தில் திட்டமிட்டு பெரியாரை பெரியவா போல் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பெரியாரின் கருத்துகளில் ஏதேனும் மாற்று கருத்து வைத்தாலே போதும்.. என்ன பெரியவாளயே எதுத்து பேசுறீயா.. என்று வெகுண்டெழுகிறார்கள் பக்தர்கள்.
பெரியாரின் வைக்கம் போராட்ட பில்டப்புகள் குறித்து லைன்ஸ் மீடியாவில் எழுதப்பட்ட கட்டுரையை பலர் வரவேற்றிருந்தார்கள்.
மேலும் பலர் நாகரீகமாக மறுப்பு விமர்சனத்தை முன்வைத்தார்கள். சிலர் கடுமையாக அனுகினார்கள்.
அவர்களால் ‘வைக்கம்’ தாண்டி மற்றவைகளுக்கு எந்த பதிலையும் தரமுடியவில்லை.
தவிர சிலர் ‘’கிசுகிசு” எழுத்தாளர் என்றார்கள். வைக்கம் போராட்டதை ‘’கிசுகிசு சமாச்சாரம்” என்று நினைத்து விட்டிருக்கும் பெரியார் பக்தர்களை என்ன சொல்வது. பெரியார், சமூக நீதிக்கான கொள்கையைப் பற்றி கேட்டால் ‘கிசுகிசு’ விவகாரமா? தெரியவில்லை.
அடுத்து, தந்தை பெரியாரை, கொச்சைப்படுத்துவதாக கூறுகிறார்கள்.
நேற்றுவரை அவர் சாதி ஒழிப்பு போராளி என்றுதான் நாங்கள் நம்புகிறோம். தந்தை பெரியார் என்றுதான் ஏற்றிருந்தோம். ஆனால் திடீர் திடீரென, அவர் “ஈ.வெ.இராமசாமி நாயக்கர்” என வைகோ போன்றவர்கள் நினைவுபடுத்தும் போது என்ன செய்யமுடியும்?
அதைத்தானே நாமும் அழைக்க வேண்டியுள்ளது.
உண்மையைச் சொல்வதென்றால் திராவிடம் பேசுபவர்களை விட, கருணாநிதியைவிட, பெரியாரை வேறு யாரும் கொச்சைப்படுத்தவே முடியாது. வழிதோறும், வரலாறு தோறும் அவர்கள் மட்டுமே பெரியாரை கொச்சைபடுத்தி வருகிறார்கள்.
இப்போதும் சொல்கிறோம். அந்தக் கட்டுரையில் சொன்னதைப் போல், வைக்கம் போராட்டம், பெரியாரின் போராட்டம் அல்ல. அது காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்.
இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிதியில் இருந்து 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அந்த போராட்டத்தில் போய் கலந்து கொண்டார். மற்றபடி அவரது பங்களிப்பை, சிறைவாசத்தை எங்கேயும் நாம் மறுக்கவில்லை.
நம்பூதிரிகள் கும்ப மரியாதையோடு வரவேற்க வந்தார்கள். ஆனால் பெரியார் வேண்டாம் எனக் கூறிவிட்டார் என்றளவில் மூத்த தோழர் மறுத்துள்ளார். தவிர நம்பூதிரிகளின் வீட்டில் தங்காமல் வேறு யார் வீட்டில் தங்கியிருந்தார் என்பதை அவர்கள் சொன்னால் அடியேன் திருத்திக் கொள்கிறேன்.
1925-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாட்டால் வெளியேறினார். பிறகு நீதிக்கட்சியின் பக்கம் திரும்புகிறார். அதிலும்கூட அவர் நீதிக் கட்சியில் அப்போது சேரவில்லை. ஆதரவாளராகத்தான் இருக்கிறார். 1940-ல் தான் அந்த கட்சி தலைவராகிறார் என்றார்கள். இருக்கட்டும்.
சரி, அந்த காலகட்டத்தில் தமிழகத்தில், ‘வைக்கம்’ போன்று எங்கேயும் இல்லையா?
திருச்சி ஸ்ரீரங்கம் தொடங்கி, மதுரை மீனாட்சி கோயில் வரையிலும் ‘ஆதி தமிழர்களுக்கு அனுமதி’ என்றா இருந்தது.
‘வைக்கம் வெற்றி’யைப் போன்று, தமிழகத்தில் ஏன் சாத்தியப் படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலே இல்லை. அடுத்து என் கருத்தும் கேள்வியும் ‘பித்தலாட்டம்’ ‘முரண்பாடு’ என்கிறார்கள்.
எது பித்தலாட்டம்.? மறைக்கப்பட்ட வரலாற்றை திரும்பி பாருங்கள். எவ்வளவு பெரிய பித்தலாட்டத்தை, ஏமாற்று வேலையை இவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.
பெரியார் பிறப்பதற்கு எழுபது வருடங்கள் முன்பே பிறந்தவர் அய்யா வைகுண்டர், (1809-1851). தென் மாவட்டத்தில் ஒடுக்குமுறைக்குள்ளான மக்களுக்காக போராடிய மகான்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு எதிராக கலகக்குரல் எழுப்பியவர். கண்டாலே தீட்டு என ஒதுக்கி வைக்கப்பட்ட நாடார் சமூகத்து மக்களுக்காக மட்டுமல்ல, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 சாதிகளுக்காகவும் போராடியவர்.
சாணார் நாடார் சமூகத்துப் பெண்கள் மாராப்புதுணி, ரவிக்கை அணியக்கூடாது என்ற ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த கலகக்காரர். கோலியாத்துக்களை எதிர்த்த தாவீது.
கடவுள் இல்லை. நீயேதான் கடவுள் என்றவர். சாதி மதம் பேதமேதுமில்லை என்றவர். அந்த காலத்திலேயே எல்லா சாதிகளுக்குமான ‘சமத்துவ புரத்தை’ உருவாக்கிக் காட்டியவர். ‘சமபந்தி போஜனம்’ தொடர்ந்து நடந்தியவர். பெண் விடுதலை, பொதுக்கல்வி, சாதி ஒழிப்பு, அடிமைத்தனம், பொதுவுடமை கருத்து என அனைத்தையும் பேசியவர். நடைமுறைப்படுத்தியவர்.
துண்டை இடுப்பிலும், கக்கத்திலும் வைத்து பணியாதே. கம்பீரமாய் தலைப்பாகையாய் கட்டிவா, பெண்கள் மாராப்பு துணியணிந்து வா என சுயமரியதையைச் சொல்லிக் கொடுத்தவர். இன்று வரை அவரது வழியை பின் பற்றுபவர்கள் அதை தொடர்கிறார்கள்.
இப்படி எல்லா வழியிலும் முன்னோடியாக இருந்த அய்யா வைகுண்டரை, பெரியார் ஏன் எங்கேயும் பின்பற்றிவில்லை- பின்பற்றி பேசவில்லை. அல்லது அவரில் இருந்துதான் ‘நான் கருத்து திருட்டை’ செய்தேன் என ஒப்புக்கொள்ளவில்லை.
சரி வேண்டாம், அவருக்கு பின் வந்த திராவிட கட்சிகள் ஏன் பெரியாரை மட்டுமே முன்மொழிந்தது?
அய்யா வைகுண்டரை ஏன் பின்னுக்குத் தள்ளியது. பெரியார் நிதிநிறுவனம் நடத்திக் கொண்டிருப்பவர்கள், அந்த நிதியில் வைகுண்டர் போன்ற முன்னோடிகளை புத்தகமாக்கி வெளிக்கொண்டு வராதது ஏன்?
ஏன் என்றால், அய்யா வைகுண்டர் வழியை எடுத்தால் தமிழ் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைத்துவிடுமே என்ற பேரச்சம். நடுங்குகிறார்கள். அவ்வளவுதான்.
பெரியார் திடல்-தந்தி அலுவலகம் இடத்தை வாங்கியபோது பெரியாரும்- ஆதித்தனாரும் பார்ட்னர்கள். ஆதித்தனார் பாரிஸ்ட்டர் பட்டம் பெற்றவர். எனில் பெரியார் யாருக்கு சுயமரியாதையை பெற்றுத் தந்தார்.
அடுத்து பெரியார் பிறப்பதற்கு 34 வருடங்கள் முன்பே பிறந்துவிட்ட (1845-1914) அயோத்திதாச பண்டிதரின் புரட்சியை எடுத்துக் கொள்வோம்.
திராவிடக் கட்சிகள் இதையும் மோசடி செய்து இருட்டடிப்பு செய்துவிட்டது.
பறையர் சமூகத்தைச் சேர்ந்தவரான அயோத்திதாசர் மிகப் பெரும் கல்வியாளர். சித்த மருத்தவர். இவரது தாத்தா ‘பட்லர் கந்தப்பன்’தான் தன் குடும்பத்தில் பரம்பரை சொத்தாக பாதுகாத்து வைத்திருந்த திருக்குறள் கையெழுத்துப் பிரதியை எடுத்துச் சென்று ‘எல்லீஸ் துரை’யிடம் கொடுக்கிறார். அந்த எல்லீஸ் துரை மூலம்தான் திருக்குறள் வெளி உலகம் வருகிறது.
அந்த பின்னணியைக் கொண்ட அயோத்திதாச பண்டிதரும், சாதி ஒழிப்பு செயல்பாட்டில் பெரியாருக்கு முன்னோடி. சாதி ஒழிப்பு, பெண்களுக்கான விடுதலை, கோயில் நுழைவு கோரிக்கை வைத்து அனைத்து தளத்திலும் இயங்கியிருக்கிறார். (1891-ல் சாதியற்ற திராவிட மஹாஜன சபை”மூலமாக இலவச கல்வி, கோயில் நுழைவு, தரிசு நிலம், என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், பிரிட்டிஷ் ஆட்சிக்கும் கோரிக்கை வைக்கிறார்.-நிராகரிக்கப்படுகிறது)
1886-ல் ஆதி திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்கிறார். 1891-ல் நடந்த கணக்கெடுப்பில் கிருத்துவர்கள், மற்றும் மூஸ்லீம்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே இந்துக்கள் என்பதை எதிர்த்து, தாழ்த்தப்பட்டவர்களை ‘சாதியற்ற தமிழர்களாக’ அறிவிக்க போராடுகிறார்.
இப்படி பல வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திய அயோத்திதாச பண்டிதரை திராவிட கட்சிகளும் இயக்கங்களும் இருட்டடிப்பு செய்தது ஏன்? (பௌத்த மத சம்மந்தமான விஷயத்தில் பல முரண்பாடுகள் உண்டு)
அயோதித்தி தாசர் பண்டிதரை அடுத்து ‘தாத்தா’ ரெட்டைமலை சீனிவாசன் (பெரியார் பிறப்பதற்கு 20 வருடம் முன் 1859-ல் பிறந்தவர்) எம்.சி.ராஜா,(பெரியாருக்கு 4 வருடம் இளையவர்-சம காலத்தவர்) உள்ளிட்ட பல தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியதைக்காக, உரிமைக்காக, எத்தனையோ அவமானங்களை எதிர்கொண்டு போராடியிருக்கிறார்கள்.
இவர்கள் வந்து படிப்பை சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ‘பாரிஸ்ட்டர் பட்டம்’ பெற்றவர்களாக, சுயமரியாதையோடு நின்றிருக்கிறார்கள். தன் சமூகத்தின் சுயமரியாதையையும் முடிந்த மட்டும் மீட்டிருக்கிறார்கள்.
அவர்களின் பெயரை எல்லாம் ஏன் திராவிடக் கட்சிகள் கொண்டாட மறுத்து, ‘தலித்’ தலைவர்களாக மட்டும் தான் பார்த்தது.
நியாப்படி பார்த்தால் அய்யா வைகுண்டரையும், பண்டிதர் அயோத்தி தாசரையும், ரெட்டமலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்றவர்களையும் தான் “தந்தை பெரியாராக’ பெயர் வைத்து கொண்டாடியிருக்க வேண்டும்.
கேட்டால், ‘அய்யா, வைகுண்டர் ஆன்மீகவாதி’ என சப்பைக்கட்டு கட்டுவார்கள்!
சரி இப்போதிருக்கும் திராவிட தலைவர்கள் என்ன கோயில்களை வெடி வைத்து தகர்த்து புரட்சியா செய்தார்கள். அவர்களின் வாரிசுகள் கோயிலை சுற்ற வேண்டாம் என்றா தடுத்தார்கள். அல்லது ஆன்மீகவாதிகளை எல்லாம் நாடு கடத்தி விட்டார்களா?
அயோத்தி தாசர், ரெட்டமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி கேட்டால், ‘…அவர்கள்..பிரிட்டிஷ் அரசுடன் இ..ன..க்..க..மா..க’ இருந்தார்கள் என்று இழுத்துப் பேசுவார்கள்.
சரி, பெரியார் மட்டும் என்ன செய்தார்?
1944-ல் ஆகஸ்ட் மாதம் சேலத்தில் மாநாடு. அதில், “நீதிக் கட்சியை, திராவிடர் கழகமாக” பெயர் மாற்றம் செய்ததை மட்டும் வரலாறு தோறும் சொல்கிறார்கள். ஆனால் மறைக்கப் பட்ட ஒரு தீர்மானத்தை சொல்வதே இல்லை. இருட்டடிப்பு. அந்த மாநாட்டில் என்ன தீர்மானம் போட்டார்?
அந்த தீர்மானத்தின் தலைப்பு,
“பெருமைதாங்கிய பிரிட்டிஷ் ராணியாருக்கு ஒரு வேண்டுகோள்.”! என்பது.
“மேன்மை தாங்கிய பிரிட்டிஷ் ராணியாருக்கு இந்த மாநாடு ஒரு வேண்டுகோளை வைக்கின்றது. இந்தியாவிற்கு சுதந்திரம் தரப்போவதாக கேள்விப்படுகிறோம். நீங்கள் சுதந்திரம் தரக்கூடாது. தருவதென்று முடிவு செய்துவிட்டாலும் சென்னை ராஜதானிக்கு நீங்கள் சுதந்திரத்தை தரவேக்கூடாது.
‘நாங்கள் என்றென்றும் மேன்மை தாங்கிய பிரட்டிஷ் ராணியின் ஆட்சியின் கீழ் வாழவே விரும்புகிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.
‘வராற்றுப் புகழ்’ மிக்க இந்த தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தது அண்ணாதுரை. (இதற்கும்- சுதந்திரத்தை கருப்பு தினம் என எதிர்த்ததற்கும் ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அந்த காரணத்தை பின்னாளில் அதிகாரத்திற்கு வந்த அவரின் தம்பிகளே ஏலம் போட்டு விட்டார்கள்)
அடுத்து, செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் வந்த ‘திராவிட நாடு’ பத்திரிகையில்., “சேலம் மாநாட்டில் சி.என். அண்ணாதுரையின் தீர்மானம்” என்ற தலைப்பிட்டே மூன்று பக்கத்திற்கு மாநாட்டுச் செய்தி, தீர்மானம் பற்றியும் எழுதியிருந்தார்கள்.
அயோத்திதாச பண்டிதரும், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சாமரம் வீசினார்கள் என்றால், “மேன்மை தாங்கிய பிரட்டிஷ் ராணியின் ஆட்சியின் கீழ் வாழவே விரும்புகிறோம்” என்பதென்ன பெரியாரின் கலகக்குரல் தீர்மானமா?
பின்னாளில் மறைக்கப்பட்ட அந்த தீர்மானம் பித்தலாட்டமா இல்லையா?
அடுத்து, தோழர் ஒருவர் எனக்கு ‘சாட்டையடி’ என்று ஒரு லிங்க் அனுப்பியிருந்தார்.
அதில், ‘1925-லேயே கோயில்களை எல்லாம் ‘அரசுடமை ஆக்கியது நீதிக்கட்சி. முதல்வராக இருந்த பனகல் அரசர் அதை சாதித்தார். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த கோயில்களை அரசுடமையாக்கியது எவ்வளவு பெரிய சாதனை! என்றார்.
நல்லது! அந்த ‘அரசுடமையாக்கப்பட்ட கோயில்களில் இருந்து பிராமணர்களை விரட்டி விட்டீர்களா?
கோயில் நிலத்தை எல்லாம் பிரித்து, ‘இதுதான் சமூக நீதி’ என்று தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பிரித்து கொடுத்தார்களா? குறைந்த பட்சம், அந்த கோயில் நிர்வாகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘சுயமரியாதை இடம்’ கொடுக்கப்பட்டதா?
தேடினால் ஒரு ஆணியையும் காணவில்லை.
உடனே நாங்கள் 1971-லேயே ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கலாம்’ என்ற சட்டத்தை இயற்றினோம் என்கிறார்கள். பெரியாருக்கு தொடர்பில்லாத கேரளாவில் உடனே நடைமுறைக்கு வரும்போது, ‘பெரியார் மண்ணில்’ யார் தடுத்தது.
மூன்று சதவீதம் உள்ள பிராமனர்கள் தான் தடுத்தார்கள் என்றால், அதிகாரத்தை வைத்து என்ன செய்தீர்கள்.?
‘ஒன்றுமே செய்ய முடியாத’ அதிகாரத்தை பெறவா, பெரியாரை கழட்டி விட்டுவிட்டு தேர்தல் அரசியலுக்குள் ஓடினீர்கள். ஒன்றுமே செய்ய முடியாத அதிகாரத்தைப் பெறாவா, ‘திராவிட நாடு கோரிக்கையை’யை அடகு வைத்தீர்கள்?
இருக்கட்டும், இவர்களின் ‘ஈயம் பூசின மாதிரியும்-பூசாத மாதிரியுமான ‘பெரியாரிய-திராவிட-சமூக நீதி’ கொள்கைக்கு வருவோம்.
நம், ‘தமிழ்க்குடி மகன்’ இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார். தமிழில் அர்ச்சனை செய்யாமல் ஓயமாட்டேன் என நாற்காலியில் உட்கார்ந்தார். பிறகு என்ன சொன்னார், “அது வந்து..தமிழில் அர்ச்சனை என்பதை மக்கள்தான் விரும்பி கேட்கனும்’ என்று படுத்துக் கொண்டார்.
கோயில்களில் எல்லாம் “தமிழிலும்” அர்ச்சனை என எழுதப்பட்டிருந்ததை, “தமிழில்’’ அர்ச்சனை என மாற்றிய ‘புரட்சி’யோடு நிறுத்திக் கொண்டார்கள்.
அதற்கு முன்பு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை இருந்தது. தமிழில் அர்ச்சனை வேண்டும் என கேட்பவர்கள், அதை ‘ரசீதில்’ கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
அந்த நேரத்தில் மெய்க்கண்ட தேவன் என்ற அதிகாரி இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்தார். ‘தமிழில் அர்ச்சனை என்பது வழக்கமாக இருக்கட்டும். ‘சமஸ்கிரதத்தில் அர்ச்சனை’ வேண்டும் என்பவர்கள் அதைக் குறிப்பிட்டுக் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும் என வாய்மொழியான உத்தரவை போட்டார்.
இதைக் கண்டு கொதித்துப்போன செம்மங்குடி சீனிவாச அய்யங்கார் பிரமாணர்களை திரட்டிக் கொண்டு நேராக முதல்வர் கருணாநிதியைப் போய் பார்த்து,
‘இதெல்லாம் தப்பு ஓய்’. சமஸ்கிரத அர்ச்சனைதான் மெயின். தமிழில் வேணும்னா கேட்டு வாங்கிக்கொள்ளட்டும். பழசை மாற்றாதீரும்” என முறையிட்டார்.
“இது பெரியாரின் பூமி. நாங்கள் பெரியாரின் பிள்ளைகள். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றெல்லாம் விஸ்வரூபமெடுத்து நின்றிருக்க வேண்டிய கருணாநிதி அப்படியே குணிந்து கொண்டார். தலையை பத்தடி பள்ளத்தில் புதைத்து வைத்துக் கொண்டார்.
இதான் ஈயம் பூசி மாதிரியும்- பூசாத மாதிரியுமான திராவிட கட்சிகளின் பெரியாரிய கொள்கை.!
மற்றொரு ’ஈயம் பூசுன’ வேலையையும் கூறலாம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் நந்தன் போன போது எரித்து கொன்றுவிட்டு சோதியில் கலந்து விட்டதாக, தீட்சிதர்கள் ‘புராணம்’ எழுதினார்கள். பிறகு வந்த காலங்களில், வள்ளலார் சென்றபோது அவரை அடித்து துவைத்து தூக்கி வெளியில் வீசினார்கள். அப்பாதெல்லாம் ‘பெரியார் புரட்சி’ மலர்ந்திருக்கவில்லை. தப்பு நடந்து விட்டது.
இப்போது பெரியாரின் மண்ணில், பெரியாரின் பிள்ளைகள் அதிகாரத்தில் இருக்கும் போது….
“ஆறுமுகசாமி என்ற ஓதுவார் அந்த கோயிலின் உள்ளே சென்றார். கர்ப்பகிரகத்திற்குள் தமிழில் அர்ச்சனை செய்வதற்காக அல்ல. கர்பகிரகத்தின் எதிரே இருக்கும் மண்டபத்தில், தமிழில் ஓத வேண்டும் என்றுதான் கேட்டார். அவரையும் அடித்துத் தூக்கி வெளியே போட்டார்கள். உச்சநீதி மன்றம் வரை மல்லுக்கட்டினார் ஆறுமுகசாமி. அவருக்கு பெரியார் வழிவந்த தமிழக அரசோ, கோடி கோடியாய் நிதியை வைத்திருக்கும் ‘பெரியார் நிதி நிறுவனமோ’ உதவி செய்யவில்லை.
மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களும், ம.க.இ.க. தோழர்களும்தான் துணை நின்றார்கள். வழக்கம்போல் பெரியாரிஸ்ட்டுகள் ‘அடையாள’ போராட்டத்தோடு நின்றுகொண்டிருக்கலாம். அது வேறு. இப்போது எது பித்தலாட்டம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்னொரு ‘யோக்கிய வரலாற்றை’ பார்க்கலாம்.
1951-லேயே, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை பெரியார் தான் பெற்றுக் கொடுத்தார். முதன் முதலாக அவர்தான், அதற்கென்று ஒரு மாநாட்டை திருச்சியில் நடத்தினார் என்ற சம்பவத்தைச் சொல்கிறார்கள்.
அப்போது என்ன நடந்தது.? செண்பகம் துரைராஜன் என்ற பிராமணப் பெண்மணி மருத்துவத்திற்கு விண்ணப்பித்தார். கிடைக்கவில்லை. அப்போது ObC-களுக்கு அரசு ஒதுக்கீடு இருந்தது. . (இந்த OBC இட ஒதுக்கீட்டைக்கூட காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் கொண்டு வந்தது.)
“அதனால் தான் எனக்கு இடம் கிடைக்கவில்லை. SC-ST களுக்கான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன சட்ட அங்கீகாரம் பெற்றது. ஆனால் ObC களுக்கான இட ஒதுக்கீடு அப்படியான, ‘அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றதல்ல” என்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கு உச்சநீதி மன்றமும் செல்கிறது. ObC களுக்கான இட ஒதுக்கீடு முறையானதல்ல என ரத்துச் செய்கிறது நீதி மன்றம்
அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் இதற்கு எதிராக குரல் எழுப்புகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் குமாரசாமி ராஜா முதல்வர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தார். பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா மற்ற தம்பிகளோடு பிரிந்து போய்விட்டார். ஆக அப்போது பெரியாருடையது அவ்வளவு பெரிய இயக்கமும் இல்லை.
ஆனாலும் திருச்சியில் இட ஒதுக்கீட்டு சட்டம் வேண்டி மாநாட்டை நடத்துகிறார். அது ஒரு கருத்துருவாக்கம். வரவேற்க கூடிய ஒன்று. மறுப்பதற்கில்லை.
அந்த நேரத்தில் (தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. குமாரசாமி ராஜா முதல்வர்) தமிர்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராஜர், ‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்ற வேண்டும். அப்படி செய்தால் கட்சிக்கும் மதிப்புயரும் என்று நேருவிடம் சொல்கிறார். அதற்கு வடநாட்டு காங்கிரஸ் தலைவர்கள், ‘நான்சென்ஸ்’ என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆனாலும் நேரு காமராஜரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார். தமிழகத்தில் ஆளும் கட்சி, மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவர் காமராஜர், ‘நாங்கள் தான் காரணம்’ என்று எங்கேயும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. ஆனால் பெரியாரிஸ்ட்டுகள் ‘வரலாறே’ எழுதிவிட்டார்கள்.! தாங்கள் தான் காரணம் என்று. (பெரியரும் போராடினார். பெரியார் மட்டுமே அல்ல)
பெரியார் கொள்கைகள் எட்டாத உ.பி.யில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் மாயாவதி முதல்வராக இருந்தார். ஒடிசா மாநிலத்தில் ஒரு எஸ்.டி. முதல்வராக இருந்தார்.
ஆனால் சமூக நீதிக்காக போராடிய இந்த பெரியார் மண்ணில் மட்டும் அது சாத்தியப்படாமல், சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பெரியார் மண்ணில்?, ஆறாவது முறையாகவும் கருணாநிதி தான் மீண்டும் முல்வராக அமர வேண்டும் என்ற விதத்தில்தான் சமூக நீதி இருக்கிறது.
ஒரே ஒரு முறை திருமாவளவனோ, அதியமானோ அல்லது தங்கள் கட்சிக்குள் இருக்கும் ஒரு ஒடுக்கப்பட்டவரை முதல்வராக உட்கார வைக்க வேண்டும் என இவர்களுக்குத் தோன்றாது. பதவி நாற்காலி என்றாலே பெரியாரிசத்தை ‘தனக்குத் தானே அடகு வைத்துக் கொள்வார்கள். ”மூளை சுளுக்கு’ வந்துவிடும்.
தமிழ அரசின் உச்ச பதவி என்பது தலைமைச் செயலாளர்,- டி.ஜி.பி. என்பதுதான். ஐம்பதாண்டு கால திராவிடர்களின் வரலாற்றில் எத்தனை முறை அந்த பதவியில் தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்று வேண்டாம். தகுதி, சீனியாரிட்டி எல்லாம் இருந்தும் தவிர்க்கப் பட்டவர்கள் எத்தனை பேர்?.
எல்லா சேரிகளிலும், எல்லா தலைவர்களின் சிலைகளும் இருக்கின்றது. எங்காவது ஒரு ஊர்த்தெருவிற்குள் ஒரு அம்பேத்கார் சிலையாவது வைத்ததுண்டா? செருப்படியும், சாணியடியும் அம்பேத்கர் சிலைக்கு மட்டுமே தான் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் பெரியாரின் சமூக நீதி பேசிய திராவிடர்களின் ஆட்சி.
ஆண்டு தோறும் நடக்கும் தமிழர் திருநாள் தைப் பொங்கலின் போது பெரியார் திடல் ‘பெனிஃபிட்-கம்பெனி’ காரர்கள் மட்டும், “திராவிட பொங்கல்” என்று விழா வைப்பார்கள். அரை நூற்றாண்டாகி விட்டது, கர்நாடகத்திலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் இவர்களின் ‘திராவிடப் பொங்கல்’ பொங்குவதே இல்லை. காரணம் அங்கு ஏமாளிகள் கிடையாது.
பெரியாரின் கொள்கையையும், போராட்டத்தையும் பெரியார் காலத்திலேயே அவரது தம்பிகள் அடகு வைத்துவிட்டார்கள். இப்போது, அன்று ‘திராவிடம் பேசியவர்கள்’, அப்படி பேசி ‘அதிகாரத்தைப் பிடித்தவர்கள்’ செய்தது என்ன என்று பார்த்தால் ‘வெங்காயமாக’தான் இருக்கிறது. உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல்….
கடைசியாக ஒன்று;- சமூக நீதியை பேசாத, ‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மரகதம் சந்திரசேகர், தியாகி கக்கன், இளையபெருமாள் என மூன்று தாழ்த்தப்பட்ட நிர்வாகிகளை கட்சியின் தலைவர்களாக போட்டிருக்கிறது தலைமை. அட, பாரதிய ஜனதா கட்சிகூட தமிழ்நாட்டிற்கு தலைவராக டாக்டர் கிருபாநிதி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகியை தலைவர் பதவியில் அமர்த்தியிருக்கிறது.
ஆனால் அரைநூற்றாண்டுக்கும் மேலாக சமூகநீதியை பேசிய திராவிட கட்சிகளில்?
திராவிடர் கழகம் என்ற பெரியார் திடல் மடம் ஃபெனிபிட் கம்பெனியில் கி.வீரமணிக்கு அடுத்து அவரது மகனுக்கு மணிமகுடம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணா, அவருக்கடுத்து கருணாநிதியே தலைமை. அவருக்குப் பின் மகன் ஸ்டாலின் மகுடம் சூட்டிக்கொள்ள காத்திருக்கிறார்.
அ.தி.மு.க.வில் சொல்லவே வேண்டாம். எம்.ஜி.ஆர். பிறகு ஜெயலலிதா, அவர் இறந்த பிறகுகூட கட்சி தலைமை பதவிக்கு ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமிக்க மனம் வரவில்லை.
தேசிய முற்போக்கு திராவிடர் கட்சி விஜயகாந்த் பற்றி சொல்லவே வேண்டாம்.
அதிகம் வேண்டாம்,இவர்கள் யாருமே, ஒரு பொருளாளர் பதவியையாவது அந்த சமூகத்திற்கு கொடுக்க முன்வரவில்லை
இதுதான் பெரியாரிய கொள்கைகளை தூக்கி பிடித்து வளர்ந்த திராவிட கட்சிகளின் லட்சணம்.
நன்றி - பா. ஏகலைவன்
லைன்ஸ் மீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக