செவ்வாய், 31 அக்டோபர், 2017

done (18)
ஸ்வர்ணமுகி என்ற நடிகையை தமிழக அரசின்
ஆஸ்தான நர்த்தகியாக (அரசவை நடனப்பெண்)
எம்ஜியார் அறிவித்தது நினைவு இருக்கலாம்.
கவியரசர் கண்ணதாசன் தமிழக அரசவைக்
கவிஞராக இருந்தார்.

இங்கிலாந்திலும் அரசவைக் கவிஞர்கள் உண்டு.
வேர்ட்ஸ்வொர்த். டென்னிசன் ஆகியோர் பிரிட்டிஷ்
அரசவைக் கவிஞர்களாக இருந்தனர். கவிஞர்,
இசைஞர். நர்த்தகி, விதூஷகர் போலவே ஆஸ்தான
மல்லர்களும் உண்டு. (மல்லர் = மற்போர் வீரர்)

சங்கரரின் காலத்தில், பொருள்முதல்வாதத்தின்
ஆஸ்தான மல்லராக சாங்கியம் இருந்தது. இந்தியத்
தத்துவ  ஞானத்தில் முதலில் தோன்றியது சாங்கியமே.
கபிலர் சாங்கியத்தைத் தோற்றுவித்தார் என்று
கூறப்படுகிறது. பௌத்தத்திற்கும் முந்தியது
சாங்கியம் ஆகும். அது மட்டுமல்ல, கருத்து
முதல்வாதத்திற்கும் முந்தியது சாங்கியம்.

வேதங்களுக்கு முந்தியது சாங்கியம் என்பதும்
தன் தத்துவ உள்ளடக்கத்துக்கு  வேதங்களிடம்
இருந்து எக்கடனும் பெறாதது சாங்கியம் என்பதும்
குறிப்பிடத் தக்கது. தீவிரமான கடவுள் மறுப்புத்
தத்துவம் சாங்கியம் என்பதையும் நாம் கணக்கில்
கொள்ள வேண்டும்.

அத்வைதம் ஓர் ஒருமைத் தத்துவம் (monism). இதற்கு
மாறாக, சாங்கியம் இருமைத் தத்துவம் (dualism) ஆகும்.
சாங்கியம் கூறுகிறபடி, இந்தப் பிரபஞ்சம் இரண்டு யதார்த்தங்களைக் கொண்டது (two realities). 1. புருஷன்,
2. பிரகிருதி. புருஷன் என்றால் கணவன் என்று
பொருள் கொண்டு விடக்கூடாது. இங்கு புருஷன்
என்பது உணர்வு அல்லது சிந்தனை (consciousness)
என்றும், பிரகிருதி என்பது பருப்பொருள் (matter)
என்றும் பொருள்படும்.

அதாவது எங்கல்ஸ் கூறுகிற இருப்பும் உணர்வும்
(being and consciousness) என்பதே இது. மார்க்சியம் இன்று
கூறுகிற தத்துவத்தின் அன்றைய வடிவம் இது.
மேலும் ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற
முக்குணங்களையும்  கற்பித்தது சாங்கியம்.
இது ஆதிசங்கரரின் நிர்குண பிரம்மம் என்பதற்கு
எதிரானது.

ஆக, தத்துவச் செறிவு மிக்க, தொன்மையான,
பாரம்பரியம் உடைய சாங்கியம் அத்வைதத்திற்கு
பெரும் சவாலாக விளங்கியது.பல்வேறு
பொருள்முதல்வாதப் பிரிவுகளின் தலைவனாகவும்
சாங்கியம் திகழ்ந்தது. எனவே சாங்கியத்தைக்
கண்டு அஞ்சியது அத்வைதம். அதைக் களத்தில்
சந்தித்து  முறியடிக்காமல் அத்வைதம்
வாழ முடியாது என்ற நிலை அன்று இருந்தது.

அத்வைதத்தின் மூல நூல் பிரம்ம சூத்திரம்
என்பதை ஏற்கனவே பார்த்தோம். பிரம்ம
சூத்திரத்தில், சாங்கியத்துக்கு பிரதான
முக்கியத்துவம்  அளித்து, அதை எதிர்த்து
அறுபது சூத்திங்கள் எழுதப்பட்டு உள்ளன.
ஆனால் மீதியுள்ள பிற தத்துவப் பிரிவுகள்
அனைத்தையும் எதிர்த்து எழுதப்பட்டது
கொஞ்சமே.

தத்துவ விவாதத்தில் சாங்கியத்தை எதிர்த்து
முறியடித்து விட்டதாக அத்வைதம் பெருமிதம்
கொண்டது. பொருள்முதல்வாதத்தின் ஆஸ்தான
மல்லரான சாங்கியத்தியே தாங்கள் தோற்கடித்து
விட்டதால், ஏனைய எல்லா மல்லர்களையும்
வீழ்த்தி விட்டதாகவே அர்த்தம் என்றார் ஆதிசங்கரர்.

சாங்கியத்திற்கும் அத்வைதத்திற்கும் நடந்த
இந்த முக்கியமான தத்துவப்போர் குறித்து எந்த
நூலும் தமிழில் இல்லை; எழுதப்படவும் இல்லை.
சாங்கியம் மட்டுமல்ல, பூர்வ மீமாம்சை உள்ளிட்ட
பிற தத்துவப் பிரிவுகளுடன் அத்வைதம் நடத்திய
ஆழமான எந்த விவாதம் பற்றியும் தமிழில் ஒரு
நூலும் இல்லை. எவராலும் எழுதப்படவில்லை.
ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் இதற்கான நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

மார்க்சியம் சில தத்துவார்த்த வகைமைகளை
(philosophical categories) கொண்டிருக்கிறது. காரண
காரியப் பொருத்தம் (cause and effect) என்பது அத்தகைய
ஒரு வகைமை. ஆதிசங்கரர் தம் காலத்தில்
காரண காரிய பொருத்தத்தை எதிர்த்தார்.
ஆக, பொருள்முதல்வாதத்தின் எல்லா
அம்சங்களையும்  எதிர்த்தவர் ஆதிசங்கரர்.
அதன் மீது தீராப் பகைமை கொண்டிருந்தவர்
ஆதிசங்கரர். கருத்துமுதல்வாதத்தின் வேறு
எந்தப் பிரிவையும் விட, பொருள்முதல்வாதத்துடன்
ஒரு சிறிதும் இணக்கமின்றி, அதன் ஜென்மப்
பகைவனாக, பரம வைரியாக இருந்தவர்
ஆதிசங்கரர்.

பொருள்முதல்வாதத்தின் வரலாற்றிலேயே,
அதன் மீது, அத்வைதம் போல் வேறு எந்தத்
தத்துவமும் இவ்வளவு பகைமை கொண்டு
இருந்ததில்லை என்பது வரலாறு.
------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக