வெள்ளி, 13 அக்டோபர், 2017

done (4) காலத்தால் பிந்திய கருத்துமுதல்வாதம்!
கருத்துமுதல்வாதம் தோன்றியது ஏன்?
மனித குலம் கண்டறிந்த முதல் தத்துவம்
பொருள்முதல்வாதமே. கருத்து முதல்வாதம்
காலத்தால் பிந்திப் பிறந்த தத்துவம் ஆகும்.
இந்தியா உள்ளிட்ட கீழ்த்திசை நாடுகளில்
மட்டுமின்றி, மேற்கத்திய சமூகத்திலும் இதுவே
நிகழ்ந்தது.

எந்தவொரு  தத்துவமும் தோன்றுவதற்கு உகந்த
சமூகச் சூழல் வேண்டும். அது அதற்கான தேவை
இல்லாமல் எந்தத் தத்துவமும் தோன்றி விடுவதில்லை.
உலகம் முழுவதும் உள்ள மானுட சமூகத்தின் தொடக்க
காலத்தில் கருத்து முதல்வாதம் தோன்றுவதற்கான
எத்தகைய சமூக அவசியமும் நிலவவில்லை.

சமூகத்தின் மொத்த உற்பத்தியும் அதனால் விளைந்த
உபரியும் (surplus) சமூகத்தின் அத்தனை
உறுப்பினர்களாலும் சரிசமமாக நுகரப்பட்ட  காலம்
ஒன்று இருந்தது. உபரி என்பது அனைவருக்குமானது
என்ற உணர்வுடன், எவர் ஒருவரின் பங்கையும் எவர்
ஒருவரும் அபகரிக்காமல் இருந்த ஒரு பொற்காலம் அது.
மேற்கத்திய ஐரோப்பிய சமூகத்திலும் சரி, இந்தியா
போன்ற கீழ்த்திசை சமூகத்திலும் சரி, ஆப்பிரிக்க
ஆஸ்திரேலிய பழங்குடிச் சமூகங்களிலும் சரி,
உலகெங்கும் உபரியின் மீதான சமஉரிமை நிலவிய
காலம் அது.

இத்தகைய சமூக அமைப்பை மார்க்ஸ் புராதனப்
பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கிறார்.
சமூகத்தில் வர்க்கப் பிரிவினைகள் எதுவும் ஏற்படாத
காலம் இது. இக்காலக் கட்டத்தின் மிக இயற்கையான
தத்துவமாக, பொருள்முதல்வாதம் நிலவியது.
பொருள்முதல்வாதம் சமத்துவத்தை தத்துவார்த்த
உள்ளடக்கமாகக் கொண்டுள்ள தத்துவம் ஆகும்.
சமூகத்தின் வளர்ச்சியை ஒட்டியே தத்துவமும்
வளர்ச்சி பெறும். இங்கு குறிப்பிடும் பொருள்முதல்வாதம்
கருநிலையில் இருந்த பொருள்முதல்வாதம் ஆகும்.

காலம் செல்லச் செல்ல, வளர்ச்சியின் இயக்கப்
போக்கில், மானுட சமூகத்தில் வர்க்கப் பிரிவினை
ஏற்பட்டது. அடிமைகள் என்றொரு முற்றிலும் புதிய
வர்க்கம் உண்டானது. இந்த வர்க்கத்தினருக்கு
சமூகத்தின் உபரியின் மீதான உரிமை மறுக்கப்
பட்டது. இந்த அடிமைகளைக் கட்டியாளும்
எஜமானர்களுக்கு மட்டுமே உபரியின் மீதான
முற்றுரிமை உறுதி செய்யப்பட்டது.

மானுட சமூகத்தில்  முதன்முதலில் ஏற்பட்ட
மிகப்பெரிய பாரதூரமான மாற்றம் இது. பழைய
நிலைமைகள் மாறி விட்டன. முற்றிலும் புதிய
நிலைமைகள் சமூகத்தில் தோன்றி விட்டன.
புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய சிந்தனை
சமூகத்திற்குத் தேவைப்பட்டது. எனவே புதிய
தத்துவம் பிறந்தது. அதுதான் கருத்துமுதல் வாதம்
ஆகும்.

சமூகம் மொத்தமும் உழைத்து, அதனால் கிடைத்த
உபரியை சமூகம் மொத்தமும் சமமாக  நுகர்ந்த
புராதனப் பொதுவுடைமை சமூகத்தில் அறிவு என்பது,
(அதாவது சிந்தனை என்பது) இயற்கையை
அறிவதே என்பதாக இருந்தது. இயற்கையோடு
வினைபுரியும் இயக்கப் போக்கிலேயே, அதாவது
உழைப்பின் போக்கிலேயே சமூகம் அறிவைப்
பெற்றது. அறிவைப் பெறும் வாயிலாக உழைப்பு
இருந்தது. இந்த வாயிலானது எதை முன்னிட்டும்
எவரைப்பொறுத்தும் சாத்தப்படவில்லை என்பது
புராதனப் பொதுவுடைமை சமூகத்தின் சிறப்பாகும்.

ஆண்டான் அடிமைச் சமூகத்தில் உழைப்புச் சுரண்டல்
என்ற முற்றிலும் புதிய செயல்பாடு தோன்றுகிறது.
இது சமூகத்தில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது.
உழைப்புச் சுரண்டலை சமூகத்திற்கு விளக்கவும்,
அதை நியாயப் படுத்தவும், சமூகத்தில் புதிதாக
ஏற்பட்டு விட்ட அசமத்துவத்தை (asymmetry) விளக்கவும்
புதியதொரு சிந்தனையும் சிந்தனை முறையும்
தேவைப்படுகின்றன. இந்தத் தேவையை
நிறைவேற்றவே கருத்துமுதல்வாதம் பிறக்கிறது.

கிரேக்கத்தின் மாபெரும் தத்துவஞானியும் கி.மு
ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவருமான
பிளேட்டோவின் கருத்துமுதல்வாதம் முன்பத்தியின்
கூற்றுக்கு ஆகச் சிறந்த உதாரணம் ஆகும். பிளேட்டோவின்
குகை உருவகம் (allegory of the cave) என்ற சித்தரிப்பைப்
படித்தால் இதை நன்கு உணரலாம்.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நால்வகை
வேதங்களும் தொன்மைக்கால இந்தியாவைப்
படம் பிடித்துக் காட்டும் அற்புதமான வரலாற்று
ஆவணங்கள் ஆகும். உலகெங்கும் கிடைத்த
அத்தனை ஆவணங்களிலும் தொன்மை மிக்கதாக
நால்வகை வேதங்கள் கருதப் படுகின்றன.

இந்தியச் சமூகம் இனக்குழுச் சமூகமாக கூடி வாழ்ந்த
காலத்தில் எழுதப்பட்டவையே நால்வகை வேதங்கள்.
இவை யாவும் தனி ஒரு புலவரால் இயற்றப் பட்டவை அல்ல.

வேதம் என்றால் அறிவு என்று பொருள். வேதங்கள்
நான்கும் தொகை நூல்களே. சங்க இலக்கியத்தின்
எட்டுத் தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு,
குறுந்தொகை போன்ற தொகை நூல்களே வேதங்கள்.
பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால்
பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே வேதங்கள்.
வேதங்கள் யாவினும் தொன்மை மிக்கது ரிக் வேதம்
ஆகும். மொழிகள் வரி வடிவம் பெறும் முன்னரே
வேதங்கள் பாடப்பட்டன. தொடர்ந்து வாய்
மொழியாகவே பேணப்பட்டன.

நால்வகை வேதங்களிலும் தத்துவக் கருத்துக்கள்
என்பவை மிக அற்ப அளவிலேயே (trace level) உள்ளன.
அவை மக்கள் குழுவாகச் சேர்ந்து பாடிய பாடல்களே.
அவற்றில் ஒளி சிந்தும் தத்துவம் எதுவும் புதைந்து
கிடைக்கவில்லை. மனித சிந்தனையின், மனித
அறிவின் குழந்தைப் பருவ வெளிப்பாடுகளே
வேதங்கள்.

ரிக் வேத காலத்தில் சாதி வருணம் போன்ற
பாகுபாடுகள் இனக்குழுச் சமூகத்தில் தோன்றி
இருக்கவில்லை. ஏற்றத்தாழ்வற்ற சுரண்டலற்ற
ஒரு இனக்குழுச் சமூக வாழ்க்கையையே ரிக்
வேதம் படம் பிடித்துக் காட்டுகிறது என்கிறார்
மார்க்சிய வரலாற்று அறிஞர் தேவி பிரசாத்
சட்டோபாத்யாயா. (பார்க்க: இந்தியத் தத்துவம்:
ஓர் அறிமுகம் (தமிழில்: வெ கிருஷ்ணமூர்த்தி),
மூன்றாம் பதிப்பு,  படைப்பாளிகள் பதிப்பகம்,
சென்னை, பக்கம்-169).

நால்வகை வேதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட
உபநிடதங்களில் தத்துவக் கருத்துக்கள் சற்று
வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன. உபநிடதங்களே
வேதாந்த தத்துவத்தின் தோற்றுவாய் ஆகும்.

உபநிடதங்களும்கூட ஒற்றைப்பார்வை கொண்டவை
அல்ல. அவற்றின் கருத்துக்கள் அனைத்தும்
ஒருபடித்தானவையும் அல்ல (not homogeneous).
எனவே பிற்காலத்தில் தோன்றிய தத்துவஞானிகள்
உபநிடதக் கருத்துக்களில் ஓர் ஒருபடித்தான
தன்மையை உருவாக்கும் பொருட்டு, உபநிடதங்களை
விளக்கி நூல்களை எழுதினர். அவ்வாறு எழுதப்பட்ட
நூற்களுள் தலைசிறந்தது பாதராயணர் இயற்றிய
பிரம்ம சூத்திரம் ஆகும். இந்நூல் எழுதப்பட்ட
காலத்தை துல்லியமாகக் கணிக்க இயலவில்லை.
கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம்
நூற்றாண்டு வரையிலான 700 ஆண்டுகளுக்குள்
இது எழுதப்பட்டிருக்கக் கூடும்.

வேதாந்த தத்துவத்தின் அடிப்படை நூல் பிரம்ம
சூத்திரமே ஆகும். ஆதி சங்கரர், ராமானுஜர்,
மத்வர் ஆகிய தத்துவ ஆசான்கள் பிரம்ம
சூத்திரத்திற்கு உரை எழுதியதன் மூலமே தத்தம்
கொள்கைகளான அத்வைதம், விஷிஷ்டாத்வைதம்,
துவைதம் ஆகியவற்றை நிலைநாட்டினர்.
***************************************************************
தொடரும்
------------------------------------------------------------------------------------------      
                          

   
    
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக