செவ்வாய், 17 அக்டோபர், 2017

உபநிஷத காலகட்டத்தில் தருக்கப் பிரக்ஞை வலுவடைந்தது. ஞான தரிசனங்கள் விரிவாக விவாதிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் எற்பட்டது. இதன் விளைவே தரிசனங்களின் காலகட்டமாகும்.
அவைதீக மதங்களின் காலகட்டம்
இந்திய ஞான மரபினை வைதிகம், அவைதிகம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். வேதங்கள்ளை மூலநூல்களாக கருதும் மரபு வைதிகம். அப்படிக் கருதாமல் வேதங்களை மறுக்கும் மரபு அவைதிகம்.
இந்த இருபாற் பிரிவினையை நிகழ்த்துவதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதை இங்கு குறிப்பிட்டு பேசவேண்டும். வேதங்கள் ஒற்றைப்படையான ஒரு தரப்பை முன் வைப்பவை அல்ல. பிற்காலத்தில் வளர்ந்து வந்த எல்லா ஞான மரபுகளின் மூல விதைகளும் அவற்றுக்குள் உள்ளன. உதாரணமாக சார்வாக மரபு வேதங்களை மறுப்பது; புரோகித மரபுக்குப் பரம எதிரி; முழுமையான உலகியல் தன்மை உடையது. இம்மரபின் தொடக்கப்புள்ளியும் வேதங்களில் தான் உள்ளது. வேதரிஷிகளான ‘பிரகஸ்பதி’, ’அஜித கேசம்பளன்’ முதலியோர்தான் இம்மரபின் ஆதிகுருநாதர்கள்.
ஆகவே இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஞானமரபினையும் முற்றிலும் வேதம் சாராதது என்று கூறிவிட முடியாது. அப்படி என்றால் வைதிகம், அவைதிகம் என்ற பிரிவினை எதனடிபடையில் நடத்தப்படுகிறது.?
பிற்காலத்தில் வேதங்களை அடிப்படையாகக்கொண்டு மதங்கள் உருவாயின. இவை வேதங்களை ‘சுருதிகள்’,’அபெளருஷேயங்கள்’ என்று வகுத்தன ( கூறப்படுபவை, மனிதர்களால் எழுதப்படாதவை). வேதங்கள் நிரூபிக்கத் தேவையற்ற உண்மைகள், எனவே அவை தன்னளவிலேயே பிரமாணங்கள் (ஆதாரங்கள்) என்று இம்மதங்கள் கூறின.
இவ்வாறு வேதங்களை அடிப்படை நூல்களாகவும் ஆதாரக் கூற்றுகளாகவும் கருதும் மதங்களே வைதிக மதங்கள். அப்படி ஏற்க மறுத்து வேதங்களை விவாததுக்கு உரிய தத்துவத் தரிசன நூல்களாகக் காண்பவையே அவைதிக மதங்கள். பல அவைதிக மதங்கள் காலப்போக்கில் வைதிக மதங்களாக ஆயின.
வேதகாலம் முதலே காணப்படும் அவைதிக மதம் சார்வாக மதமாகும். உப நிஷதங்களிலும் இந்த மதத்தின் கணிசமான செல்வாக்கு காணப்படுகிறது. மகாபாரதத்தில் சார்வாக மதக் கருத்துக்கள் கூறப்படும் இடங்கள் உண்டு. மகாபாரதத்தில் பஞ்சசிகன் எனும் ரிஷி சார்வாக மதக் கருத்துக்களை ஜனகராஜனுக்கு உபதேசிக்கும் இடம் வருகிறது. ராமாயணத்தில் ஜாபாலிரிஷி ராமனுக்கு உலகாயதத் தர்மத்தை உபதேசிக்கிறார்.
சார்வாக மதம் நான்கு பருப்பொருட்களினால் ஆனதே இவ்வுலகம் என்று வாதிட்டது. அதற்கு அப்பால் எதுமில்லை ( நிலம், நீர், நெருப்பு, வாயு ). இவை இணைந்து மனிதன் இயற்கை எல்லாம் பிறந்தன. இன்பத்தை அடைவதே வாழ்வின் இலக்கு. மரணத்துடன் வாழ்வு முடிந்து போகிறது. மன்னில் வாழும் சிறந்த வாழ்வே மோட்சமாகும். இந்த கருத்துக்கு அக்காலத்தில் கணிசமான செல்வாக்கு இருந்திருக்கவேண்டும்.
சற்று பிற்பட்ட காலத்தில் உருவான இன்னொரு முக்கியமான அவைதிக மதம் ஆஜீவக மதம் ஆகும். இது மகலி கோசலன் என்ற ரிஷியால் உருவாக்கப்பட்டது. இப்பிரபஞ்சமானது ஒரு செயல்; பிறகு அதன் விளைவு என்ற வரிசையில் நகர்கிறது என்று வைதீக மரபு கூறியது. ( இதை கர்ம சித்தாந்தம் என்பர் ) ஆஜீவக மரபு இதை மறுத்து நியதியின் படியே பிரபஞ்சம் நிகழ்கிறது என்று கூறியது. (நியதி சித்தாந்தம்)
பிரபஞ்சத்தில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு காரணம் தேடுவது வீண். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. ஒவொன்றும் அதன் இயங்கு விதிகளின்படி நிகழ்ந்தபடி உள்ளது. அதை நம் செயல்கள் மூலம் மாற்ற முடியாது என்று ஆஜீவகர்கள் வாதிட்டனர்.
பண்டைத் தமிழரின் ஊழ் குறித்த நம்ம்பிக்கைகளைப் பார்க்கையில் இங்கு ஆஜீவக மரபு ஆழமாக் வேரோடியிருந்தது என்று கொள்ள இடமுள்ளது. திருவள்ளுவர் ஒரு ஆஜீவகர் என்று பல குறள்களை மேற்கோள் காட்டி நிறுவ முடியும். மிகக் கச்சிதமாக ஆஜீவக சிந்தனையை கூறும் ஒரு பாடல் தமிழில் உள்ளது. அதற்கு இணையாக வட மொழியில் கூட கண்டடையப்படவில்லை. ‘ யாதும் ஊரே…’ எனத்தொடங்கும் கணியன் பூங்குன்றனில் புறநானூற்றுப் பாடல்தான் அது.
ஆஜீவக மதத்தின் தொடர்ச்சியே சமண மதம் என்று சிலர் கூறுவதுண்டு. இரு மதங்களும் இடையேயான உறவு அந்த அளவுக்கு நெருக்கமானது. அதேபோல் பெளத்த மதத்துக்கும் ஆஜீவக மதத்துத்துடன் ஆழமான தொடர்பு உண்டு. அவைதிக மதங்களில் இவ்விரு மதங்களே முக்கியமானவை என்பதை நாம் அறிவோம். இந்திய ஞான மரபின் உச்சநிலைகள் சில இம்மதங்களில் தான் சாத்தியமாயின. இந்திய சிந்தனையையே இவை மாற்றி அமைத்தன.
சாக்கிய குல முனிவரான கெளதம புத்தரால் உருவாக்கப்பட்ட புத்த மதம் பிரபஞ்சத்தைப் பருப்பொருட்களில் கூட்டியக்கமாக உருவகித்தது. வேத, உபநிஷத தத்துவங்களை மறுத்தது. பிரஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் அவற்றின் தர்மத்தின்படி இயங்குகின்றன என்றது. அந்த தர்மங்களின் ஒட்டுமொத்தமே பிரபஞ்சத்தின் சாரமாக உள்ள மகாதர்மம் என்று வகுத்தது. அத்தர்மத்துடன் இயைந்து வாழும் சிறந்த வாழ்க்கையைக் கற்பனை செய்ய அது முயன்றது.
வர்த்தமான மகாவீரரால் உருவாக்கப்பட்ட சமண மதமும் அடிப்படையில் பிரபஞ்சத்தை பருப்பொருட்களை வைத்தே விளக்கியது. ஒவ்வொன்றும் பருப்பொருட்களில் கூட்டு அமைப்புதான். ஆனால் அத்துடன் ஆத்மா என்ற இன்னென்றும் உள்ளது. ஆத்மாக்களுக்கும் பருப்பொருட்களுக்கும் இடையேயான உறவு மூலமே பிரபஞ்சக்காட்சி உருவாகிறது என்றது சமணமதம்.
பெளத்தம், சமணம் இரண்டுமே ஏறக்குறைய சமானமானவை. ஆனால் பெளத்தம் அடிப்படையில் எதற்கும் சாரம்சம் இல்லை என்று கூறியது. ஆத்மாவை நிராகரித்தது. சமணம் சாராம்சத்தை ஆத்மாவை ஏற்றுகொண்டது. JM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக