ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

ஆயிரம் கீழடிகள் வந்தாலும்
திராவிடத்தை அசைக்க முடியாது!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
மானுட சமூகத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது எப்படி?
இதற்கு ஏதேனும் சரியான வழிமுறை உண்டா?
உண்டு. அதற்குப் பெயர்தான் "வரலாற்றியல்
பொருள்முதல்வாதம்" (Historical materialism). இது
மார்க்சியம் உலகிற்கு அளித்த கொடை.

ஒரு சமூகத்தின் உற்பத்தி முறை என்ன? உற்பத்திக்
கருவிகள் என்னென்ன? உற்பத்திச் சாதனங்கள்
யாவை? உற்பத்தி உறவுகள் எப்படி இருந்தன?
இக்கேள்விகளுக்கு விடை தேடும்போதுதான் ஒரு
சமூகத்தின் வரலாற்றை அறிய முடியும்.

உலகம் முழுவதும் மனித குலம் தொடக்க காலத்தில்
இடம் பெயரும் வாழ்க்கையைக் கொண்டிருந்தது.
வேட்டை ஆடுவதும் உணவு சேகரிப்பதுமே
அன்றைய சமூகத்தின் உற்பத்தி முறையாக இருந்தது.

மொத்த மானுடமும் இடம் பெயரும் வாழ்க்கை
முறையைத் தாண்டி ஓரிடத்தில் நிலையாக வாழும்
முறைக்கு வந்து சேர்ந்தது. நிலையாக வாழ  ஏதுவாக
அவ்விடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதுவே
settlement என்றும் settled life என்றும் வரலாற்று
ஆசிரியர்களால்  அழைக்கப் பட்டது.

இத்தகைய நிலையான குடியிருப்புகள் யாவும்
ஆற்றங்கரைகளில் அமைந்தன. மானுட வரலாறு
முழுவதும் முதல் குடியிருப்புகள் ஆற்றங்
கரைகளில்தான் ஏற்பட்டன.

அத்தகையதொரு குடியிருப்பு வைகை ஆற்றங்கரையில்
இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் கீழடி
அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. கீழடி தமிழர் நாகரிகத்தின்
அடையாளம் ஆகும். முதற்கட்டத் தகவலின் படி,
இந்நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று
தெரிய வருகிறது.

உண்மையில் தமிழர் நாகரிகம், தமிழ் மொழியின்
தோற்றம் ஆகியவை 2600 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை.
நிலத்திற்குப் பதிலாக, கடலில் தோண்டும்போது
அந்த உண்மைகள் புலப்படும். தற்போது 2600 ஆண்டுகளுக்கு
முற்பட்டது தமிழ் என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

பொயு 1757ல் நடைபெற்ற பிளாசிப் போரில் (Battle of Plassey)
ராபர்ட் கிளைவ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆடசி தொடங்கியது. தொடர்ந்து
நடைபெற்ற பக்சார் போரும் (1764) அதைத் தொடர்ந்த
அலஹாபாத் உடன்படிக்கையும் (1765) இந்தியாவில்
பிரிட்டிஷ் ஆடசியை ஸ்தாபித்தன.

பெரும் நிலப்பரப்பும், பல்வேறு மொழிகளும், மிகுந்த
பன்மைத்துவமும் கொண்டிருந்த இந்தியாவை ஆள்வது
உள்ளபடியே பிரிட்டிஷாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
ஆளும் கலை (art of governance) பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பிரித்தாளும் சூழ்ச்சி
தலைசிறந்த வழியாகும் என்று எடுத்துக் கூறினர்
பிரிட்டிஷ் ஆளும் வர்க்கச் சிந்தனையாளர்கள்.

கொல்கத்தாவில் நீதிபதியாக இருந்த ஆங்கிலேயரான
வில்லியம் ஜோன்ஸ் என்பவரும் தமிழ்நாட்டில்
கிறிஸ்துவப் பாதிரியாராக இருந்த ராபர்ட் கால்ட்வெல்
என்பவரும் திராவிடம் எனப்படும் ஒரு பிரித்தாளும்
கோட்பாட்டை (divisive philosophy) பெற்றெடுத்தனர்.

திராவிடம் என்று ஒரு மொழியோ இனமோ எந்தக்
காலத்திலும் இருந்ததே இல்லை. திராவிடம் என்று
ஒரு மொழி தோன்றியதே இல்லை. முற்றிலும் கற்பிதமான
ஒரு கோட்பாடே திராவிடக் கோட்பாடு.

வில்லியம் ஜோன்ஸ் என்பவர் ஒரு மொழித்தோற்றவியல்
அறிஞர் (philologist). இவருடைய திராவிடம் என்ற
கற்பிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட கால்டுவெல்
பாதிரியார் திராவிட மொழிக்குடும்பம் என்ற ஒன்றைப்
போலியாக உருவாக்கி தமிழ் ஒரு திராவிட மொழி
என்று போலியாக நிறுவினார்.

இதன் இயற்கையான பின்விளைவாக திராவிட இனம்,
திராவிட நிலம் என்றெல்லாம் பொய்மைகள் கட்டமைக்கப்
பட்டன. திராவிட மொழியோ இனமோ எந்தக்
காலத்திலும் இந்த பூமியின் எந்த இடத்தில் இருந்ததோ
தோன்றியதோ கிடையாது. வில்லியம் ஜோன்சும்
கால்டுவெல் பாதிரியாரும் மிகுந்த கயமைத்தனத்துடன்
உருவாக்கிய மானுட விரோத, தமிழ் விரோதத் தத்துவமே
திராவிடம்.

வில்லியம் ஜோன்சும் கால்டுவெல் பாதிரியாரும் வழங்கிய
திராவிடம் என்னும் ஆயுதத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்
திறம்படப் பயன்படுத்திக் கொண்டனர். அன்றைய
தமிழ்நாட்டில் (Madras Province) வாழ்ந்து வந்த பிரிட்டிஷ்
ஆட்சியின் தாசர்கள் தத்துவத் தளத்திலும் மொழித்
தளத்திலும் மட்டுமே இருந்து வந்த திராவிடக்
கோட்பாட்டை அரசியல் தளத்துக்குக் கொண்டு வந்து
தமிழ் மக்களை சிந்தனாரீதியாக திராவிடப்
பொய்மைக்கு அடிமைப் படுத்தினர். பல தமிழ்
அறிஞர்களும்கூட இவ்வாறு திராவிடப் படுகுழியில்
வீழ்ந்தனர். அவ்வாறு வீழ்ந்தவர்களுள் ஒருவராக
திராவிட வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம்
சுந்தரம் பிள்ளையைக் குறிப்பிடலாம்.

இதன் உச்ச கட்டமாக பிரிட்டிஷ் காலனிய தாசரான
ஈவெரா திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சியைத்
தொடங்கினார்.அவரின் சீடரும் பிரிட்டிஷின்
தாசானுதாசருமான  சி என் அண்ணாத்துரை
திமுக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி
மொத்தத் தமிழர்களையும் திராவிட மாயையில்
வீழ்த்தினார்.

இல்லாத திராவிடத்துக்கு ஏன் ஒரு கழகம்? இல்லாத
திராவிடர்களை எப்படி ஐயா முன்னேற்ற முடியும்?
இக்கேள்விகளைத் தமிழன் கேட்கத் தவறினான்.
இதன் விளைவாக அதிகார பேராசை பீடித்த அத்தனை
தெலுங்கர்களும் திராவிடம் என்ற பெயரில் பல்வேறு
கட்சிகளை அரசியல் இயக்கங்களை அமைப்புகளை
ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டின் அறிவுத் தளத்தில், சிந்தனைத்
தளத்தில், அரசியல் தளத்தில் வலுவாகவும் ஆழமாகவும்
கிளை பரப்பியும் நிற்கும் திராவிடம் என்னும் நச்சு
மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தாமல்,
வெட்டி எறியாமல் ஆயிரம் கீழடிகள் வந்தாலும்
அதனால் தமிழுக்கோ தமிழனுக்கோ எப்பயனும்
விளையப் போவதில்லை. இதுவே உண்மை.
***********************************************

 .

   


  

  
 



      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக