சனி, 14 செப்டம்பர், 2019

தமிழில் அறிவியல் நூல்கள் ஏன் இல்லை?
இருந்தால் அவற்றின் பட்டியலைத் தருக!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
தஞ்சைப் பெரிய கோவில் தமிழனின் மாபெரும்
கட்டிடக் கலையின் மாண்புக்குச் சிறந்த உதாரணம்.
சிற்பக் கலைக்கும் இது சிறந்த உதாரணமே.

தமிழர்களிடம் கட்டிடப் பொறியியல் இல்லாமல்
இவ்வளவு மேன்மையான பெரிய கோவிலைக்
கட்டி இருக்க முடியாது. இதை எவரும் மறுக்க
இயலாது.

ஆயின் கட்டிடக்கலை பற்றிய தமிழ் நூல் எங்கே?
இருக்கிறதா? இருந்தால் அதன் பெயர் என்ன?

கட்டிடக்கலை பற்றியோ கட்டிடப் பொறியியல் பற்றியோ
எந்த ஒரு நூலும் தமிழில் இல்லை என்பதை அனைவரும்
அறிவோம். ஆயின் பொறியியல் பற்றிய நூல் இல்லாமல்,
கட்டிடம் எழும்பி இருக்க முடியாது.

எனவே கட்டிடப்  பொறியியல் பற்றிய நூல் வேறொரு
மொழியில் இருந்திருக்க வேண்டும். அது எந்த மொழி?
அதுதான் சமஸ்கிருதம்!

பண்டைய இந்தியாவில் அறிவியல் இருந்தது. பழந்
தமிழகத்தில் அறிவியல் இருந்தது. ஆனால் அறிவியல்
நூல்கள் ஒரே ஒரு மொழியில்தான் இருந்தன.
அது என்ன? சமஸ்கிருதம்!

சதுரங்க விளையாட்டு இந்தியாவில்தான் தோன்றியது.
சதுரங்கத்தின் தாயகம் இந்தியா என்பதை உலகம்
ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆயின் சதுரங்கம்
பற்றிய நூல் எதுவும் ஏன் தமிழில் இல்லை?

எனவே இந்தியாவின் அறிவியல் என்பது சம்ஸ்கிருத
மொழியில் மட்டுமே எழுதப்பட்டு வந்திருக்கிறது.
தமிழில் உள்ள அறிவியல் நூல்கள் என்று எந்த
நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.

தம் அந்திம காலத்தில் இந்தியா பற்றி அறிந்து
கொள்ள விரும்பினார் காரல் மார்க்ஸ். லண்டனில்
கேம்பிரிட்ஜ் பல்கலையில் தேடியதில் மார்க்சுக்கு
இந்தியாவைப் பற்றிய ஆங்கில நூல்களே
கிடைத்தன. ஒரு அடிமை நாட்டைப் பற்றி அறிந்து
கொள்ள விரும்பிய மார்க்ஸ், அடிமைப் படுத்தியவன்
எழுதிய நூல்களைப் படிக்க விரும்பவில்லை.

எனவே இந்தியா பற்றிய மூல நூல்களை (original Indian text)
தேடிய மார்க்ஸ் அவை சமஸ்கிருதத்தில் இருப்பதை
அறிந்தார். அவற்றைக் கற்கும் பொருட்டு, மார்க்ஸ்
சமஸ்கிருதம் கற்கவும் முனைந்தார். ஆனால் கற்று
முடிக்கும் முன்னரே இறந்து விட்டார். இதன் மூலம்
என்ன தெரிகிறது? இந்தியா பற்றிய நூல்கள்
சமஸ்கிருதத்தில் இருந்தன என்று தெரிகிறது.

பண்டையத் தமிழகத்தில் தமிழும் சமஸ்கிருதமும்
நட்பு மொழிகளாக நீடித்தன என்ற உண்மையை
தமிழறிஞர் பொ வேல்சாமி நிறுவி இருக்கிறார். இன்று
காணப்படும் சம்ஸ்கிருத வெறுப்பு பிரிட்டிஷ்
காலத்தில் உண்டாக்கப்பட்டு, பிரிட்டிஷ் கைக்கூலிகளால்
பரப்பப்பட்ட ஒரு நச்சே என்பது புலனாகிறது.

தமிழின் சொற்களைப் பற்றிக் கூற வந்த தொல்காப்பியர்
"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
ஈட்டச் சொல்லே" என்கிறார். ஆக வட மொழியான
சமஸ்கிருதச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக
வரையறுத்துள்ளார் தொல்காப்பியர்.

எனவே தமிழ் அறிவியல் மொழியாக இருந்திருக்கவில்லை
என்பது பெறப் படுகிறது. அறிவியல் மொழியாகத்
தமிழ் இருந்திருக்கும் என்றால், தமிழில் இருந்த
அறிவியல் நூல்கள் எங்கே? அவற்றின் பட்டியல் எங்கே?
****************************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக