சனி, 12 அக்டோபர், 2019

புதுவைக் குயில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தலைசிறந்த தமிழ் நேயர்; அவருக்கு, தமிழ் மூச்சு;சமூக சீர்திருத்தமும் சமூக நீதியும் இரு விழிகளைப் போன்றவை. அவருடைய உள்ளம் நல்ல சிந்தனைகளின் ஊற்றுக் கண். ”கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்” என்பது அவருடைய விருப்பம். ”கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்” என்பதும் அவர் பாடியதே. மாபெரும்பாலானவற்றில் அவருடைய போக்கு தெளிந்த நீரோடை போன்றது. அவர் பாரதியாரைச் சந்தித்த நிகழ்வு எப்படிச் சிறப்புக்குரியதோ அதற்கு இணையானது அவருக்குப் பெரியார் ஈ.வே.ரா.வின் இயக்கங்களுடன் ஏற்பட்ட தொடர்பு. இரண்டாலும் “செந்தமிழ் செழுந்தமிழானது”.மனதை உழும் தமிழானது. தமிழ் மண் சிறந்த விளைச்சலைக் கண்டது!
பாவேந்தரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். அவர் பாரதியாரைச் சந்திப்பதற்கு முன்னர் வரை மனதளவில் தம்மைச் `சுப்பிரமணிய தாசனாக’க் குறிப்பிட்டுக் கொள்கிறார். அவருடைய இளமைக் கால நூலான “மயிலம் சுப்பிரமணியர் துதியமுது” என்ற நூலில், “தந்தைக்கு மந்திரம் உவந்தே தந்தோய் அந்தோ இங்குத் தாஸன் சுப்புரத்தினம் நலிந்தேன் –(பாடல் எண்:21)” என்று அவர் எழுதியுள்ளதிலிருந்து இதை அறிகிறோம். பாரதியாருடனான முதல் சந்திப்பில் அவர் பாடச் சொன்னவுடன் பாடிய பாடலான “எங்கெங்கு காணினும் சக்தியடா…” என்பதும் பக்திப் பாடலே. பாவேந்தரின் புலமைத் திறம் அவரை,”பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்” என்ற சிறந்த அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. எனினும் நம்பிக்கை மாற்றம் ஏதுமின்றி அவருடைய தமிழ்ப் புலமை பக்தியைப் பாடியது. அவரே பாடியுள்ளது போல்,(அவருடைய) “முப்பது ஆண்டு முடியும் வரைக்கும் நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன மக்கட்குக் காட்டிச் சுடச்சுட அவனருள் துய்ப்பீர் என்னும்!”
பாவேந்தருடைய பல புனைபெயர்களில் `பாரதிதாசன்’ என்ற பெயரே புகழ்ப் பெயராகி நிலைத்துவிட்டது. இந்தப் பெயராலேயே பின்னர் அவர் கையொப்பமும் இட்டுவந்தார். பாரதியாரின் மறைவுக்குப் பிறகு 1929-ஆம் ஆண்டில் இருந்து `குடியரசு’, `பகுத்தறிவு’ ஆகிய ஏடுகளில் கவிதை, கட்டுரை எழுதலானார். 1933-ஆம் ஆண்டு சென்னையில் மா.சிங்காரவேலர்தலைமையில் நடந்த நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் பாரதிதாசன், “நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்” என்று தம் கைப்பட எழுதிக் கையொப்பமும் இட்டார்.1947-இல் புதுக்கோட்டையில் இருந்து “குயில்” மாத இதழ் வெளிவரத் தொடங்கியது.(பின்னர் சென்னை, புதுவை என இடங்கள் மாறினாலும் குயில் வந்துகொண்டிருந்தது.)புதுச்சேரி,எண்:95,பெருமாள் கோயில் தெரு,பாரதிதாசன் பதிப்பகம் என்ற முகவரியிலிருந்து வெளியான 01-07-1947-ஆம் நாளிட்ட குயில் இதழில் எட்டு-ஒன்பதாம் பக்கங்களில்அவர்``நாத்திகன்’’ என்ற கவிதையை எழுதியுள்ளார். ஓர் ஆத்திகர் நாத்திகர் ஆனதை அது விளக்குவதால் அதை நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.இதில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை; அந்த அவசியமும் நமக்கு இல்லை என்பதைச் சகோதர சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதோ அந்த `நாத்திக’க் கவிதை:-
”பன்றியை வெட்டிப் படைத்தாயே- கடைப்
பட்டைச்சா ராயமும் கொடுத்தாயே
தின்று குடித்து நலம்செய்யுமா மென்று
தெய்வத்தின் மேன்மை கெடுத்தாயே.(1
மின்திகழ் கோழிய றுத்தாயே- கரு
மேதியின் வாழ்வை ஒறுத்தா யே
கொன்றால் நலம்செய்யும் என்றெண்ணியே தெய்வக்
கொள்கையை முற்றும் வெறுத்தாயே. (2
(மேதி- எருமை மாடு)
பெண்டாளக் கேட்டது தெய்வம் என்றும் –தன்
பெண்டினைத் தந்தனன் மன்னன் என்றும்
கண்டார் நகைக்கும்பு ராணங்கள் போற்றிக்
கசப்பாக்கி னாய்கடவுட் சிறப்பை. (3
அண்டும் குண்டல் தன்னைக்கௌவ வைத்தாய்- அதற்(கு)
அங்காளம் மைப்பட்டம் ஒவ்வ வைத்தாய்
தொண்டிது தெய்வத்துக் கென் றெண்ணியே- உளத்
தூய்மையும் வாய்மையும் நீ அழித்தாய். (4
குழந்தையைக் கேட்டது தெய்வம் என்றாய்- அதைக்
கொன்று சமைத்திட்ட தாய்ப்பு கன்றாய்
தழைந்த அருட்பெரும் தந்தையை இவ்வணம்
தாழ்வு படுத்தி மகிழ்ந்து நின்றாய். (5
எவ்வுயி ரும்கட வுட்கோயில்-எனும்
எண்ணத்தை நீ ஒப்புவாயாகில்- ஓடிக்
கவ்வவரும் வெறி நாய்போலே –சாதிக்
கட்டுக்கள் ஏன்வரும் உன் வாயில்? (6
அவ்வவர் எண்ணுக அன்பேசிவம்- எனில்
அன்புக்குப் பெண்டாட்டி, பிள்ளை, மணம்,
ஒவ்வாத செய்திகள் உண்டாக்கியே –தெய்வ
உண்மை மறுப்பதுவா உன் தவம்? (7
கொழுந்தனை யாளிடம் தூதாக –உருக்
கொள்ளாப் பெரும்பொருள் சென்றதெனில்
ஒழிந்ததன்றோ உன்றன் உள்ளத்திலே -பொருள்
உண்டெனும் கொள்கை! சொல்வாயாக.” (8
இந்தக் கவிதையின் பின்னணியில் உள்ள புராணக் கதைகளுக்குள் நாம் போகப் போவதில்லை. அந்தக் கதைகளின் போக்கில் ஏற்பட்ட நிகழ்வுகளிலும் நாட்டு மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கை சார்ந்த மத நடவடிக்கைகளிலும் (1)பாவேந்தர் மனதைப் பாதித்தவற்றையும் (2)அவருடைய ஆழ்மனதில் இருந்த கடவுள் பற்றிய கண்ணோட்டத்தையும் காண்பது அறிவுலகுக்குப் பெரிதும் பயனளிப்பதாகும்.
பன்றிப் பலி, சாராயப் படையல், கோழி-எருமை ஆகியவற்றை வீண்கொலை புரிதல், ஓர் அரசனின் மனைவியை பெண்டாளக் கேட்பது, அதற்கு அவனும் ஒப்புக் கொள்வது, `தொண்டு’ என்று தாமாகவே எதையாவது எண்ணிக் கொண்டு உண்மையில் தெய்வத்திற்கு ஒவ்வாச் செயல் செய்வது, குழந்தையைக் கொன்று சமைப்பது, ஜாதி வெறி, கடவுளுக்கு மனைவி-மக்கள் உண்டெனக் கற்பித்தல், `பெரும்பொருளான’ கடவுள் ஒருவனின் தகாத விருப்பத்திற்கு ஒரு பெண்ணிடம் காமதூதனாகப் போதல் ஆகியவை பாவேந்தர் மனதைப் பெரிதும் பாதிக்கின்றன; அவற்றை அவர் வெறுக்கிறார்; அறிவும் பண்பும் உள்ள அனைவருமே வெறுக்கத்தான் செய்வார்கள். இவை சார்ந்த மூடநம்பிக்கைகளையும் அவர் சாடுகிறார். அவை நாம் விளக்கும் தேவையின்றி அனைவருக்கும் விளங்கக் கூடியவை.
பாவேந்தரின் ஆழ்மனதில் இருந்த கடவுள் பற்றிய கவலைமிகுந்த கண்ணோட்டத்தையும் காண்பது எல்லாருக்கும் பயனளிப்பது; அதைக் காண்போம்: தெய்வத்தின் மேன்மை கெடுக்கப் பட்டுவிட்டது, தெய்வத்திற்குப்பொருத்தமான கொள்கை முற்றிலும் வெறுக்கப்பட்டுவிட்டது, பார்ப்பவர்கள் கிண்டலாகச் சிரிக்கும்படியான பழங்கதைகள் போற்றப்படுவதால்கடவுளின் சிறப்பே கசக்கும்படி ஆக்கப்பட்டுவிட்டது, இறைமை நம் உள்ளத்தில் ஏற்படுத்தக் கூடிய தூய்மையும், அந்த இறைமையைக் குறித்து இந்த உலகில் நிலைநாட்டப்பட வேண்டிய வாய்மையும் அழிக்கப்பட்டுவிட்டன, கடவுளின் சிறப்பு தாழ்வுபடுத்தப்பட்டுவிட்டது; அது குறித்துச் சிந்தித்து வருந்தாமல் மகிழ்ச்சி பாராட்டப்படுகிறது. கடவுளை நம்புபவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எல்லா உயிர்களும் –குறிப்பாக மனித உயிர்கள்- கடவுள் படைத்தவை என்பதை நம்புவதில்லை, கடவுளுக்குப் பொருந்தாத பெண்டாட்டி, பிள்ளைகள்,திருமணம் முதலியன உண்டாக்கப்பட்டுள்ளன- இது கடவுளை மறுப்பதே ஆகும், உள்ளத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளே கேவலமான வேலைகளில் ஈடுபடுவதாகச் சொல்ல முடியாது.
இந்த அநியாயங்கள், அவலங்கள் ஆகியவற்றை மாற்றமுடியாதபோது அவற்றை விட்டு விலகி இருப்பது அவருக்கு நாத்திகமாகத் தெரிகிறது. தம்மை `நாத்திகன்’ என்று சொல்லிக் கொள்ளும் நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டுள்ளார்!
ஆனால் இதே கவிதையில் அவர், ” தெய்வத்தின் மேன்மை”,”தெய்வக்கொள்கை” ,”கடவுட் சிறப்பு”, “தழைந்த அருட்பெரும் தந்தை“, “அன்பே(சிவம்-)கடவுள்”, ”உருக்கொள்ளாப் பெரும்பொருள்” என்று செய்திருக்கும் சொல்லாட்சியெல்லாம் அவருடைய இறைமை பற்றிய நம்பிக்கைகளையும் ஏக்கத்தையும் நன்றாகப் புலப்படுத்துகின்றன. “தழைந்த அருட்பெரும் தந்தை“,”உருக்கொள்ளாப் பெரும்பொருள்” என்பன போன்ற சொற்றொடர்கள் சிந்தனையில் மூழ்கச் செய்பவை. அவர் நாத்திகத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளார் என்பதையே இந்தக் கவிதை ஒரு வரலாற்று ஆவணமாக நின்று நிரூபிக்கிறது. இப்படியாகத்தானேதமிழுலகில் நாத்திகர்கள் பெருகத் தொடங்கினர் என்றால் இதற்கு எது, யார் பொறுப்பு? என்பன எண்ணிப் பார்க்கத் தக்கவை.
மூடநம்பிக்கைகள் மூலம் கடவுள் வலியுறுத்தப்படுவதை பாவேந்தர் முற்றிலும் ஏற்கவில்லை. “சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு” என்று பாடினார் அவர்(தொகுதி:1,1938). அவருக்கு ஏற்பட்ட நாணத்தையும் நகைப்பையுமே குழந்தையிடம் கூறித் தாலாட்டுகிறார் என்றால் அது மிகையல்ல. அவருக்கிருந்த ஞானம், `சாணம் சாமி(கடவுள்) அல்ல’ என்று கூறுகிறது என்றே கொள்ளவேண்டும். அவர் கருதும் `பெரும்பொருள்’ சாணம் என்னும் மிருகக் கழிவு அல்ல என்றால் அதை யாரால் மறுக்க முடியும்? அறிவுக்கும் வாழ்வுக்கும் கேடு பயப்பதை, இடர் தருவதை கடவுள் என்றால் அவர் ஏற்க மறுத்து இவ்வாறு பாடுகிறார்: “கேட்டுக்குத் தெய்வம் என்றே பேர்-அதைக் கெஞ்சல், இறைஞ்சல் தமிழ்க் கொள்கை இல்லை. ஈசன் என்றே ஒன்றைக் கூறி-இடர் ஏற்பதை நம்தமிழ் ஏற்பதும் இல்லை.” இஸ்லாம் மார்க்கத்திற்கும் இதுதானே கொள்கை!
பாவேந்தர் உள்ளத்தின் ஒருமூலையில் கடவுள் பற்றிய சிந்தனை, எந்தக் காலத்திலும் இருந்து வந்த ஒன்று. அதுபற்றி அவருக்கிருந்த கருத்து வேறுபாடுகள்தாம் அவர் `நாத்திகன்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தின. எனினும் அந்தக் கருத்தில் இருந்து ஒரு தெளிவை நோக்கிய பயணத்தை அவர் எப்போதும் மேற்கொண்டிருந்ததால்தான் 1955-ஆம் ஆண்டு முதற்பதிப்பு கண்ட “பாரதிதாசன் கவிதைகள்-மூன்றாந் தொகுதி”யில் 151,2,3,154 -ஆம் பக்கங்களில்,
“…ஓர் கடவுள் உண்டு-தம்பி
உண்மை கண்ட நாட்டில்.
பேரும் அதற் கில்லை-தம்பி
பெண்டும் அதற் கில்லை.
தேரும் அதற் கில்லை-தம்பி
சேயும் அதற் கில்லை….
உள்ள தொரு தெய்வம்-அதற்(கு)
உருவ மில்லை தம்பி….
திராவி டர்கள் முன்பே-தம்பி
தெரிந் துணர்ந்த உண்மை…
தள்ளுக’பொ றாமை’-ஒரு
தாய் வயிற்று மக்கள்.
நீக்குகபே ராசை-தம்பி
நிகர் எவரும் ஆவார்.
போக்கு சினம் தீச்சொல்-நீ
பொன் அறத்தை வாழ்த்து.
சேர்க்கும் அறம் உன்னை-ஒரு
தீங்கும் அற்ற வாழ்வில்!...”
என்றெல்லாம் பாடி இருக்கிறார்! இவற்றுள் முதல் எட்டு வரிகள் திருக்குர்-ஆனின் 112-ஆம் அத்தியாயத்தை நினைவூட்டுவனவாகும். அடுத்த இரண்டு வரிகள் இது தமிழர்/திராவிடர் கொள்கை என்பதை நிறுவும்.ஏனைய எட்டு வரிகள் திருக் குர்-ஆன் மறைமொழிகளும் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் நிறைமொழிகளும் கூறும் கருத்துக்களை நினைவூட்டுகின்றன. பாவேந்தர், திருக்குர்-ஆனைப் பற்றி அறிந்திருந்தார் என்று சொல்வதற்கான எந்தக் குறிப்பும் கிடைக்க வில்லை. ஆனால் முஸ்லிம் இளைஞர்கள் மீது மிக்க நம்பிக்கை வைத்திருந்தார்;முஸ்லிம் சமூகத்தின் மீது மிகுந்த பரிவுகொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம்.
“ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒப்போம்”(மேற்படி நூல்.பக்கம்:86) என்று முன்னதாகவும் கூறியுள்ளார். மதங்களை அவர் இருவகையாகக் காண்கிறார். மக்களை முன்னேற்றும் மதம் ஒன்று; மக்கள் முன்னேற்றத்தைக் காட்டுத் தீயென அழிப்பது மற்றொன்று.
“முன்னேற்ற மதஞ் சொன்னோர்
இதயம் பூஞ் சோலை;
மொழிகின்ற இம்மதமோ
அச்சோலை தன்னைத்
தின்ன வந்த காட்டுத்தீ ”
என்பது மதங்களைப் பற்றிய அவருடைய நிலைப்பாடு. எது பூஞ்சோலை? அது யாருடைய இதயத்தைப் பற்றிய வருணனை? எல்லாரும் சிந்திக்கலாம்.
பாவேந்தர் பாரதிதாசன், தமிழ் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு பெரும் ஆளுமை. ஆத்திகக் குடும்பத்தில் பிறந்து பல தெய்வங்களைப் போற்றிப் பாடியவர். காலம் அவரை நாத்திகராகவும் காண்கிறது. பின்னர் அவருடைய சிந்தனைகளில் மாற்றம் ஏற்படுகிறது. மக்களை முன்னேற்றும் மதத்தைப் போதித்தோரின் இதயத்தைப் `பூஞ்சோலை’யாகக் காண்கிறார். வெட்கப்படாமல், வீம்பு பாராட்டாமல் `இறைவன் ஒருவன்’ என்று உணர்ந்ததைக் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறாக வாழ்வு முழுவதும் ஒரு தேடலில் இருந்திருக்கிறார். இத்தகைய தேடல் இல்லாதவர்கள் இறையருளால் இனியேனும் சிந்தனைப் பயணம் மேற்கொண்டால் அவர்களுக்காகக் காத்திருக்கும் வசந்தத்தைக் காணலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக