செவ்வாய், 8 அக்டோபர், 2019

இந்தியாவில் அறிவியல்!
உலக அறிவியலுக்கு இந்தியாவின் பங்களிப்பு!
மூன்று விதமான கருத்துக்கள்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
பண்டு தொட்டே இந்தியாவில் அறிவியல் இருந்து வந்தது.
உலக அறிவியலில் இந்தியாவுக்கு திட்டவட்டமான
பங்கு உண்டு. இதை எவரும், குறிப்பாக, மேனாட்டார்
மறுப்பதில்லை; மாறாக இந்திய அறிவியலை
இன்றைய உலகம் அங்கீகரித்து உள்ளது.

இந்தியாவின் அறிவியல் குறித்து நம் நாட்டில்
மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

1) இந்தியாவில் அறிவியல் என்று எதுவுமே கிடையாது.
எல்லாம் மேனாட்டார் கண்டுபிடித்ததே. நம்முடைய
அறிவியல் சாதனை என்று எதுவும் இல்லை.

இந்தக் கருத்து தமிழ்நாட்டில் மிகவும் செல்வாக்குப்
பெற்றிருந்த கருத்தாகும். இந்தக் கருத்தை திராவிடர்
கழகம், திமுக போன்ற கட்சிகள் வெகுவாகப்
பரப்பின. திமுகவின் நிறுவனத் தலைவர் சி என்
அண்ணாத்துரை 1947 அக்டோபரில் திராவிடநாடு
பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை இதற்குச்
சிறந்த ஆதாரமாகும். 

மற்ற மாநிலங்களிலும் வெவேறு அளவுகளில் இந்தக்
கருத்து உண்டு. 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆடசியானது
இந்திய  மக்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மை
உளவியலை ஏற்படுத்தி இருந்தது. பிரிட்டிஷ்
தாசர்களாகிய திராவிட இயக்கத்தினர்  மக்களிடையே
தாழ்வு மனப்பான்மையைத் தீவிரமாக ஏற்படுத்தி
இருந்தனர்.

2) இதற்கு நேர் எதிராகவும், இதற்கு மறுப்பாகவும்
இன்னொரு கருத்து எழுந்தது. உலக அறிவியல் முழுவதுமே
இந்தியாவில் இருக்கிறது. ஆகாய விமானம் இங்கு ஏற்கனவே
கண்டுபிடிக்கப் பட்டு இருந்தது. இந்தியாவின் பண்டைக்கால
முனிவர்களும் ரிஷிகளும் ஐன்ஸ்டினை விஞ்சிய அறிவியல்
அறிஞர்களே என்பது போன்ற போலிப்பெருமிதங்கள்
உருவாக்கப்பட்டு வருகின்றன..

மத்தியில் பாஜக ஆட்சிக்குப் பின்னர் இத்தகைய
கருத்துக்கள்  வெகுவேகமாக மக்களிடையே பரப்பப்
பட்டு வருகின்றன. ஆர் எஸ் எஸ், பாஜக ஆகிய கட்சிகள்
இத்தகைய போலியான உயர்வு மனப்பான்மையை
மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றன.

3) மூன்றாவது கருத்து தமிழ்நாடே அறிவியலில் உலகத்
தலைமை உடையது என்பதாகும். தமிழ்நாட்டில் இல்லாத
அறிவியலே கிடையாது என்பதாகும்.

ஆர் எஸ் எஸ்சின் அறிவியல் கருத்துக்கள் இந்திய
தேசியத் தன்மை உடையவை. எனவே இதன்  தமிழ் தேசியப்
பதிப்பை இங்குள்ள தமிழ் தேசியர்கள் உருவாக்கி
மக்களிடையே பரப்பி வருகின்றனர். உலக அறிவியல்
முழுவதுமே சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் இருக்கிறது
என்பன போன்ற அபத்தங்களை இவர்கள் பொதுவெளியில்
பரப்பி வருகின்றனர்.
    
இந்தியாவில் வேறெந்த மாநிலத்தையம் விட, தமிழ்நாட்டில்
மட்டுமே இத்தகைய தவறான கருத்துக்கள் பெரிதும்
மக்களிடையே உலவி வருகின்றன. 
 
இம்மூன்று  தரப்புகளில் திராவிட இயக்கத் தரப்பு
கூறுவது முற்றிலும் தவறானது  அதைச் சுலபமாக
வீழ்த்தி விடலாம். வெள்ளைக்காரன் விடைபெற்றுச்
சென்றதுமே இக்கருத்துக்கள் மங்கத் தொடங்கி
விட்டன.  அண்ணாத்துரை எழுதிய கட்டுரை
எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இன்றைய 
12ஆம் வகுப்பு மாணவன் அம்பலப் படுத்தி விடுவான்.

அப்துல் கலாம், மயில்சாமி போன்ற விஞ்ஞானிகள்
மக்களிடையே செல்வாக்குப் பெறத் தொடங்கியதுமே
திராவிட இயக்கக் கருத்துக்கள்  மண்ணில் சரிந்து
வீழத் தொடங்கி விட்டன.

தமிழ் தேசியத் தரப்பைப் பொறுத்தவரை, அத்தரப்பு
முன்வைக்கும் கருத்துக்களான சித்தர்களே மாபெரும்
விஞ்ஞானிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும்
இல்லை. எனவே நகைப்புக்கு இடமாக அத்தரப்பு
ஆகி வருகிறது. மேலும் இத்தரப்பில் அறிவியல்
கற்றவர்களோ அறிவியலாளர்களோ இல்லை.
போலிப் பெருமிதங்களால் யாருக்கும் எப்பயனும் இல்லை.

மேலும் இந்திய அறிவியல், தமிழக அறிவியல்
என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. இந்திய
அறிவியல் என்று சொன்னாலே அதில் தமிழகத்தின்
அறிவியலும் உள்ளடங்கியதே.  

மிஞ்சி இருப்பது பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்பு. இத்தரப்பில்
அறிவியல் கற்றவர்கள் நிறையவே உண்டு. 
இவர்கள் கூறுவதில் உள்ள அருவருக்கத்தக்க
உயர்வு நவிற்சி அணியானது குமட்டுகிறது.
அது உயர்வு நவிற்சி அணி என்பதையும் தாண்டி
பித்துக்குளித் தனமாக உருவெடுத்து நிற்கிறது.

எனினும் இவர்களின் உயர்வு நவிற்சி மற்றும்
அபத்தமான பித்துக்குளித் தனத்தை நீக்கி விட்டுப்
பார்த்தால், அவர்களின் கூற்றில் சில உண்மைகளேனும்  
தென்படுவதைக் காணலாம்..

ஒரு குழந்தை இரண்டு இட்லி சாப்பிட்டது என்ற
செய்தியை இவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு லட்சம்
இட்லிகளைச் சாப்பிட்ட குழந்தை என்று சொல்லுவார்கள்.
இதன்  மூலம் தங்களின் கூற்றின் மீது இருக்க வேண்டிய
நம்பகத் தன்மையை இவர்களே அறுத்து எறிந்து
விடுவார்கள்.

இம்மூன்று போக்குகளாலும் இந்திய அறிவியலுக்கு
துளிப்பயனும் இல்லை. இதை சம்பந்தப்பட்ட
மூன்று தரப்பும் உணர வேண்டும்.

அறிவியலில் இம்மூவரும் தலையிடக் கூடாது.
தலையிட்டு அறிவியலுக்கு உள்ள மரியாதையைக்
கெடுத்து விடக்கூடாது.

இந்தியாவின் அறிவியல் என்பது தொன்மையானது.
மேலை நாட்டினர் காட்டு மிராண்டிகளாகத்
திரிந்த காலத்தில் அறிவியலில் சாதனை
படைத்தது இந்தியா. இந்தியாவின் பங்கை
இன்று உலகம் அங்கீகரித்துள்ளது.

அறிவியலில் இந்தியாவின் உண்மையான பங்களிப்பை
அறிவியலாளர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அதன் மூலமே அறிவியலை பிற்போக்கு சக்திகளிடம்
இருந்து விடுவிக்க முடியும்.
***********************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக