புதன், 9 அக்டோபர், 2019

கீழடி தொல்லியல் ஆதாரங்களை சங்கம் என்ற சொல்லோடு இணைக்காமல்
பேசுவதே சரியானது .. என்ற கருத்தை முன் வைக்கிறார், பேராசிரியர் அ,ராமசாமி அவர்கள்.
( கீழடிச் சான்றுகள் : தமிழ்ப் பழமையின் அறிவியல் ஆதாரங்கள் ; அம்ருதா அக் 2019)
மதுரைக் காஞ்சியும், நெடு நல்வாடையும் மதுரை நகரத்தின் தெருக்களின் அமைப்பை விரிவாகப் பேசி இருக்கின்றன. பட்டினப்பாலை கடல் நகரமான
காவிரிப்பூம்பட்டினம் வணிக நகரமாகவும் துறைமுகமாகவும் இருந்த்தை அதை ஒட்டிய நகர வாழ்க்கையைப் பேசுகிறது. இலக்கியத்தில் சொல்லப்பட்ட இந்த வரிகளுக்கான தொல்லியல் ஆதாரமாக கீழடி வைகைக்கரை நகர
நாகரிகம் இருந்த தை உறுதி செய்யலாம்.
இனி, இது தொடர்பாக எழும் சில ஐயப்பாடுகள்.
1) கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று சொல்கிறோம்.
2) கீழடி நாகரிகம் நகரத்தின் வளர்ச்சியை வணிகத்தின் வளர்ச்சியை உறுதி செய்துவிட்ட து.
அப்படியானால் வீரயுகத்திற்குப் பின்னர் வந்த காலத்தின் ஆதாரங்கள் கீழடியில் கிடைத்தவை
என்ற முடிவுக்கு வரமுடியுமா?!!
சங்க காலப் பாடல்களில் ஐங்குறுனூறு பாடல்கள் காலத்தால் மிகவும் முந்தியது. வாய்மொழிப் பாடல்களாக பல காலம் வழக்கிலிருந்து வந்திருக்க வேண்டும். இத்தருணத்தில் கைலாசபதி போன்றவர்கள் புற நானூறு பாடல்களைத் தரவுகளாக கொண்டு அக்காலத்தை வீரயுகம் என்றும் அப்பாடல்களை வீரயுகப்பாடல்கள் என்று வரையறுத்தார்கள். அதாவது குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த சமூக அமைப்பு சிதைந்து வலுவான அரசுகளை நிறுவும் பொருட்டு தொடர்ந்து சண்டைகளிட்ட காலம் வீரயுகம். பேராசிரியர் என் கே சித்தந்தா (1927) அவர்கள் Heroic Age of India மற்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் Heroic age ம் புற நானூறு பாடல்களை வீரயுகத்தின் பாடல்கள் என்றே வரிசைப்படுத்துகின்றனர்.
இந்த வரிசைப் படி பார்த்தால், கீழடி வைகைக்கரை நாகரிகம் வீரயுகத்திற்கு அடுத்த காலத்தைச் சார்ந்த தாக இருக்கும்.
அதாவது முன்னர் சொன்ன பட்டினப்பாலை, பரிபாடல், மதுரைக்காஞ்சி காலத்தின் சமூகமாக இருக்கும்.
இந்த கீழடிக்கு பல காலம் முந்தியதாகத்தான் வீரயுகமும் வீரயுகத்தின் புறப்பாடல்களும். அதாவது கீழடி 2600 ஆண்டுகள் பழமையானது என்றால் புறப்பாடல்கள்..???
இவை ஆய்வுக்குரியவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக