வெள்ளி, 25 மே, 2018

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்துக் காரணங்கள்
என்.எஸ்.வெங்கட்ராமன்
வேதியியல் பொறியாளர்
(nsvenka...@gmail.com)
கடந்த சில காலமாக தமிழ் நாட்டில் நடந்து வரும் அல்லது புதியதாக அமைக்கப்படும் தொழிற் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சில அரசியல்வாதிகளிடமிருந்தும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எதிர்க்கப்படும் தொழிற்சாலைகளில், தூத்துக்குடியில் பல வருடங்களாக இயங்கி வரும்; ஸ்டெர்லைட் நிறுவனமும் ஒன்று.
இந்த நிறுவனத்தில் வேலை செய்யும்; சுமார் 1000 நபர்களுக்கும், மேலும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் சுமார் 1000 நபர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படும். மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பங்கள் கடுமையான நிலைக்கு தள்ளப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் எதிர்பார்ப்பு. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இவர்கள் கவலை கொள்வதாகத் தெரியவில்லை.
ஸ்டெர்லைட் நிர்வாகம், சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து என்ற குற்றச்சாட்டை முழுவதும் மறுப்பது மாத்திரம் அல்லாமல், சில வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால்தான் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் கூறிவருகிறது.
இந்த நிலையில், தற்போது கடந்த மாதம் வரை வாளாவிருந்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மேலும் அனுமதியளிப்பதைக் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கூடாது என்பதற்குக் கீழே தரப்பட்டுள்ள 10 காரணங்கள் மிக முக்கியமானவை; இவற்றையே அடிப்படையாகக்கொண்டு தமிழ் நாடு அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
1. தாமிரம்,தொழிற்சாலை இதுமட்டுமே அல்ல
ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் (copper) என்ற உலோகம் தயாரிக்கப்படுகிறது. இதே முறையில் தான் இந்துஸ்தான் காப்பர் என்ற ஆலை ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டிலும், பிர்லா காப்பர் என்ற ஆலை குஜராத்திலும் பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றன. பிர்லா காப்பர் ஆலையின் உற்பத்தித் திறன் ஸ்டெர்லைட் ஆலையை விடக் கூடுதலாகும். அங்கெல்லாம் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. யாரும் எதிர்க்கவும் இல்லை. தமிழ் நாட்டில் மாத்திரம் எதிர்ப்பது ஏன் ?
2. கந்தக அமிலம், தொழிற்சாலை இதுமட்டுமே அல்ல
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் ((Sulphuric acid) தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழ் நாட்டில் மூன்று ஆலைகள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடியிலேயே கீரின் ஸ்டார் பெர்டிலைசர் (Green Star Fertilisers) என்ற ஆலை இயங்கி வருகிறது. அங்கெல்லாம் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மாத்திரம் எதிர்ப்பது ஏன் ?
3. நீதிமன்றத் தீர்ப்பு
2009ம் ஆண்டு, எதிர்ப்பாளர்களின் நிர்பந்தத்தால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை உடனே தடை செய்து, ஆலையை இயங்க அனுமதி அளித்தது.
2013ம் ஆண்டு சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவித்ததாக கூறி, ரூபாய் 100 கோடி அபராதம் கட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆலை இயங்கத் தடை விதிக்கப்படவில்லை.
2013ம் ஆண்டு தமிழ் நாடு அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று மீண்டும் ஆணையிட்டது. ஆனால், National Green Tribunal, பிரச்சினைகளை ஆராய்ந்த பின் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ் நாடு அரசின் முடிவு தவறு என்று கூறி ஆலையை இயங்க அனுமதி அளித்தது. இந்த நிலையே தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.
நீதி மன்றங்களின் உத்தரவுப்படி, ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உத்தரவு அளித்தாலும், எதிர்ப்பாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பது தான் நாகரீகமான அணுகுமுறை.
4. புற்று நோய் ஏற்படுத்துகிறதா ?
எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையினால் புற்று நோய், ஆஸ்த்மா, சரும ரோக பிரச்சினைகள் ஏற்படுவதாக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. புற்று நோய் ஏற்படுவதன் காரணங்களைக் கண்டறியத் தற்போது உலகெங்கிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சரியான காரணங்கள் இது வரை துல்லியமாகத் தீர்மானிக்கப்படவில்லை.
சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இங்கு புற்று நோய் உள்ளது. மைசூரில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை . இங்கு ஆஸ்த்மா பிரச்சினை உள்ளது. கல்கத்தாவில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இங்கு சரும ரோகப் பிரச்சினைகள் உள்ளன.
ஆதாரம் இல்லாமல், புரளிகளைக் கிளப்பிவிடுவது மிகவும் தவறு.
5. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுப்புகை போகிறதா ?
தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு சென்னை அலுவலகத்தில், தமிழ் நாட்டில் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளி வரும் புகையிலிருந்து (emission) நச்சுத்தன்மை உள்ளதா என்று கண்டறிய கருவிகள் 24 மணி நேரமும் இயங்கிவருகின்றன.
நச்சு வாயு கசிந்தால் உடனே எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே தெரிந்து கொள்ளலாம்.
கடந்த சில வருடங்களில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளிவந்ததாக தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. அது ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்தவிதமான எச்சரிக்கை விடுவித்ததாகவும் தகவல் இல்லை.
6. நிலத்தடி நீருக்கு மாசு ஏற்பட்டுள்ளதா ?
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதில்லை. அவை சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் ஆலையிலேயே உபயோகிக்கப்பட்டு வருகிறது.
7. தொழிற்சாலையை மூடலாமா ?
எந்தத் தொழிற்சாலைகளிலும், சில தருணங்களில் எதிர்பாராதவிதமாகவோ அல்லது கவனக் குறைவினாலோ, விபத்துகள் ஏற்படக் கூடும். இத்தகைய விபத்துகளுக்கு வளர்ந்த நாடுகளிலுள்ள தொழிற்சாலைகளும் விதிவிலக்கல்ல. உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான தொழிற் நிறுவனங்கள் உள்ளதாக கருதப்படும் டியு பான்ட் ((Du Pont) என்ற அமெரிக்கா நிறுவனத்திலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
விபத்துகள் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படுகின்றன. பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடும், தேவையான சலுகைகளும் தரப்படும்.
விபத்துகள் நடந்தது என்று கூறி தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடப்படுவது அபூர்வம். சிறிய, மிதமான விபத்துகள் ஏற்பட்டதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டால், தொழிற்சாலைகளே இல்லாத நிலைமைதான் ஏற்படும்.
தினமும் சாலை விபத்துகளும், அடிக்கடி விமான விபத்துகளும், ரயில் விபத்துகளும் ஏற்படுகின்றன. பயணங்களை நிறுத்திவிடுவோமா ?
8. வேலை இழப்புகளைத் தாங்க முடியுமா ?
ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்த ஊழியர்களையும் சேர்த்து சுமார் 2000 நபர்கள் வேலை செய்கின்றனர். வேலை செய்யும் நபர்களின் ஊதியத்தை நம்பி 4 அல்லது 5 குடும்ப உறுப்பினர்கள் வரையுள்ள குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்தால், பாதிக்கப்படுவோர்கள் நிலை என்னவாகும ?;. அவர்களுக்கு மாற்று வேலை கிடைக்குமா ? வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு புறம் கூற, மறு புறம் வேலை இழப்பிற்கு வழி வகுக்கலாமா ?
9. ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்களின் எண்ண ஓட்டங்களை அறிய வேண்டாமா ?
ஸ்டெர்லைட் ஆலையின் அருகிலேயே அங்கு வேலை செய்யும் பல ஊழியர்களின் குடும்பங்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அவர்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எந்த செய்தியும் இல்லை.
அங்கு வேலை செய்யும் ஊழியர்களும், சமுதாய ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் தான். பல நாட்களாக அங்கே வேலை செய்து வருகின்றனர். அவர்களது கருத்தை யார் கேட்டார்கள் ?
10. தமிழ்நாட்டின் தொழிற் திட்டங்களை தீர்மானிக்க வேண்டியவர்கள் யார் ?
சம்பந்தப்பட்ட துறையில் தகுந்த அனுபவமும், ஆற்றலும் இல்லாத சில அரசியல்வாதிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எந்த திட்டத்தையும் எதிர்த்து குரல் கொடுக்க தங்களுக்கு தகுதியுள்ளது என்று எண்ணுவது வருந்தத்தக்க நிலை.
நிலைமையை குறித்து, விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், நிபுணர்களும் விளக்கம் அளிக்கும் போது, அவர்களது கருத்துகளை துச்சமாக கருதி நிராகரிப்பது ஆக்கபூர்வமான அனுகுமுறை அல்ல.
ஸ்டெர்லைட் ஆலை போன்ற ஆலைகள் குறித்து சந்தேகம் எழுமானால், விபரங்கள் தெரிந்த அனுபவமுள்ள நபர்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பதுதான் தமிழ் நாடு அரசின் கடமை.
கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்து, சந்தேகம் எழுந்த போது, இத்தகைய அணுகுமுறையைப் பின் பற்றி விவரமும், அனுபவமும், உள்ளவர்களின் கருத்தை அறிந்து முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்ததால்தான் இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினைகள் இல்லாமல் இயங்கி கொண்டிருப்பதை தற்போது காண்கிறோம்.
===================================

ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆலைகள்
-----------------------------------------------------------------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் ஒரு காப்பர் ஸ்மெல்ட்டர், ஒரு ரிஃபைனரி, ஒரு ஸல்ஃபியூரிக் ஆசிட் பிளான்ட், ஒரு ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் பிளான்ட், மற்றும் ஒரு காப்பர் ராடு பிளான்ட் ஆகியவை உள்ளன.
காப்பர் ராடு உற்பத்தி செய்ய காப்பர் கேத்தோடு தான் மூலப்பொருள். பித்தளை, வெண்கலம் மற்றும் அலாய் ஸ்டீல் செய்யவும் காப்பர் கேத்தோடு உபயோகப்படுகிறது. இவை பெரும்பாலும் கட்டுமானப் பொருட்களுக்கும், நாட்டின் இராணுவத் தளவாடங்களுக்கும் உபயோகிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது உலகத்தரம் வாய்ந்த “A” கிரேடு கேத்தோடு ஆகும்.
காப்பர் தயாரிப்பின் உப பொருட்களாக
1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்,
2) சல்ஃப்யூரிக் ஆசிட்,
3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்,
4) ஃபெர்ரோ சாண்ட் மற்றும்
5) ஃபாஸ்போ-ஜிப்பசம்,
இவை அனைத்தும் உற்பத்தி செய்யப் படுகின்றன.
இவற்றில் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்.
இதில் ஃபாஸ்ஃபோரிக் ஆசிட், உரங்கள் தயாரிக்கவும், விலங்குகளுக்குத் தீவனம் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப் படுகின்றன. இது சல்ஃப்யூரிக் ஆசிட் மற்றும் ராக் ஃபாஸ்ஃபேட்டின் வேதியல் மாற்றத்தால் தயாரிக்கப்படுகிறது. இதன் செய்முறை மட்டும் கட்டுமான அமைப்பு இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்கு 2,30,000 மெட்ரிக் டன் அளவு இந்த ஃபாஸ்ஃபரிக் ஆசிட் தயாரிக்கப் படுகிறது. இவை டேங்கர் லாரிகள் மூலமாக இந்தியா முழுவதும் மற்றும் அயல்நாடுகளுக்கும் சப்ளை செய்யப் படுகிறது.
2) சல்ஃப்யூரிக் ஆசிட்.
காப்பர் ஸ்மெல்ட்டிங் செய்யும் போது சல்ஃபர் டை-ஆக்ஸைடு வாயு உருவாகிறது. அதுவே வேதியல் மாற்றமடைந்து சல்ஃப்யூரிக் ஆசிடாக உரு மாறுகிறது. இதில் பெரும்பகுதி, ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் தயாரிக்க உள்ளுக்குள்ளேயே உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு சிறு பகுதியே வெளிச் சந்தைக்குச் செல்கிறது.
வெளிச்சந்தையில் விற்கப்படுவது உரங்கள் தயாரிக்கவும், எண்ணை சுத்திகரிப்பிலும், காகித தயாரிப்பிலும், டிட்டர்ஜென்ட் சோப் தயாரிப்பிலும், ஸ்டீல் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப் படுகின்றன.
இது ஆண்டுக்கு 12,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்.
ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்டை ஆவியாக்கி குளிர வைப்பதில் உருவாவது தான் இது. பெரும்பாலும் இது தண்ணீரை சுத்தப் படுத்த உதவுகிறது. தண்ணீரில் க்ளோரின் கலப்பது போலத்தான் இதுவும். இது ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப் படுகிறது.
4) ஃபெர்ரோ சாண்ட்.
காப்பர் உற்பத்தி செய்ய பைரோ-மெட்டலர்ஜிக்கல் ப்ராஸஸ் பயன்படுத்தும் போது இந்த ஃபெர்ரோ சாண்ட் கிடைக்கிறது. இது ஆற்று மணலுக்கு ஒரு மாற்றுப் பொருள். கட்டுமானத்திற்கும், சாலை அமைக்கவும் இந்த மணல் உபயோகப் படுத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு 6,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
5) ஃபாஸ்ஃபோ ஜிப்சம்.
தூத்துக்குடியில் உற்பத்தி ஆகும் இது, உலகின் மற்ற இடங்களில் கிடைப்பதை விட தரம் உயர்ந்தது. இது சிமென்ட் உற்பத்தியிலும், செங்கல் மற்றும் பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிஸ் உற்பத்தியிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. எண்ணை வித்துக்கள் விளைய வைப்பதற்கு முன் மண்ணைப் பதப்படுத்தவும் இது பயன்படுகிறது. இது ஆண்டுக்கு 10,00,000 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
பின்பு காப்பர் ராடு. இது தான் ஸ்டெர்லைட்டின் முதலும் முக்கியமானதுமான உற்பத்திப் பொருள். இது தொலைத்தொடர்பு வசதிகளுக்கும், மின்சாரக் கடத்தியாகவும், டிரான்ஸ்ஃபார்மர்களிலும், மின்காந்த கடத்திகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் அளவு காப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஸ்டெர்லைட்டின் பங்கு 30% மேல், அதாவது தோராயமாக 50,000 மெட்ரிக் டன்.
நிற்க...!!!
இப்போது விவாதத்திற்கு வருவோம்.
இந்தக் காப்பரையோ, அல்லது காப்பர் உற்பத்தியின் போது கிடைக்கும் உப பொருட்களையோ, அல்லது அந்த உப பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பொருட்களையோ நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தாமல் இருக்கிறோமா?
அதாவது உரங்கள், தீவனம், எண்ணை, காகிதம், டிட்டர்ஜென்ட் சோப்பு, ஸ்ட்டீல், க்ளோரின், கட்டுமானப் பொருட்கள், சாலை, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், எண்ணை வித்துக்கள், மின்சாரம் மற்றும் மின்கடத்திகள்.
இதில் எங்கு இருந்து வருகிறது கேன்சர்? மேற்சொல்லப்பட்ட ஆசிடுகள் நம் தோலில் நேரடியாகப் பட்டால் கண்டிப்பாகக் காயமோ அரிப்போ ஏற்படும். நாம் பள்ளியில் படிக்கும் போது சயின்ஸ் லாப்-இல் ஏற்படுமே, அது போலத் தான். அதுவும் உள்ளே வேலை பார்ப்பவர்களுக்கு. இவ்வளவு பெரிய நிறுவனம் கண்டிப்பாக அதற்கான பயிற்சிகள் அனைத்தும் தொழிலாளர்களுக்குக் கொடுத்திருப்பார்கள்.
இந்த ஆசிடுகள் எதுவும், யூனியன் கார்பைடு கேஸ் போல் அல்லாமல், காற்றில் கலந்து வேதிவினை புரிபவை அல்ல.
இவற்றில் ஸல்ஃப்யூரிக் ஆசிட்டுக்கு மட்டும் உள்ள குணாதிசயம் என்னவென்றால், அது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சிக் கொள்ளும் என்பது மட்டுமே. உற்பத்தி செய்த உடனே அதைச் சேமித்து வைக்க முடியாது. அதனால் காற்றின் ஈரப்பதத்தை அது உறிஞ்சிக் கொள்ளலாம். தூத்துக்குடியில் மழை பெய்யாமல் இருக்க இது ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றபடி கேன்சர் என்பதெல்லாம் கட்டுக்கதை.
இவ்வளவு பொருட்களை இத்தனை லட்சம் டன் கொள்ளளவு உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் வருட வியாபாரம் எவ்வளவு இருக்கும் என்று தோராயமாக உங்கள் மனதில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 22,000 கோடி இவர்களுடைய ஒரு வருட வியாபாரம். தோராயமாக 8,000 கோடி இதனுடைய மொத்த லாபம். ஒரு 5000 கோடி நிகர லாபமாக இருக்கலாம். கடந்த 5 வருடங்களில் 300 கோடி ரூபாயை மாசுக் கட்டுப்பாட்டிற்கு மட்டும் செலவழித்து இருக்கிறார்கள்.
உலக காப்பர் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 3.5%, இதை அதிகப் படுத்தத்தான் ஸ்டெர்லைட் 3300 கோடியில் விரிவாக்கம் செய்யலாம் என்று தீர்மானித்தது. இதன் மூலம் இப்போது இருக்கும் 5000 நேரடி வேலைவாய்ப்பு 9000-த்திற்கும், மறைமுக வேலைவாய்ப்பு 20,000-இல் இருந்து 29,000-த்திற்கும் உயரும் என்பது இந்த நிறுவனத்தின் கணிப்பு.
இங்குதான் நம்முடைய அரசியல்வாதிகள் உள்ளே வருகிறார்கள்.
இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, இவ்வளவு லாபம் கிடைக்கிறதே, இன்னும் விரிவாக்கத்திற்கு கோடி கோடியாய் பணம் இருக்கிறதே, இதில் நமக்கு என்ன கிடைக்கும் என்பது தான் இவர்களுடைய குறிக்கோள். நம்முடைய அரசியல்வாதிகளுக்குத்தான் 30% கமிஷன் கொடுக்க வேண்டுமே. இந்தத் தொல்லையினால் சில நிறுவனங்கள் ஆந்திராவில் தொழில் தொடங்கச் சென்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
சும்மா போய்க் கேட்டால் இந்த நிறுவனங்கள் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதால், பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, கேன்சர் போன்ற வியாதிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களைத் தூண்டிவிட்டு, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த அறியாமையில் போனதுதான், ஒரு பெண் உட்பட இன்று போன 11 உயிர்களும். இதில் காவல்துறையையோ, மாவட்ட ஆட்சியாளரையோ சொல்லிக் குற்றமில்லை.
நம் அப்பாவி மக்கள் தங்கள் அறியாமையினால் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து பிண அரசியலும் செய்து, தங்களுக்குத் தேவையானதையும் நிறைவேற்றிக் கொண்டு, நமக்காக நீலிக் கண்ணீரும் வடிப்பார்கள்.
நமது மக்கள் அறியாமையில் இருந்து வெளிவந்து சமூகத்தை அனுக வேண்டும். போராட்டத்தால் எல்லாவற்றிலும் ஜெயிக்க முடியாது. இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்கள் குடும்பத்தினர் இனிவரும் காலங்களை எதிர்கொள்ள மன வலிமையைத் தருமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. நீங்க சொல்றது சரி தான் ஆனால் மழை நமக்கு கட்டாயம் வேண்டும் அது இல்லாம காப்பர் ஆசிட் முக்கியமானது கிடையாது நம்ம நாடு முன்னேறமா இருக்க சில அரசியல்வாதிகள் தான் காரணம்.
    வேண்டாம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மக்களுக்கு நல்லதா இருந்தா அவங்களுக்கு புரிய வைங்க
    ஆனா மழை அது பாதிக்கா வண்ணம் பார்த்து பிளான்ட் run பன்னா சந்தோஷம்

    பதிலளிநீக்கு