திங்கள், 14 மே, 2018

VIVEK MAOIST SAYS
---------------------------------மனிதன் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்ட தோழர் குப்புராஜ் குறித்த வெளியீட்டில் 1985-87 காலகட்டத்தில் இ.க.க.(மா-லெ) (மக்கள் யுத்தம்) கட்சியின் தலைமை கலைப்பு வாதத்தில் ஈடுபட்டு கட்சிக்கு மிகப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்த வரலாறு குறித்து சுருக்கமாக விளக்கப்பட்டிருந்தது.
இந்த வெளியீட்டை எழுதியது விவேக் (முக நூலில் விவேக் மாவோயிஸ்ட் ) என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் யுத்தக் கட்சியின் 87 மாநாட்டில் எடுக்கப்பட்ட நிலைபாட்டின் அடிப்படையில் இவ்விசயத்தை நான் எழுதியிருந்தேன். இது குறித்து போல்ஷ்விக் கட்சி தலைமைக்கு (ஏ.எம்.கே. அவர்களுக்கு) உள்ள விமர்சனங்களை வெளியீடாகவோ அல்லது குறைந்த பட்சம் துண்டறிக்கையாகவோ கொண்டு வருவதுதான் அரசியல் நேர்மைக்கும், அரசியல் ஆளுமைக்கும் அடையாளம். இவ்விசயம் குறித்து இன்றுவரை போல்ஷ்விக் கட்சி தலைமை (ஏ.எம்.கே. அவர்கள்) எந்த பதிலும் அளிக்கவில்லை. அதற்கு மாறாக, அரசியல் நேர்மையற்ற வகையில், அவரது சித்தாந்த தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் தோழர்கள் ரவீந்திரன், திருமேனி மற்றும் சிலரை வைத்துக் கொண்டு முக நூலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை (AIM) தொண்டு நிறுவனம் என்று ஆதாரமே இன்றி அவதூறு செய்கிறார். இதற்கும் மேலே ஒருபடி சென்று, மே தின சூளுரையில் இதே அவதூறை (துண்டறிக்கை மற்றும் சுவரொட்டிகளில்)முழக்கமாக வைத்து, ஒரு தனி நபரின் அடையாளச் சிக்கலுக்காக மே நாள் சூளுரை என்ற புரட்சிகர மரபையே பலியிட்டுள்ளா. #இப்படி_அவதூறு_செய்ததற்கான#காரணம்_என்ன_என்பதை #தோழர்_ரவீந்திரன்#தெரியாமல்_போட்டு_உடைத்து_விட்டார்#ஏ_எம்_கே_குறித்து
#மனிதன்_வெளியீட்டில்_வைக்கப்பட்ட_விமர்சனமே#இதற்குக்_காரணம்_என#ஒப்புதல்_வாக்கு_மூலம்_தந்துள்ளார். இது எத்தகைய கீழ்த்தரமான, கோழைத்தனமான, நேர்மையற்ற, சதித்தனமான அணுகுமுறை? 50 வருடங்களாக புரட்சிகர அரசியலில் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு 'முது பெரும்' தலைவரின் புரட்சிகர பண்பைப் பாருங்கள்! 85-87 காலத்தில் நடந்த விசயங்களை ஒட்டி ஏ.எம்.கே. உள்ளிட்ட தலைமை குறித்து வெளிப்படையாக விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. இதை நேரடியாக மறுக்கலாம், அல்லது, தவறென வாதிடலாம். இதுதான் பாட்டாளிவர்க்க புரட்சிகர பண்பின் அடையாளம். அதை விட்டு விட்டு, நேரடியாக விமர்சிக்கப்படாத ம.ஜ.இ.க. என்ற மக்கள் திரள் அமைப்பை பயன்படுத்தி (அதிலுள்ள தனது துதி பாடிகள் மூலம்), இந்த விவாதத்தில் சம்மந்தப்படாத ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தினை இழிவுபடுத்தும் பொய்யைப் பிரச்சரம் செய்யவைக்கிறார். எவ்வளவு கீழே போய்விட்டார்! தனது பொய் பிம்பத்தை எப்படியாவது பாதுகாக்க துடிக்கும் இழிவான நிலைக்கு அவர் வந்து சேர்ந்துவிட்ட அவல நிலையைத்தான் இது காட்டுகிறது!
மனிதன் வெளியீட்டில் வைக்கப்பட்ட தலைமையின் கலைப்புவாதம் மற்றும் துரோகம் குறித்த விமர்சனத்தை அவதூறு என ரவீந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கூறுகின்றனர். ஒருகட்சியின் தலைமையில் இருந்துகொண்டு அக்கட்சியின் வழியை இழிவு படுத்தி அணிகளிடம் அவதூறு செய்தது, அக்கட்சியின் தியாகிகள் உள்ளிட்டோரை துதிபாடிகள் மற்றும் தன் மீது நம்பிக்கை கொண்டிருந்த தோழர்களைக் கொண்டு இழிவு படுத்துவது, கட்சியின் நடைமுறையையே நிறுத்தி (வர்க்கப்போராட்டத்தை நிறுத்தி) அணிகளை செயலற்றவர்களாக்கியது, கட்சி மாநாட்டை நடத்தாமல் 38 ஆண்டுகளாக சிவப்பு மடம் போல கட்சியை நடத்தி வருவது, முழு நேர ஊழியர்களை சாதாரண வாழ்க்கைக்கு திரும்பச் செய்தது, இதன் மூலம் ஆயுதப் போராட்டத்தை கண் காணாத தூரத்துக்கு தள்ளிப்போட்டது - இவையெல்லாம் கலைப்புவாதம் இன்றி வேறென்ன? 1905 புரட்சியின் போது புரட்சிகர வழியை ஏற்காமல், அதை சீர்குலைக்க சட்டவாதத்தை போதித்த மென்ஷ்விக்குகளின் கலைப்புவாதத்திற்கும் ஏ.எம்.கே. தலைமைக்கும் உள்ள ஒற்றுமை இதிலிருந்து அப்பட்டமாகத் தெரியவில்லையா? இவை பொய்யான குற்றச்சாட்டுகள் அல்ல. தமிழக புரட்சிகர இயக்கத்தின் உண்மை வரலாறு. ஏ.எம்.கே. உள்ளிட்ட தலைமையின் அன்றைய துரோகத்தை நேரடியாகப் பார்த்த, அதனால் கொடூரமாக பாதிக்கப்பட்ட (என்னைப் போன்ற)நூற்றுக்கணக்கான தோழர்கள் கண்டு உணர்ந்த யதார்த்தம் இது. மேலும், இது மக்கள் யுத்தக் கட்சியின் பல ஆவணங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. உங்களிடம் துணிவிருந்தால், நேர்மை இருந்தால் பதில் தாருங்கள். உங்களின் வழக்கமான கிசு கிசு அரசியல், அவதூறு பரப்பல், அமைப்பில் முடிவே எடுக்காமல் துதிபாடிகளின் மூலம் தனது கருத்தை இறக்குவது போன்ற கோழைத்தனமான குட்டி முதலாளிய கபட முறைகளை கைவிட்டு விட்டு, ஒரு பாட்டளிவர்க்க "சமரனைப்" போல நேரடியாக களத்திற்கு வாருங்கள். அவதூறு அட்டைக் கத்திகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தத்துவார்த்த வாளைச் சுழற்றுங்கள் 'முது பெரும் புரட்சியாளரே'!
மக்கள் யுத்தக் கட்சி அக்காலத்திற்குப்பின் அடைந்த முன்னேற்றங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் ஏ.எம்.கே. அவர்கள் காரணம் என எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. தமிழக புரட்சிகர இயக்கம் பாய்ச்சலில் முன்னேற வாய்ப்பைப் பெற்றிருந்த 85-87 லில் தமது துரோகத்தின் மூலம் இந்தத் தலைமை, இயக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு குழி பறித்தது. தமிழகத்தின் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியில் இந்த துரோகத்தின் தாக்கம் பாரதூரமானது. இந்த உண்மையைத்தான் அவ்வெளியீட்டில் நான் கூறியிருந்தேன். அக்காலகட்டத்திற்குப் பிந்தைய தமிழக மாவோயிஸ்ட் இயக்கத்தின் நிலைக்கு அதன் தலைமையே பொறுப்பு. இந்திய அளவிலும் அப்படித் தான். அது குறித்த உங்களது விமர்சனங்களும் மதிப்பீடுகளும் இருந்தால் முன்வையுங்கள். ஆனால், மனிதன் வெளியீட்டில் வைக்கப்பட்டுள்ள நேரடியான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல அஞ்சிக் கொண்டு, நான் சொல்லாததை சொல்லியது போலக் காட்டுவது உங்கள் அரசியல் இயலாமையைத் தான் காட்டுகிறது.
மாவோயிஸ்ட் கட்சியை ரசிய நரோத்னிக்குகளுடன் ஒப்பிட்டு, இங்கு ஒன்றுபட்ட புரட்சிகரக் கட்சியைக் கட்ட தடையாக உள்ளதாக ஏ.எம்.கே.-துதிபாடிகள் புலம்புகின்றனர். ஒரு பேச்சுக்கு மாவோயிஸ்ட்டுகளை நரோத்னிக்குகள் என வைதுக் கொண்டாலும், ரசிய போல்ஷ்விக் லெனின் போல நரோத்னிக்குகளை அரசியல் ரீதியாக முறியடிக்காமல், 'இந்திய லெனின்' "தடையாக உள்ளார்கள்" என பரிதாபமாகப் புலம்பிக் கொண்டு நிற்பதேன்? ஏனெனில், தமிழகத்தின் போலி போல்ஷ்விக் கட்சியின் தலைமை, லெனின் வாரிசு அல்ல, மாறாக, புரட்சிகர நடைமுறையைக் கண்டு அலறிய காவுட்ஸ்கியின் வாரிசு! மாவோயிஸ்ட்டுகள் இவர்கள் கூறுவது போல நரோத்னிக்குகளின் வாரிசுகள் அல்ல. பேராசான் மாவோவின் வாரிசுகள்... நக்சல்பாரி கட்சியின் உண்மை வாரிசுகள்!
சரி... 30 ஆண்டுகளாக 'இந்திய லெனின்' என்ன செய்து கொண்டுள்ளார்? எனக்கு தெரிந்து 30 ஆண்டுகளுக்கு முன்னரே, ஏ.எம்.கே. அவர்கள் இந்தியப் புரட்சிக்கான மகத்தான சரியான திட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக பெரிய பில்ட்-அப் செய்யப்பட்டது. ஆனால், 70 பேராயத் திட்டத்தைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்ற நகைக்கத்தக்க பதிலைத் தான் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் போல்ஷ்விக் கட்சியினர். அப்படியெனில், அந்த மகத்தான திட்டம் வெறும் பில்ட்- அப் தானா?
அதே போல சாதி குறித்து மிக ஆழமான ஆய்வு செய்து, முன்னெப்போதும் பார்த்திராத ஒரு ஆவணத்தை ஏ.எம்.கே. தயாரித்துக் கொண்டிருக்கிறார் எனவும் கதை அளக்கப்பட்டது. இக்கதை அளப்பும் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பழையது. சாதி குறித்த அவரது மகத்தான ஆய்வறிக்கை போல்ஷ்விக் கட்சி உறுப்பினர்களின் கனவில் வந்தால்தான் உண்டு!
இந்த தத்துவார்த்த ஞானி(!) குறைந்தபட்சம் சமரன் போன்ற பத்திரிக்கையையாவது தொடர்ந்து கொண்டு வந்தாரா என்றால் அதுவும் இல்லை. சுயமாக பெரியாரியத்தை மறுத்து எழுதக்கூட திறனின்றி, சி.பி.ஐ.யின் பழைய தலைவர் ஜீவாவின் "ஈரோட்டு பாதை சரியா?” என்ற படைப்பை வெளியிடும் அளவுக்கு அறிவு சோம்பேறித்தனத்தில் 30 ஆண்டுகளாக மூழ்கிப் போயுள்ளார். இந்த இலட்சணத்தில் இந்திய அளவில் ஒன்றுபட்ட கட்சியை கட்டப்போகிறார்களாம். அதற்கு மாவோயிஸ்ட்டுகள் தடையாக உள்ளார்களாம்! இதே கால கட்டத்தில் இந்திய அளவில் புரட்சிகர மா-லெ வழியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த இ.க.க.(மா-லெ)கட்சி ஐக்கியம், மாவோயிச கம்யூனிச மையம்(M.C.C.), இ.க.க. (மா-லெ) நக்சல்பாரி ஆகியவற்றை உள்ளடக்கிய பல புரட்சிகர கட்சிகளுடன் ஐக்கியப்பட்டு, இந்தியாவின் பெரும்பான்மை புரட்சிகர சக்திகளை உள்ளடக்கிய ஐக்கியப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை (மாவோயிஸ்ட் கட்சியை) மக்கள் யுத்தக் கட்சி உருவாக்கியுள்ளது. அக்கட்சிதான் ஐக்கியத்திற்கு தடையாக உள்ளதாம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை சனநாயகக் கடமையான மாநாடு நடத்துவதையே ஒழித்துக்கட்டிவிட்டு, 30 வருடங்களாக போல்ஷ்விக் கட்சியை ஒரு சிவப்பு மடமாக நடத்தி வருவதுதான் இந்த மகத்தான புரட்சித்தலைவரின் சாதனை. அதுமட்டுமல்ல மாநாட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஏதும் இன்றி, மனதிற்கு தோன்றியதை எல்லாம் கிசுகிசு பாணியில் துதிபாடிகளின் மூலம் நிலைபாடுகளாக அறிவிப்பது என்ற சர்வாதிகார செயல்பாடுதான் இத்தலைமையின் 'புரட்சிகர' அமைப்பு நடைமுறை.
ஏ.எம்.கே அவர்கள் கட்சியில் முடிவெடுக்கப்படாத தனது சொந்த கருத்துக்களை தனது துதிபாடிகளின் மூலம் கட்சிக்குள் பரப்புவது என்ற குட்டிமுதலாளிய கபடச்செயல்பாடுகளை எனக்குத் தெரிந்து 30 வருடங்களுக்கு மேலாகவே நடத்தி வருகின்றார். ஒருபுறம் சாருமஜும்தார் தலைமையில் உருவாக்கப்பட்ட 70 பேராய திட்டத்தை ஏற்பதாகக் கூறிக்கொண்டே மறுபுறம் சாருமஜும்தாரை ஒரு மம்பட்டியான் போல சித்தரிக்கும் கீழ்த்தரமான கருத்துக்களை போல்ஷ்விக் அணிகளிடம் பரப்பியுள்ளார். தோழர் தமிழரசன், தோழர் கொண்டபள்ளி சீத்தாராமையா போன்றோருடன் அரசியல் அமைப்பு முரண்பாடுகள் தோன்றிய போது, இதே போன்ற கயமைத்தனமான பிரச்சாரங்களைத் தனது துதி பாடிகளின் மூலம் கட்டவிழ்த்துவிட்டவர் தான் இவர். ஏன்? சமீபமாக இவரைவிட்டு விலகிய இதர தலைவர்கள் இவருடன் அமைப்பில் இருந்த காலத்தில் அவர்களைப் பற்றியும் இதேமாதிரியான கீழ்த்தரமான கருத்துக்களை பரப்பியது தான் இவரது பாட்டாளிவர்க்க அமைப்புமுறை! பாட்டாளிவர்க்க சனநாயக மத்தியத்துவம், அமைப்புமுறைகள், விதிகள், தோழமை உணர்வு போன்றவற்றிற்கு மாறாக தன்னை உயர்த்திக்கொள்வதற்காக அமைப்புமுறை மீறி மற்றவர்களை பற்றிய இழிவான கருத்துக்களை பரப்புவது, முறையாக மாநாட்டை நடத்தி, நிலைப்பாடுகளை உருவாக்கி, அணிகளுக்கு போதித்து நடைமுறைக்கு கொண்டு செல்வதற்கு பதில் மாநாடுகளையே நடத்தாமல், அதிகாரப்பூர்வமான ஆவணங்களையும், நிலைப்பாடுகளையும் வகுக்காமல் தன்னுடைய சொந்த கருத்துக்களை அமைப்புமுறை மீறி பரப்புவது என்ற குட்டிமுதலாளிய நடைமுறையைத்தான் இவர் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றார்.
தனிநபர் துதி மூலம் போலியான, ஊதிப்பெருக்கப்பட்ட('இந்தியாவின் லெனின்’, 'இந்தியாவின் மாவோ' போன்ற) பொய் பிம்பத்தை தனது துதிபாடிகளின் மூலம் உருவாக்குவதை இன்று நேற்றல்ல, எனக்கு தெரிந்து 30 வருடங்களுக்கு மேலாக பின்பற்றி வருகின்றார். இதை மார்க்சிய-அரசியல் கண்ணோட்டத்தில் பிழைப்புவாதம் என்று தான் கூறுவார்கள். அந்த போலி பிம்பத்திற்கு பாதிப்பு வந்துவிட்டது என்றுதான், இப்போதும் கூட எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல் கபடத்தனமாக, ஆதாரமற்ற அவதூறுகளை மாவோயிஸ்ட் கட்சி மீதும், AIM போன்ற சனநாயக அமைப்புகள் மீது அள்ளிவீச மற்றவர்களை ஏவுகின்றார். ஆனால் "கெட்டிகாரன் புளுகு எட்டு நாளைக்குத்தான்" என்பது போல தர்க்கப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், சமீபத்திய பின்னூட்டம் ஒன்றில் தோழர் ரவீந்திரன் உண்மைக் காரணத்தை உளறிக்கொட்டிவிட்டார்.
70 திட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கதை அளக்கும் இந்த புரட்சிகர(?) தலைமை கடந்த 30 ஆண்டுகளாக விவசாய புரட்சியை முன்னெடுப்பதற்கான புரட்சிகர விவசாய அமைப்புகளைக் கூட கட்டவில்லை. 70 பேராயத்தின் உயிர்மூச்சாக விளங்கும் ஆயுதப்போராட்டத்தை வளர்த்தெடுப்பது என்றாலே இந்த தலைமைக்கு அலர்ஜிதான். ரகசிய கட்சி என்ற பெயரில் தொளதொளப்பான சட்டப்பூர்வ கட்சி, முழுக்க முழுக்க சட்டவாத நடைமுறைகள், போர்குணமிக்கப் போராட்டங்களையே தலைமுழுகிவிட்ட சந்தர்ப்பவாத நடைமுறை - இதுதான் 'இந்திய லெனின்' கட்டியுள்ள 'புரட்சிகர போல்ஷ்விக்' கட்சியின் இலட்சணம்! கேவலம்! இதனால் தான் இக்கட்சியும் ம.ஜ.இ.கவும் உளவுத்துறையினரின் செல்லப்பிள்ளைகளாக உள்ளன. இன்று இத்தலைமைகள் புரட்சிகர கட்சி மற்றும் சனநாயக அமைப்புகள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை வாரிவீசுவதன் மூலம் உளவுத்துறையின் அணிவரிசையிலேயே சேர்ந்துவிட்டனர்.
இவர்களுடைய இதர சில அரசியல் அவதூறுகளுக்கு பதில் அளிப்பதுடன் இந்த பதிவை முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். முதலாவதாக நான் சாதி குறித்த பதிவுகளில் கருத்துமுதல் வாதத்தை கொண்டிருப்பதாக தோழர் திருமேனி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதை சிறிதும் விளக்கவில்லை. இது என்ன முறையோ? "நாங்கள் வைக்கும் விமர்சனத்தைக் கூட விளக்க மாட்டோம். நீயே புரிந்து கொள்.” என்பது அகநிலைவாதமல்லவா? நீங்கள் சொல்லாமல் எப்படி சாதியம் குறித்த எனது கருத்தில் கருத்து முதல் வாதம் உள்ளது என்பதை புரிந்து கொள்வது?
அடுத்து, சாதியம் குறித்த விசயத்தில் மார்க்சியத்திற்கு போதாமை உள்ளது, அம்பேத்காரியம் மற்றும் பெரியாரியத்திடம் இருந்து சில விசயங்களை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என மாவோயிஸ்ட்டுகள் கூறுவதாக மொட்டையாக கூறிவிட்டு செல்கின்றனர். மக்கள் யுத்த கட்சியாக இருக்கும் போதே சாதி பற்றிய ஆவணத்தை அக்கட்சி முன்வைத்தது. போல்ஷ்விக் கட்சி போல அதிகாரபூர்வ ஆவணம் இன்றி வாய்க்கு வந்ததை எல்லாம் கூறிவிட்டுச் செல்வது மாவோயிஸ்ட் கட்சியின் நடைமுறை இல்லை. அந்த ஆவணத்தில் அப்படிப்பட்ட நிலைபாடு ஏதும் இல்லை. சாதி ஒழிப்பு/ சாதி எதிர்ப்பு போராட்டங்களில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் அதே வேளை அவர்களின் அரசியல் குறித்து மாவோயிசக் கண்ணோட்டத்தில் விமர்சனமும் செய்யப்பட்டுள்ளது. இதை எதையும் தெரிந்துகொள்ளாமல், எந்த விளக்கமும் தராமல் இறுதி முடிவு போல கருத்து சொல்வது அறிவு அகங்காரமா (intellectual arrogance) அல்லது அவதூறு பரப்பலா? இதற்கு தோழர்கள் திருமேனி, ரவீந்திரன் ஆகியோர்தான் பதில் சொல்ல வேண்டும். சாதியம் குறித்து மாவோயிஸ்ட்டுகளின் நிலைபாடு பற்றிய எனது தனிப்பதிவு ஒன்றை பிறகு வெளியிடுவேன்.
அதே போல மாவோயிஸ்ட்டுகள் பெரியாரை ஆதரித்து பெரியாரிஸ்ட்டுகளாக உள்ளனர் என்ற முட்டாள்தனமான வாதத்தை இவர்கள் முன்வைக்கின்றனர். பெரியாரின் முற்போக்கான பங்களிப்புகளை அங்கீகரிப்பதே பெரியாரியத்தை ஏற்றுக்கொள்வதென்பது வரட்டுவாதமன்றி வேறல்ல. சன்யாட்-சென்னின் 3 மக்கள் கோட்பாடுகளை அங்கீகரித்ததற்காகவே, மாவோவை முதலாளிய கோட்பாட்டாளர் என வாதிடுவது எவ்வளவு முட்டாள்தனமானதோ, அதே அளவு முட்டாள்தனமானது இந்த வாதமும். சாதி ஒழிப்பு/ எதிர்ப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு, நாத்திகம், பெண்ணுரிமை, தேசிய ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்ற விசயங்களில் பெரியாரின் முற்போக்கான பங்களிப்புகளை அங்கீகரிப்பது, இன்றைய சூழலில் மிகவும் அவசியமானதாகிறது. இந்துத்துவ பார்ப்பனீய பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் உண்மையான பெரியாரியவாதிகளை இணைத்துக் கொள்வது அவசியமாகும்.பெரியாரியத்தின் வரையறைகள், சித்தாந்தப் புரிதல்கள் போன்றவற்றின் மீதான விமர்சனங்களை இது எவ்விதத்திலும் தடை செய்வதில்லை. உண்மையில் இணைக்கப்பட வேண்டிய சக்திகளை இணைக்கத் தவறுவது குறுங்குழுவாதமேயன்றி வேறல்ல. போல்ஷ்விக் கட்சியிடம் இத்தகைய வெற்று ஜம்பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
நானும் தோழர் திருமேனியும் முற்போக்கு மாணவர் சங்கத்தில் வேலை செய்ததாகவும், அப்போதே நான் பெரியாரிஸ்ட்டாக இருந்ததாகவும், இன்றுவரை அப்படியே தொடர்வதாகவும் திருமேனி கூறியுள்லார். நல்லவேளை எனது நல்வாய்ப்பின் காரணமாக நான் அவரை சிறுவனாக இருந்தபோது சந்திக்கவில்லை. ஒருவேளை அப்படி சந்திக்க நேர்ந்திருந்தால், "தோழர் விவேக் அப்போதே கருப்பு சட்டை விரும்பி அணிவார். அவர் சிறுவனாயிருக்கும்போதிருந்தே பெரியாரிஸ்ட்டுதான்" என்று கூறியிருப்பார்.
நான் அவரை (85-87-ல்) அதிக பட்சமாக 2 அல்லது 3 முறை சந்தித்திருப்பேன். அதிலும் பத்து பதினந்து நிமிடங்கள் பேசியிருக்கலாம். நான் (19-20 வயதில்) மா-லெ-மா அரசியலை ஆர்வமாக கற்றுக் கொண்டிருந்த காலம் அது. திருமேனியும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அந்த குறுகிய உரையாடல்களில் நான் பெரியாரிஸ்ட்டாக இருந்ததைக் கண்டு பிடிக்க வேண்டுமெனில், தோழர் திருமேனி "கருவிலே திரு அடைந்த" 'பிறவி மார்க்சிஸ்ட்'டாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். என் சிற்றறிவிற்கு எட்டியவரை நான் இளம் வயதில் பெரியாரிடம் பெரும் ஈர்ப்புக் கொண்டவனாக இருந்ததில்லை. குடும்பச் சூழல் காரணமாக திரிபுவாதிகள் பேசும், "ரசியா கம்யூனிச நாடு, அமெரிக்கா எதிரி" என்ற அளவில்தான் எனது 'மார்க்சியப்' புரிதல் இருந்தது.(இப்போதாவது உங்களின் புனிதமான மார்க்சியர் திருப்பட்டத்தை எனக்கு வழங்குவீர்களா தோழர் திருமேனி!) பெரியாரின் பங்களிப்புகளையே நான் ஓரளவுக்கு மார்க்சியம் கற்றுக் கொண்ட பிறகுதான் புரிந்து கொண்டேன். மேலும், மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள ஒரு இளைஞனிடம் பெரியாரிய பாதிப்பு இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா? இதை ஏன் அவர் ஒரு விசயமாகக் கூறுகிறார் எனத் தெரியவில்லை? திருமேனி இதிலிருந்து கூறவருவது என்ன என்றும் புரியவில்லை? பெரியாரியத்திலிருந்து மார்க்சிஸ்ட்களாக மாறுபவர்களை நம்பக்கூடாதென்றா? இது மார்க்சிய இயங்கியல் புரிதலா அல்லது குறுங்குழுவாத நோய் முற்றிப்போன ஒருவரின் வரட்டுத் தர்க்கவாதமா?
இறுதியாக, போல்ஷ்விக் கட்சியிலும், ம.ஜ.இ.க.விலும் உள்ள புரட்சிகர நேர்மையுணர்வு கொண்ட தோழர்களுக்கு ஒரு வேண்டு கோள்!
70 பேராயத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறும் போல்ஷ்விக் தலைமை விவசாயப் புரட்சியையும், மக்கள் யுத்தத்தையும் முன்னெடுக்காதது ஏன் என்று கேள்வி கேளுங்கள்!
இத்தனை ஆண்டுகள் காரணமேயின்றி கட்சி மாநாட்டை நடத்தாத உங்கள் தலைமையை கேள்விக்குள்ளாக்குங்கள்!
எந்த அதிகாரபூர்வ ஆவணமும் இன்றி, விரும்பிய படியெல்லாம் முடிவெடுக்கும் அராசகப் போக்கிற்கு எதிராக போராடுங்கள்!
குறைந்த பட்ச ஆதாரமும் இன்றி மாவோயிஸ்ட்டுகள் மீதும், AIM போன்ற சனநாயக அமைப்பு மீதும் அவதூறு பரப்புவது சரியா என சிந்தியுங்கள்!
மாவோயிஸ்ட்டுகள் "கலைப்புவாதத் தலைமை" என விமர்சிப்பதற்கு பதில் தரக் கோருங்கள்!
________தோழமையுடன் மாவோயிஸ்ட் விவேக்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக