வெள்ளி, 25 மே, 2018

ஸ்டெர்லைட் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
ஸ்டெர்லைட்டை மூடுவது தீர்வாகுமா?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
முற்றிலும் தேவையற்ற (totally unwarranted) ஒரு துப்பாக்கிச்
சூட்டை அதிமுக எடப்பாடி அரசு நிகழ்த்தி 13 உயிர்களைப்
பலி வாங்கி உள்ளது. இது அரசு அடக்குமுறையின்
உச்சம் ஆகும். உயிரிழந்தோரின் குடும்பத்தார்க்கு
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காமராசர், பக்தவத்சலம், கருணாநிதி, ராமச்சந்திர மேனன்,
ஜெயலலிதா என்று மக்களைச் சுட்டுக் கொன்ற
தமிழக முதல்வர்களின் வரிசையில் எடப்பாடியும்
இடம் பெற்றுள்ளார். ராஜாஜி சேலம் சிறையில்
கம்யூனிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றார். புள்ளி
விவரங்களின்படி, அறிஞர் அண்ணா, ஓ பன்னீர்
செல்வம் ஆகிய இரு முதல்வர்கள் மட்டுமே தங்களின்
ஆட்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக்
கொல்லாதவர்கள்.

ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரும் கார்ப்பொரேட்
நிறுவனமான வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது.
இக்குழுமத்தின் இயக்குனர் குழுவில் (Board of directors)
ப சிதம்பரம் இடம் பெற்று இருந்தார். அமைச்சரான
உடன் அப்பதவியில் இருந்து விலகினார்.

மூலத்தாதுவில் இருந்து தாமிரத்தைப் பிரித்தெடுத்து
கம்பிகளாகவோ தகடுகளாகவோ
மின்முனைகளாகவோ (cathodes) தயாரிக்கும் வேலை
ஸ்டெர்லைட்டில் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் 1) தாமிரம்
பிரித்தெடுத்தல் (copper smelting)  2) கந்தக அமிலம்
தயாரித்தல் 3)பாஸ்பாரிக் அமிலம் தயாரித்தல்
ஆகியவற்றுக்கான தனித்தனி ஆலைகள் (plants)
உள்ளன.

சுருங்கக் கூறின், இந்தியாவின் மொத்த தாமிர
உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஸ்டெர்லைட்
ஆலை மூலம் உற்பத்தி ஆகிறது.  2016-17 நிதியாண்டில்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் ஆண்டு முழுவதற்குமான
தாமிர உற்பத்தி (copper cathode production) 4,02,000 டன் ஆகும்.
இது நாள் ஒன்றுக்கு 1100 டன் ஆகும்.
தகவல் ஆதாரம்: வேதாந்தா நிறுவனத்தின்
இணைய தளம்.

1997இல் அன்றைய முதல்வர் கலைஞர் ஸ்டெர்லைட்
ஆலையின் உற்பத்தியைத் தொடங்கி வைத்தார்.
(commissioning of the plant). 1997-98 நிதியாண்டில் ஸ்டெர்லைட்டின்
உற்பத்தி (initial production) 60,000 டன் மட்டுமே.  

இந்தியாவில் குஜராத், ஜார்கண்டு. ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்களில் தாமிரம் பிரித்தெடுக்கும் ஆலைகள்
உள்ளன. குஜராத்தில் உள்ள ஹிண்டால்கோ
(Hindalco) எனப்படும் ஆதித்ய பிர்லாவின் நிறுவனம்
ஸ்டெர்லைட்டை விடப் பல மடங்கு அதிகமான
தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. இதனுடைய
தொடக்ககாலத் திறன் (initial capacity) ஆண்டொன்றுக்கு
ஒரு லட்சம் டன் ஆகும். பின்னர் இது 1.5 லட்சம் டன்னாக
உயர்த்தப் பட்டது.

1997இல் வெறும் 60,000 டன் என்று தொடங்கி, 2016-17இல்
நாலு லட்சம் டன் என்று ஸ்டெர்லைட்டின் உற்பத்தி
பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுவே பல
பிரச்சினைகளுக்குக் காரணம். 

ஸ்டெர்லைட் பல தடைகளைக்  கடந்துதான் இவ்வளவு
பிரம்மாண்ட உற்பத்தியை எட்டி உள்ளது.
ஸ்டெர்லைட்டின் வரலாற்றில் முக்கிய கட்டம்
2005இல் நிகழ்ந்தது. நாள் ஒன்றுக்கு 350 டன்னாக
இருந்த உற்பத்தியை 1000 டன்னாக உயர்த்த
ஸ்டெர்லைட் மத்திய மாநில அரசுகளிடம் .கோரியது.

அன்றைய டாக்டர் மன்மோகன்சிங் அரசில் திமுகவின்
ஆ ராசா சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார்.
எவ்விதத் தயக்கமும் இன்றி, மக்களின் கருத்தைக்
கேட்காமல், 900 டன்னாக உற்பத்தியை
அதிகரிப்பதற்கு, மூன்று மடங்கு அதிகரிப்புக்கு
ஆ ராசா அனுமதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து அன்றைய தமிழக முதல்வர்
ஜெயலலிதாவும் 900 டன் உற்பத்தி செய்வதற்கு
அனுமதி அளித்தார். பகுதிவாழ் மக்களின்
கருத்து கேட்கப்படவில்லை.

ஆ ராசா, ஜெயலலிதா ஆகிய இருவரும் வழங்கிய
அனுமதி ஸ்டெர்லைட்டை தலைகால்  புரியாமல்
ஆட வைத்தது. தனக்கு உதவியவர்களை கரன்சி
மழையில் குளிப்பாட்டியது ஸ்டெர்லைட். சுற்றுச்
சூழல் விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, ஸ்டெர்லைட்டின்
சட்டைப் பையில் இருப்பதை ஸ்டெர்லைட்
அனைவருக்கும் உணர்த்தியது.

2012 ஆகஸ்டில் மேலும் விரிவாக்கப் பணிகளுக்காக
மத்திய அரசை நாடியது ஸ்டெர்லைட்.. அப்போது
UPA-II ஆட்சியில் சுற்றுச் சூழல் அமைச்சராக
இருந்த ஜெயராம் ரமேஷ் அதற்கான அனுமதியை
அளித்தார். பகுதிவாழ் மக்களின் கருத்தைக்
கேட்காமல் இப்படி விரிவாக்கத்துக்கு அனுமதி
கொடுப்பது பற்றி நாடாளுமன்றத்தில் ஆட்சேபம்
தெரிவிக்கப் பட்டது. மக்களின் கருத்தைக் கேட்கத்
தேவையில்லை என்று பதிலளித்தார் ஜெயராம்
ரமேஷ்.(பார்க்க: நாடாளுமன்றத்தில் அமைச்சரின்
பதில், நாள்: மார்ச் 10,.2010, ஆகஸ்ட் 11, 2010)  

தலமட்டத்தில் திமுகவின் பெரியசாமியும் அதிமுகவின்
ஹென்றி, சசிகலா புஷ்பாவும் ஸ்டெர்லைட்டின்
PROகளாகவும் பாதுகாவலர்களாகவும் செயல்பட்டார்கள்.
சட்ட திட்டப்படி அமைக்க வேண்டிய பாதுகாப்பு
ஏற்பாடுகள், சூழல் விதிகள் ஆகியவற்றைப்
பற்றிக் கவலைப் படாமல், சூழலை மாசு படுத்திக்
கொண்டு உற்பத்தியை அதிகரித்தது ஸ்டெர்லைட்.

ஸ்டெர்லைட்டை எதிர்த்து எவரும் மூச்சுக்கூட
விடாமல் பெரியசாமி பார்த்துக் கொண்டார்.
தூத்துக்குடி மேயராக இருந்த சசிகலா புஷ்பா,
அதிமுக ஹென்றி ஆகியோரை மீறி, ஸ்டெர்லைட்
ஏற்படுத்தும் மாசு பற்றி எவரும் முணுமுணுக்கக் கூட
இயலாமல் போயிற்று. தூத்துக்குடியிலும்
அதன் சுற்றுப் புறங்களிலும் ஸ்டெர்லைட்டின்
கைத்தடிகளான இவர்களே ஆட்சி நடத்தி
வந்தார்கள். எனவேதான் பாதிக்கப்பட்ட மக்கள்
எழுச்சி அடைந்து, 100 நாள் போராட்டம் நடத்தியபோது,
திமுக  அதிமுக உள்ளிட்ட எந்தவொரு அரசியல்
கட்சியையும் போராட்டத்தில் அனுமதிக்காமல்
விரட்டி விரட்டி அடித்தனர்.பெரியசாமியின் மகளும்
தூத்துக்குடி MLAவும் ஸ்டெர்லைட்டின் கைத்தடியுமான
கீதா ஜீவன்தான் முதலில் விரட்டி அடிக்கப் பட்டவர்.

ஆக, ஸ்டெர்லைட்டின் வரலாற்றில் 1997 முதல் 2014 வரை
மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியானது
ஸ்டெர்லைட்டுக்கு விதிகளை மீறி எல்லா
அனுமதியையும் வழங்கியது. மே 2014க்குப் பின்னர்
ஸ்டெர்லைட்டின் நலன் பேணும் பொறுப்பை
பாஜக எடுத்துக் கொண்டது. காங்கிரசுக்கும்
பாஜகவுக்கும் ஸ்டெர்லைட் விவகாரத்தில்
ஒரே கொள்கைதான் என்பதை அறிய வேண்டும்.

காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக ஆகிய நான்கு
கட்சிகளுமே ஸ்டெர்லைட்டின் நலம்
விரும்பிகளாகவே இருந்தன என்பதை
இக்கட்டுரையில் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.
பிற கட்சிகளும்  லெட்டர் பேட் கட்சிகள் உட்பட
ஸ்டெர்லைட்டிடம் பணம் வாங்கிய கட்சிகளே.
நக்சல்பாரிக் கட்சிகளைத் தவிர, மீதி அனைத்துக்
கட்சிகளும் ஸ்டெர்லைட்டிடம் யாசித்துப்
பெற்ற கட்சிகளே.
--------------------------------------------------------------------------------
தொடரும்.. மீதி அடுத்த கட்டுரையில்
****************************************************** 






 
   
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக