செவ்வாய், 22 மே, 2018

அறிவியலின் தத்துவம்!
(The philosophy of science)
----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
மானுட சமூகம் முதன் முதலில் அறிந்து கொண்ட
அறிவியல் கணிதமே. எண்கணிதத்தில் தொடங்கி
வானியல், வடிவியல், அல்ஜீப்ரா என்று கணிதத்தின்
பல்வேறு பிரிவுகளையும் மானுடம் அடுத்தடுத்து  அறிந்து
கொண்டது. பின்னர் தாவரவியல், விலங்கியல்,
வேதியியல், இயற்பியல் என்று வரிசையாக
அறிவியலின் பிற பிரிவுகளை அறிந்து கொண்டது.

இந்த வரிசையில் தத்துவம் கடைசியாகத்தான் வருகிறது.
தத்துவம் என்பது மானுட வாழ்வின் அனைத்துத்
துறைகளையும் (அறிவியல், கலை, இலக்கியம், பிற
சமூக அறிவியல் முதலியன) தழுவி நிற்பது; அனைத்தையும்
உள்ளடக்கியது. எல்லாத்துறைகளின் பொது விதிகளையும்
கண்டறிந்து, ஒட்டு மொத்த ஞானத்தை மானுடத்துக்கு
வழங்குவதும், இடையறாத அறிவுத் தேடலில் மானுடத்தை
ஆழ்த்துவதுமே தத்துவத்தின் பணி.

இயற்கை மற்றும் சமூகம் குறித்த ஒருங்கிணைந்த பார்வையை,
வாழ்வு குறித்த கண்ணோட்டத்தை தத்துவம்
முன்வைக்கிறது. இதை கணிதம், இலக்கியம் வரலாறு போன்ற வேறு எந்தவொரு துறையும் தானாகவே
செய்ய இயலாது. தத்துவத்தின் முக்கியத்துவம்
அதன் இந்தத் தனித்தன்மைதான்.இதன் காரணமாகவே பிற
எல்லாத் துறைகளுக்கும் ஒரு எஜமானனாக, தொடக்க
காலத்தில் தத்துவம் தன்னை நிலைநிறுத்திக்
கொண்டிருந்தது. என்றாலும் இந்த எஜமானத் தன்மையை
தத்துவத்தால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள
முடியவில்லை.

இந்தியாவில் வேதாந்த, சமண, புத்த மதங்கள் செல்வாக்குப்
பெற்றிருந்த காலத்தில், விஞ்ஞானிகளின் நடுவில்
இருந்தே தத்துவஞானிகள் தோன்றினர்.மேனாட்டிலும்
அரிஸ்ட்டாட்டில் காலத்தில் அவரே விஞ்ஞானியாகவும்
தத்துவஞானியாகவும் இருந்தார். நியூட்டன் கூட அவர்
காலத்தில் தத்துவஞானியாக மதிக்கப் பட்டவர்தான்.
பிரான்சு நாட்டில் கணித வானியல் அறிஞரான லாப்லேஸ்
(Pierre Simon Laplace 1749-1827) தத்துவஞானியாகவும்
கருதப்பட்டார். விஞ்ஞானமும் தத்துவஞானமும்
ஒன்றாகவே வளர்ந்தன;ஒருவரிடமே வளர்ந்தன.

காலப்போக்கில் இந்த நிலைமை மாறியது. இருபது
இருபத்தோராம் நூற்றாண்டுகளின் வளர்ச்சியின்
குதிரைப் பாய்ச்சலில் அறிவியல் வெகுதூரம் முன்னே
சென்று விட்டது. அறிவியலின் ஒவ்வொரு துறையும் மிகவும் நுட்பமடைந்து தனித்தன்மையுடன் (specialization) திகழத்
தொடங்கியது. அறிவியலின் வேகத்துக்கும் நுட்பத்துக்கும்
ஈடு கொடுக்க இயலாமல் தத்துவம் பின்தங்கி விட்டது.

தத்துவம் செத்து விட்டது என்ற ஸ்டீபன் ஹாக்கிங்!
------------------------------------------------------------------------------------------
மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் 2010
செப்டம்பரில் எழுதி வெளியிட்ட தமது புகழ் பெற்ற
மாபெரும் வடிவமைப்பு (The Grand Design) என்ற நூலில்,
தத்துவம் செத்து விட்டது (philosophy is dead) என்று கூறுகிறார்.
"அறிவியலின் நவீன கால வளர்ச்சியுடன், குறிப்பாக
இயற்பியலின் வளர்ச்சியுடன் ஈடு கொடுக்க இயலாமல்
தத்துவம்  செத்து விட்டது. எனவே தத்துவஞானிகளின்
பாத்திரத்தை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
இனி விஞ்ஞானிகளே மானுடத்தின் அறிவுத் தேடலுக்கான
ஒளிவிளக்கை ஏந்திக் கொண்டு செல்வார்கள்"
என்று மேற்கூறிய நூலில் ஹாக்கிங் குறிப்பிடுகிறார்.

மே 2011இல் லண்டனில் நடைபெற்ற கூகுள் ஜெட்ஜிஸ்ட்
என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று 40 நிமிடம் உரையாற்றிய
ஸ்டீபன் ஹாக்கிங் இதே கருத்தை மீண்டும்
வலியுறுத்தினார். ஆக நம் சமகாலத்தின் நிலைமை
இதுதான். கடவுள் இருக்கிறாரா என்ற புராதனமான
கேள்விக்குப் பதிலளிப்பது முதல் வேற்று கிரகங்களில்
உயிர்கள் உள்ளனவா என்ற கேள்வி வரை அனைத்துக்கும்
விடையளிக்கும் அருகதை உடைய துறையாக
அறிவியல் இன்று தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியில் அறிவியலின் தத்துவம் பற்றிப்
பார்ப்போம். அறிவியலுக்கென்று ஒரு தத்துவம் உண்டு.
(Science has a philosophy). தத்துவம் என்பது பொதுவானதும்
அடிப்படையானதுமான விதிகளை அறிதல் என்று முன்னரே
பார்த்தோம். அதன்படி, அறிவியலின் பொது விதிகளை
அறிதலே அறிவியலின் தத்துவம் (philosophy of science) ஆகும்.

அறிவியல் எவ்வாறு இயங்குகிறது, அது அறிவை எப்படிப்
பெறுகிறது, அதற்காக என்னென்ன வழிகளைக்
கையாள்கிறது, அவை சரியானவைதானா, பல்வேறு
கோட்பாடுகளில் இருந்து சரியான கோட்பாட்டை
எப்படி அடையாளம் காண்பது, அறிவியல்
உண்மைகளை எவ்வாறு நிரூபிப்பது  என்றெல்லாம்
விசாரணை செய்து சரி தவறுகளைக் கண்டறிவதே
அறிவியலின் தத்துவம் செய்யும் பணிகள் ஆகும்.

பரிசோதனை அறிவியலின் தொடக்கம் கலிலியோ!
------------------------------------------------------------------------------------------
அறிவியலின் தத்துவஞானிகளில்   முதலாமவராக
இத்தாலியின் கலிலியோவை (Galileo Galilei 1564-1642)
கூறலாம். அவர்தான் பரிசோதனை அறிவியலை
(experimental science) முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்.
அரிஸ்ட்டாட்டில் காலத்தில் பரிசோதனை என்பதே
கிடையாது.ஓர் அறிஞர் சொன்னதை பரிசோதித்துப்
பார்ப்பதே பஞ்சமா பாதகமாகக் கருதப்பட்ட
காலம் அரிஸ்ட்டாட்டிலின் காலம்.

ஆண்களை விடப் பெண்களுக்கு பற்கள் குறைவு
என்று அரிஸ்டாட்டில் .கூறியிருந்தார். கலிலியோ
சிறுவனாக இருந்தபோது பள்ளி ஆசிரியர் அப்படித்தான்
கற்பித்தார். வீட்டுக்குச் சென்ற கலிலியோ தன்
தாயின் பற்களை எண்ணிப் பார்த்தார். 32 பற்கள்
இருப்பதைக் கண்டார். மேலும் வீட்டில் உள்ள பெண்
உறவினர்களின் பற்களை எண்ணிப் பார்த்து
அனைவருக்கும் 32 பற்கள் இருக்கக் கண்டு
அரிஸ்டாட்டில் கூறியது தவறு என்று உணர்ந்தார் கலிலியோ.

மறுநாள் பள்ளிக்குச் சென்றதும்  பெண்களுக்கும்
32 பற்கள் இருப்பதை தான் எண்ணிப்
பார்த்தது அறிந்ததாக  ஆசிரியரிடம் .கூறினார்.
ஆசிரியர் கோபமடைந்தார். அரிஸ்ட்டாட்டில் சொன்னது
சரிதானா என்று பரிசோதித்துப் பார்க்க நீ யாரடா
என்று ஆசிரியர் கலிலியோவைத் திட்டினார். ஒரு கருத்து
சரிதானா என்று பரிசோதித்துப் பார்ப்பதே அன்றைய
சமூகத்தில் ஏற்கப்படாத ஒன்றாக இருந்து வந்தது.

இந்த நிலையைத் தலைகீழாக மாற்றியவர் கலிலியோ.
பரிசோதித்துப் பார்த்து நிரூபிக்கப் படாத எந்தவொரு
கருத்துக்கும் அறிவியலில் இடமில்லை என்று
திட்டவட்டமாக அறிவித்தார் கலிலியோ. அன்றைய
அறிவியல் உலகின் நடைமுறையாக இருந்த, ஒரு
கருத்தை புறநிலையில் சரிபார்க்காமல் அகநிலையாக
அப்படியே ஏற்றுக் கொள்ளும் வழக்கத்தை  (subjective
acceptance without objective verification) ஒழித்துக் கட்டியவர்
கலிலியோ.அறிவியல் உலகில் உண்மையைக்
கண்டறியும் கொள்கையைப் புரட்சிகரமாக
மாற்றியமைத்து, ஒரு மாபெரும் வழி விலகலை
(paradigm shift) தொடங்கி வைத்தவர் கலிலியோ.
இதுதான் ஒரு அறிவியல் தத்துவஞானியின்
(philosopher of science) பணி ஆகும்.

பிரான்சிஸ் பேக்கனும் தொகுமுறைத் தர்க்கமும்:
---------------------------------------------------------------------------------------
கலிலியோவின் காலம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்
காலம் ஆகும் (period of renaissance). கலிலியோவின்
சமகாலத்தவரான இங்கிலாந்தின் பிரான்சிஸ்
பேக்கன் (Francis Bacon 1561-1626) குறிப்பிடத் தக்கவொரு
அறிவியல் தத்துவஞானி ஆவார். அறிவியலில்
புதிய முறைமைகளை (methodology) புகுத்தியவர் இவர்.
விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து பணியாற்றி,
தேவையான தரவுகளைத் தேடிக் கொணர்ந்து,
அவ்வாறு கிடைத்த தரவுகளின் குவியலில் இருந்து
உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று
முன்மொழிந்தவர் இவர்.

உண்மையைக் கண்டறிதல் பின்வரும் முறைமையில்
அமைய வேண்டும் என்று முன்மொழிந்தவர் பேக்கன்.
பரிசோதனை ...... கூர்நோக்கு..... அனுமானம்
(Experiment......Observation.....Inference)

இன்று வேதியியல் ஆய்வுக் கூடத்தில் மாணவர்கள்
மேற்கொள்ளும் பரிசோதனை அப்படியே மேற்கூறியவாறு
அமைந்திருப்பதை அறிவியல் மாணவர்கள்
அறிவார்கள்.

தொகுமுறைத் தர்க்கம் (inductive logic) என்பதை
உண்மை கண்டறியும் முறையாகப் பரிந்துரைத்தார்
பேக்கன். ஒரு சிறுவன் முதன் முதலில் ஒரு காக்கையைப்
பார்க்கிறான். அது கறுப்பாக இருக்கிறது. மறுநாள்
வேறொரு காக்கையைப் பார்க்கிறான். அதுவும் கறுப்பாக
இருப்பதைக் காண்கிறான். இவ்வாறு சில நாட்கள்
சில காக்கைகளைப் பார்த்த பிறகு, அவை அனைத்துமே
கறுப்பாக இருப்பதைக் கண்ட  பிறகு,காக்கைகள்
அனைத்தும் கறுப்பு என்று முடிவுக்கு வருகிறான்.
இதுதான் தொகுமுறைத் தர்க்கம் ஆகும். குறிப்பிட்ட
நிகழ்வுகளை ஒவ்வொன்றாகத் தொகுத்துக் கொண்டே
வந்து, அவற்றில் இருந்து ஒரு பொதுவான முடிவுக்கு வருவது
தொகுமுறைத் தர்க்கம் (inductive logic) ஆகும். அதாவது
குறிப்பானதில் இருந்து பொதுவான முடிவுக்கு
(from particular to general) வந்து சேர்வதாகும்.

தெ கார்த்தேவும் பகுமுறைத் தர்க்கமும்:
-------------------------------------------------------------------------
பிரான்சு நாட்டின் கணித அறிஞர் ரானே தே கார்த்தே
(Rene Descartes 1596-1650). கணித மாணவர்கள் அனைவரும்
அறிந்த கார்ட்டீசியன் அச்சு முறையை (Cartesian coordinate system)
உருவாக்கியவர் இவரே. இவர் கணித அறிஞர் மட்டுமின்றி
அறிவியல் தத்துவஞானியும் ஆவார். அனைத்தையும்
சந்தேகிக்க வேண்டும் என்று கூறிய காரல் மார்க்சுக்கு
(Karl Marx 1818-1883) முன்னரே அனைத்தையும் தீவிரமாகச்
சந்தேகித்தவர் இவர்.

அறிவியலில் உண்மையைக் கண்டறியும் வழியாக
இவர் தர்க்கம் சார்ந்த அறிவை (reason) பரிந்துரைத்தார். எளிமையானதில் இருந்து சிக்கலானதுக்குச் செல்லுதல்
(from simple to complex) என்பது இவரின் வழிகாட்டல்.
இவ்வாறு செல்கையில் கணிதம் கூறுகிற, சிறியதில் இருந்து
பெரியதுக்கு இட்டுச் செல்லும் கணித இட்டுச்செல்லல்
(mathematical induction) முறைகளைப் பின்பற்ற வேண்டும்
என்று விளக்கினார்.

மிகப்பெரிய ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டுமெனில்,
அதை சிறிது சிறிதாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தார் தே கார்த்தே. இது ஒரு வகையான
குறைத்தல்வாதம் (reductionism) ஆகும்.

அறிவியலில் உண்மையைக் கண்டறியும் வழியாக,
பிரான்சிஸ் பேக்கன் தொகுமுறைத் தர்க்கத்தை
(inductive logic) முன்மொழிந்தார். அதற்கு மாறாக தே கார்த்தே
பகுமுறைத் தர்க்கம் (deductive logic) என்பதை முன்மொழிந்தார்.

பொதுவான ஒரு கருத்தில் இருந்து, குறிப்பான
ஒரு முடிவுக்குச் செல்வது (general to particular) பகுமுறைத்
தர்க்கம் ஆகும்.

அறுபது வயதானவர்கள் பேரன் பேத்தி எடுத்திருப்பார்கள்.
ராமசாமிக்கு 60 வயது.
எனவே அவர் பேரன் பேத்தி எடுத்திருப்பார்.
இவ்வாறு முடிவு  செய்வது பகுமுறைத் தர்க்கம் ஆகும்.

பேக்கன் கூறிய தொகுமுறைத் தர்க்கம், தே கார்த்தே
கூறிய பகுமுறைத் தர்க்கம் ஆகிய இரண்டுமே
தேவைக்கு ஏற்றவாறும் இடத்திற்கு ஏற்றவாறும்
அறிவியலுக்குப் பயன்பட்டன. அவை இரண்டும்
ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொண்டன
(both are complimentary and not contradictory).

காரல் பாப்பரும் எதிர்மறை நிரூபணமும்!
--------------------------------------------------------------------------
மேற்கூறிய மூவரும் மறுமலர்ச்சிக் காலம் தொட்டு
இருபதாம் நூற்றாண்டு வரையிலான காலம் வரை
அறிவியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி
வந்தனர். இருபதாம் நூற்றாண்டில் காரல் பாப்பர்
(Karl Popper 1902-1994) என்னும் அறிவியல் தத்துவஞானி
வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல
அறிவியல் உலகில் புகுந்தார். அறிவியல் தத்துவத்தில்
பெரும் புரட்சிகர மாற்றங்களை விளைவித்தார்.

உண்மையைக் கண்டறியும் வழியாக பிரான்சிஸ் பேக்கன் முன்மொழிந்த தொகுமுறைத் தர்க்கத்தை (inductive logic)
முற்றிலுமாக நிராகரித்தார் பாப்பர். புதிய முன்மொழிவுகளை
அறிவியலுக்கு அளித்தார். அறிவியல் உலகம் அவரின்
முறைகளை (methods) ஏற்றுக் கொண்டது. அறிவியலின் தத்துவஞானிகளில் தலைசிறந்தவராக பாப்பர்
போற்றப் படுகிறார்        
          
நிறைய நூல்களை இவர் எழுதி உள்ளார். அவற்றுள்
அ) அறிவியல் கண்டுபிடிப்பின் தர்க்கம்
(The logic of scientific discovery)
ஆ) கருதுகோள்களும் மறுப்புகளும்
(Conjectures and Refutations)
இ) பிரச்சினைகளைத் தீர்ப்பதே வாழ்க்கை
(All life is problem solving)
ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

ஆஸ்திரிய நாட்டினரான சிக்மண்ட் பிராய்ட்
(Sigmund Freud 1856-1939) உளவியலின் தந்தை எனப்
போற்றப் படுபவர். இதே நாட்டைச் சேர்ந்த
ஆல்பிரட் அட்லரும் (Alfred Adler 1870-1937)
பிறிதொரு உளவியல் மேதை. இவ்விருவரின்
உளவியல் கோட்பாடுகள் அறிவியலற்றவை
(unscientific) என்று கருதினார் பாப்பர். காரணம்
அக்கோட்பாடுகள் தாம் தவறானவை என்று நிரூபிப்பதற்கு
எந்த வாய்ப்பையும் வழங்காதவை.

பாப்பரைப் பொறுத்தமட்டில் ஒரு சரியான அறிவியல்
கோட்பாட்டின் இலக்கணம் இதுதான்.
ஒரு சரியான அறிவியல் கோட்பாடானது, தன்னைத்
தவறானது என்று நிரூபிப்பதற்கு இடமளிக்க வேண்டும்.
அவ்வாறு இடமளிக்கும் கோட்பாடே சரியானது.
இதன் பொருள் அக்கோட்பாடு தவறானது என்று
நிரூபிக்கப் படவேண்டும் என்பதல்ல. மாறாக
தவறானது என்று நிரூபிக்கும் வாய்ப்பை வழங்க
வேண்டும்.

இந்த இலக்கணப்படி ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல்
கோட்பாடு சரியானது என்றார் பாப்பர். கனமான பொருள்
தான் இருக்கும் இடத்தில் வெளியை வளைத்து விடும்
என்றார் ஐன்ஸ்டின். எட்டிங்டன் குழுவினர் ஒரு சூரிய
கிரகணத்தின்போது நடத்திய பரிசோதனைகளில்
வெளி வளைகிறது என்று நிரூபிக்கப் பட்டது. இவ்வாறு
சார்பியல் கோட்பாடானது தன்னைத் தவறானது
என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பை .வழங்கியது.
அத்தகைய கோட்பாடே சரியான அறிவியல் கோட்பாடாகும்
என்றார் பாப்பர்.

சமகால அறிவியல் உலகம் பாப்பரின் இக்கோட்பாட்டை
ஏற்றுக் கொண்டுள்ளது. ஆக, எந்தவொரு புதிய அறிவியல்
கோட்பாட்டை எவர் முன்மொழிந்தாலும், அக்கோட்பாட்டைத்
தவறானது என்று எந்தெந்தச் சூழல்களில் நிரூபிக்க
இயலும் என்பதையும் சேர்த்து முன்மொழிய வேண்டும்.
இதுதான் இன்றைய அறிவியல் உலகின் விதி. இந்த
நிலையை ஏற்படுத்தியவர் பாப்பர்.

பிரான்சிஸ் பேக்கன் முதல் காரல் பாப்பர் வரையிலான அறிவியலின் தத்துவஞானிகள் தொடர்ந்து அறிவியலின்
வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச்
சென்றுள்ளார்கள். இதன் விளைவாக அறிவியல்
வளர்ந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து வளரும்!
******************************************************************* 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக