திங்கள், 11 நவம்பர், 2019

பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சினை
வர்க்கப் போராட்டத்தின் கருப்பொருள் அல்ல!
கருத்துமுதல்வாதிகளின் பிரச்சினையை
தன் தோளில் சுமப்பவன் பொருள்முதல்வாதி அல்ல!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
1) அயோத்திப் பிரச்சினை முடிவுக்கு வராமல்
தொடர்ந்து இழுத்தடிக்கப் பட்டு நீண்டு கொண்டே
போவதில் பாட்டாளி வர்க்க நலன் என்ன உள்ளது?
ஒன்றும் இல்லை என்பதுதானே உண்மை!

2) தீர்ப்பு வருவதற்கு முன்னரே, உச்சநீதிமன்றத்
தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்று மிகத் தெளிவாக
உபி முஸ்லீம்கள் பலமுறை பொதுவெளியில்
கூறி உள்ளனர். அதைத் தற்போது கடைப்பிடித்து
வருகின்றனர்.

3) வழக்குத் தொடுத்த சன்னி வக்ப் வாரியமும்
இஸ்லாமியர்களின் பிரதிநிதிகளான முஸ்லீம் தனிநபர்
சட்ட வாரியமும்  (AIMPLB) தீர்ப்பை மதிப்பதாகவும்
கூறி உள்ளனர். வழக்கின் பிரதிவாதியான சன்னி வக்ப்
வாரியம், மேல்முறையீடு (Revision, Curative petition) செய்யப்
போவதில்லை என்று தெளிவாக அறிவித்துள்ள நிலையில்,
மற்றவர்கள் அதில் தலையிட என்ன தேவை உள்ளது?

4) சன்னி வக்ப் வாரியத்தை மீறி, மற்றவர்களால்
மேல்முறையீடு செய்ய இயலுமா?

5) 1990ல் அயோத்தியில், உபியில் இருந்த நிலைமை வேறு.
இன்று 2019ல் இருக்கிற நிலைமை வேறு.  நிலைமைகள்
தாறுமாறாக மாறி விட்டன. உபி முஸ்லிம்கள் 1990களில்
பாபர் மசூதிக்கு கொடுத்த முக்கியத்துவதை இன்று
கொடுக்கத் தயாராக இல்லை. படித்து முன்னேற
வேண்டும் என்பதுதான் இன்றைய சராசரி உபி
முஸ்லீம் இளைஞர்களின் எண்ணமாக உள்ளதே
தவிர, மசூதி கோவில் என்று நிலப்பிரபுத்துவச்
சிந்தனையில் தங்கள் வாழ்வை விரையம் செய்ய
அவர்கள் தயாராக இல்லை.

6) உபி முஸ்லிம்கள் தீர்ப்பை ஏற்க மறுத்து தெருவுக்கு
வந்து போராடினால், நாம் அவர்களை ஆதரிக்கலாம்;
ஆதரவுப் போராட்டங்களை தமிழ்நாட்டில் நடத்தலாம்.
அனால் அப்படி எதுவும் இல்லாதபோது, உபி முஸ்லிம்களின்
மனநிலைக்கு எதிராக,, முடிந்து போன இந்த
விஷயத்தை நாம் கிண்டிக் கிளற இயலுமா? அது தேவையா?

7) உபியில் உள்ள மாநிலக் கட்சிகளின் தலைவர்கள்
அகிலேஷ் யாதவ்வும் மாயாவதியும் தீர்ப்பை
முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்து
விட்ட நிலையில் நாம் அதை ஏற்காமல் இருக்க
முடியுமா? மேலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி
சோனியா தலைமையில் கூடி தீர்ப்பை வரவேற்று
அறிக்கை கொடுத்துள்ளனரே!

8) பகுஜன் கட்சி, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் ஆகிய
கட்சிகள் முஸ்லீம் வாக்கு வங்கியை மிகப்
பெரிதும் சார்ந்திருக்கக் கூடிய கட்சிகள். அக்கட்சிகளே
முஸ்லிம்களின் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டு
தீர்ப்பை வரவேற்று ஏற்றுக் கொண்ட நிலையில்
மற்றவர்கள் இதில் என்ன செய்ய இயலும்?.

9) அச்சத்தின் காரணமாகவே அயோத்தி முஸ்லிம்கள்
தீர்ப்பை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர்
என்று கருதுவது முற்றிலும் அகநிலைவாதம் ஆகும்.
களநிலவரம் அப்படி இல்லை. புறநிலை ஆய்வோ
மதிப்பீடோ  (objective assessment) மேற்கொள்ளாமல்,
உபி முஸ்லிம்கள் பயந்தாங்கொள்ளிகள் என்று
முடிவுக்கு வருவது சரியல்ல.

10) எல்லாம் மாறும் என்றார் மார்க்ஸ். அப்படி இருக்க
அயோத்தி முஸ்லிம்கள் மட்டும் 1990ஆம் ஆண்டிலேயே
மாற்றம் அடையாமல் தேங்கிய குட்டையாகவே
இருக்கிறார்கள் என்று கருதுவது உண்மை நிலையைப்
பிரதிபலிக்காது.

11) இந்து முஸ்லீம் இரு தரப்புமே கூடிய விரைவில்
ஒரு வலுவான நல்லிணக்கத்துக்கு வர வேண்டும்
என்று கடுமையாக நிர்ப்பந்தம் செய்வதே
மார்க்சியர்களின் வேலையாக இருக்க .முடியும்.
அதற்கு மாறாக, ஐயோ இருதரப்பும் சண்டை
போட்டுக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார்களே,
கலவரம் எதுவும் வெடிக்கவில்லையே என்று பதறுவது  
மார்க்சியர்களின் வேலை அல்ல.

12) அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு
என்கிற விஷயம் வர்க்கப் போராட்டத்தின்
கருப்பொருள் அல்ல. அது கேவலம் மதம் சார்ந்த
விஷயம். பாபர் மசூதியா ராமர்கோவிலா என்று
தீர்மானிப்பதா வர்க்கப் போராட்டம்?

13) இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு
வர்க்கப் போராட்டத்தைக் கட்டமைக்க முடியுமா?
நிச்சயம் முடியாது.இந்த விஷயம் மீண்டும் தேசிய
அளவில் விவாதமாக மாறும் என்றால், தேசிய அளவில்
மதவாதிகள் போராட்டங்களைக் கட்டமைத்தால்,
அதில் மார்க்சிய நிலைபாட்டைச் செயல்படுத்த
முடியுமா?

14) இந்த விஷயத்தில்,  இருதரப்பு மதவாதிகளும்,
மத பீடங்களின் தலைவர்களுமே தீர்மானிக்கிற
சக்தியாக இருப்பார்கள். மதவாதிகளுக்கு  
வால் பிடித்துக் கொண்டு திரிவதைத் தவிர
மார்க்சிஸ்டுகளால் வேறு எதுவும் செய்ய இயலாது.

15) எனவே மீண்டும் அடித்துக் கூறுகிறேன்.
பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சினை வர்க்கப்
போராட்டத்தின் கருப்பொருள் அல்ல. இதில்
பாட்டாளி வர்க்க நலன் எதுவும் இல்லை.
இதில் வர்க்கப் போராட்டத்துக்கு இடமில்லை.
 
16) இந்தியாவில் மதம் சார்ந்த வழக்குகள் நூற்றுக்
கணக்கில் உள்ளன. அவற்றுள் சில நூறு ஆண்டு
காலமாக நீடித்து வருபவை. உச்சநீதிமன்றம்
தீர்ப்பளித்த பிறகும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு 
முடிவுறாமல் இருப்பவை.

17) பிரசித்தி பெற்ற ஒரு உதாரணம் சொல்கிறேன்.
நமக்கு நன்கு பரிச்சயமான, நம் அண்டை மாநிலமான
கேரளத்தில் நடைபெற்று வரும் பிரச்சினை இது.
இது கிறிஸ்துவ மதம் சார்ந்தது. நூறாண்டு காலமாக
நீடிப்பது.

18) கேரளத்தில் மலங்கரா தேவாலயம் (Malankara Church)
உள்ளது. இது எங்களுக்குத்தான் சொந்தம் என்று
இரு பிரிவினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
பழமைவாதப் பிரிவு (Orthodox group), ஜாக்கோபியன்
பிரிவு (Jacobite group) ஆகிய இரு பிரிவினரும்
உச்சநீதிமன்றம் வரை சென்றனர்.

19) பழமைவாதப் பிரிவுக்கே சொந்தம் என்று
உச்சநீதிமன்றம் மூன்று முறை தீர்ப்பளித்து விட்டது.
இன்னும் இரு பிரிவினரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.

20) இந்த இரு பிரிவில் மார்க்சியர்கள் யாரை ஆதரிக்க
வேண்டும்? சொல்லுங்கள் தோழர்களே, உங்கள்
நிலைபாட்டைச் சொல்லுங்கள்.

21) எத்தரப்பையும் ஒரு மார்க்சியவாதி ஆதரிக்க
முடியாது. இரு பிரிவினரையும் ஒரு இணக்கப்பாட்டுக்கு
வாருங்கள் என்று மட்டும்தான் சொல்ல முடியும்.

22) இந்த மலங்கரா தேவாலயப் பூசலில் தலையிட்டு 
ஏதேனும் ஒரு தரப்பை ஆதரிப்பவன் கருத்துமுதல்வாதியே 
தவிர பொருள்முதல்வாதி ஆக மாட்டான்.

23) காஞ்சிபுரம் கோவில் யானைக்கு வடைகள் நாமமா
தென்கலை நாமமா? இதுவும் கருத்துமுதல்வாதிக்கு
 மட்டுமே அக்கறை உள்ள விஷயம். இதில்
தலையிடுபவன் மார்க்சியவாதி அல்ல.

24) இது போலதான் பாபர் மசூதி-ராமர் கோவில்
பிரச்சினையும். இதில் தலையிடுபவன் கருத்துமுதல்வாதியே
தவிர பொருள்முதல்வாதி ஆக மாட்டான்.

25) எனவே மார்க்சியர்களே,
கருத்துமுதல்வாதத்தையும் நிலப்பிரபுத்துவப்
பிற்போக்குச் சிந்தனையையும் விட்டொழியுங்கள்.
பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சசினையை
இன்னும் உங்கள் தோளில் தூக்கிச் சுமக்காதீர்கள்.
அப்படிச் சுமப்பது கடைந்தெடுத்த பிற்போக்குத்
தனம் ஆகும்.
------------------------------------------------------------------------------- 


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக