சனி, 23 நவம்பர், 2019

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்
இட ஒதுக்கீட்டுக்குக் கொள்ளி வைத்தது யார்?
ALL INDIA QUOTAவில் OBCக்கு 2 சத ஒதுக்கீடு வேண்டும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------  
மருத்துவ முதுநிலைப் படிப்புக்குரிய (எம்.டி, எம்.எஸ்)
நீட் முதுநிலைத் தேர்வு (NEET PG 2020) விண்ணப்பங்களை 
தேசியத் தேர்வு வாரியம் பெற்று வருகிறது. ஜனவரி 5 அன்று
தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள்
ஜனவரி 31 அன்று வெளியாகும் என்றும் தேசியத் தேர்வு
வாரியம் (NBE National Board of Examinations) அறிவித்து உள்ளது.

இந்த முதுநிலை மாணவர் சேர்க்கையில், அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு (All India Quota) உரிய இடங்களில், இதர
பிற்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சத இட ஒதுக்கீடு
வழங்கப் படவில்லை என்று திடீரெனக் கண்டு பிடித்த சிலர்
கூச்சலிட்டு வருகின்றனர்.

இப்படி திடீர்க் கூச்சலிடுவோர் எவரும் இட ஒதுக்கீட்டின்
ஆதரவாளர்கள் அல்லர் என்றும் இவர்கள் பிற்பட்ட
வகுப்பினர் மீதான மெய்யான கரிசனமோ அக்கறையோ
இல்லாத வெறும் போலிகள் என்றும் நியூட்டன் அறிவியல்
மன்றம் அடித்துக் கூறுகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் (All India Quota)
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இன்று நேற்றல்ல,
கடந்த 13 ஆண்டுகளாகவே இட ஒதுக்கீடு இல்லை.
இது 14ஆவது ஆண்டு. கடந்த 13 ஆண்டுகளாக
ரிப் வான் விங்கிளாக (Rip Van Winkle) தூங்கிக் கொண்டிருந்த
இந்த மூடர்கள் இப்போது தீடீரென போதை கலைந்து
எழுந்து OBCக்கு ரிசர்வேஷன் இல்லை என்று வாய்
குளறுகிறார்கள்.

யாம் மீண்டும் கூறுகிறோம்! 2007ஆம் ஆண்டு முதலாகவே
அகில இந்திய ஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் (All India Quota)
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சத இட ஒதுக்கீடு
வழங்கப் படுவதில்லை.  

அப்படியானால் பிற்பட்ட வகுப்பினருக்கான இந்த
27 சத இட ஒதுக்கீட்டுக்குக் கொள்ளி வைத்தது யார்?
வேறு யாருமல்ல, டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள்தான்.

டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த ஐக்கிய
முற்போக்கு கூட்டணி-1ன் (UPA-1) ஆட்சிக் காலத்தில்தான்
மருத்துவப் படிப்பில் இளநிலை முதுநிலை (UG and PG,
அதாவது MBBS மற்றும் MD/MS) இரண்டிலும் உள்ள
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும்
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27 சத இட
ஒதுக்கீடு மறுக்கப் பட்டது. அதே நேரத்தில் SC, ST
வகுப்பினருக்கு உரிய 15 சதம் மற்றும் 7.5சதம்
தடையின்றி வழங்கப் பட்டது. இது வரவேற்கத் தக்கது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய (All India Quota)  
இடங்கள் என்றால் என்ன என்று தெளிவாகத் தெரிந்து
கொள்ளாமல் இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள
முடியாது.

இந்தியாவில் 29 மாநிலங்கள் (370ஆவது பிரிவு ரத்துக்கு
முன்பு) இருந்தன. இவற்றில் ஜம்மு காஷ்மீர், ஆந்திரா,
தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் நீங்கலாக,
மீதியுள்ள 26 மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
இடங்களை வழங்குகின்றன. தங்கள் மாநிலங்களில்
உள்ள மொத்த மருத்துவ இடங்களில் MBBS, BDS
படிப்பில் 15 சதம் இடங்களை மத்தியத் தொகுப்புக்கு
வழங்குகின்றன. முதுநிலைப் படிப்பில் (MD,MS)
50 சதம் இடங்களை வழங்குகின்றன.   

இவ்வாறு 26 மாநிலங்கள் சேர்ந்து மத்தியத் தொகுப்புக்கு
வழங்கும் இடங்களே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்
ஆகும். இந்த இடங்களில் SC, ST வகுப்பினருக்கு இட
ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்
ஓர வஞ்சனையாக பிற்பட்ட வகுப்பினருக்கு மட்டும்
இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.

ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும்
வைக்கும் இந்தக் கயமை டாக்டர் மன்மோகன் சிங்
காலத்தில் தொடங்கியது. அவரின் ஐமுகூ-2 காலத்திலும்
தொடர்ந்தது. பின்னர் மோடி-1 மற்றும் மோடி-2  ஆட்சிக்
காலத்திலும் தொடர்ந்து  நீடித்து வருகிறது.

உங்களுக்குத் தெரியாத இன்னொரு முக்கியமான செய்தி
ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள். மருத்துவப் படிப்பில்
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற்பட்டோரின்
இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டியபோது, மருத்துவத்
துறைக்கு அமைச்சராக இருந்தவர் யார் தெரியுமா?

மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி
ராமதாஸ் அவர்கள்தான். அவர்தான் அப்போது (2004-2009)
Health Minister! தான் அமைச்சராக இருந்தபோது
ரிப் வான் விங்கிளாக இருந்து விட்டு, இன்று புரட்சிக்
குரல் கொடுக்கிறார் அன்புமணி!

டாக்டர் மன்மோகனின் அமைச்சரவையில் (2004-2009)
சமூகநீதிக் காவலர் லல்லு பிரசாத் யாதவ் இருந்தார்.
அவர் ரயில்வே அமைச்சர்.

திமுகவில் இருந்து ஏகப்பட்ட பேர் அப்போது
அமைச்சர்களாக இருந்தனர். இன்று நாடாளுமன்றத்தில்
போலி வேஷம் போடும் டி. ஆர் பாலு, தயாநிதி மாறன்
ஆ ராசா ஆகியோர் காபினெட் அமைச்சர்களாக
இருந்தனர். பழனி மாணிக்கம், ராதிகா செல்வி
என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவருமே
பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்தான். இருந்தும்
பிற்பட்டோரின் ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்யவில்லை.

அடுத்து ஐமுகூ-2 ஆட்சிக்காலம். அதாவது 2009-2014.
இந்த ஆட்சி முழுவதும் பழைய அவலம் தொடர்ந்து
நீடித்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 முண்டங்களில்
எந்த முண்டமும் குரல் கொடுக்கவில்லை.
"பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்"
(Parliament is a pig sty) என்று லெனின் எவ்வளவு
தீர்க்க தரிசனத்துடன் சொல்லி இருக்கிறார்!

மோடியின் 2014-2019 ஆட்சிக் காலத்தில், திமுக எம்பிக்கள்
திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் ஓரினச் சேர்க்கைக்கு
ஆதரவாகவும் திருநங்கைகளுக்கு ஆதரவாகவும்
தங்களின் ஆற்றல் முழுவதையும் செலவிட்டனர். இது
வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் உயிராதாரமான
பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து அவர்கள்
கவலை கொள்ளவில்லை.

நன்றறி வாரில் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்.

2008ல் மருத்துவச் சேர்க்கையில் பிற்பட்டோருக்கு
ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன்வைத்து
ஒரு வாயில் கூட்டத்தையும் பெருந்திரள்
ஆர்ப்பாட்டத்தையும் எங்கள் அலுவலகத்தில்
நடத்தினேன். அப்போது நான் எங்கள் தொழிற்சங்கத்தின்
மாவட்டச் செயலாளராக இருந்தேன். ஸ்டான்லி
மருத்துவ மனையில் இருந்து ஒரு மருத்துவரை
அழைத்து வந்து கூட்டத்தில் பேச வைத்தேன்.

என்றாலும் தொழிலாளர்கள் மத்தியில் அக்கோரிக்கை
வரவேற்பைப் பெறவில்லை. நீதிமன்றத்தில் வழக்குப்
போடலாமே என்றார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு
பொதுஜனம். அதற்கு நான் வாய்க்கரிசிக்கு
எங்கே போவேன்?

மாதம் ரூ 1 லட்சம் சம்பளமும் பல்வேறு படிகளாக
மேலும் 2 லட்சமும் இலவச விமானப் பயணமும்
இன்ன பிற வசதிகளையும் அனுபவிக்கும் தமிழகத்து
நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சோம்பித் திரியும்போது
வசதியற்ற நான் எப்படி வழக்குப் போட  முடியும்?

2005ல் 93ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்
நிறைவேறியது. அதன்படி ஷரத்து 15ல் உட்பிரிவு 5
சேர்க்கப் பட்டது.

அதில் “Nothing in this article or in sub-clause (g) of 
clause (1) of article 19 shall prevent the State from making any 
special provision, by law, for the advancement of any socially 
and educationally backward classes of citizens or for the 
Scheduled Castes or the Scheduled Tribes in so far as such 
special provisions relate to their admission to educational 
institutions ............." என்று இருக்கிறது.   

இதன்படி, OBCக்கு உரிய 27 சத ஒதுக்கீட்டை 
நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரிலேயே  
கொண்டு வர முடியும்.நிச்சயம் முடியும் என்று 
நியூட்டன் அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.
----------------------------------------------------------------------   
பின்குறிப்பு: 
1) ரிப் வான் விங்கிள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
2) இடஒதுக்கீடு குறித்த அரசமைப்புச் சட்டத்தின் 
ஷரத்துகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
3) அரங்கின்றி வட்டாடுதல் கூடாது.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 
நூலின்றிக் கோட்டி கொளல். 
***********************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக