வெள்ளி, 29 நவம்பர், 2019

BSNL மீட்கப் படுகிறது! மீட்பர் யார்?
தொழிற்சங்கங்களை ஊழியர்கள் மதிக்காதது ஏன்?
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், NFTE, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
------------------------------------------------------------------------
VRS என்பது BSNL தொழிற்சங்கத் தலைவர்களுக்குப்
புதிதுதான். எனினும் இந்தியத் தொழிற்சங்க வரலாற்றில்
இது மிகவும் தொன்மையானது. கிணற்றுத் தவளையாக
வாழ்ந்து முடித்து விட்ட தொழிற்சங்கத் தலைவர்களாலும்
குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவோராலும் BSNL VRS 2019ஐ
எதிர்கொள்ள இயலவில்லை என்பதைப் பார்த்து வருகிறோம்.

1990களில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள IDPL என்னும்
பொதுத்துறை நிறுவனத்தில் (Indian Drugs and Pharmaceuticals Limited)
VRS திட்டம் கொண்டு வரப்பட்டது. மகத்தான தொழிற்சங்கத்
தலைவர் தோழர் குசேலர் அவர்கள் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டார். நமது VRS போன்றே அவர்களுக்கும்
குஜராத் மாடல் VRSதான்.(35 நாள், 25 நாள் என்ற கணக்கீடு).

குசேலரின் தலைமையை ஏற்று, VRS குறித்து ஊழியர்களுக்கு
வழிகாட்டுதல் வழங்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
சுமார் ஒரு மாத காலம் எனது மாலை நேரங்களை IDPL சங்க
அலுவலகத்தில் கழித்த அந்த அனுபவம் பயனுள்ளது.

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலேயே
BSNL  நலிவுறத் தொடங்கி இருந்தது. Incipient sickness என்பது
அன்றே 2010ல்தொடங்கி இருந்தது.
(Incipient sickness = ஆரம்ப நிலையிலான நலிவுறுதல்)

BSNL குறித்து ஆராய, சாம் பித்ரோடா தலைமையில்
டாக்டர் மன்மோகன் சிங் ஒரு குழுவை அமைத்தார்.
BSNLன் inflated population கண்டு அதிர்ந்து போன
சாம் பித்ரோடா, அன்று இருந்த மூன்று லட்சம்
ஊழியர்கள் என்ற எண்ணிக்கையைப் பெருமளவு
குறைக்க, VRS வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ஆனால் டாக்டர் மன்மோகன்சிங்கின் அரசு VRSக்குத்
தேவையான நிதியை BSNLக்கு வழங்க முன்வரவில்லை.
அமைச்சர் கபில் சிபலும் கண்டு கொள்ளவில்லை.

அன்று சாம் பித்ரோடா குழு என்ன அறிக்கை அளித்ததோ
அதே அறிக்கையைத்தான் இன்று ஐஐஎம் அகமதாபாத்
நிபுணர் குழுவும் அளித்துள்ளது. ஆனால் அன்று
மன்மோகன்சிங் அரசு தர மறுத்த நிதியை இன்று
மோடி அரசு  (ரூ 80,000 கோடி) தருகிறது.

2012ல் சாம் பித்ரோடா குழுவின் அறிக்கை வெளியானதுமே,
சுதாரித்துக் கொண்டு, BSNLஐ மீட்கும் முயற்சிகளை
சங்கங்கள் தொடங்கி இருக்க வேண்டும்; ஒரு தீர்வை
எட்டி இருக்க வேண்டும். ஆனால் எருமை மாட்டின் மீது
பெய்த மழையாக ஆகிப்போனது.

VRS has a negative connotation always என்ற பழமைவாத
ஐதீகத்தில் இருந்து சங்கங்களால் வெளியேற முடியவில்லை.
இதே காலக் கட்டத்தில் பல்வேறு பொதுத்துறை
நிறுவனங்களில், குறிப்பாக வங்கிகளில் VRS செயல்படுத்தப்
பட்டிருப்பதில் இருந்து சங்கங்கள் பாடம் கற்கவில்லை.
VRS குறித்த எந்தவொரு புறவய ஆய்வையும்
(objective assessment) சங்கங்கள் மேற்கொள்ளவில்லை.

முட்ட வரும் காளையை அதன் கொம்பைப் பிடித்து
அடக்க வேண்டும் என்பார் தானைத் தலைவர் ஓ பி குப்தா.
Hold the bull by its horns என்பது அவரின் பிரசித்தி பெற்ற
வாக்கியம். வருவாய் இழப்பும் லாப இழப்பும் சிறிய
அளவில் இருந்தபோதே, சாம் பித்ரோடா சுட்டிக் காட்டிய
போதே, குப்தா கூறியது போல, சூழலை நேருக்கு நேர்
எதிர்கொண்டு மீட்பு நடவடிக்கைகளை அன்றே மேற்கொண்டு
இருக்க வேண்டும். செய்யவில்லையே சங்கங்கள்!

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.

மீட்பர் யார்?
-------------------
நல்வாய்ப்பாக BSNL இன்று மீட்கப் படுகிறது.ஆனால்
மீட்பர் யார்?

மீட்பர் வேறு யாருமல்ல, அரசுதான்! மோடி அரசுதான்!
BSNLன் எந்த ஒரு தொழிற்சங்கமும் மீட்பரின் பாத்திரத்தை
வகிக்கவில்லை! இதுதான் வெட்ககரமான உண்மை!

அதிகபட்ச நாணத்துடனும் குறைந்தபட்ச நேர்மையுடனும்
BSNL தொழிற்சங்கங்கள் இந்த உண்மையை ஒப்புக்
கொள்ள வேண்டும். சங்கங்கள் என்றால் NFTE, BSNLEU
SNEA, AIBSNLEA ஆகிய பிரதான சங்கங்களே. சங்கங்கள்
ஒப்புக் கொள்ள மறுத்தாலும் BSNLல் இன்று இருக்கும்
1.6 லட்சம் பேரின் மனச்சாட்சிக்கு இந்த உண்மை தெரியும்.

BSNLஐ மீட்கும் முயற்சிகளை,  BSNLன் ஒட்டு மொத்தப்
புத்தாக்கத்தை (revival plan including VRS) சங்கங்கள்
தங்களின் சொந்த முயற்சியில் கொண்டு வரவில்லை.
மீட்பதற்கான எந்தவொரு தீர்வும் சங்கங்களிடம் இல்லை.
ஆனால் அரசு சும்மா இருக்கவில்லை. அது ஒரு தீர்வைக்
கண்டுபிடித்தது. அதை நடைமுறைப் படுத்துகிறது.
The entire revival plan including the VRS is absolutely the brain child
of the government. இதுதான் முக்கால உண்மை (universal truth).

புத்தாக்கத் திட்டம் (Revival plan)
-----------------------------------------------
அ) VRS திட்டத்தின் Ex Gratia வழங்கும் செலவு = ரூ 17,169 கோடி.
ஆ) Pensionary benefits preponed வழங்கும் செலவு = ரூ 12,768 கோடி.
இ) 4G அலைக்கற்றை BSNLக்கு = ரூ 14,115 கோடி
ஈ) 4G அலைக்கற்றை MTNLக்கு = ரூ 6295 கோடி
உ) அலைக்கற்றைக்கான GST வரி = ரூ 3674 கோடி.
ஊ) BSNL, MTNLக்கு மேலும் வழங்கும் நிதி = ரூ 15,000 கோடி.

இந்த ரூ 15,000 கோடியை உறுதிப் பத்திரங்கள் மூலமாக
(Sovereign guarantee bonds) மத்திய அரசு வழங்கும்.
மேற்கூறிய அ), ஆ), உ) ஆகிய மூன்று இனங்களுக்கும்
பட்ஜெட்டில் ரூ 33,611 கோடி நிதி ஒதுக்கப் படுகிறது.

அதாவது VRSக்கு ஆகும் செலவுக்கும் பென்சன் வழங்கும்
செலவுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் படுகிறது.
இ) மற்றும் ஈ) இனங்களுக்கு முறையே Equity infusion
மூலமும், preference shares மூலமும் மத்திய அரசு
நிதி வழங்கும்.
(பார்க்க: மக்களவையில் unstarred question எண்: 546க்கு
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் பதில்; 20 நவம்பர் 2019).

இப்படி ஒரு மீட்புத் திட்டத்தைப் பற்றி சங்கங்கள்  ஏன்
சிந்திக்கவில்லை? காரணம் இரண்டு. ஒன்று: இத்தகைய
சிந்தனை அவர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது.
அடுத்து, VRS என்றாலே அதை எதிர்க்க வேண்டும் என்ற
பழமைவாத முன்முடிவு. VRSஐ உள்ளடக்காத எந்த ஒரு
மீட்புத் திட்டமும் இந்த உலகில் கிடையாது என்ற
உண்மை அவர்கள் அறியாதது.

எனவேதான் Proactiveஆகச் செயல்பட வேண்டிய
சங்கங்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதையும்
அரசுக்கு வால் பிடித்துக் கொண்டு திரிவதையும்
அனுதினமும் கண்ணாரக் கண்டு வருகிறோம்.

புத்தாக்கத் திட்டத்தை தங்களின் சொந்த வலிமையில்
சாதித்துக் காட்டாத சங்கங்கள் அரசின் கருணை
மற்றும் நல்லெண்ணத்தில் ஊழியர்களின் தலைவிதியை
வைத்து விட்டன என்று வரலாறு பதிவு செய்கிறது.

BSNL உயிரோடு இருக்க வேண்டும் என்றும் அது வாழ
வேண்டும் என்றும் மோடி அரசு இன்று விரும்புகிறது.
ஆனால் இதே மனநிலையில் மோடி அரசு தொடர்ந்து
இருக்குமா? GOK, அதாவது God only knows! எதிர்காலத்தில்
BSNL தேவையில்லை என்று மோடி அரசோ அல்லது வேறு
அரசோ முடிவெடுத்தால், அன்று ஊழியர்களின் நிலை
என்ன? சங்கங்களிடம் பதில் உள்ளதா? இல்லை!
(God only knows means Nobody knows. கடவுள் இருக்கிறார்
என்று பொருள் அல்ல).

களையெடுப்புக்குப் பதில் தங்கக் கைகுலுக்கல்!
----------------------------------------------------------------------------
ஒருவேளை அ) BSNLஐ மூடி விடுவது என்றோ அல்லது
ஆ) ஆட்குறைப்புச் செய்து முதல் கட்டமாக 50,000 பேரை
வெளியேற்றுவது  என்றோ மோடி அரசு முடிவெடுத்து
இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அ) மூடுவது என்றால், OFFICIAL LIQUIDATOR வந்திருப்பார்.
அவர் BSNLஐ இழுத்து மூடி, எல்லோரையும் வெளியேற்றி,
இருக்கும் சொத்துக்களைக் கணக்கெடுத்து அரசிடம்
கொடுத்திருப்பார். அப்போது எல்லோரும்
Liquidator பற்றியே பேசிக் கொண்டிருப்போம். Liquidator
என்ற புதிய சொல் BSNLல் பேசுபொருள் ஆகியிருக்கும்.

ஆ) ஆட்குறைப்புச் செய்வது என்றால், அதை CRS
எனப்படும் கட்டாய ஒய்வு மூலமே செய்ய முடியும்.
இது ஒரு   மாபெரும் களையெடுப்பாக (Great purge)
இருக்கும். முதல் கட்டமாக 50,000 பேருக்கு ஆட்குறைப்பு
என்றால், எந்த 50,000 பேர்,  என்ன அளவுகோல் என்பதில்
வெட்டு குத்து நடக்கும்.

இந்த நெருக்கடியான சூழலில், நேரடி நியமனத்தில்
வேலைக்கு வந்த (Direct recruits) பொறியியல் கல்வித் தகுதி
உடையவர்களை வைத்துக்கொண்டு, Promotee officersஐ
வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவெடுக்கும். இது ஊழியர்கள்
அதிகாரிகள் மத்தியில் கடும் மனக்கசப்பை ஏற்படுத்தும்.
இந்த முடிவு பாரபட்சமானது என்று நீதிமன்றத்தில்
Promotee Officers வழக்குத் தொடர்வார்கள்.

எனினும் இத்தகைய வழக்குகளில் வழக்குத் தொடுத்தவர்களுக்கு தோல்வியே கிட்டி இருக்கிறது.
இது வரலாறு. கல்வித் தகுதியின்  அடிப்படையில்
பாரபட்சம் காட்டப்பட்டாலும், அதில் அரசமைப்புச் சட்டம்
கூறுகிற intelligible differentia உள்ளது என்றும் அது
மேற்கொள்ளப்பட்ட நோக்கத்துடன் பொருந்துகிறது
என்றும் BSNLன் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
நிரூபித்து விடுவார்கள். விவரிக்க இது இடமில்லை.
(Intelligible differentia must have a rational nexus with the object sought be
achieved and this will be easily proved by BSNL in the court of law).

அதிர்ஷ்டவசமாக இத்தகைய சண்டை, மனக்கசப்புக்கு
இடமில்லாமல் VRS என்னும் தங்கக் கைகுலுக்கல் மூலம்
சாந்தியும் சமாதானமும் நிரம்பி வழிய வீட்டுக்குச்
செல்கிறோம். ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ரூ 40,000 Basic Pay உள்ள ஒரு அதிகாரி 152 சத DAவுடன்
VRS 2019ல் செல்கிறார். அவர் Ex Gratiaவாக மட்டும்
ஓராண்டுக்கு ரூ 9 லட்சம் பெறுகிறார். இந்த அதிகாரியின்
வயது 55 என்றால், 60 வயது வரையிலான ஐந்தாண்டு
காலத்திற்கு  அவர் Ex Gratiaவாக ரூ 45 லட்சம் பெறுவார்.
அத்துடன் மாதந்தோறும் Basic Pensionஆக ரூ 50,400 பெறுவார்.
கிராச்சுட்டி commutation போன்றவை பின்னர் கிடைக்கும்.
இதில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை!

Superannuationல் போனாலும் VRSல் போனாலும்
பணிஓய்வு என்பது பணிஓய்வே. Retirement என்பதன்
பொருள் பந்தம் அறுதலே! பந்தங்கள் ஒருநாள்
அறுபடத்தான் செய்யும். அதுதான் உலக இயற்கை!

BSNL உடனான Physical bonding மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு
எதிர்வரும் 31.01.2019 அன்று அறுபடுகிறது. ஆனால்
BSNLஉடனான நமது மானசீக பந்தம் ஒருபோதும் அறுபடாது.
அது யுக யுகாந்திரங்களைக் கடந்து நிற்கும். அடுத்த
பிறவியிலும் நானும் நீங்களும் இதே BSNLல் பணிபுரிவோம்
என்ற நம்பிக்கையுடன் VRSல் செல்வோம்! BSNLஐ முத்தமிட்டு
விடை பெறுவோம்!

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே!
******************************************************

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக