திங்கள், 15 ஜூன், 2015

கிளிநொச்சி வீழ்ந்தவுடன் அனைத்துமே வீழ்ந்தன!
எனினும் போரைத் தொடர்ந்த புலிகள்!!
------------------------------------------------------------------------------------------------------
(4) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்த 
ஈழப்போரில், கிளிநொச்சியின் வீழ்ச்சியானது 
ஈழப்போரின் முடிவை அறிவித்து விட்டது என்பதே 
உண்மை. 2008 திசம்பர் 31 வரை கிளிநொச்சி விழவில்லை.
ஆனால் புத்தாண்டின் (2009) இரண்டாம் நாளே, 
கிளிநொச்சியைப் புலிகள் இலங்கைப் படைகளிடம் 
பறிகொடுத்தனர்.
**
2008 நவம்பர் இறுதியில் தொடங்கிய கிளிநொச்சிப்போர்
2009 சனவரி இரண்டாம் நாளன்று முடிவுக்கு வந்தது.
மொத்தம் 41 நாட்கள் மட்டுமே நீடித்தது இப்போர்.
புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற பிரமையை 
கிளிநொச்சியின் வீழ்ச்சி உடைத்தெறிந்தது.
**
உண்மையில் ஈழப்போரின் இறுதி இதுவே ஆகும்.
இதன் பொருள் என்னவெனில்,  இனியும் ஈழப்போரைத் 
தொடர்வதில் அர்த்தமில்லை என்பதே ஆகும். ஏனெனில்,
புலிகள் தம் வசம் இருந்த பகுதிகளில், தொண்ணூறு 
சதம் பகுதியை, கிளிநொச்சி வீழ்ந்தவுடன் இழந்து 
விட்டனர். இனி எதைக் காக்கப் போரிட வேண்டும்?
**
புலிகளிடம் எஞ்சி இருப்பது முல்லைத்தீவு மட்டுமே.
யாழ்ப்பாணம் என்றோ போயிற்று. கருணா பிரிந்ததை 
அடுத்து, கிழக்கு மாகாணத்தையும் புலிகள் இழந்தனர்.
அதிகார பூர்வத் தலைநகராக அறிவிக்கப்பட்ட 
திருகோணமலையை என்றோ இழந்தாயிற்று.
**
இழந்த எதையும் இனி மீட்க முடியாது. இருப்பதைத் தக்க 
வைப்பது என்று எடுத்துக் கொண்டால், முல்லைத் தீவு 
மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதைத் 
தக்க வைப்பதற்கே பெரும்போர் புரிய வேண்டும்.
பேரிழப்புகளைச் சந்திக்க வேண்டும். ஆயிரக்கணக்கான 
இளைஞர்களின் இன்னுயிரைப் பலி கொடுத்து, 
முல்லைத் தீவைத் தக்க வைத்தாலும், அதனால் 
விளையும் பயன் என்ன? தனிமரம் தோப்பாகாது.
அதுபோல, முல்லைத்தீவு மட்டுமே தமிழ் ஈழம் ஆகாது.
**
ஆக, தமிழ் ஈழம் பெறுவதற்கான போர் என்பது, அதன்
சகல அர்த்தத்திலும் முடிந்து போய் விட்டது. இந்தப் போர் 
இனியும் தொடருமாயின், அது ஈழத்திற்கான போர் என்று 
அழைக்கப் படுவதற்கான தகுதியை இழந்து விட்டது.
**
மறுபுறத்தில், கிளிநொச்சிப் போரின் வெற்றியானது 
சிங்களப் படைகளுக்குப் பெரும் உத்வேகத்தைக் 
கொடுத்தது. புலிகளை வெல்ல முடியும் என்று முதல் 
முதலாக ஒவ்வொரு சிங்களத் தளபதியும் சிங்களப் 
படைவீரனும் நினைக்கத் தொடங்கினர். இதுவரை கூலிக்கு 
மாரடிக்கும் படையாக இருந்த சிங்களப்படை, ஊக்கம் 
நிறைந்த, நம்பிக்கையுடன் போர் புரியும் படையாக,
தார்மிக வலிமை பொருந்திய படையாக பண்பு மாற்றம் 
அடைந்தது.
**
சர்வதேச அளவிலும் கிளிநொச்சி வீழ்ச்சியானது 
அக்கறையுள்ள அனைத்து நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
இதுவரை புலிகளை ஆதரித்து வந்த நாடுகள், நார்வே 
உட்பட, போரின் இறுதி முடிவு, சுவரில் எழுதியது போல் 
தெரிவதை உணர்ந்தார்கள். எனவே போரை முடித்துக் 
கொள்ளுமாறும் ஓர் உடன்பாட்டுக்கு வரும்படியும் 
புலிகளுக்கு  அறிவுறுத்தினர். இவ்வாறு உலகம் 
முழுவதற்குமான ஒரு கண்திறப்பு நிகழ்வாக 
( an eye opener) கிளிநொச்சி வீழ்ச்சி அமைந்தது.
**
அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மட்டுமல்ல 
உளவியல் ரீதியாகவும் கிளிநொச்சி வீழ்ச்சியானது 
தமிழ் ஈழக் கோரிக்கைக்குப் பெரும் பின்னடைவை 
ஏற்படுத்தி விட்டது. புலிகளுக்கு இதில் இருந்து மீட்சி 
இல்லை. 
**
இந்நிலையில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு 
நகர்த்தலைச் செய்கிறார். புலிகள் அமைப்பில் இருந்து 
ஒதுங்கி, சொந்த வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்து 
கொண்டிருக்கும் கே.பி எனப்படும் குமரன் பத்மனாபனை 
அழைத்துப் பேசுகிறார். அவரை மீண்டும் இயக்கத்தில் 
சேர்த்துக் கொள்கிறார்.  பெரியதொரு பொறுப்பையும் 
அவரிடம் ஒப்படைக்கிறார்.
**
இது குறித்து விவரமாகப் பின்னர் காண்போம்.
******************************************************************      

               
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக