புதன், 24 ஜூன், 2015

பிறழ்நெறி முதலாளித்துவம் என்னும்
குரோனி முதலாளித்துவமும்
அட்டைக் கத்தியைத் தூக்கிக் கொண்டு வரும் 
சிந்தனைக் குள்ளர்களும்!
------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன், தலைவர்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------
பிறழ்நெறி முதலாளித்துவம் என்ற சொல்லே 
CRONY CAPITALISM என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற
மிகச் சரியான, துல்லியமான, சொல்லாகும்.
சலுகைசார் முதலாளித்துவம், சூறையாடும்
முதலாளித்துவம், புல்லுறவு முதலாளித்துவம்
ஆகிய சொற்களை விட, பிறழ்நெறி முதலாளித்துவம்
என்ற சொல்லே , எதனினும் கூடுதலாக மூலச் சொல்லுக்கு
சரிநிகர் சமம் ஆனதாகும். மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
பிறழ்நெறி முதலாளித்துவம் என்ற சொல்லைத் தமிழ் கூறும்
நல்லுலகின் முன் வைக்கிறது.
**
எனினும், குட்டி முதலாளித்துவ மன அமைப்பைக் 
கொண்டுள்ள பல்வேறு 'மார்க்சியர்கள்' காழ்ப்பு காரணமாக 
இச்சொல்லை நிராகரிக்கலாம். அது குறித்து நாங்கள் 
ரோமம் அளவும் கூட கவலை கொள்ளப் போவதில்லை.
ஏனெனில், இது மார்க்சிய சிந்தனைப் பயிலகமே தவிர,
கலைச்சொல்லாக்க மன்றம் அன்று.
**
சரி, பிறழ்நெறி முதலாளித்துவம் என்றால் என்ன?
இது ஒரு புதிய வகை முதலாளித்துவம் என்று கூறும் 
இக்கோட்பாட்டின் தந்தையர் முன்வைக்கும் 
கருத்தாக்கத்தின்படி, பிறழ்நெறி முதலாளித்துவம் 
உற்பத்தியில் இருந்து விலகி நிற்கவில்லை. மாறாக,
உற்பத்தியில் செயலூக்கமுள்ள பங்கு வகிக்கிறது.
இன்னும் சொல்லப் போனால், உற்பத்தியில் பங்கு 
பெறுவதற்காகவே நெறி பிறழ்தலே நடக்கிறது.
** 
எனவே, உற்பத்தியில் பங்கு வகிக்கிற எந்த 
முதலாளித்துவமும் முற்றிலும் புதிய வகையிலான 
முதலாளித்துவம் ஆகாது. இது மார்க்ஸ், தமது மூலதனம் 
நூலில் வரையறுத்துள்ள முதலாளித்துவமே ஆகும்.
மார்க்சின் தீர்க்க தரிசனத்துக்கு அப்பால், வெடித்துக் 
கிளம்பி இருக்கிற, புதிய வகை முதலாளித்துவம் அன்று.
**
காங்கிரஸ் ஆட்சியின்போது, நெறி பிறழ்ந்து ஆதாயம் 
பெறும் முதலாளிகள், அடுத்து வேறொரு ஆட்சி 
வரும்போது ஆதாயம் பெற இயலாமல் போகலாம்.
இதனால், ஒரு குறிப்பிட்ட சாராரே எப்போதும் பிறழ்நெறி 
முதலாளிகளாக இருப்பார் என்று கூற இயலாது. மேலும்,
பிறழ்நெறி முதலாளித்துவம் என்று வகைப் படுத்தும்போது,
அதற்கான கறாரான வர்க்க அடிப்படை இருத்தல் வேண்டும்.
புதியவகை முதலாளித்துவம் உருவாகி இருக்கிறது எனில், 
புதியவகை முதலாளிய வர்க்கமும் உருவாகி இருக்க 
வேண்டும். ஆனால், பிறழ்நெறி முதலாளியக் கோட்பாட்டின் 
தந்தையர் எவரும் அவ்வாறு புதியவகை வர்க்கம் உருவாகி
இருப்பதாகக் கூறவில்லை; கூறத் துணியவும் இல்லை.
**
சமூகத்தின் உற்பத்தி என்பது சிக்கலான இயக்கப் போக்கைக் 
கொண்டதுதான். அதற்காக, உற்பத்தியின் இயக்கப் போக்கை 
மென்மேலும் நுண்ணிய அலகுகளாகப் பகுத்துக் கொண்டே 
போவது தேவையற்றது; இது வீண் முயற்சி மட்டுமின்றி 
பயனற்றதும் ஆகும். இப்படிப் பகுக்க ஆரம்பித்ததால், 
இன்று கிடைத்திருப்பது 'குரோனி'. நாளை 'எனிமி' 
முதலாளித்துவம் கிடைக்கலாம்; Satanic capitalism என்ற 
ஒன்று புதிதாகக் கிடைக்கலாம். கடைசியில் இது
infinityஇல்தான் போய் நிற்கும். 
**
எனினும், அண்மைக்காலமாக பிறழ்நெறி முதலாளித்துவம் 
பற்றிப் பரவலாகப் பேசப் படுகிறது. 2G அலைக்கற்றை 
முறைகேடு என்பதில் தொடங்கி, சல்மான்கான் ஜாமீன்-
ஜெயலலிதா விடுதலை வரை பிறழ்நெறி முதலாளித்
துவத்தின் வெளிப்பாடுகளே என்றெல்லாம் இக்கோட்பாட்
டாளர்கள் பேசி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் 
உள்ள கட்டணக் கழிப்பிடங்கள் சரிவரப் பராமரிக்கப் 
படாமல் இருப்பதற்கு குரோனி கேப்பிடலிசமே காரணம் 
என்ற தத்துவார்த்த ஆய்வுகளைக் கூட, நாளை நாம் 
எதிர்கொள்ள நேரிடலாம்.
**
எனவே, பிறழ்நெறி முதலாளித்துவம் என்ற கோட்பாடு 
எப்படித் தோன்றியது என்று காண்பது முக்கியம். இக் 
கோட்பாடு பின்நவீனத்துவம் பெற்றெடுத்த குழந்தையே 
ஆகும். மார்க்சியத்துக்குள் ஊடுருவி விட்ட 
பின்நவீனத்துவமே குரோனி கேப்பிடலிசத்தைப்
பெற்று எடுத்துள்ளது. மார்க்சியமும் பின்நவீனத்துவமும் 
அருகருகே இருக்க நேர்ந்துள்ள சமகாலச் சூழலில்,
ஒரு தூண்டல் விளைவு (induction effect) ஏற்பட்டு,
பின்நவீனத்துவம் மார்க்சியத்தின் மீது செல்வாக்குச் 
செலுத்தியதன் விளைவாகவே பிறழ்நெறி 
முதலாளித்துவம் என்ற புதிய கோட்பாடு தோன்றி உள்ளது.
**
மார்க்சியம் என்பது சாராம்சத்தில் ஓர் ஒருங்கிணைக்கும் 
கோட்பாடு (theory of integration).வர்க்கம் என்ற பெரும் 
பிரிவுக்குள் சாத்தியமான அனைத்தையும் மார்க்சியம் 
ஒன்றிணைக்கும்.
ஆனால், பின்நவீனத்துவம் என்பது அனைத்தையும் 
நுண் அலகுகளாகப் பிரிக்கும் ஒரு கோட்பாடு (theory of 
differentiation). முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பண்பையும் 
(property) ஒவ்வொரு வகையாகப் பிரித்து, பல்வேறு 
முதலாளித்துவங்களை உருவாக்கி மகிழ்வது 
பின்நவீனத்துவம். No doubt, an adjective qualifies the noun. But every 
adjective need not be a category.
**
ஆக மொத்தத்தில், பிறழ்நெறி முதலாளித்துவம் என்பது 
பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட 
மார்க்சியர்களால் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு கோட்பாடே.
இத்தகைய வகைமைப் படுத்தல் தேவையற்றது; மேலும் 
இது சமூகத்தின் உற்பத்தியில் எவ்வித அடிப்படை 
மாற்றத்தையும் (paradigm shift) குறிப்பதல்ல. இதுவே 
crony capitalism குறித்த கறாரானதும் துல்லியமானதுமான 
மார்க்சிய வரையறுப்பு என்பதாக மார்க்சிய சிந்தனைப் 
பயிலகம் முன்வைக்கிறது.
**
மார்க்சியம் என்பது மூல ஆசான்களின் நூல்களுக்குள் 
மட்டுமே முடங்கிக் கிடப்பது என்ற சிந்தனைக் குள்ளத்தனம் 
எங்களிடம் என்றும் இருந்ததில்லை. தேவைப் படுகிற 
போதெல்லாம் மார்க்சியம் புதுப்பிக்கப் பட வேண்டும் என்பதே 
எங்களின் நிலைப்பாடு. ஆனால், பிறழ்நெறி முதலாளித்துவம் 
என்பது அத்தகைய புதுப்பித்தல் அன்று என்பதை மார்க்சிய 
சிந்தனைப் பயிலகம் அடித்துக் கூறுகிறது.
**
குரோனி எனப்படும் பிறழ்நெறி முதலாளித்துவம் ஓசை 
எழுப்பிக் கொண்டு ஊர்வலம் வருகிறது. மூல ஆசான்களின் 
நூல்களில் சொல்லப்படாத ஒரு புதிய விடயம் 
பொதுவெளிக்கு வரும்போதெல்லாம், கூச்சலிட்டுக் 
கொண்டும்   தங்களின் அட்டைக் கத்தியைத் தூக்கிக்
கொண்டும் ஓடி வரும் சிந்தனைக் குள்ளர்களை 
எங்கே காணோம்!
******************************************************************   
   
              
  
  
      
  

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக