வெள்ளி, 5 ஜூன், 2015

உலகைப் பற்றிய அறிவியல் கண்ணோட்டமும்
மார்க்சிய வேடம் தரிக்கும் சிந்தனைக் குள்ளர்களும்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
நீளம் அகலம் உயரம் என்ற முப்பரிமாணங்களைக்
கொண்டது இவ்வுலகம் என்று எல்லோருக்கும் தெரியும்.
நீங்கள் பார்க்கிற எந்த ஒரு பொருளும் முப்பரிமாணம்
உடையதுதான். ஒரு சிகரெட் பாக்கட்டோ அல்லது ஒரு
தீப்பெட்டியோ முப்பரிமாணம் உள்ளது என்று எளிதில்
உணரலாம். உங்கள் கையில் உள்ள புத்தகம், அது
திருக்குறள் ஆனாலும் கொக்கோக சாஸ்திரம் ஆனாலும்.
அது முப்பரிமாணம் உடையதே.
**
உலகம் முப்பரிமாணம் உடையது என்பதை, அன்றாட
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொருவரும்
உணர்கிறோம், இல்லையா? இதைத் தெரிந்து கொள்ள.
படிப்போ அறிவோ தேவையில்லை அல்லவா? உலகம்
முப்பரிமாணம் உடையது என்ற பேருண்மை, ராப்ரிதேவி,
எம்.ஜி.ஆர்., ரஜனிகாந்த் ஆகியோருக்கும் தெரியும்.
இவர்கள் இதை எந்தக் கல்லூரியில்,மன்னிக்கவும், பள்ளியில்
படித்துத் தெரிந்து கொண்டார்கள்?
**
சாக்ரட்டீஸ் முதல் மார்க்ஸ்-எங்கல்ஸ் வரை,
அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை,
உலகம் முப்பரிமாணம் உடையது என்றுதான்
ஏற்றுக் கொண்டு இருந்தார்கள்.
ஒட்டு மொத்த உலகத்தின் நம்பிக்கையையும்
ஒரே நொடியில் தகர்த்தார் ஐன்ஸ்டின் 1905இல்.
அவரது சார்பியல் கோட்பாட்டில், உலகம் நான்கு
பரிமாணங்களைக் கொண்டது என்ற முற்றிலும் 
புத்தம் புதிய கருத்தை ஐன்ஸ்டின் முன்வைத்தார்.
நான்காவது பரிமாணம்  காலம் (time) என்றார்.
**
வெளி (space)யும் காலமும் தனிமுழுமை (absolute) ஆனவை 
என்பதே நியூட்டனின் இயற்பியல். ஐன்ஸ்டின் இதை 
முற்றிலும் நிராகரிக்கிறார். வெளியும் காலமும் 
ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்கிறார்.
ஐன்ஸ்டின் கூறியவை அனைத்தும் கணக்கற்ற 
பரிசோதனைகள் மூலம் கணக்கற்ற முறை நிரூபிக்கப் 
பட்டு விட்டன.
**
நல்லது. சமகால அறிவியலை தத்துவங்கள் எவ்வாறு 
பிரதிபலிக்கின்றன என்று பார்ப்போம். எவ்வளவு குறைத்து 
மதிப்பிட்டாலும், பொருள்முதல்வாதத்துக்கு, 2500 ஆண்டு 
கால வரலாறு உண்டு. இந்தியச் சூழலில் மிகவும் பரவலான 
செல்வாக்குப் பெற்றிருந்த புத்தரின் பொருள்முதல்வாதத்தைத் 
தொடக்கமாகக் கொண்டால், பொருள்முதல்வாதத்தின் 
சமீபத்திய பதிப்பு (latest version) மார்க்சியப் பொருள்முதல்வாதம்.
**
லுத்விக் பாயர்பாக் என்ற ஜெர்மானிய அறிஞரின் 
பொருள்முதல்வாதத்தை எடுத்துக் கொண்டு, அதை 
நியூட்டனின் இயற்பியலைக் கொண்டு மேம்படுத்தி,
மார்க்சியப் பொருள்முதல்வாதமாக உருவாக்கினர் 
மார்க்சும் எங்கல்சும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் 
அறிவியல் வளர்ச்சி முழுவதையும் உள்வாங்கிக் கொண்டு 
மார்க்சியப் பொருள்முதல்வாதம் தத்துவச் சிறப்புடன் 
ஒளிர்ந்தது.
**
அதன் பின்னரான 115 ஆண்டுகளின் அறிவியல் வளர்ச்சியை 
பொருள்முதல்வாதம் உள்வாங்கவில்லை. மார்க்ஸ் 
எங்கல்சுக்குப் பின், பொருள்முதல்வாதம் அநாதை ஆனது.
**
இந்த உலகைப் பற்றிப் பொ.மு.வாதம் என்ன சொல்கிறது?
உலகம் முப்பரிமாணம் உடையது என்ற பழைய பல்லவியைத் 
தான் பாடுகிறது. சார்பியல் கொள்கை நான்கு பரிமாணத்தைக் 
கூறுகிறது என்றால், எம்.கோட்பாடு (M Theory) பதினோரு 
பரிமாணங்களைக் கூறுகிறது. இழைக் கோட்பாடு (string theory)
இன்னும் அதிகமான பரிமாணங்களைக் கூறுகிறது. 
பின்னிரண்டும் வேட்பாளர் கோட்பாடுகளே (candidate theories).
**
தத்துவம் என்பது உலகை விளக்க வேண்டும் அல்லவா?
உலகை விளக்க முடியாத தத்துவத்தால் என்ன பயன் 
விளையும்? பொருள்முதல்வாதத்தால் சமகால உலகை 
விளக்க முடியவில்லை என்பதை நிரூபித்து உள்ளோம்.
**
அடுத்து என்ன? 
1) அறிவியல் வளர்ச்சியை உள்வாங்கி பொருள் முதல்வாதம் 
தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வாழலாம். இது ஒரு வாய்ப்பு.
2) அது முடியாவிட்டால், தத்துவங்கள் மரிக்கும். அவற்றின் 
இடத்தை அறிவியல் ஏற்றுக் கொண்டு விடும்.
**
அப்படியானால், கருத்து முதல்வாதத்தின் கதி என்ன?
ஆடிக்காற்றில் அம்மியே (பொருள் முதல்வாதம்) 
பறக்கும்போது, அப்பளத்தின் கதியைப் பற்றிக் 
கவலைப்பட்டு என்ன பயன்? 
***************************************************************** 
              

  
     
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக