ஞாயிறு, 14 ஜூன், 2015

பிரபாகரன் உயிரைக் காப்பாற்றும் இறுதி முயற்சி!
ஒத்துழைக்க மறுத்து பிரபாகரன் உயிர்க்கு இறுதி செய்த
துரோகிகள் நெடியவனும் காஸ்ட்ரோவும்!
----------------------------------------------------------------------------------------
(3) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
----------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது, மே 2009இல் 
தேசியத் தலைவரையும் அவரின் குடும்பத்தாரையும் 
காப்பற்ற ஒரு முயற்சியை மேற்கொண்டார் கே.பி 
எனப்படும் குமரன் பத்மநாபன்.( செல்வராசா பத்மநாபன் 
என்பவரும் இவரே). புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்முதல் 
மற்றும் சர்வதேசத் தொடர்புகள் துறையின் பொறுப்பாளராக 
இருந்தவர் கே.பி.
** 
இது குறித்து தேசியத் தலைவரின் 
மகன் சார்லஸ் ஆன்டனியுடன் பேசி திட்டத்தை இறுதி 
செய்தார் கே.பி.  தேசியத் தலைவரும் ஆன்டனியும் களத்தை 
விட்டு நீங்க மறுத்தாலும், தேசியத் தலைவரின்
குடும்பத்தாரையேனும் காப்பாற்றலாம் என்ற 
நோக்குடன் இத்திட்டத்தை உருவாக்கி இருந்தார் கே.பி.
**
ஒரு ஹெலிகாப்டரைக் கொண்டு சென்று, முள்ளி 
வாய்க்கால் களத்தில் இறக்கி, தேசியத் தலைவரையும் 
குடும்பத்தாரையும் ஏற்றிக் கொண்டு பறந்து, பாதுகாப்பான
ஓரிடத்தில் தரையிறங்குவதும், அங்கிருந்து படகுப் பயணம் 
மூலம் ஓர் ஆப்பிரிக்க நாட்டுக்குச் சென்று விடுவது 
என்பதும்தான் திட்டம். தொடர்புடைய நாடுகளின் அரசினரிடம் 
பேசி இதற்கான ஒப்புதலைப் பெற்று இருந்தார் கே.பி.
**
எனவே ஹெலிகாப்டரை இயக்குவதற்காக, புலிகளின் 
வான்சேவையின் (வான்புலிகள்) தலைவர் அச்சுதனைத்
தொடர்புகொண்டார் கே.பி.  முதலில் இசைவு தெரிவித்த 
அச்சுதன், பின்னர் கே.பி.யைத் தொடர்பே கொள்ளாமல் 
ஒதுங்கி விட்டார்.
**
எனவே, பணத்துக்காக விமானம் ஓட்டும் விமான ஓட்டிகளை 
(mercenary pilots) நாடினார் கே.பி. அதில் வெற்றியும் பெற்றார்.
இவ்வாறு, கே.பி.யின் திட்டம் வெற்றி பெறும் தருவாயில்
இருந்தபோது, வெண்ணெய் திரளும்போது தாழியை உடைத்தது 
போலச் செயல்பட்டார் நெடியவன். இதனால் திட்டம் 
தகர்ந்தது.
**
யார் இந்த நெடியவன்? பேரின்பநாயகம் சிவபரன் என்பது 
இவரின் இயற்பெயர். உலகெங்கும் சிதறிக் கிடக்கும் 
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் (Tamil Diaspora) ஈழ 
விடுதலைக்கான நிதி திரட்டுவது இவரின் பணி.
இவர் காஸ்ட்ரோ என்ற இன்னொரு விடுதலைப் புலியின் 
தலைமையில் செயல்பட்டு வந்தவர்.
**
கே.பி.யின் திட்டம் நிறைவேறிட ஒன்றரை மில்லியன் 
அமெரிக்க டாலர் பணம் தேவை. இது இந்திய மதிப்பில் 
சுமார் எட்டுக்கோடி ரூபாய் ஆகும். இந்தப் பணத்தை 
கே.பி.க்கு அனுப்பி வைப்பதாக, தேசியத் தலைவரின் 
மகன் சார்லஸ் ஆன்டனிக்கு உறுதி அளித்து இருந்தார் 
காஸ்ட்ரோ. (இவர் கியூபா தலைவர் பிடெல் காஸ்ட்ரோ 
அல்ல, புலிப் பொறுப்பாளர்).
**
ஆனால் வாக்களித்தபடி, நெடியவனும் காஸ்ட்ரோவும் 
நடந்து கொள்ளவில்லை. கே.பி.யின் திட்டத்துக்கான 
பணத்தை அனுப்பவில்லை. வான்புலிகளின் தலைவர் 
அச்சுதனையும் விமான ஓட்டிகளை அனுப்ப வேண்டாம் 
என்று தடுத்து விட்டனர்.  இதனால் திட்டம் தகர்ந்தது.
இதற்குள் சிங்கள முற்றுகை மேலும் இறுகியது.
ஹெலிகாப்டர் மூலம் தப்புவிக்கும் திட்டத்தைச் 
செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
**
தமிழ் மகரந்தச் சிதறலில் இருந்து கோடானுகோடி 
டாலர்கள் பெற்றுக் குவித்து வைத்திருக்கும் 
நெடியவனும் காஸ்ட்ரோவும் தேசியத் தலைவரின் 
குடும்பத்தினரைத் தப்புவிக்கும் திட்டத்துக்கு 
உதவ மறுத்து ஈழ வரலாற்றிலேயே மிகக் கொடிய 
துரோகத்தைச் செய்தனர். இந்த இழிவான துரோகிகள் 
இன்று வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து 
கொண்டு இருக்கின்றனர்.
**
தேசியத்தலைவரோ அவரின் குடும்பத்தாரோ தப்பி 
வந்தால், திரட்டி வைத்துள்ள கோடானுகோடி டாலர்கள் 
நிதிக்கான கணக்கை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவர்கள் இறந்து விட்டால், அப்பணத்தைத் தாமே 
வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற இழிவான எண்ணமே 
நெடியவனையும் காஸ்ட்ரோவையும் துரோகிகளாக 
மாற்றியது.
**
ஈழ விடுதலையின் 35 ஆண்டு கால  வரலாற்றில், 
நிகழ்ந்திராத பெருந்துரோகத்தைச் செய்த நெடியவனும் 
காஸ்ட்ரோவும் யூதாஸ் காரியத்தின் துரோகத்தையும் 
விஞ்சி நிற்கிறார்கள். இவர்களே ஈழப்போரில், யாரினும் 
கூடுதலான துரோகிகள். 
**
எனினும், தமிழ்நாட்டின் ஈழ ஆதரவுப் போலிகள் என்றேனும் 
நெடியவனின் துரோகம் குறித்து வாய் திறந்து 
இருக்கிறார்களா? இல்லை. எப்படித் திறப்பார்கள்?
நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட இன்ன பிற 
ஈழ ஆதரவுப் போலிகளுக்கு படியளக்கும் நெடியவனையும் 
காஸ்ட்ரோவையும் அவர்கள் எவ்வாறு பகைப்பார்கள்?
**
எனவே, யார் யாரையோ துரோகிகள் என்று கைகாட்டிக்
கொண்டிருக்கும் ஈழ ஆதரவுப் போலிகள், பெருந்துரோகி 
நெடியவனைக் குறித்து உதடு அசைக்கவும் 
மறுக்கிறார்கள்.
**
தேசியத் தலைவரும் அவரது குடும்பத்தினரும் இன்று 
ஒருவர் கூட இல்லாமல் முற்றிலுமாகத் துடைத்து எறியப் 
பட்டு விட்டனர். ஆனால் பெருந்துரோகி நெடியவனும் 
அவனின் துரோகத்தைக் கேடயமாய் மறைத்து நிற்கும் 
ஈழ ஆதரவுப் போலிகளும் நெஞ்சு நிமிர்த்திப் போராளிகளாக 
வலம் வருகின்றனர். ஏ தாழ்ந்த தமிழகமே, நீ நெடுதுயிலில் 
இருந்து மீள்வது எப்போது?
*********************************************************************  
                             



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக