ஞாயிறு, 8 டிசம்பர், 2019

என்கவுன்டர் படுகொலைகளை ஆதரிக்கலாமா?
ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1)  என்கவுன்டர் கொலைகளை ஆதரிக்கலாமா என்ற
கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பைனரியாக
பதிலளிப்பது சரியல்ல.

2) ஒவ்வொரு என்கவுன்டரையும் தனித்தனியாக
(case by case) எடுத்துப் பரிசீலித்து, சரி அல்லது தப்பு என்று
கூற வேண்டும். அதுவே அறிவுடைமை.

3) அண்மையில் கேரளத்தில் பாசிச பினராயி விஜயனின்
போலீஸ், மாவோயிசப் போராளிகள் நான்கு பேரை
அநியாயமாக ஒரு என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது.

4) இன்று ஹைதராபாத் என்கவுன்டரை எதிர்த்துப்
பெருங் கூச்சலிடும் யார் எவரும் பாசிச பினராயி
விஜயனின் கயமைத்தனமான என்கவுன்டரை
எதிர்த்து மூச்சுக் கூட விடவில்லை.

5) பினராயி விஜயன் நாலு மாவோயிஸ்ட் போராளிகளைச்
சுட்டுக் கொன்றால் அது முற்போக்கு! தெலுங்கானா
போலீஸ் கற்பழிப்புக் குற்றவாளிகள் நாலு பேரைச்
சுட்டுக் கொன்றால் அது பிற்போக்கு! இதுதான்
குட்டி முதலாளித்துவத்தின் இரட்டை அளவுகோல்!

6) கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை
கற்பழித்துக் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி
எரித்த நான்கு கயவர்களை என்கவுன்டர் செய்து
விட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததுமே குட்டி
முதலாளித்துவத்திற்குத் தலைகால் புரியவில்லை.

7) விற்காமல் தேங்கிக் கிடக்கும் துணிகளை விற்கும்
வாய்ப்பு ஆடி மாதத்தில் கிடைப்பது போல, தன்னிடம்
தேங்கிக் கிடக்கும் முற்போக்குக் (??) கருவூலத்தை
வெளித்தள்ள இந்நிகழ்வு குட்டி முதலாளித்துவத்துக்கு
வாய்ப்பளித்தது.

8) நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவன் தன் பெருங்குடலில்
கிடக்கும் கழிவை வெளித்தள்ளும் உத்வேகத்துடன்,
எட்டுத் திசைகளில் இருந்தும் குட்டி முதலாளித்துவம்
தன் மூளையின் கழிவுகளை வெளியேற்ற ஆரம்பித்தது.

9) குட்டி முதலாளித்துவம் எப்போதுமே கவன ஈர்ப்புக்கு
ஏங்கிக் கிடக்கும். அல்லும் பகலும் அனவரதமும்
அது புகழை விரும்பும். அதுவும் தனக்குத் தகுதியற்ற
புகழுக்கு ஏங்கும்.

10) எப்போதுமே தன்னை மற்றவர்களிடம் இருந்து
வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள குட்டி முதலாளித்துவம்
விரும்பும். மக்கள் அனைவரும் இந்த என்கவுன்டரை
ஆதரிக்கிறார்களா, அப்படியானால் நாம் இதை
எதிர்க்க வேண்டும் என்பதே குட்டி முதலாளித்துவத்தை
இயக்கம் உந்து சக்தி.

11) பிரெஞ்சுப் புரட்சியின்போது அரச குடும்பத்தினர்
படுகொலை செய்யப் பட்டார்கள். அவர்களின்
தலையை வெட்ட கிலட்டின் எந்திரம் கண்டுபிடிக்கப்
பட்டது.

12) கீழ வெண்மணியில் 42 பேரை உயிருடன் எரித்துக்
கொன்ற கோபால கிருஷ்ண நாயுடுவை சென்னை
உயர்நீதி மன்றம் விடுதலை செய்து விட்டது. ஆனால்
மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள் அவனைப் படுகொலை
செய்தார்கள்.

13) வர்க்க எதிரிகளைப் படுகொலை  செய்வதை
உயர்ந்ததொரு போராட்ட வடிவமாக மார்க்சிய
லெனினியம் அங்கீகரிக்கிறது. இவ்வாறு படுகொலை
செய்வதை annihilation என்று மார்க்சியம் அழைக்கிறது.

14) வர்க்கங்களாகப் பிளவுண்ட ஒரு சமூகத்தில்.
கொடூரமான சுரண்டல் நிலவும் ஒரு சமூகத்தில்
அனிஹிலேஷனும் இருக்கும்; என்கவுன்டரும் இருக்கும்.
என்கவுன்டரை எதிர்ப்பவன் அனிகிலேஷனையும்
எதிர்க்கிறான் என்று பொருள்.

15) இந்தியா குற்றவாளிகளின் சொர்க்கம். இங்கு
குற்றவாளிகள் தண்டிக்கப் படுவது அபூர்வம்.
நீதிமன்றங்கள் என்பவை வழக்குகளை ஊறுகாய் போடும்
இடங்கள். மக்களின் நமிக்கையை இழந்து நிற்கும் நமது
நீதிபரிபாலன முறை குற்றங்களை ஊக்குவிப்பதாகவே
இருக்கிறது.

16) ஹைதராபாத் என்கவுன்டர் கனத்த இருளின்
நடுவே ஒரு ஒளிக்கீற்று. அவ்வளவுதான். அதற்கு
மேல் அதில் கொண்டாடவோ கண்டிக்கவோ
ஒன்றுமில்லை. அதை மக்கள் வரவேற்கிறார்கள்.
அது மக்களுக்கு மிக மெலிதான ஒரு நிவாரணத்தைத்
தருகிறது.

17) அதைப்போய்  குட்டி முதலாளித்துவம் எதிர்க்கிறது.
குட்டி முதலாளித்துவம் எப்போதுமே மக்களுக்கு
எதிரானது. கூடவே தாராளவாத முதலாளித்துவ
(Liberal bourgeoise) சிந்தனைப் போக்கும் குட்டி
முதலாளித்துவத்தை ஆதரித்து நிற்கிறது. இந்தக் கூட்டணி
எப்போதுமே மக்களுக்கு எதிரானது.

18) மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்கிறது
மார்க்சியம். இல்லை, இல்லை, நாலு போலீஸ்
அதிகாரிகள் சேர்ந்து கொண்டு வரலாற்றைப்
படைக்கிறர்கள் என்கிறது குட்டி முதலாளித்துவம்.

19) இந்த என்கவுன்டரை பாதிக்கப்பட்ட மக்களின்
நிலையில் இருந்து பார்க்க வேண்டும். நிராயுதபாணியாக
நிற்கும் மக்களுக்கு இது நிறைவைத் தருகிறது.
இந்த என்கவுன்டரை வாயில் நுரைதள்ள எதிர்க்கும்
குட்டி முதலாளித்துவப் பிற்போக்காளர்களால்
பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு இதைவிடச் சிறந்த
நிவாரணத்தை வழங்க இயலுமா?

20) இந்த என்கவுன்டரைக் கண்டிக்காமல் விட்டால்
நாளைக்கு மேலும் பல என்கவுன்டர்களைச்  செய்யும்
துணிவு போலீசுக்கு வந்து விடும் என்று கூறுவது
மனிதகுல வரலாறு கண்டும் கேட்டும் இராத
தற்குறித்தனம். கரடு தட்டிப் போன சிந்தனைக்
குஷ்டரோகிகளால் மட்டுமே இப்படிப் பேச முடியும்.
ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்ற
நுனிப்புல் தர்க்கம் இது.வாழத் தகுதியற்ற நான்கு
கயவர்களை யார் கொன்றால் என்ன?

நான் இந்த என்கவுன்டரை ஆதரிக்கிறேன்.
நான் மக்களின் பக்கம் நிற்கிறேன்.

**************************************************
பின்குறிப்பு: மூன்றாவது படத்தில் உள்ள நால்வரும்
என்கவுன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள்.


காவல் துறை ஓராண்டில் நூறு என்கவுன்டர்களை
நடத்துகிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.
இந்த நூறுமே சரியானவை என்றோ அல்லது
தவறானவை என்றோ பொதுமைப் படுத்துவது
முற்றிலும் தவறு.

கொடிய கிரிமினல்களைப் பிடிக்கச் செல்லும்போது
சில நேரங்களில் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்
கொள்ளும் பொருட்டு (purely as an act of self defence)
காவல்துறையினர் சிலரைச் சுட்டுக் கொல்வது
சட்டம் அனுமதித்த ஒன்று.

எனவேதான் ஒவ்வொரு வழக்காக (case by case) எடுத்துக்
கொண்டு சரியா தப்பா என்று பரிசீலிக்க வேண்டும்
என்று கூறுகிறோம். இதுதானே அறிவுடைமை!

சட்ட வரையறைக்கு உள்ளே அமைகிற என்கவுன்டர்
கொலைகளையும் சட்ட வரையறைக்குள் அமையாத
என்கவுன்டர் கொலைகளையும் காவல்துறை
நிகழ்த்துகிறது. எந்த என்கவுன்டர்
வரையறைக்குள் அமைகிறது என்பதையும் எது
வரையறைக்குள் அமையவில்லை என்பதையும்
எப்படிக் கண்டறிவது? எனவேதான் case by case study
தேவைப் படுகிறது.


தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு
(purely as an act of self defence) ஒருவரைச் சுடுவதற்கு
சுட்டுக் கொல்வதற்கும் காவல்துறைக்கு சட்டம்
அனுமதி அளிக்கிறது. இதுவே சட்டத்தின் வரையறை.

எது வரையறைக்குள் அமைந்த என்கவுன்டர்,
எது அப்படி அமையாத என்கவுன்டர் என்பதை
எப்படித் தீர்மானிப்பது? யார் தீர்மானிப்பது?
அதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

ஒரு என்கவுன்டர் கொலையானது கொலை வழக்காகப்
பதியப்பட்டு என்கவுன்டர் செய்த காவலரின் மீது
கொலை வழக்குத் தொடுக்கப்பட்டு, விசாரணை
நடத்தி, நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
தவறான என்கவுன்டர் கொலைகளைச்  செய்த
காவல்துறையினர் தண்டனைக்கு உள்ளாகி
இருக்கின்றனர் என்பது வரலாறு.

ஆனால் குட்டி முதலாளித்துவம் எது சரி என்றோ
எது தவறு என்றோ தீர்மானிக்க முடியாது.
ஊடகங்கள் நீதிமன்றத்தின் பாத்திரத்தை
வகிக்க முடியாது. மக்களின் தன்னெழுச்சியான
நியாய உணர்வுக்கு எதிராக, போராட்ட உணர்வுக்கு எதிராக
குட்டி முதலாளித்துவம் கருத்துக் கூறுவதை
அனுமதிக்க முடியாது.

என்கவுன்டர் சரியா தவறா என்று நீதிமன்றம் முடிவு
செய்யட்டும் என்று குட்டி முதலாளித்துவம்
அமைதியாக உட்கார வேண்டும். குற்றவாளிகளுக்கு
ஆதரவாகக் குரல் எழுப்பக் கூடாது.
-----------------------------------------------------------------------------

இந்தியாவில் அன்றாடம் குற்றங்கள் நடைபெறுகின்றன.
இவை அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை;
ஈர்க்கவும் இயலாது.

கொடூரமான முறையில் நிர்பயா கற்பழிக்கப்பட்டுக்
கொல்லப்பட்டது, அதே போல பிரியங்கா ரெட்டி
கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது ஆகியவை
சமூகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்து, மக்களின்
மனச்சாட்சியைத் தட்டி எழுப்பின. குற்றவாளிகளைத்
தண்டிக்க வேண்டும் என்ற மக்களின் கோபாவேசமும்
குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப் படாமல்
தப்பி விடுவார்களோ என்ற ஆதங்கமும் ஒருசேர வெளிப்பட்டன.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்த போலீஸ்
யாரையும் சுட்டுக் கொல்லவில்லை. அதில் மிகக் கொடூரமான
ஒரு மைனர் பையன் (வயது 17) ஓராண்டுக்குள் சீர்திருத்தப்
பள்ளியில் இருந்து விடுதலை ஆகிவிட்டான். இவன்
நிர்பயாவின் பிறப்பு உறுப்புக்குள் இரும்புக்குழாயைச்
.சொருகியவன்.

ஆனால் பிரியங்கா ரெட்டி விஷயத்தில், பிடி பட்ட
குற்றவாளிகளை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்
கொன்றிருக்கிறது.

பிரியங்கா ரெட்டி வழக்கில் மக்களின் நிர்பந்தமும்
கோபாவேசமும் போலீஸ் மீது ஒரு பெரும் அழுத்தத்தை
ஏற்படுத்தின.

நீதிமன்றங்கள் வழக்குகளை ஊறுகாய் போட்டுக்
கொண்டு இருந்தால், தீர்ப்பு வழங்க பல நூற்றாண்டுகள்
ஆகுமென்றால், காவல்துறையும் சரி, மக்களும் சரி
சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும்
நிலை ஏற்படவே செய்யும்.

சிக்கலான கிரிமினல் வழக்குகளை விடுங்கள், எத்தனை
தேர்தல் வழக்குகள் உச்ச நீதிமன்ற ஊறுகாய்ப் பானையில்
ஊறிக் கொண்டிருக்கின்றன? சிதம்பரம் மீது ராஜகண்ணப்பன்
போட்ட வழக்கில் எப்போது தீர்ப்பு வரும்? அப்பாவு போட்ட
வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் மாரடைப்பு வந்து
விடும் போலிருக்கிறதே!
 
பிரியங்கா ரெட்டியைக் கொன்றவர்களுக்கு மிகச்
சரியான நீதி கிடைத்து இருக்கிறது. இதை
நீதிமன்றங்களால் ஒருபோதும் வழங்க முடியாது.

நீதிமன்றங்களின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்போதும்
கிரைம் பிரிவு போலீசார் நம்பிக்கை இழக்கும்போதும்
இவர்கள் இரு சாராருமே சட்டத்தைத் தங்களின் கையில்
எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்குவார்கள். இதைத்
தடுக்க இயலாது. 
 

   
 



 அநியாயமான என்கவுன்டர் என்ற பிரயோகம்
பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்து
வெளிப்படுவதாகும். குட்டி முதலாளித்துவக்
கண்ணோட்டம்  பிற்போக்கானது; அது தனியுடைமைச்
சிந்தனையில் இருந்து பிறக்கிறது. பாட்டாளி வர்க்கக்       
கண்ணோட்டமானது தனியுடைமை ஒழிப்புச் சிந்தனையில்
இருந்து பிறக்கிறது. எனவே புரட்சிகரமானது.


மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பது சரியே!
 












(ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை
கற்பழித்துக் கொலை செய்த நான்கு குற்றவாளிகளையும்
ஹைதராபாத் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்
கொன்றுள்ளனர். இது குறித்த கட்டுரை)
                        **********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக