வெள்ளி, 29 ஜூலை, 2016

மருக்காற் புன்னைப் புதுநிழல் வெண்-
மணற்கால் மருங்கு நிலவு எறிப்ப,
மாடம் சமைத்துக் குடி புகுந்து
மணிக்கால் இப்பி அடுப்பேற்றிக்
குருக்கால் செம்பொற் சிறுசுளகால்
கொழிக்குந் தளந்தேன் உலைப்பெய்து
குடவால் வளை வெண் குழிசி பொங்கக்
குழற்கால் ஆம்பல் நெருப்பமைத்து
முருக்கால் வெல்ல முடியாவாய்
முகிழ்த்துக் கவிழ்த்துக் கிடந்தூதி
முகம் வேர்த்தனம்; நீ குறும்பிழைத்தால்
முற்றும் தரமோ முக்காலும்
திருக்கால் பிடித்துக் கும்பிட்டோம்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலாய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
(மருக்கு - மலர்; மணற்கால் - மணல்திட்டில்; மருங்கு - அருகே; எறிப்ப - ஒளிவீச; மணிக்கால் இப்பி - மணிபோன்று கால்களை உடைய சிப்பி; குருக்கால் - குருக்கத்திப் பூவாலான; சுளகால் - முறத்தால் : சுளகு என்பது முறத்திற்கான நெல்லை வட்டாரச் சொல்; தளந்தேன் - பரவிய தேன்; குடவால் வளை - வளைந்த சங்கு; குழிசி - குழிந்த பாத்திரம்; முருக்கால் - முருங்க இலையால்; குழற்கால் ஆம்பல் - துளைகொண்ட தண்டையுடைய ஆம்பல்: இது சிவப்புநிற மலர்; முகிழ்த்து - மூடி; வேர்த்தனம் - வேர்த்தோம்; தரமோ - தகுமோ; சிறியேம் - சிறியவர்கள்; சிற்றில் - சிறிய வீடு; சிதையேலே - சிதைக்காதே).

புன்னைமரம் பூத்துப் புதுநிழல் வீசும் வெண்மணற்பரப்பில் நிலவொளி வீசும் இரவு. நாங்கள் மணலில் மாடம் கட்டி, சங்குச் சிப்பிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, குருக்கத்திப் பூவாலான சின்னப் பொன் சுளகில் தேனெடுத்து உலை வைத்தோம். உலை பொங்கி வர, முருங்கை இலையைக் கவிழ்த்து மூடிபோட்டு, ஆம்பல்பூத் தீயைக் கவிழ்ந்து படுத்து ஊதி ஊதி முகம் வேர்த்துக் கிடக்கிறோம். நீ குறும்பு செய்வது நியாயமா? காலைப் பிடித்துக் கும்பிடுகிறோம். வேலில் மட்டும் சினத்தை ஏந்தி இலஞ்சியில் நிற்கும் எம் தேவா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே.
- திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்ற 19ம் நூற்றாண்டுப் பிரபந்தத்திலிருந்து ஒரு அழகிய பாடல்.
இந்த நூலின் பாட்டுடைத்தலைவன் கோயில் கொண்டுள்ள இலஞ்சி செங்கோட்டை தென்காசி மார்க்கத்தில் குற்றாலத்திற்கு அருகிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சிற்றூர். இந்த மார்க்கத்தில் சில முறைகள் சென்றும் முருகனைக் காணும் பேறு இதுவரை கிட்டியதில்லை. அடுத்தமுறை தவறவிடக் கூடாது. இந்த நூலின் ஆசிரியர் கவிராச பண்டாரத்தையா அப்பகுதியில் மரியாதைக்குரிய பெரும் தமிழ்ப்புலவராகவும் சமய குருவாகவும் இருந்திருக்கிறார். நூலின் பல பாடல்களில் அவரது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக