வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

இயற்கை வைத்தியம் என்ற பெயரில் மோசடிகள்!
ஹீலர் பாஸ்கரின் கைது நியாயமானதே!
மருத்துவமனையில்தான் பிரசவம் நடக்க வேண்டும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) இந்தக் கட்டுரையை எழுதும் நான்
மருத்துவமனையில் பிறந்தவன் அல்ல. 1953ல்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் எங்கள்
வீட்டின் கூடத்தில் சாணி மெழுகிய தரையில்
பிறந்தவன். நான் மட்டுமல்ல, என் பெற்றோரின்
நான்கு குழந்தைகளும் வீட்டுக் கூடத்தில்
பிறந்தவர்களே.

2) 1950, 60களில் தாமிரபரணி ஆற்றுநீர் பரிசுத்தமாக
இருந்தது. டாக்டர்கள் ஊசி போடுவதற்குப்
பயன்படுத்தும் டிஸ்டில்டு வாட்டரைப் போல்
அது தூய்மையாக இருந்தது.

3) இன்று தாமிரபரணியின் நிலை என்ன? ஒவ்வொரு
நாளும் நள்ளிரவில் சேரன்மகாதேவி சன் பேப்பர்
மில்லின் கழிவுகளை தாமிரபரணியில்
கலக்கிறார் ஆதித்தன். சேரன்மகாதேவியில்
இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை தாமிரபரணி
ஆற்றில் கலக்கப்படாத கழிவுகளே இல்லை.

4) ஆக, குடிநீர் மாசடைந்து உள்ளது. சுவாசிக்கிற
காற்று மாசடைந்து உள்ளது. நிலம் மாசடைந்து
உள்ளது.

5) நான் விவசாயம் பார்த்த காலத்தில், எங்கள்
வயலில் (அயன் நஞ்சை நிலம், இரண்டு போகம்)
கொம்பு மூடையும் குளம்பு மூடையும் மட்டுமே
உரமாகப் போடுவோம். ரசாயன உரம்
போட்டதில்லை; பூச்சி மருந்து அடித்ததில்லை.
இன்று அப்படியா? 

6) எந்த நம்மாழ்வாரும் வந்து பாடம் எடுக்காமல்,
நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வந்தோம்.

7) நிலமும் நீரும் காற்றும் மாசுபடாத ஒரு  காலத்தில்
வீடுகளிலேயே சுகப் பிரசவங்கள் நிகழ்ந்தன.
அன்று மக்கள் தொகையும் மிகவும் குறைவு.
மக்கள்தொகை அடர்த்தியும் (population density)
மிகவும் குறைவு.

8) .இன்று மொத்த சுற்றுச் சூழலுமே மாசுபட்டு
இருக்கும் காலத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்
என்று பேசுவது அறிவுடைமை ஆகுமா?

8) தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான்
என்று ஒரு ஊர் உள்ளது. இங்குதான் சிப்காட்
ஆலைகள் அனைத்தும், ஸ்டெர்லைட் உட்பட
உள்ளன. இந்த ஊரில் யாராவது வீட்டிலேயே
பிரசவம் பார்க்க முடியுமா?

9) காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன்
எங்கள் ஊரில் (திருச்செந்தூர் நாடாளுமன்றத்
தொகுதி) எம்.பி தேர்தலில் போட்டியிட்டார்.
ஊர் மக்கள் சார்பாக அவரிடம் நாங்கள் வைத்த
கோரிக்கை என்ன தெரியுமா? எங்கள் ஊருக்கு
(வீரவநல்லூர்) நவீன வசதிகளுடன் கூடிய ஒரு
ஆரம்ப சுகாதார நிலையம் (Primary Health Centre)
வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.

10) ஊர் மக்களெல்லாம் தங்கள் ஊருக்கு
மருத்துவமனை வேண்டும் என்று கோரிப்
போராடிக் கொண்டிருக்கும்போது,
மருத்துவமனைக்குப் போகாதே என்று
பிரச்சாரம் செய்யும் ஹீலர் பாஸ்கர் போன்ற
ஆட்களை என்ன செய்யலாம்? தடுப்பூசி
போடக்கூடாது என்று பிரச்சாரம் செய்யும்
இவர்களை விட்டு வைக்கலாமா? 

11) காலத்துக்குப் பின்னால் போய் நின்று கொண்டு
மக்களைப் பிற்போக்குச் சிந்தனைக்குத்
தள்ளும் இந்த ஹீலர் பாஸ்கர் போன்ற ஆட்களை
கைது செய்ததை நியூட்டன் அறிவியல் மன்றம்
வரவேற்கிறது.
********************************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக