செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

மார்க்சியம் அநாதை ஆகி விட்டதா?
போத்தீஸில் ரிடக்சன் சேல்ஸில்
துணி வாங்குவது போன்றதா மார்க்சியக் கல்வி?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென்று
மேலெழும்பி வானத்தில் பறக்கிறார். 160 அடி
உயரத்தில் அந்தரத்தில் பறந்து முடித்து
சுமுகமாகத் தரை இறங்குகிறார். இப்படிப்
பறந்தவர் கோவை மாஜிக் நிபுணர் விக்னேஷ்.

அவர் பறந்ததை யூடியூப் வீடியோவாக
வெளியிட. லட்சம் பேர் அதைப்
பார்க்கிறார்கள். தொலைக்காட்சிகள் அவரைப்
பேட்டி கண்டு ஒளிபரப்புகின்றன.

இது மனதின் சக்தி என்கிறார். மனவாதம் (mentalism)
என்கிறார். பார்வையாளர்கள் பிரமித்துப்
போகிறார்கள். மனதின் அபாரமான சக்தி
இருந்தால் பறக்கலாம் என்ற செய்தி சிறுவர்கள்,
மாணவர்கள், இளைஞர்கள் மனதில் பதிந்து
போகிறது. இது அனைத்துமே கருத்துமுதல்வாதம்
ஆகும்.

கருத்துமுதல்வாதம் அறிவியலைப் பயன்படுத்தித்
தன்னை வளர்த்துக் கொள்கிறது.
கருத்துமுதல்வாதிகள் பொருள்முதல்வாதம்
காலாவதி ஆகி விட்டது என்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்கு மார்க்சியம் என்ன விளக்கம்
வைத்திருக்கிறது? பொருள்முதல்வாதிகள்
தரும் விளக்கம் என்ன? ஒன்றும் இல்லை.

ஜனசக்தி, தீக்கதிர் பத்திரிகைகளில் விளக்கம்
வந்துள்ளதா? மார்க்சிய லெனினிய இணைய
தளங்களில் விளக்கம் வந்துள்ளதா? இல்லை.
மாவோயிஸ்டுகள் பதில் கூறினார்களா?
AITUC, CITU தலைவர்கள் விளக்கம் அளித்தார்களா?
இல்லை.  புரட்சிகர, அதிதீவிரப் புரட்சிகர
முன்னணிகள் விளக்கம் அளித்தார்களா?
இல்லை.

மார்க்சிய நூலாசிரியர்கள், மார்க்சிய
எழுத்தாளர்கள் எவரேனும் விளக்கம்
அளித்தார்களா? இல்லை.

மார்க்சியம் ஒரு மாபெரும் சமூக விஞ்ஞானம்,
அது விஞ்ஞானங்களுக் கெல்லாம் விஞ்ஞானம்
என்று புளகாங்கிதம் அடையும் மார்க்சியப்
பற்றாளர்கள் ஏதேனும் விளக்கம் அளித்தார்களா?
இல்லை.

முகநூலில் புதிய ஜனநாயகப் புரட்சியையும்
சோசலிஷப் புரட்சியையும் டிராட்ஸ்கி பாணியில்
நிரந்தரமாக நடத்திக் கொண்டிருக்கும்
புரட்சியாளர்கள் ஏதேனும் விளக்கம்
அளித்தார்களா? இல்ல்ல்ல்லை.

மார்க்சியத்தின் தரப்பில் விளக்கம் வராதபோது
என்ன நடக்கும்? கருத்துமுதல்வாதம் கூறும்
மனதின் அபாரமான ஆற்றல் என்ற கருத்துதானே
சமூகத்தில் மேலோங்கி நிற்கும்?

மனதின் சக்தியால் சாதிக்கலாம் என்பது
நிரூபிக்கப் பட்டால், பொருளின் சக்தி
என்பது எப்படி எடுபடும்? பொருள்முதல்வாதம்
எப்படித் தன்னை நிரூபிக்கும்?

ஆக, கருத்துமுதல்வாதம் எப்படி மேலோங்குகிறது,
பொருள்முதல்வாதம் எப்படிப் பின்தங்குகிறது
என்பது புரிகிறதல்லவா?

ஆயிரக் கணக்கிலும் லட்சக் கணக்கிலும்
மாணவர்கள், இளைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கு
ஒட்டு மொத்த மார்க்சிய  முகாமில் இருந்தும்
ஒருவர் கூட, ஒரே ஒருவர் கூட பதில்
அளிக்கவில்லை அல்லவா? (நியூட்டன் அறிவியல்
மன்றத்தைத் தவிர).

மொத்த மார்க்சியர்களும் பதிலளிக்கவில்லை
என்றால், அவர்கள் என்ன வைத்துக் கொண்டா
வஞ்சகம் செய்கிறார்கள்? அவர்களிடம்
பதில் இல்லை. இதுதானே உண்மை!

ஏன் பதில் இல்லை? ஏனென்றால், அவர்கள்
பெற்ற மார்க்சியக் கல்வியில் அணு அளவு கூட
அறிவியல் இல்லை. அறிவியலில் இருந்து
முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட அறிவியலற்ற
சில வாக்கியங்கள் மட்டுமே மார்க்சியம்
என்பதாகத்தானே அவர்களுக்குக் கற்பிக்கப்
பட்டிருக்கிறது.

மார்க்சியம் என்பது எவ்வளவு பெரிய
REDUCTIONக்கு, குறைப்புக்கு உள்ளாகி
இருக்கிறது! போத்தீஸில் நடக்கும் மாபெரும்
ரிடக்சன் சேல்ஸில் துணி வாங்கிய
கதையாகத்தானே  மார்க்சியக் கல்வி
இருக்கிறது.

ஆக, இத்தனூண்டு மார்க்சியக் கல்வியை
வைத்துக் கொண்டு கருத்துமுதல்வாதத்தை
கற்பனையில்கூட முறியடிக்க முடியாதே!

எனவேதான் நியூட்டன் அறிவியல் மன்றமானது
அறிவியல் சார்ந்த  பொருள்முதல்வாதக்
கல்வியை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்குகிறது.

எமது பொருள்முதல்வாத வகுப்புகளில்,
Maths, Physics, Chemistry பாடங்கள் கற்பிக்கப் படும்.
பொருள்முதல்வாத விளக்கம் அறிவியல்
அடிப்படையில் இருக்கும். நெபுலா கொள்கை,
மைனஸ் A இன்டு மைனஸ் A இஸ் ஈக்வல் டு
ப்ளஸ் A ஸ்கொயர் போன்ற பாடங்கள்,
மீத்தேன், அம்மோனியா, நைட்ரஸ் ஆக்ஸைடு
ஆகிய எல்லாமும் எமது வகுப்புகளில்
கற்பிக்கப் படும். இவை இல்லாமல் மார்க்சியம்
என்பது இல்லை.

ஆக, நாங்கள் நடத்தும் பொருள்முதல்வாத
வகுப்புகள் இப்படித்தான் இருக்கும். இதை
வரவேற்போர் வகுப்புகளில் பங்கேற்கலாம்.

விக்னேஷ் பிரபுவின் வானில் பறக்கும் மாஜிக்
நிகழ்வுக்கான அறிவியல் விளக்கத்தை ஒட்டு
மொத்த மார்க்சிய முகாமிலும், நியூட்டன்
அறிவியல் மன்றம் மட்டுமே அளித்துள்ளது.
மார்க்சியம் அநாதை அல்ல என்று இதன் மூலம்
நியூட்டன் அறிவியல் மன்றம் நிரூபித்துள்ளது.
**************************************************   


நிலைமறுப்பின் நிலைமறுப்பு மட்டுமல்ல,
மார்க்ஸ் எங்கல்ஸ் கூறிய மூன்று இயங்கியல்
விதிகளும் ஹெக்கல் கூறிய விதிகளே.
கருத்து-எதிர்க்கருத்து-புதுக்கருத்து
(Thesis, anti thesis, synthesis) எனப்படும் இயங்கியலின்
முறைமையும் ஹெக்கல் கூறியதே. இதை
அப்படியே நாங்கள் எடுத்துக் கொண்டோம்
என்று மார்க்சும் எங்கல்சும் ஒப்புக்
கொண்டுள்ளனரே. இதில் எந்த ஒளிவு மறைவும்
இல்லையே.

இயங்கியலை ஹெக்கல் சிந்தனையின்
வளர்ச்சிக்கான விதிகளாகப் பயன்படுத்தினார்.
இந்த விதிகள் சிந்தனைக்கு மட்டுமல்லாமல்,
பொருளுக்கும் பொருந்தும் விதிகளாக
இருந்தன. எனவே ஹெக்கலின் இயங்கியலை
நாங்கள் அப்படியே எடுத்துக் கொண்டோம் என்று
மார்க்சும் எங்கல்சும் கூறி உள்ளனரே. 

------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இல்ல்ல்ல்லை = இல்லை.
இலக்கணப்படி இது சரி. ஏனெனில் இது ஒற்றளபடை.

இந்த வாக்கியம் சுய முரண்பாடாக உள்ளதே.
negation of negation என்பது நிலைமறுப்பின்
நிலைமறுப்புதானே. மாவோ எதை மறுத்தார்?
அருள்கூர்ந்து தெளிவாகக் கூறும்படி
வேண்டுகிறேன்.
 

தங்களின் கருத்து பின்நவீனத்துவக் கருத்து.
மார்க்சியம் துல்லியத்தை ஏற்கிறது.
பின்நவீனத்துவம் துல்லியத்தை மறுக்கிறது.
அறிவியல் என்பது துல்லியத்தைக் கொண்டது.
5ஐ 5ஆல் பெருக்கினால் 25 வரும் என்பது
துல்லியம் ஆகும். 5ஐ 5ஆல் பெருக்கினால்
24 வரும் என்பது துல்லியமற்றது. துல்லியம்
இல்லாமல் அறிவியல் இல்லை. அறிவியல்
இல்லாமல் மார்க்சியம் இல்லை. எனவே
மார்க்சியம் துல்லியத்திற்காக நிற்கிறது.
மார்க்சியம் எப்படி துல்லியத்துக்கு எதிராக
இருக்கும்?

நீண்ட தூரம் என்பது linear distance அல்ல.
எனவே கிரேன் மூலம் இதே அளவு தூரம்
பறக்க முடியும். ஒவ்வொரு திசையிலும்
கொஞ்சம் கொஞ்சம் தூரமாக இதே அளவு
தூரத்தை கிரேன் உதவியால் கடக்கலாம்.
அப்படித்தான் அவர் செய்துள்ளார். அவர்
கடந்தது linear ஆக அல்ல.

பிதற்றல் என்று நீங்கள் பயன்படுத்தும்
சொற்பிரயோகம் கண்ணியமற்றது. இதைத்
தவிர்க்க முயற்சி செய்யவும்.

கணிதச் சமன்பாடுகளின் வழியே இயங்கியலை
விளக்குவது யார்? எங்கல்ஸ். நான் அல்ல.
a, minus a, a squared ஆகியவற்றைக் கொண்டு
நிலைமறுப்பு விதியை விளக்குகிறார் எங்கல்ஸ்.
எங்கல்ஸ் என்ன சொன்னாரோ, அதை அப்படியே
நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான்.
இதெல்லாம் பிதற்றல் என்றால், தங்களின்
கூற்றுப்படி, அப்படிப் பிதற்றியவர் எங்கல்ஸ்தான்.

துல்லியம் இல்லாமல் அறிவியல் இல்லை. ஒரு
பச்சைக் குழந்தைக்கு எவ்வளவு மருந்து கொடுக்க
வேண்டும் என்று சொட்டுக்  கணக்கில்
துல்லியமாகத்  தீர்மானித்தே மருத்துவர் மருந்து
கொடுக்கிறார். ஒரு சொட்டு மருந்து போதும்
என்று மருத்துவர் முடிவு செய்தால், மிகத்
துல்லியமாக ஒரு சொட்டு மட்டுமே கொடுப்பார்
மருத்துவர். ஒரு சொட்டு மட்டுமே கொடுக்க
வேண்டிய இடத்தில், ஒரு டீஸ்பூன் மருந்து
கொடுத்தால் என்ன ஆகும்? குழந்தை செத்துப்
போகும். எனவே துல்லியம் என்பது அன்றாட
வாழ்வில் காணப்படுகிற விஷயமே.

எங்கல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு என்ற
நூலில் கணிதம்,  ரசாயனம், பௌதிகம் ஆகிய
அறிவியல் விஷயங்களே உள்ளன. அந்நூலை
நீங்கள் படிக்கவில்லை என்று தெரியப்
படுத்துகிறீர்கள், அவ்வளவுதான்.

அடுத்து, தமிழ்நாட்டில் ஒரு கோடிப்பேர் அறிவியல்
படித்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள்  ப்ளஸ் டூ        
வரையிலான கணிதம், இயற்பியல், வேதியியல்
ஆகிய அறிவியலைப் படித்தவர்கள். கணிதம்
கற்றவர்கள். உங்களுக்குப் புரியவில்லை
என்பதற்காக, கணிதச் சமன்பாடுகளே
கூடாது என்று நீங்கள் சொல்வது சரியா?

அருள்கூர்ந்து அறிவியல் படித்த இளைஞர்களுக்கு
மார்க்சியம் சென்று சேர்வதைத் தடுக்க
வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்.




        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக