வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மார்க்சியக் கல்வியில் பின்தங்கும் தமிழகம்!
அணில் ஆணி இலை ஈக்களைத் தாண்டாத அரிச்சுவடி மார்க்சியம்!
மார்க்சியம் கற்க ஆங்கிலம் தேவையா?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையை
எழுதிய 1848ஆம் ஆண்டையே கம்யூனிசத்தின்
தொடக்கமாகக் கொள்ளலாம்.  அப்படியானால்
உலகில் கம்யூனிசம் தோன்றி 170 ஆண்டுகள்
ஆகிவிட்டன.  இந்தியாவிலும் கம்யூனிஸ்ட்
இயக்கத்தின் வயது நூறை நெருங்குகிறது.

எனினும் மார்க்சியக் கல்வியானது அரிச்சுவடி
நிலையைத் தாண்டவில்லை. மார்க்சியர்கள்
என்போரின் மார்க்சிய அறிவு அணில் ஆணி இலை
ஈக்கள் என்ற மட்டத்திலேயே தேங்கி நிற்கிறது.

1960-1980 காலக்கட்டத்தில் NCBH நிறுவனம் 5 காசு
10 காசு விலையில் காத்திரமான மார்க்சிய
நூல்களை வழங்கியது. ஒரு ஐந்து ரூபாய்
செலவில்  ஓராண்டு முழுவதும் படிப்பதற்குத்
தேவையான புத்தங்கங்களை NCBH வழங்கியது.
மார்க்சிய நூல்களை மட்டுமின்றி, பெருமளவிலான
அறிவியல் நூல்களையும் NCBH வழங்கியது.
இவை அனைத்தும் மாஸ்கோவில் உள்ள முன்னேற்றப்
பதிப்பகத்தில் அச்சடித்து சோவியத் ஒன்றியத்தால்
இலவசமாக வழங்கப்பட்ட நூல்களாகும்.
பெரல்மான் எழுதிய பொழுதுபோக்குப் பௌதிகம்
என்ற அறிவியல் நூல் இன்று 200 ரூபாய். அன்று
10 காசுக்கு கிடைத்தது. அதுதான் பொற்காலம்.

அ) 1990களில் சோவியத்தின் வீழ்ச்சி, ஆ) பின்னர் சீனத்தின்
வீழ்ச்சி, இ) தொடர்ந்து இந்தியாவில் நக்சல்பாரி
இயக்கம் பின்னடைந்தும் பிளவுபட்டும் பல்வேறு
குழுக்களாகச் சிதறியமை, ஈ) NGO எனப்படும்
ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களின் பெருக்கம்,
உ) பின்நவீனத்துவம் இந்தியாவில்  அறிமுகமாகி
செல்வாக்குப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
மார்க்சியம் செல்வாக்கு இழந்தது.மார்க்சியச் செயல்பாடுகள் குறைந்தன. கூடவே மார்க்சியக் கல்வியும் வீழ்ந்தது.

எனினும் 90களில் நம் நாட்டில் இணையம் பரவலாகத்
தொடங்கியது. இந்த மில்லேனியத்தின் தொடக்கத்தில்
மின்னஞ்சல், மொபைல் பேசி, முகநூல் உள்ளிட்ட
சமூக வலைத்தளங்கள் பெருகி, மார்க்சியக்
கல்விக்கான புதிய வாசல்களைத் திறந்தன.
வலைத்தளங்கள் (web sites), தேடுபொறிகள், கூகுள்,
விக்கிப்பீடியா, யூடியூப் உள்ளிட்ட இணைய வசதிகள்
மார்க்சியக் கல்விக்கான புதிய வாய்ப்புகளை நல்கின.

மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் உள்ளிட்ட மூல ஆசான்களின்
நூல்கள், பிற மார்க்சிய இலக்கியங்கள், மார்க்சியத்
திறனாய்வு நூல்கள், கட்டுரைகள், மற்றும் அறிவியல்
நூல்கள் கட்டுரைகள் வீடியோக்கள் ஆகியவை
இணையத்தில் கணக்கு வழக்கின்றி இலவசமாகக்
கிடைக்கின்றன. உதாரணமாக, எங்கல்சின்
" இயற்கையின் இயக்கவியல்" என்ற நூல்
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.
மார்க்சியத்தின் அடிப்படை நூல்களில் முக்கியமான
நூலாகும் இது. ஆனால் இந்நூல் ஆங்கிலத்தில்
மட்டுமே கிடைக்கிறது.

இது மட்டுமின்றி, வேண்டிய எந்த மார்க்சிய நூலும்
இணையத்தில் இலவசமாக ஆனால் ஆங்கிலத்தில்
கிடைக்கிறது. மார்க்சியம் கற்க விரும்புவோர்க்கு
இது ஒரு வரப் பிரசாதம் என்றாலும், இந்த வாய்ப்பை
அனுபவிக்க, ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியமாகிறது.

இங்கு ஆங்கிலம் தெரிந்திருத்தல் என்பது ஆழமான
ஆங்கிலப் புலமையை மட்டுமே குறிக்கிறது.
ரயில் நிலையத்தில் டிக்கட் வழங்கும் பொறுப்பில்    
உள்ள ஒரு அரசு ஊழியர்க்கோ அல்லது வங்கியில்
உங்களின் அக்கவுண்டில் இருந்து பணம் தரும் வங்கி
ஊழியர்க்கோ தெரிந்திருக்கும் ஆங்கிலம்
மார்க்சியம் கற்கப் போதாது. மார்க்சிய
இலக்கியங்களை ஆங்கிலம் வழி கற்க விரும்பும்
எவர் ஒருவருக்கும் ஆழமான ஆங்கிலப் புலமை
தேவை என்பது கண்டிப்பான முன்நிபந்தனை ஆகும்.

உதாரணமாக, 1980-90களில் சோவியத்தில் கோர்பச்சேவ்
கொண்டு வந்த கிளாஸ்நாஸ்ட், பிரஸ்டோரிக்கா
(Glasnost and Perestroika) ஆகிய சீர்திருத்தங்களைப்
பற்றி அறிந்திட, இணையத்தில் தேடினால், இலவசமாக
100 நூல்களும் 10,000 கட்டுரைகளும் ஆங்கிலத்தில்
கிடைக்கின்றன.(பிரெஞ்சு, ரஷ்யன், ஜெர்மனி,
இத்தாலி ஆகிய ஐரோப்பிய மொழிகளிலும்
கிடைக்கின்றன). ஆனால் தமிழில் இப்பொருளில்
என்ன கிடைக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே
மிஞ்சும். ஒன்றிரண்டு கட்டுரைகள் கிடைத்தாலே
மிகவும் அபூர்வம். 

சுருங்கக் கூறின், மார்க்சியக் கல்விக்கான
பிரம்மாண்டமான வாய்ப்புகளை இணையம்
வழங்கினாலும், அவற்றை  அறிவுஜீவிகளே
பயன்படுத்த முடியும் என்ற நிலையே உள்ளது.
SSLC, ப்ளஸ் டூ அல்லது அதற்கும் குறைவாகப்
படித்தவர்களால், ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள
மார்க்சிய இலக்கியங்களைக் கற்க இயலாது என்பது
கள யதார்த்தம் ஆகும்.

ஆக இணையமானது அறிவாளிகளை மேலும்
அறிவாளிகள் ஆக்குவதற்கும், படிக்காதவர்களை
முட்டாள்களாகவே வைத்திருப்பதற்கும் மட்டுமே
பயன்படுகிறது. ஆங்கிலம் தெரியாதவர்கள்
இணையம் வழி அடையும் பயன் என்னவெனில்,
ஒன்றிண்டு நீலப்படங்களை (Blue Films) பார்த்துக்
கிளர்ச்சி அடைய முடியும் என்பதே. இந்த அவல
நிலையை மாற்ற வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சிகளின்
பொறுப்பாகும். மார்க்சிய நூல்களைத் தமிழில்
கிடைக்கச் செய்யும் பெரும் பொறுப்பு கம்யூனிஸ்ட்
கட்சிகளுக்கே உண்டு.

அறிவியலுக்கு எதிராக உள்ள மார்க்சியர்கள்!
----------------------------------------------------------------------------------
"மார்க்சியம் ஒரு விஞ்ஞானம்; அது விஞ்ஞானங்களுக்கு
எல்லாம் விஞ்ஞானம்" என்று மார்க்சியர்கள் பலரும்
கூறுவதுண்டு. ஆனால்  இப்படிக் கூறும் பலரும்
அறிவியலுக்கு எதிராகவே இருப்பது கண்கூடு.

மார்க்சியக் கல்வி என்பது பெருமளவுக்கு அறிவியல்
கல்வியே ஆகும். இயங்கியல், பொருள்முதல்வாதம்
ஆகியவற்றை அறிவியலின் துணை இல்லாமல் கற்க
முடியாது. அறிவியலற்ற மார்க்சியக் கல்வி என்பது
அர்த்தமற்றது.

ஆனால் தமிழ்நாட்டில் கட்சி அணிகளுக்கு வழங்கப்பட்ட மார்க்சியக் கல்வி என்பது அதன்
தொடக்கம் முதலே அறிவியலில் இருந்து முற்றிலும்
துண்டித்துக் கொண்டதாகவே இருந்து வந்தது.
இன்றும் இதே நிலை மாற்றமின்றி நீடிக்கிறது.

1950,60களில் தமிழ்நாட்டில் SSLC என்னும் 10ஆம் வகுப்பு
வரை படிப்பதே பெரிய படிப்பாகக் கருதப்பட்டது.
படிப்பறிவு குறைந்த தொழிலாளி, விவசாயி 
வர்க்கங்களில் இருந்துதான் கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுப்பினர்களைப் பெறும். அப்படிச் சேர்பவர்களுக்கு 
ஏற்ற விதத்தில் மார்க்சியக் கல்வியானது மிகவும் எளிமையுடனும்  கணிதம் அறிவியலைத் 
தவிர்த்தும் வழங்கப்பட்டது.

இன்றைய தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டிலும்
ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேருகின்றனர்.
அறிவியல் பட்டப் படிப்புகளில் பெறுவோர் இதுபோல
ஒரு லட்சம் ஆகும். கடந்த ஆண்டில் (2017) மட்டும்
ஒன்பது லட்சம் பேர் ப்ளஸ் டூ (XII std) தேர்வு எழுதி
உள்ளனர். இதில் 4 லட்சம் பேர் அறிவியல் பிரிவுப்
பாடங்களைப் படித்தவர்கள்.

தமிழக மக்கள்தொகை 2017ன் கணக்குப்படி
8 கோடி ஆகும். எழுத்தறிவு பெற்றோர் 80 சதம் ஆகும்.
தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.86 கோடி
ஆகும். எல்லாப் புள்ளி விவரங்களையும் ஆராய்ந்து
பார்த்தால், தமிழ்நாட்டில் அறிவியல் பாடங்களைப்
படித்தவர்கள் மட்டும், எவ்வளவு குறைத்து
மதிப்பிட்டாலும் 2 கோடி இருக்கும். இது மொத்த
வாக்காளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு
பங்கு ஆகும். ஒவ்வொரு மூன்று தமிழர்களிலும்
ஒருவர் அறிவியல் கற்றவர் என்பது இந்தியா போன்ற
ஏழை நாட்டில் மிகவும் அசாதாரணமானது.

1950ல் SSLC படிப்பே மிகப்பெரிய விஷயமாக இருந்த
நிலைக்கும், இன்று இந்த 2018ல் 1 லட்சம் பேர்
பொறியியலும் 1 லட்சம் பேர் அறிவியல் பட்டப்
படிப்பு படிப்பதுமான சூழலுக்கும் மலைக்கும்
மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. இன்று
தெருவுக்கு நாலைந்து பேர் இஞ்சினியரிங்
படிக்கின்றனர். தடுக்கி விழுந்தால் யாராவது
ஒரு இன்ஜினியர் மீதுதான் விழ வேண்டி இருக்கிறது.

ஆக, அறிவியல் கல்வியைப் பொறுத்தமட்டில் தமிழகம்
ஒளிவீசும் மாநிலமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும்
குறைந்தபட்சம் யாராவது ஒருவர் அறிவியல் படித்தவராக
இருக்கிறார்.

ஆனால் தமிழகத்தில் மார்க்சியக் கல்வியானது எவ்வித
மாற்றமும் அடையாமல், நூற்றாண்டு கால இருளிலேயே
மூழ்கிக் கிடக்கிறது. அறிவியலில் இருந்து முற்றிலுமாகத்
துண்டித்துக் கொண்ட, தற்குறித்தனமான மார்க்சியக்
கல்வியே கம்யூனிஸ்ட் கட்சிகளால் அணிகளுக்கு
வழங்கப் படுகிறது.

புறச்சூழலுக்கு முற்றிலும் எதிராகவும், மொத்த சமூகமும்
அறிவியல் கல்வியைப் பெற்றிருக்கிறது என்ற 
உண்மையைப் பார்க்க மறுத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 
கண்ணை மூடிக் கொண்டுள்ளன.அறிவியலே
இல்லாத மார்க்சியக் கல்வியை இன்னும் எவ்வளவு
காலத்திற்கு இவர்கள் அணிகளுக்கு வழங்குவார்கள்?
இன்னும் எவ்வளவு காலம் அணிகளை இவர்கள்
தற்குறிகளாகவே வைத்து இருப்பார்கள்?

சமூகத்தின் அறிவை விட மார்க்சியர்களின் அறிவு
அதிகமாக இருந்தால் அல்லவா, மார்க்சியர்களால்
சமூகத்துக்குத் தலைமை தாங்க முடியும்! லெனின்
கூறியபடி, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக மார்க்சியர்கள் இருக்க வேண்டுமென்றால்,
மார்க்சியர்கள் அறிவியலைக் கற்க வேண்டாமா?
"மார்க்சியம் என்பது இதுநாள் வரை மனித குலம்
சேகரித்து வைத்துள்ள அறிவுச் செல்வத்தின்
ஒட்டுமொத்தம்" என்று லெனின் கூறிய வரையறையை
மார்க்சியக் கட்சிகள் மதிக்க வேண்டாமா?

a plus b whole squared என்று மிகவும் தொடக்க நிலையிலான
கணிதத்தைச் சொன்னால், மொத்த சமூகமும்
புரிந்து கொள்ளும்போது, மார்க்சியர்கள் மட்டும்
மூர்ச்சை அடைவது ஏன்? இந்த அவலம் முடிவுக்கு
வர வேண்டாமா?

நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கும்
அறிவியல்பூர்வமான மார்க்சியக் கல்வி!
------------------------------------------------------------------------
தமிழ்ச் சமூகத்தில் நியூட்டன் அறிவியல் மன்றம்
மட்டுமே கடந்த 20 ஆண்டுகளுக்கும்  மேலாக 
அறிவியல் பூர்வமான மார்க்சியக் கல்வியை
மக்களுக்கு வழங்கி வருகிறது. வேறு எவரும் அல்லது
எந்த அமைப்பும் அறிவியல் வழியிலான மார்க்சியக்
கல்வியை வழங்கவில்லை, வழங்குவது பற்றிச் 
சிந்திக்கவும் இல்லை என்பதுடன், அவர்களால்
வழங்கவும் இயலாது என்ற உண்மையையும் 
நியூட்டன் அறிவியல் மன்றம் அறிந்தே வைத்திருக்கிறது.

அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், சமூக ஊடகம் 
(print electronic and social media) ஆகிய மூன்று ஊடகங்களிலும் 
நியூட்டன் அறிவியல் மன்றம் அறிவியலையும்,
அறிவியல்பூர்வமான மார்க்சியத்தையும் பரப்பி 
வருகிறது.

அறிவியலும் சரி, மார்க்சியமும் சரி மிகுதியும் 
ஆங்கில மொழியிலேயே உள்ளன என்ற கசப்பான 
உண்மையை உணர்ந்துள்ள நியூட்டன் அறிவியல் 
மன்றம், தாய்மொழியாம் தமிழில் மார்க்சியத்தையும் 
அறிவியலையும் பரப்பி வருகிறது.

தமிழ்ச் சமூகம் அறிந்திராத, தமிழக மார்க்சியர்கள் 
அறிந்தே இராத பல்வேறு விஷயங்களை நியூட்டன் 
அறிவியல் மன்றம் மட்டுமே அறிமுகப் படுத்தியது.
அயன் ராண்டு முதல் அன்வர் ஹோக்சா வரை 
(Ayn Rand to Enver Hoxha) மார்க்சிய வாசகர்களுக்கு 
அறிமுகப்படுத்தியது நியூட்டன் அறிவியல் மன்றமே.
இமானுவேல் கான்ட்டை ஒரு தத்துவஞானியாக 
மட்டுமே அறிந்திருந்த மார்க்சியர்களுக்கு அவர் ஒரு 
சிறந்த விஞ்ஞானியும்கூட என்ற உண்மையை 
முதன் முதலில் தெரியப் படுத்தியது நியூட்டன் 
அறிவியல் மன்றமே. மார்க்ஸாலஜி, மார்க்ஸாலஜிஸ்ட் 
(Marxologist) என்ற கருத்தாக்கங்களை முதன் முதலில் 
தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப் படுத்தியதே 
நியூட்டன் அறிவியல் மன்றம்தான். இவ்வாறு சொல்லிக் கொண்டே போவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. 

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பணிகளுக்கு 
எதிர்ப்பு இல்லாமல் இல்லை. பத்தாம் பசலி 
மார்க்சியர்களும் மார்க்சியச் சிந்தனைக் குள்ளர்களும்
அறிவியல்பூர்வமான மார்க்சியத்தைக் கடுமையாக 
எதிர்த்தனர். இவர்களின் அறிவு மட்டமான (level of intelligence)
அணில் ஆணி இலை ஈக்களுக்கு மேலாக எந்த ஒரு 
துளி அறிவும் மார்க்சியர்களுக்குச் சென்று சேர்ந்து 
விடக்கூடாது என்று இத்தற்குறிகள் விரும்பினர். 

நவீனப் பார்வையோ தேவையான மார்க்சிய அறிவோ 
இல்லாத இக்கிணற்றுத் தவளைகள் தங்களைத் 
தாங்களே மார்க்சியப் பேரறிஞர்களாக நினைத்துக் 
கொண்டு அனுபவித்து வந்த சுயஇன்பம் எமது 
அறிவியல் வழி மார்க்சியத்தால் முடிவுக்கு வந்தது.

வேறு சில குட்டி முதலாளித்துவ அற்பர்களின் கள்ள 
மௌனம், கண்டு கொள்ளாமை, புறக்கணிப்பு
ஆகிய அனைத்தும் முடிவுக்கு வந்தன. அறிவியலின் 
பிரம்மாண்டம் சகல குட்டி முதலாளித்துவப் பிற்போக்குக்  
கசடுகளையும் எரித்துச் சாம்பலாக்கியது. எனவே 
விண்ணதிரும் முழக்கங்களுடன் நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் அறிவியல் தேர் முன்னேறிச் செல்கிறது.
*************************************************************  
--------------------------------------------------------------------------------------------------------------------------




    








     










  







        







         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக