சனி, 11 ஆகஸ்ட், 2018

கலைஞர் மறையாத சூரியன் என்னும்
வினவு இணையதளத்தின் நிலைபாடு
குறித்த விமர்சனம்!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
மக்கள் அதிகாரம் என்னும் ஒரு அமைப்பு
கலைஞரின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி
செலுத்தி உள்ளது. அவர்களின்  "வினவு" என்னும்
இணைய தளத்தில் "திமுக தலைவர் கலைஞர்
மு கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரத்தின்
அஞ்சலி" என்னும் கட்டுரை வெளியாகி உள்ளது
(நாள்: ஆகஸ்டு 7, 2018).

மேலும் அவ்வமைப்பின் அரசவைக்கவிஞர்
துரை சண்முகம் எழுதிய கலைஞருக்குப்
புகழஞ்சலி செலுத்தும் "மறையாத சூரியன்"
என்னும் கவிதையும் வெளியாகி
வினவு இணைய தளத்துக்குப் பெருமை
சேர்க்கிறது. கவித்துவத்தின் உச்சம் தொடும்
கவிதைகளை மட்டுமே படைக்கும் கவிஞர்
துரை சண்முகம் இக்கவிதையிலும் அழகியலின்
மானுட சாத்தியம் அனைத்தையும் அடைந்து
விடுகிறார்.

மாநில அமைப்புக் கமிட்டி (CPI ML SOC) என்னும்
மார்க்சிய லெனினிய அமைப்பின் மக்கள்திரள்
அமைப்புதான் "மக்கள் அதிகாரம்" ஆகும்.
கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும்
"மக்கள் அதிகாரம்" அமைப்பின் கட்டுரை  
சாராம்சத்தில் மாநில அமைப்புக் கமிட்டியின்
கொள்கைப் பிரகடனமாகவே கருதப்படும்..

இக்கட்டுரையானது மார்க்சிய லெனினிய
வெளிச்சத்தில் கலைஞரை மதிப்பிடாமல்
கலைஞர் மீதான ரசிக மனநிலையின்
வெளிப்பாடாகவும் தகுதியற்ற புகழாரங்களை
வலிந்து கலைஞருக்குச் சூடுவதாகவும்
அமைந்துள்ளது. சுப வீரபாண்டியன், மதிமாறன்
வகையறாக்களே நாணும் அளவுக்கு, லெனினுக்கு
நெருக்கமாக கலைஞரைச் சித்தரித்து விடுகிறார்
கட்டுரையாளர்.

கவிஞர் துரை சண்முகமோ மாவோவுக்கு
நெருக்கமாக கலைஞரைக் கொணர்ந்து
விடுகிறார். கட்டுரை கவிதை இரண்டையும்
படிக்கும் வினவு இணையதள வாசகர்கள்,
கலைஞரை மாவோ அல்லது லெனின் யாருடன்
ஒப்பிடுவது என்ற பட்டிமன்றத்தைத் தங்கள்
மனங்களில் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

இவ்வளவுக்குப் பின்னும் மாநில அமைப்புக்
கமிட்டியினரை ஒரு பின்நவீனத்துவ நிறைவின்மை அலைக்கழிக்கக் கூடும். புரட்சிப் பாடகர்
கோவன், கலைஞரை மார்க்சுடன் ஒப்பிட்டு
ஒரு பாடலைப் பாடிய பின்னரே மாநில
அமைப்புக் கமிட்டியினர் சாந்தி அடையக்
கூடும்.

கடந்த சில ஆண்டுகளாகவே புதிய ஜனநாயகம்
இதழ், வினவு இணையதளம் ஆகியவற்றின்
வாயிலாக மாநில அமைப்புக் கமிட்டியானது
திமுகவுக்கு நெருக்கமாக இருந்து வந்தது. கடந்த
2016 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கும்
மனநிலையை வாக்காளரிடம் ஏற்படுத்தும்
நோக்கில், ரயில் பயணத்தில் ஒரு உரையாடல்
என்ற வடிவிலான, அநேகமாக தோழர் மருதையன்
எழுதிய ஒரு கட்டுரை பு.ஜ.வில் வெளியானது.

தொடர்ந்து பழ கருப்பையா போன்ற திமுக
தலைவர்கள் மாநில அமைப்புக் கமிட்டியின்
மக்கள் திரள் அமைப்புகளின் மேடைகளில்
பெரும் கெளரவத்தைப் பெற்றார்கள்.

தற்போதைய கட்டுரையானது  மேற்கூறிய
நிகழ்வுகளின் தர்க்கரீதியான முடிவாக
அமைந்து (logical culmination), திமுகவுடனான
நெருக்கத்தை அதிகாரபூர்வமாகப்
பிரகடனம் செய்துள்ளது. இதன் மூலம் திமுகவை
நேசசக்தியாக அங்கீகரிப்பதும், ரசிக
மனநிலையுடன் கலைஞரை மகத்தான 
ஆளுமையாகப் போற்றுவதுமான நிலைபாட்டுக்கு
ஒரு சட்டபூர்வ அந்தஸ்தை (canonical status) வழங்கி
உள்ளது மாநில அமைப்புக் கமிட்டி.

திமுக ஒரு "போனபார்ட்டிஸ்ட்" கட்சி (Bonapartist party)
என்ற மாநில அமைப்புக் கமிட்டியின் கடந்த கால
வரையறை நம் நினைவுக்கு வருகிறது. அத்துடன்
ஒப்பிடும்போது இன்றைய நிலைபாடானது
ஒரு மாபெரும் வழிவிலகல் (paradigm shift) ஆகும். 

ஆர்வக் கோளாறு மிகுந்த "மக்கள் அதிகாரம்"
அமைப்பின் யாரோ ஒரு பொறுப்பாளர்
மிகவும் தற்போக்காக (casually) இந்த அஞ்சலிக்
கட்டுரையை எழுதி விட்டார் என்று கருத
இயலாது. நன்கு திட்டமிட்டும், பின்விளைவாகப்
பெருமளவில் கண்டனங்கள் வரக்கூடும் என்ற
எதிர்பார்ப்புடனுமே, இந்த நிலைபாடு மாற்றம்
அறிவிக்கப் பட்டிருக்கிறது. இப்படிக் கருதுவதற்கே  
அதிகமான நிகழ்தகவு (probability) உள்ளது.       

தனது முந்திய நிலைபாட்டைத் தலைகீழாக
மாற்றிக் கொள்ளும் உரிமை மாநில அமைப்புக்
கமிட்டிக்கு உண்டு. முந்திய நிலைபாட்டில்
இருந்து மாறிய, தற்போதைய நிலைபாடு
இதுதான் என்று அவர்கள் அறிவித்து
இருக்கிறார்கள். நிலைபாட்டை மாற்றிக்
கொண்டோம், உலகத்தாரே என்னும் இந்த
அறிவிப்பு வரவேற்கத் தக்கதே.

இன்ன விஷயத்தில் இன்னதுதான் எங்கள்
நிலைபாடு என்று அறிவிக்கும் துணிவின்றி,
வாயில் கொழுக்கட்டை அடைத்துக்கொண்டு
பலரும் திரியும் ஒரு சூழலில், இதுதான் தங்களின்
நிலைபாடு என்று மாநில அமைப்புக்
கமிட்டியினர் அறிவித்திருப்பது நல்ல அம்சமே.

அதே நேரத்தில், தங்களின் நிலைபாட்டு
மாற்றத்திற்கான தர்க்க நியாயங்களை
தமிழ்ச் சமூகத்திற்கு அறிவிக்க
மாநில அமைப்புக் கமிட்டியினர் கடமைப்
பட்டுள்ளனர். போனபார்ட்டிஸ்ட் கட்சி
எவ்வாறு புரட்சிகரக் கட்சியாக பரிணாமம்
அடைந்தது என்று அறிந்து கொள்ள தமிழ்ச்
சமூகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மாநில அமைப்புக் கமிட்டியின்
இந்த நிலைபாட்டு மாற்றம், மார்க்சிய
லெனினியத்தில் இருந்து பெரும் பிறழ்வு என்று
நிரூபிக்கும் கட்டுரையை நியூட்டன் அறிவியல்
மன்றம் அடுத்து வெளியிடும்.
******************************************************             




 



 









  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக