சனி, 11 ஆகஸ்ட், 2018

தோழர் திருமேனி அவர்களுக்கு,


1) கம்யூனிஸ்ட் அறிக்கையை நன்கு படிக்கவும்.
குறிப்பாக, பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும்
என்ற அத்தியாயத்தைப் படிக்கவும். தற்போது
என் கைவசம் தமிழ்ப் பதிப்பு இல்லை. ஆங்கில
வாசகங்கள் வருமாறு:-
(கம்யூனிஸ்ட் அறிக்கையில் இருந்து)

The bourgeoisie, historically, has played a most revolutionary part.
The bourgeoisie, wherever it has got the upper hand, has put an end
to all feudal, patriarchal, idyllic relations.......................................

2) கலைஞரின் ஆரம்பகால முற்போக்கான
பாத்திரம் என்ன என்பதை எமது கட்டுரையின்
முதல் மூன்று பத்திகள் குறிப்பிடுகின்றன.
அவற்றுள் நெருக்கடி நிலையை எதிர்த்து
உறுதியுடன் போராடியதையும் குறிப்பிட்டு
உள்ளேன்.

3) நெருக்கடி நிலையின் போது அன்றைய
இளைஞனான நான் பலருக்கும் மறைவிடம்
(ஷெல்ட்டர்) ஏற்பாடு செய்ததில் நேரடி
அனுபவம் உள்ளவன். அன்றைக்கு ஸ்கூட்டர்,
ஆட்டோ போன்ற விஷயங்கள் எல்லாம்
தமிழ்நாட்டில் பல ஊர்களில் கிடையாது.
சைக்கிள் மட்டும்தான். அதிலும் சைக்கிளில்
டபுள்ஸ் போக அனுமதி கிடையாது. போலீஸ்காரன்
வரும்போது இறங்கி உருட்டிக் கொண்டுதான்
போக வேண்டும். கல்யாண சுந்தரம்,தா பா,
ப மாணிக்கம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள்
போலீசுக்கு காட்டிக் கொடுத்துக்கொண்டு
இருந்தபோது கலைஞரும் திமுகவினரும்
மட்டுமே பாசிச இந்திராவை எதிர்ப்பாளர்களுக்கு
உறுதுணையாக .இருந்தனர். இது வரலாறு.
 இதெல்லாம் கலைஞரின் முற்போக்கான
பாத்திரம் ஆகும்.

4) நெருக்கடி நிலையின்போது உயிர் வாழும்
உரிமை உண்டா என்று உச்சநீதிமன்ற நீதிபதி
கேட்டபோது, "இல்லை மை லார்ட்" என்று
தலைமை அட்டார்னி ஜெனெரல் கூறியதை
நீங்கள் அறியாமல் இருக்கலாம். நெருக்கடி நிலை
என்றால் என்ன என்று அறிந்துள்ள எவரும்
கலைஞரின் பங்கை அங்கீகரிக்காமல்
இருக்க முடியாது.

5) ஒருவரை மதிப்பிடும்போது அவரின் நன்மை
தீமை ஆகிய இரு அம்சங்களையும் கணக்கில்
கொண்டே மதிப்பிட இயலும். இதுதான் அறிவியல்.

6) ஆரம்பகால  முதலாளித்துவத்தையும்
கலைஞரையும் ஒப்பிட்டு தாங்கள் எழுப்பி
இருக்கும் கேள்விகள் மிகுந்த சிறுபிள்ளைத்
தனமானவை. அல்லது விதண்டா வாதம் ஆகும்.

7) ஒரு குறிப்பிட்ட அளவிலான புரிதல் மட்டம்
உடையவர்களை மனதில் கொண்டு எமது
கட்டுரை எழுதப் பட்டுள்ளது. தங்களின்
கேள்விகளில் இருந்து தாங்கள் எமது
கட்டுரையைப் புரிந்து கொள்ளவில்லை என்றும்
புரிந்து கொள்ளப் போவதும் இல்லை என்று
புலப்படுகிறது. இந்நிலையில் தங்களுடன் ஒரு
உரையாடலோ அல்லது காத்திரமான (meaningful)
விவாதமோ நிகழ்த்த இயலாது. இதை மிகுந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

8) இளைஞரான தாங்கள் மார்க்சியத்தை
மேலும் கற்று, புரிதல் மட்டத்தில் உயர்வடைந்த
சிறந்த மார்க்சியவாதியாக மலர வாழ்த்துகிறேன்.
நன்றி; வணக்கம்.
==============================================
திருவாரூர் இடைத்தேர்தலில் நிற்க
ராஜாத்தி அம்மாள் விருப்பம்! அண்ணா
மறைந்த பின் அண்ணாவின் மனைவியார்
ராணி அம்மாள் MLC ஆனதைச் சுட்டிக் காட்டுகிறார்! 


   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக