ஞாயிறு, 19 ஜூன், 2016

ஒரே ஒரு பொன்னாரை தமிழ்நாடு தாங்கும்!
எட்டுக்கோடிப் பொன்னார்களை நாடு தாங்குமா?
சமஸ்கிருத ஆதரவும் எதிர்ப்பும்!
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------
சமஸ்கிருதத்தை யார் வேண்டுமானாலும்
ஆதரிக்கலாம்; யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம்.
இந்த இரண்டுக்கும் (ஆதரவு, எதிர்ப்பு) ஒவ்வொரு
இந்தியக் குடிமகனுக்கும் உரிமை உண்டு. நூறு சதம்
உரிமை உண்டு.

அதே நேரத்தில் ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும்
சரி, சமஸ்கிருதத்தை அறிந்திருக்க வேண்டும். அதிலும்
சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் மிகக்  கண்டிப்பாக
சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள நிலைமையே வேறு.
எதைப் பற்றியும் ஒரு இழவும் தெரியாதவன்
தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் கருதிக்
கொண்டு, எல்லா விஷயத்தைப் பற்றியும் கருத்துச்
சொல்லிக் கொண்டு இருப்பான். அதாவது தன்னுடைய
அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பான்.

இப்படிப்பட்ட ஆட்கள் இன்று நேற்றல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர்
காலத்திலும் இருந்து இருக்கிறார்கள். அவர்களை
வள்ளுவர் கண்டிக்கிறார்.

அரங்கின்றி வட்டாடி  யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
என்கிறார் வள்ளுவர். (பொருள் தெரியாதவர்கள்
திருக்குறள் உரையைப் பார்க்கவும்)

சமஸ்கிருதம் பற்றி விவாதிக்கும்போது, சமஸ்கிருதம்
தெரிந்தவர்களுடன் மட்டுமே நான் விவாதிக்க
விரும்புகிறேன். இதில் ஏதேனும் தவறு உள்ளதா?
நிச்சயமாக நான் பொன்னாருடன் விவாதிக்க
விரும்பவில்லை.

ஏற்கனவே நான் Centripetal force குறித்தும், differential calculus
குறித்தும் சார்பியல் கோட்பாடு குறித்தும் பலமுறை
விவாதித்து இருக்கிறேன். IIT, JEE தேர்வின் கணக்குகள்
குறித்து விவாதித்தும் விடை எழுதியும் இருக்கிறேன்.
இந்த விவாதங்களில் என்னுடன் பங்கேற்றவர்கள்
அனைவரும் அறிவியலும் கணிதமும் நன்கு
அறிந்தவர்கள். அறியாதவர்கள் ஒதுங்கிச் சென்று
விட்டனர்.

இதுபோலவே, சமஸ்கிருதம் குறித்த விவாதத்திலும்
சமஸ்கிருதம் அறிந்தவர்களுடன் மட்டுமே நான்
விவாதிக்க விரும்பினால், அது எப்படித் தவறாகும்?

ஒரே ஒரு பொன்னார் தமது அறியாமையை நாணத்துடன்
அறிக்கையிட்டார். ஆனால் தமிழ்நாட்டில் எட்டுக் கோடி
பொன்னார் இருக்கிறார்கள். இவர்கள் யாரும்
பாவ சங்கீர்த்தனம் செய்யவில்லை. செய்யவும்
மாட்டார்கள் இவர்கள். இவர்கள் அரங்கின்றி
வட்டாடுவதில் ஈராயிரம் ஆண்டுப் பாரம்பரியம்
உடையவர்கள் அல்லவா?

என் பள்ளிக்  காலத்தில் இந்தியோ சமஸ்கிருதமோ
எங்கள் ஊரில் (நெல்லை) பள்ளிகளில் கற்றுத்
தரப்படவில்லை. என் தலைமுறைக்கு வாய்த்த அவலம் இது.
என் சமஸ்கிருத அறிவு சுயமாகக் கற்றுக் கொண்டதன்
மூலம் அடைந்ததுதான். இது முறைசாராக் கல்வியே.

நான் சமஸ்கிருத ஆரம்ப இலக்கணம் கற்றபோது,
சமஸ்கிருத மொழியில் மூன்று பால் (GENDER)
இருப்பதை அறிந்தேன். ஆண்பால்,
பெண்பால், அலிப்பால் (புருஷ லிங்க, ஸ்திரி லிங்க,
நபும்சக லிங்க). அதே போல, எண் (NUMBER) என்பதும்
மூன்று வகையாக (ஒருமை, இருமை, மும்மை)
இருப்பதை அறிந்தேன்.

ஒரு மொழியைப்  பற்றி விவாதிக்கும்போது, அம்மொழி
சார்ந்த அறிவு துளியும் இல்லாத நிலையில்,
அந்த விவாதம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்க இயலும்?

எனவேதான், மிக எளிய மிகவும் பிரபலமான இரண்டு
சமஸ்கிருத சுலோகங்களைக் கொடுத்து, அவற்றின்
பொருள் அறிந்தோருடன் உரையாடலாம் என எண்ணி,
அவற்றின் பொருள் கூறுமாறு கேட்டிருந்தேன்.
 எவரும் பொருள் கூறவில்லை. எனவே நானே கூறத்
தலைப்படுகிறேன்.

-------கட்டுரை தொடரும்-------------
பின்குறிப்பு: இப்பொருளில் அமைந்த முந்திய
கட்டுரைகளைப் படித்திருப்பது நன்று.
*****************************************************************

இந்தக் கட்டுரையும் சரி, இதற்கு முந்திய கட்டுரைகளும்
சரி எந்த விதமான திணிப்பும் பற்றிப் பேசவில்லை.
சமஸ்கிருதம் பற்றிய மறைமலை அடிகளின் கருத்தை
விவாதிப்பவை இக்கட்டுரைகள். சமஸ்கிருதத்தின்
சக்கரவர்த்தி யார் என்றால், அவர்  மறைமலை அடிகள்தான்.
அதைப்போலவே, சமஸ்கிருதத்தைச் சங்கரித்தவர்
(சம்ஹாரம் செய்தவர்) யார் என்றால், அவரும் மறைமலை
அடிகள்தான்.
**
மறைமலை அடிகளின் கருத்தே எங்கள் கருத்து.
இக்கட்டுரை மறைமலை அடிகளைச் சார்ந்து
அமைகிறது. அவரின் கருத்துக்களைப் பற்றிய
விவாதத்திற்கு, சமஸ்கிருத அறிவு தேவை.

இந்தக் கட்டுரை முந்திய கட்டுரைகளின் தொடர்ச்சி
என்பதால், அருள் கூர்ந்து முந்திய கட்டுரைகளை
வாசிக்குமாறு  வேண்டுகிறோம்.  

    
       
கேள்விக்கான விடையை திரு காளிதாசன் சாமிநாதன்
அவர்கள் கூறி விட்டார். மேலும் அவர் ஒரு செய்தியும்
கூறி இருக்கிறார். அவர் பேறு பெற்றவர். காளிதாசரின்
சமஸ்கிருதக் காவியம் சாகுந்தலம். அதைத் தமிழில்
மொழிபெயர்த்தவர் மறைமலை அடிகள். அதை
கல்லூரியில் பாடமாகப் படிக்கும் பேறு பெற்றவர்
நண்பர் காளிதாசன் சாமிநாதன்.  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக