புதன், 22 ஜூன், 2016

அனுமனும் அனுராதாவும்!
அனுசூயாவும் தியாகய்யரும்!
------------------------------------------------------------------------
அனுமனுக்காக தனி ஒரு காண்டமே இயற்றி
இருக்கிறார் கம்பர். சுந்தர காண்டம். அனுமன்
என்பது ஹனுமன் என்ற சமஸ்கிருதச் சொல்லின்
தமிழ் வடிவம்.

ஹனு என்றால் என்ன பொருள்? கன்னத்து எலும்பு
என்று பொருள். ஹனுமன் என்றால் கன்னத்து
எலும்பினன் என்று பொருள். அதாவது  உடைந்து
போன கன்னத்து எலும்பை உடையவனே ஹனுமன்.
ஆக, ஹனுமன் என்பது காரணப் பெயர். இடுகுறிப்
பெயர் அல்ல.

ஹனுமனின் கன்னத்து எலும்பு ஏன் உடைந்தது
என்பதற்கு ஒரு கதை உண்டு. புராணக் கதை.
ஹனுமன் சிறு குழந்தையாக இருக்கும்போது,
ஒரு முறை சூரியனைப் பார்த்தான். சிவந்த பழம்
போல சூரியன் அவனுக்குத் தோன்றியது. உடனே
சூரியனை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

இதனால் உலகமே இருண்டு போக, அரசர்களும்
முனிவர்களும் ஹனுமனின் தந்தையிடம் முறையிட்டனர்.
ஹனுமனின் தந்தை யார் தெரியுமா? மாருதி!
அதாவது வாயு பகவான். மாருதம் என்றால் காற்று.

 மாருதம் என்றவுடன், "ஆளையா உனக்கு அமைந்தன
மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை "
என்ற கம்பனின் பாடல் நினைவுக்கு வருகிறதா?
இதில் வரும் "ஆளையா" என்ற சொல்லுக்கு
பத்து விதமாக அர்த்தம் சொல்லுவார் கிருபானந்த
வாரியார். நிற்க. 

மாருதி ஹனுமனிடம் வந்து பலவாறாகக் கெஞ்சியும்,
வாய்க்குள் உள்ள சூரியனைத் துப்ப மறுத்து
விட்டான் குழந்தை ஹனுமன்.  இதனால் கோபம்
கொண்ட மாருதி, கதாயுதத்தால் ஹனுமனின்
கன்னத்தில் ஓங்கி அடிக்க, அதன் பிறகே வலி
பொறுக்க முடியாமல் ஹனுமன்  சூரியனைத்
துப்பினான். விழுந்த அடியால், ஹனுமனின்
கன்னத்து எலும்பு உடைந்து விட்டது. அவன்
ஹனுமன் என்று பெயர் பெற்றான்.  

அனுராதா என்ற பெயர் தமிழ்ப் பெண்களுக்கு
வைக்கப்படும் பெயர். இதில் வரும் அனு
அனுதான்; ஹனு இல்லை. அதாவது அனுராதாதான்;
ஹனுராதா இல்லை.

அனுபல்லவி என்ற சொல் அனைவரும் அறிந்த
சொல்லே. பல்லவிக்குப் பின் வருவது அனுபல்லவி.
ஆக, அனு  என்றால் பிறகு, பிந்திய என்று பொருள்.

அனுபந்தம் என்ற சொல்லும் அறிமுகமான சொல்லே.
பந்தம் என்றால் உறவு, கட்டு என்று பொருள்.
அனுபந்தம் என்றால் பிற்சேர்க்கை என்று பொருள்.

அப்படியானால், அனுராதா என்றால்...? ராதாவுக்குப்
பிறகு வந்தவள் அனுராதா. அவ்வளவுதான்.

அப்படியானால், அனுசூயா என்றால் என்ன பொருள்?
சூயாவுக்குப் பிறகு வந்தவள் என்று பொருள்
கொள்வதா? கூடாது. அது மடமை. அனு+சூயா
என்று பிரிக்கக் கூடாது.

அசூயை என்ற சொல் நன்கு பழகிய சொல்லே.
அருவருப்பு என்று பொருள். அநசூயை என்றால்
அசூயை அற்றவள் என்று பொருள். அசூயையான
எண்ணங்கள் மனதில் அண்டாத வண்ணம்
வாழ்ந்தவள் அநசூயை. இவள் அத்திரி முனிவரின்
மனைவி.

அசூயைகள் (தப்பான விஷயங்கள்) அண்ட  முடியாத
விதத்தில் உள்ளத்  தூய்மையுடன் வாழ்ந்தவள்
அநசூயை. அப்படி வாழ எத்தனை பேரால் முடியும்?

தியாகய்யருக்கே அப்படி வாழ்க்கை அமையவில்லையே!
உலகம் போற்றும் இசைச் சக்கரவர்த்தியான
தியாகய்யர் நொந்து கொள்கிறாரே!

தியாகய்யரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பற்றி
முந்திய கட்டுரையில் ஒரு சிறு குறிப்புத் தந்தேன்.
இப்போது இன்னொரு பஞ்ச ரத்ன கீர்த்தனையைப்
பார்ப்போம்.

துடுகு கல நன்னே தொர கொடுகு
புரோச்சுரா எந்தோ

கடு துர் விஷயா க்ருஷ் டுடை
கடிய கடிய கு நிண்டாரு

பொருள்: இவ்வளவு குறும்புத்தனம் உடைய
என்னை எந்த இளவரசன் காப்பாற்றுவான்?
தீய விஷயங்களில் மனம் செல்லக் கூடாது
என்று  முயன்றும்கூட, மனம் வெகு வேகமாக
அவற்றில் செல்கிறதே!

ஆக, தியாகையராலும் இயலாத வாழ்க்கையை
அநசூயா வாழ்ந்திருக்கிறாள்! வாழ்க அனசூயை!
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: வாழும் தியாகய்யர் டி எம் கிருஷ்ணா
அவர்களின் கீர்த்தனைகளைக் கேளுங்கள்!
பின்குறிப்பு-2: இக்கட்டுரையில்  கம்பனின் ஒரு
விருத்தத்தில் முதல் இரண்டு அடிகளைக்
குறிப்பிட்டுள்ளேன். பிந்திய இரண்டு அடிகளை
வாசகர்கள் எழுதி, அந்தப் பாடலை நிறைவு
செய்யுமாறு வேண்டுகிறேன்.
****************************************************************



     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக