வியாழன், 4 மே, 2017

பொருள்முதல்வாதம் ஏன் செல்வாக்குப் பெறவில்லை?
அறிவியல் உளப்பாங்கு ஏன் ஏற்படவில்லை?
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------
உலகெங்கும் அறிவியல் அசுரத் தனமாக வளர்ந்து
வருகிறது. அறிவியலின் வளர்ச்சிக்கு ஒத்திசைவாக
தத்துவங்களும் வளர வேண்டும். என்றாலும்
தத்துவங்களால் அறிவியலுடன் போட்டி போட
முடியாமல் பின்தங்கி உள்ளன.

தத்துவங்களை இரு பெரும் பிரிவுகளாகப்
பிரித்தார் ஏங்கல்ஸ். :அவையாவன:-
1) பொருள்முதல்வாதம் (materialism)
2) கருத்துமுதல்வாதம் (idealism)

பொருள்முதல்வாதம் என்பது கடவுளை மறுக்கிற
தத்துவம்; கருத்துமுதல்வாதம் என்பது கடவுளை
ஏற்கின்ற தத்துவம். இது ஒரு எளிமையான புரிதல்.

இந்திய தமிழகச் சூழலில், கருத்துமுதல்வாதம்
ஒப்பீட்டளவில் முன்னேறி உள்ளது. அது
பொருள்முதல்வாதத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளது.
வாழ்வியல் துறைகள் அனைத்திலும் கருத்து முதல்வாதம்
பரவலாக அனைவராலும் தழுவிக் கொள்ளப்பட்டு
வருகிறது. அறிவியல் தற்குறி (scientifically illiterate)
தேசமான இந்தியாவில் இது இயல்பானதே.

தமிழகத்தில் ஆண்டுதோறும், எவ்வளவு குறைத்து
மதிப்பிட்டாலும், ஒரு லட்சம் பொறியியல் பட்டதாரிகள்
படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். பிற
அறிவியல் படிப்புகளையும் (BSc, M.Sc முதலியன)
சேர்த்துக் கணக்கிட்டால், குறைந்தது, ஆண்டுதோறும்
மொத்தம் இரண்டு லட்சம் அறிவியல் பட்டதாரிகள்
வெளியே வருகின்றனர். இந்த மில்லேனியத்தின்
பின்னான, அதாவது 2000ஆம் ஆண்டிற்குப் பிந்திய
நிலைமை இது.

இருப்பினும் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு
பொருத்தமாக, சமூகத்தில் மக்களிடையே அறிவியல்
உளப்பாங்கு (scientific temper) வளரவில்லை. இது உண்மை.

மாறாக, கருத்து முதல்வாதச் சிந்தனைப் போக்குகளும்
கருத்து முதல்வாத உளப்பாங்கும் மக்களைப்
பற்றிக் கொண்டு நிற்கின்றன. இதற்குக் காரணம்
மூடர்களும் தற்குறிகளும் பொதுவெளியில் உள்ள
அனைத்து விதமான கருத்து வெளியீட்டுத்
தளங்களையும் கைப்பற்றிக் கொண்டு இருப்பதே. மேலும் பொருள்முதல்வாதமும் அறிவார்ந்த தளத்தில்,
தத்துவத் தளத்தில், கருத்து முதல்வாதத்தை எதிர்த்துச்
சமர் புரியாமல் இருப்பதே.

பொருள்முதல்வாதம் போர்க்குணம் மிக்கதாக
இருக்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்துவார்.
போர்க்குணமற்ற பொருள்முதல்வாதத்தை
கருத்துமுதல்வாதம் விழுங்கி விடும்.

ஒவ்வோராண்டும் படிப்பை முடித்து வெளியே வரும்
இரண்டு லட்சம் அறிவியல்-பொறியியல் பட்டதாரிகளின்
நடுவே எவ்வளவு தூரம் பொருள்முதல்வாதம்
செல்வாக்குச் செலுத்துகிறது என்று ஆராய்ந்து
பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
**************************************************************
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக