ஞாயிறு, 24 ஜூன், 2018

(5) இமானுவேல் கான்ட்டைப் பின்பற்றும் ஞானி!
திரிசங்கு சொர்க்கத்தில் கான்ட்டும் ஞானியும்!
ஞானிக்கு மறுப்பு கட்டுரையின் 5ஆம் பகுதி!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
கருத்துமுதல்வாதப் பிரிவின் தலைசிறந்த தத்துவஞானி
ஜெர்மனியின் இமானுவேல் கான்ட் (Immanuel Kant 1724-1804)
ஆவார். பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில் ஆகியோரின்
கருத்துமுதல்வாதத்தை விட ஆயிரம் மடங்கு
புரட்சிகரமான கருத்துமுதல்வாதத்தை கான்ட்
முன்வைத்தார். நவீன தத்துவத்தின் நாயகனாக
இன்றளவும் கான்ட் போற்றப் படுகிறார்.
 கிறிஸ்துவ இறையியல் (Christian Theology) என்பது
பிளேட்டோ அரிஸ்ட்டாட்டில் ஆகிய இருவரின்
சாரமே. கான்ட்டின் தத்துவம் அதை விஞ்சி நிற்பது.

கிபி எட்டாம் நூற்றாண்டில் அத்வைதத்தை
உருவாக்கிய ஆதிசங்கரர் கருத்தை அதீத உயரத்தில்
வைத்தும் பொருளை மறுத்தும் ஒரு செயற்கைத்
தன்மையை தமது அத்வைதத்தில்  ஏற்படுத்தி
இருந்தார். இதனால் அவரின் அத்வைதம்
பொலிவிழந்தது.

ஆனால் கான்ட்டின் தத்துவம், முந்தைய
கருத்துமுதல்வாதத் தத்துவங்களின் குறைகளைக்
களைந்து நிறைகளைக் கொண்டதாக உள்ளது.
அவரின் Critique of Pure Reason (தூய அறிவு பற்றிய
விமர்சனம்) என்ற நூல் உலகப் புகழ் பெற்றது.

ஞானியும் இமானுவேல் கான்ட்டும்!
----------------------------------------- ---------------------
ஞானி எந்தத் தத்துவத்தைப் பின்பற்றுகிறார்?
அவர் இமானுவேல் கான்ட்டைப் பின்பற்றுகிறார்.
கான்ட்டின் தத்துவம் கருத்துமுதல்வாதமாக
இருந்தபோதிலும், அதில் பொருள்முதல்வாதக்
கலப்பும் உண்டு. எனவேதான் பொருள்முதல்
வாதமும் கருத்துமுதல்வாதமும் சேர்ந்த
ஒரு சேர்க்கையே மனித குலத்திற்குத் தேவை
என்கிறார் ஞானி.. (பார்க்க: எமது கட்டுரை பகுதி-3)

ஞானியின் மெய்யியல் என்பது கான்டிசமே
(Kantism). எனவேதான் பொருள்முதல்வாதம்
கருத்துமுதல்வாதம் என்னும் இவ்விரண்டின்
சேர்க்கையை அவர் ஆதரிக்கிறார் என்பதை
எமது மூன்றாவது கட்டுரையில் சுட்டிக்
காட்டினோம்.

கான்ட்டின் தத்துவம் என்ன சொல்கிறது?
-------------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் களத்துக்கு வந்த காலத்தில்
ஜெர்மனியிலும் ஐரோப்பாவிலும் கான்டின்
தத்துவம் பெரும் செல்வாக்குடன் இருந்தது.
கான்ட்டைக் கற்ற மார்க்சும் எங்கல்சும்
தயக்கமின்றி அவரை நிராகரித்தனர்.என்றாலும்
கான்ட்டை ஏனைய கருத்துமுதல்வாதிகள்
போல் பத்தோடு பதினொன்றாக எங்கல்ஸ்
வைக்கவில்லை. அவருக்கு உரிய முக்கியத்துவம்
அளித்தே அவரை நிராகரித்தார் எங்கல்ஸ்.

சுயசிந்தனை என்பதை தமது தத்துவத்தில் ஆழமாக
வலியுறுத்தியவர் கான்ட். ஏற்கனவே உருவாக்கப்பட்ட
சட்டகத்துக்குள் (frame) அடங்குமாறு சிந்திக்கும்
டெம்ப்ளேட் சிந்தனையை கடுமையாக வெறுத்து
ஒதுக்கியவர் கான்ட். அரசின் அதிகாரத்துக்கும்
நிறுவனங்களின் அதிகாரத்துக்கும் ஆட்படாமல்
சுதந்திரமாகச் சிந்திப்பவனே ஞானம் பெற முடியும்
என்று போதித்தவர் கான்ட்.

டெம்ப்ளேட் சிந்தனை முறையின் மூலம் அடிமைகளை
உருவாக்க முடியுமே தவிர, சுதந்திர மனிதனை,
ஞானம் பெற்ற மனிதனை உருவாக்க முடியாது
என்றார் கான்ட். யார் எவருடைய எந்த அமைப்பு
நிறுவனத்துக்கும் ஆட்படாத, எந்த அதிகாரத்துக்கும்
உட்படாத சுதந்திர சிந்தனையே ஞானத்தைப்
பெற்றுத் தரும் என்றார் கான்ட். கான்ட்டின்
அறிவுக் கோட்பாடு  (Theory of knowledge) இதைத்தான்
கூறுகிறது.

கான்ட்டின் சீடரே ஞானி!
-------------------------------------------
இப்போது மீண்டும் ஞானியிடம் வருவோம். ஞானி
கூறும் கருத்துக்கள் அனைத்தும் கான்ட்டின்
தத்துவத்தின் விளைபொருளே (derivative of Kantism).
இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில்
டெம்ப்ளேட் சிந்தனைதான் அனுமதிக்கப் படுமே
அன்றி சுயசிந்தனைக்கு இடமில்லை என்று
உணர்ந்த ஞானி பின்னாளில் எந்தவொரு
கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தும் இயங்க
முடியாதவராக இருந்தார். கட்சிகள் இறுகிக்
கெட்டிப்பட்டு விடுகிறபோது, பலர் கட்சிக்கு
வெளியில்தான் இருக்க நேரிடும் என்றவர் ஞானி.

ஆக, ஞானியை எதிர்க்க வேண்டுமெனில்,
கான்ட்டை எதிர்க்க வேண்டும். கான்ட்டை
எதிர்க்க வேண்டுமெனில், முதலில் கான்ட்டைப்
படிக்க வேண்டும். குறைந்தபட்சம் அவரின்
Critique of Pure Reason (தூய அறிவு பற்றிய விமர்சனம்)
என்ற நூலைப் படிக்க வேண்டும். மொத்த
இந்தியாவிலும் நாலைந்து பேர் இந்த நூலைப்
படித்திருந்தால் அது பெரிய விஷயம். இங்கு
நாலைந்து பேர் என்னும்போது  மார்க்சிய முகாமில்
உள்ளவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்.
பூர்ஷ்வா முகாமில் ஆயிரக் கணக்கானோர்
கான்ட்டின் இந்த நூலைப் படித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில் கான்ட்டின்
இந்த நூல் கிடைக்கிறது. ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கடினமான
மொழிநடை. பெரும் புலமை இருந்தால்
மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஞானியின் குறுக்குவெட்டுத் தோற்றம்!
--------------------------------------------------------------------
ஒரு கைதேர்ந்த இன்ஜினியர் ஓர்க் ஷாப்பில்
ஒரு மெஷினை பார்ட் பார்ட்டாகக் கழற்றிப்
போட்டு பழுதுகளை (fault) கண்டுபிடிப்பது
போல, மூத்த மார்க்சிய அறிஞர் ஞானியை,
அவரின் தத்துவத்தை அக்கு வேறு ஆணி வேறாகப்
பிரித்து இக்கட்டுரையில் காட்டியுள்ளேன்.
ஞானியின் குறுக்கு வெட்டு, நெடுக்கு வெட்டுத்
தோற்றங்களை, இதுதான் இப்படித்தான் என்று
இக்கட்டுரையில் காட்டுகிறேன்.

ஞானியை அம்பலப்படுத்தி முறியடிக்கும்
இந்தப் பணியை நான் ஒருவன் மட்டுமே
செய்கிறேன். என்னைத் தவிர வேறு யார் எவரும்
செய்யவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.

மற்றவர்கள் செய்தது எல்லாம் ஞானியை வசை
பாடியதும், அவதூறு செய்ததும் மட்டுமே. ஞானி
என்கிற வயதில் மூத்த அந்த மனிதரை நான்
வணங்குகிறேன். ஆனால் அவரின் தத்துவத்தை
நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டுள்ளேன்.
மீண்டும் சொல்கிறேன்; இதை நான் ஒருவன்
மட்டுமே செய்கிறேன்.

தன்னுடை ஆற்றல் உணரார் இடையில்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே.
.....................நன்னூல்..............................
,  

ஞானி ஏற்படுத்திய சேதாரங்கள்!
-----------------------------------------------------------
தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கம்யூனிஸ்ட்
கட்சிகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கியவர்
ஞானி. ஆனால் இதை அ மார்க்ஸ் போன்று
அவர் வன்முறையால் செய்யவில்லை.
ஞானி பார்வை .இழந்தவர் என்பதை
வாசகர்கள் கவனத்தில் கொள்க.

அறிவாளிப் பகுதியினர் பலர் (intellectual section)
அவரிடம் வந்து சேர்ந்தனர். அவர்களை ஈர்க்கும்
ஆற்றல் அவரிடம் இருந்தது. தமது கொள்கைகளை
அவர்களிடம் அவர் அழகாகக் கொண்டு சேர்த்தார்.
விளைவு: கம்யூனிஸ்ட் கட்சிகளை நாடி வர
வேண்டிய நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான
இளைஞர்களும் இளம் பெண்களும் கான்ட்டின்
தத்துவத்தால் கவரப் பட்டனர்.

குறிப்பாக, சோவியத்தின் வீழ்ச்சி, தொடர்ந்த
கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சி ஆகியவை
நிகழ்ந்த தொண்ணூறுகளில் கணிசமான
இளைஞர்கள் மார்க்சியத்தை விட்டு
வெளியேறினர்.இவர்கள் ஞானியிடம் பாடம்
கற்றவர்கள்.

ஞானிக்கு யார் எவரும்  அல்லது எந்தக் கம்யூனிஸ்ட்
கட்சியும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அதற்கான
தகுதி படைத்த மார்க்சிய அறிவுஜீவிகளுக்கு
கட்சிகளில் பஞ்சம். இதுதான் உண்மை. இதை
ஒத்துக்கொள்ள எல்லோரும் மறுப்பார்கள்.

நியூட்டன் அறிவியல் மன்றம் ஞானி, நாகராஜன்
ஆகிய இருவரையும் கருத்தியல் களத்தில் சந்தித்து
முறியடிக்க ஆற்றலுடன் ஆயத்தமாக உள்ளது.
எனவே. மார்க்சியத்தின் மீது அக்கறை சிறிதேனும்
உள்ளவர்கள் நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
இந்த முயற்சிக்கு முழு ஆதரவு கொடுக்கக்
கடமைப் பட்டவர்கள் ஆகிறார்கள்.

அதே நேரத்தில் யார் ஆதரித்தாலும், ஆதரிக்க
மறுத்தாலும் எனது தேர் எதிரியின் கோட்டை
கொத்தளங்களுக்குள் நுழைந்து  அடித்து
நொறுக்கும். ஏனெனில் நான் அசகாய சூரன்.
--------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
சகாயம் = உதவி. அசகாயம் = உதவி பெறாமல்
அசகாய சூரன் என்றால் எவருடைய உதவியையும்
பெறாமல் சொந்தமாகவே செயல்படும் ஆற்றல்
உள்ள பெருவீரன் என்று பொருள். அசகாய சூரன்
என்பதைக் கம்பன் "கூட்டு ஒருவரையும்
வேண்டாக் கொற்றவன்" என்கிறான்.  
********************************************************


 





                 

  

 



       
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக