வெள்ளி, 29 ஜூன், 2018

(9) மார்க்சியப் போப்பாண்டவர் யார்?
கிறிஸ்துவத்தை மார்க்சியத்துடன் ஒப்பிடுவது சரியா?
நாகராஜனின் ஆதரவாளர்கள் முன்வைக்கும்
வாதங்களும் அவற்றின் முதுகெலும்பை முறிக்கும்
எமது பதில்களும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
1883ல் மார்க்ஸ் மறைந்தார். அதன் பிறகு 12 ஆண்டுகள்
வாழ்ந்த எங்கல்சும் 1895ல் மறைந்தார். இவ்விருவரின்
மறைவைத் தொடர்ந்து  தத்துவார்த்த மார்க்சியத்தில்
ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அப்போது ரஷ்யப் புரட்சி
நடந்திருக்கவில்லை. அது 1917ல் நடந்தது. எனவே
இளைஞரான லெனின் மார்க்சியத் தலைமைக்கு
வந்திருக்கவில்லை.
  
ஆனால் எங்கல்சின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட
வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்பினார் ஒருவர்.
அவர்தான் காவுத்ஸ்கி. இவரின் முழுப்பெயர்
காரல் காவுத்ஸ்கி (Karl Kautsky 1854-1938).

இந்தப் பெயரைக் கேட்டதுமே பலர் தீயை மிதித்தது
போல அலறலாம். ஏனெனில் "துரோகி காவுத்ஸ்கி"
என்று லெனினால் தூற்றப்பட்டவர் காவுத்ஸ்கி.
"பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி
காவுத்ஸ்கியும்" (The proletarian revolution and renegade Kautsky)
என்ற லெனினின் நூலைப் படித்தவர்கள்
அனைவரும் காவுத்ஸ்கியை துரோகி என்றே
அறிவார்கள்.

காவுத்ஸ்கி துரோகி ஆனது எப்போது? முதல் உலகப்
போரைத் தொடர்ந்த ரஷ்யப் புரட்சி
நிகழ்ந்த 1917 காலக்கட்டத்தில்தான். அதற்கு முன்பு
வரை காவுத்ஸ்கி மகத்தான மார்க்சிய
சிந்தனையாளராகப் போற்றப் பட்டவர்தான்.

எங்கல்ஸ் மறைந்த 1895 முதல் 1919 வரையிலான
இரு பத்தாண்டுக் காலம் முழுவதும் காவுத்ஸ்கியே
மகத்தான மார்க்சிய சிந்தனையாளராகத்
திகழ்ந்தார். மார்க்ஸ், எங்கல்ஸ், காவுத்ஸ்கி
என்று மார்க்சிய மூல ஆசான்களின் வரிசையில்
மூன்றாம் இடத்தில் இருந்தவர் காவுத்ஸ்கி.
இது வரலாறு. பின்னாளில் துரோகியாகாமல்
இருந்திருந்தால், மார்க்சிய மூல ஆசான்களில்
காவுத்ஸ்கி ஒருவராக ஆகியிருப்பார்.

லண்டனில் சிறிது காலம் வாழ்ந்த காவுத்ஸ்கி
அங்கு வாழ்ந்த எங்கல்ஸின் முக்கிய சீடர் ஆனார்.
காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின்
தொடர்ச்சியான உபரி மதிப்புக் கோட்பாடு
என்ற நூலை எடிட் செய்து வெளியிடும் பணியை
எங்கல்ஸ் காவுத்ஸ்கியிடம் ஒப்படைத்தார். 

இத்தகைய காவுத்ஸ்கி 1908ல் ஒரு நூல் எழுதினார்.
கிறித்துவத்தின் அடிப்படைகள் என்பதே அந்நூல்.
(Foundations of christianity: A study of christian origins).
முன்னதாக "சோசலிசத்தின் முன்னோடிகள்"
(Forerunners of socialism) என்ற நூலையும் எழுதி இருந்தார்
காவுத்ஸ்கி.

இவ்விரு நூல்களிலும் அவர் கிறிஸ்துவத்தை
சோசலிஷத்துடன் ஒப்பிட்டு எழுதி இருப்பார்.
கிறிஸ்துவத்தின் புரட்சிகர அம்சங்களை
விவரித்து இருப்பார். இதன் காரணமாக அவர்
மார்க்சியப் போப்பாண்டவர் என்று
ரஷ்ய போல்ஷ்விக்குகளால் கேலியாக
அழைக்கப் பட்டார்.   

1917ல் நடந்த நவம்பர் புரட்சியானது மக்களைத்
திரட்டி நடைபெற்ற புரட்சி அல்ல; அது வெறும்
அரண்மனைக் கவிழ்ப்புச் சதி (palace coup) என்று
கூறியவர் காவுத்ஸ்கி. லெனினும் டிராட்ஸ்கியும்
புரட்சியாளர்கள் அல்ல பயங்கரவாதிகள் (terrorists)
என்று கூறியவர் காவுத்ஸ்கி.

காவுத்ஸ்கியின் கருத்துக்களைத் தங்களின்
நிலைபாட்டுக்கு ஆதரவாக ஞானி, நாகராஜன்
தரப்பினர் முன்வைக்கின்றனர். கிறிஸ்துவம்
புரட்சிகரமானது என்று காவுத்ஸ்கி
கூறுவாரேயானால், வைணவம் புரட்சிகரமானது
என்று கூறுவதில் என்ன தவறு?

இந்தியத் துணைக்கண்டத்தில் இனக்குழுச்
சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில்,
வர்க்க வேறுபாடுகளே தோன்றியிராத காலத்தில்
படைக்கப்பட்ட நால்வகை வேதங்கள் (ரிக், யஜுர்,
சாம அதர்வண வேதங்கள்) புரட்சிகரமானவை
அல்லவா என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இத்தகைய வாதங்கள் அனைத்தின் முதுகெலும்பை
முறிக்கும் பதில்களை நியூட்டன் அறிவியல் மன்றம்
அளிக்கிறது. கிறிஸ்துவம் புரட்சிகரமான மதம் அல்ல.
கிறிஸ்துவம் மட்டுமல்ல எந்தவொரு மதமும்
எந்தக் காலத்திலும் புரட்சிகரமானதாக இருந்ததே
இல்லை.
----------------------------------------------------------------------------------------
தொடரும்
-------------------------------------------------------------------------------------   

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக