வியாழன், 23 ஜூலை, 2015

எழுவர் விடுதலையும் 
குட்டி முதலாளித்துவக் கோழைகளும்!
-------------------------------------------------------------
சற்றேறக்குறைய கால்நூற்றாண்டு காலத்தைச் சிறையில் 
கழித்து விட்ட ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை 
செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான ஒன்றுதான்.
என்றாலும் இந்தக் கோரிக்கை வெற்றி அடைந்திட, சட்டபூர்வமான 
வழிமுறைகளை மட்டும் நம்பி இருப்பது பரிதாபத்துக்கு உரியது.
**
ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படியும் அதற்கான 
விளக்கத்தின் பேரிலும் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படும்.
இந்நிலையில் எழுவர் விடுதலைக்கான ஒரே வழி, சாதகமான 
தீர்ப்பைப் பெறுவது மட்டுமே என்று நம்பி இருப்பது 
பேதைமை ஆகும்.
**
மக்கள் போராட்டங்களே எழுவரின் விடுதலையைப் பெற்றுத் 
தரும். தமிழ்நாடெங்கும் பரவலாக, எழுவரின் விடுதலையைக் 
கோரி மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெறும்போதுதான் 
ஆள்வோரின் கவனம் ஈர்க்கப்பட்டு, விடுதலைக்குச் சாதகமான 
கருத்துருவாக்கம் நிகழ்ந்து நிர்ப்பந்தம் செலுத்தும்.   
**
அவ்வாறு, பரவலாக, மக்கள்திரள் போராட்டங்கள் நடைபெறு
வதற்கு ஒரு முன்நிபந்தனை உள்ளது. ராஜீவ் கொலை 
நியாயமானது என்று மொத்தத் தமிழர்களும் (அல்லது 
பெரும்பான்மையான தமிழர்கள்) கருத வேண்டும். தமிழ்ச் 
சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி ராஜீவ் கொலை நியாயமானதே 
என்று குரல் எழுப்ப வேண்டும். இது சாத்தியமா? இவ்வாறு 
நிகழுமா? 
**
இதற்கான வாய்ப்பே இல்லை. ராஜீவ் கொலை நியாயமே என்று 
உரத்துச் சொல்ல ஒருவர் கூட இல்லை இத்தமிழ்நாட்டில்.
எழுவர் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசிய 
அமைப்புகள் எதுவும், நெடுமாறன். வைகோ, மணியரசன்,
தியாகு, திருமுருகன் காந்தி, சீமான் இன்ன பிற 
தலைவர்களின் அமைப்புகள் இந்தக் கருத்தை என்றுமே 
தமிழ் மக்களுக்குச் சொல்லவில்லை.சொல்லப் போவதும் 
இல்லை. அவர்களிடம் அப்படி ஒரு கருத்தே இல்லை.
**
பஞ்சாப்பில் சீக்கியர்கள் ஒரு சமூகம் என்ற முறையில் 
இந்திரா காந்தியின் கொலை நியாயமே என்று கருதுகின்றனர்.
இந்திராவின் கொலையாளிகளைக் கொண்டாடுகின்றனர்.
ராஜீவ் நடத்திய சீக்கிய இனப் படுகொலைக்கு எதிர்வினையாக
குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய புல்லார் சீக்கிய சமூகத்தால் 
கொண்டாடப் படுகிறார். புல்லாரும் காங்கிரசுக்குப் பாடம் 
கற்பிக்கவே, தாம் வெடிகுண்டுகளை வெடித்ததாகத் 
தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறார். சீக்கியர்களிடம் போலித் 
தனம், பாசாங்கு இவற்றுக்கெல்லாம் இடமில்லை என்பது 
போற்றத் தக்கது.
**
மயிர் பிளக்கும் வாதங்களை நடத்தியோ, ராம் ஜெத்மலானியின்
ஆற்றல் மீது  நம்பிக்கை வைத்தோ எழுவர் விடுதலையைப் 
பெற்று விடலாம் என்பது பகல் கனவே. இது சட்டவாதத்தில்  
மூழ்கிக் கிடக்கும் குட்டி முதலாளித்துவக் கோழைகளின் 
கையாலாகாத் தனத்தை எடுத்துக் காட்டுவதாகும்.
**
போராளிகள் அநீதியாகச் சிறை வைக்கப் பட்டிருந்தால்,
சிறை உடைப்புச் செய்து அவர்களை விடுதலை செய்ய 
வேண்டும் என்பதே மார்க்சிய லெனினியம் போதிக்கும் 
வழிமுறையாகும். நக்சல்பாரி இயக்கத் தலைவர் தோழர் 
கொண்டபள்ளி சீத்தாராமய்யாவை சிறை உடைப்புச் 
செய்து விடுவித்தனர் மக்கள் யுத்தக் கட்சித் தோழர்கள்.
அவர்களிடம் ஆயுதப் படை இருந்தது.
**
நம்முடைய குட்டி முதலாளித்துவத் தலைவர்களிடமும் 
படை இருக்கிறது. இது dermatology சார்ந்த படை.
************************************************************
  
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக