புதன், 19 அக்டோபர், 2016

(17) பின்னுரை (Epilogue)
---------------------------------------
ரங்கநாயகம்மா நூலை ஏன் ஆதரிக்க வேண்டும்?
இந்த நூலை எதிர்ப்போர் பிற்போக்காளர்களே!
மார்க்சியத்தின் எதிரிகள் மட்டுமே இந்த நூலை
எதிர்க்கிறார்கள்!
--------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------------
1) "சாதியப்  பிரச்சினைக்குத் தீர்வு ......."என்ற
ரங்கநாயகம்மாவின் நூல், மார்க்சியத்தை உயர்த்திப்
பிடிக்கிறது. அடையாள அரசியலுக்குச் சம்மட்டி அடி
கொடுக்கிறது.

2) 1980களில் இந்திய அரசியல் அரங்கில் நுழைந்த
பின்நவீனத்துவம், கடந்த முத்தாண்டுகளில்,
மார்க்சியத்தை வெகுவாக பலவீனப் படுத்தி,
அதனிடத்தில் அடையாள அரசியலை வைப்பதில்
வெற்றி பெற்றுள்ளது.

3) அடையாள அரசியலானது பின்நவீனத்தின்
தத்துவார்த்தப் பின்புலத்தில் மார்க்சியத்துடன்
சமர் புரிந்து வருகிறது. இந்தச் சமரில், மார்க்சியம்
தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், அடையாள
அரசியலை முறியடிக்கவும் ரங்கநாயகம்மாவின்
இந்த நூல் கேடயமும் வாளுமாக மார்க்சியத்தின்
கரங்களில் சுழல்கிறது. இது வெறும் நூல் அல்ல.
இது அரசியல் கருத்தாயுதம் ஆகும்.

4) ஏகாதிபத்திய நிதியில் இயங்கி, இந்தியாவின்
வர்க்கப் போராட்ட அரசியலைச் சீர்குலைக்கிற,
என்.ஜி.ஓ அமைப்புகள், தங்கள் எடுபிடிகள் மூலம்
இந்த நூலின் மீது அவதூறுகள் பரப்பி வருகின்றனர்.

5) எஸ்.வி.ராஜதுரை, அ மார்க்ஸ், வ கீதா போன்ற
என்.ஜி.ஓ சக்திகள், அடையாள அரசியலுக்குப்
பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தும் இந்த நூலுக்கு
தமிழ் வாசக உலகில் ஏற்பட்டு இருக்கும் வரவேற்பைக்
கண்டு கதிகலங்கிப் போய் நிற்கிறார்கள். மிகுந்த
வன்மத்துடன் தங்கள் எஜமான விசுவாசத்தைக்
காட்டும் இவர்கள் ரங்கநாயகம்மாவுக்கு எதிராக
வரிந்துகட்டிக் கொண்டு நின்று தோல்வி
அடைகிறார்கள்.

6) மார்க்சிய லெனினியத்தை லேபிளாகவும், என்.ஜி.ஓ
அரசியலை உள்ளடக்கமாகவும் கொண்டிருக்கிற சில
சக்திகள் ரங்கநாயகம்மாவின் நூல் ஒரு மார்க்சிய
நூல் அல்ல என்கிறார்கள். இந்த என்.ஜி.ஓ. ஆதரவாளர்கள்
எஸ்.வி.ராஜதுரை, வ கீதா ஆகிய என்.ஜி.ஓ.
அரசியல்வாதிகளைத் தூக்கிப் பிடிக்கிற போது,
இவர்களின் மார்க்சிய வேடம் கலைந்து விடுகிறது.

7) சுருங்கக் கூறின், என்.ஜி.ஓ. எடுபிடிகளும், சாதிய
அடையாள அரசியல் பிழைப்புவாதிகளும்,
பின்னவீனத்துவ தாசர்களுமே இந்த நூலை
எதிர்க்கிறார்கள். அவர்களின் பிழைப்பில் இந்த
நூல் மண்ணைப் போடுவதாலும், திரளான மக்களை
அடையாள அரசியலின் விலங்குகளில் இருந்து
விடுவித்து, மார்க்சியத்தை நோக்கி ஆற்றுப்
படுத்துவதாலும் பிற்போக்குச் சக்திகள் இந்த நூலை
எதிர்க்கின்றன.

8) ரங்கநாயகம்மாவின் நூலைக் கருத்துத் தளத்தில்
சந்திக்க இந்த நூலின் எதிர்ப்பாளர்களால் இயலவில்லை.
இதனால் அவர்கள் அவதூறுகள், வசைகள்
ஆகியவற்றில் புகலிடம் தேடுவது இயற்கையே.

9) மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் இந்த நூலைத்
திறனாய்வு செய்து, மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
இதுவரை 16 கட்டுரைகள் கொண்ட ஒரு தொடரை
வெளியிட்டு இருக்கிறது. நூலின் எதிர்ப்பாளர்களால்
எமது திறனாய்வுக்குப் பதில் சொல்ல இயலவில்லை.
எனவே எமது திறனாய்வு நிலைபேறு உடையதாக
நிரூபிக்கப் பட்டுள்ளது.

10) புரையோடிப் போயிருக்கும் அடையாள அரசியலை
அறுத்தெறியாமல், மார்க்சியத்துக்கு வாழ்க்கை இல்லை.
அடையாள அரசியலோடு மார்க்சியம் சமாதான
சகவாழ்வு வாழ இயலாது. அடையாள அரசியலுடன்
பிரகடனம் செய்யப்பட ஒரு போரை மார்க்சியம்
மேற்கொள்ளாமல், இந்தியாவில் மார்க்சியத்துக்கு
எதிர்காலம் இல்லை. இந்தச் சூழலில்
ரங்கநாயகம்மாவின் நூல், இந்த திசைவழியில்
மக்களை ஆற்றுப் படுத்துகிறது.
******************************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக