வியாழன், 6 அக்டோபர், 2016

மூலதன வகுப்புகளும்
பித்துக்குளி முருகதாசுகளும்!
------------------------------------------------------------------------------------------
பி. இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: 1) சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு,
                           காரல் மார்க்ஸ் ஆக்கிய
                           தாஸ் காப்பிடல் என்ற நூலே
                           மூலதனம் என்று இங்கு
                           குறிப்பிடப் படுகிறது  

முன்குறிப்பு: 2) பித்துக்குளி முருகதாஸ் என்பவர்
                           1960களில் தமிழ்நாட்டில் பிரபலமாக
                            இருந்த முருக பக்திப் பாடகர்.

சென்னை நகரில் கடந்த சில ஆண்டுகளாக
மூலதன வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இருபதாம் நூற்றாண்டையே தலைகீழாகப்
புரட்டிப் போட்ட மூலதனம் நூலை, தமிழ் வாசகர்கள்
கற்பதற்கு உதவியாக இத்தகைய வகுப்புகள்
நடைபெற்று வருகின்றன.

கார் ஓட்டத் தெரிந்தவர்கள்,
ஓட்டத் தெரியாதவர்களுக்குக்  
கற்றுக் கொடுப்பது போல,
மூலதனத்தைக் கற்றவர்கள்
மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்
முயற்சியாகவே இவ்வகுப்புகள் அமைகின்றன.
கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பது என்ற உவமை
ஆகச் சிறந்த உவமையாகும். ஏனெனில்,
கற்றுக் கொடுப்பவர் என்னதான் சிறப்பாகக்
கற்றுக் கொடுத்தாலும், கற்றுக் கொண்டவர்தான்
காரை ஓட்ட வேண்டும்; சுயமாக ஓட்ட வேண்டும்.
அதுபோல, மூலதனத்தை வாசிப்பது எப்படி என்று
கற்றுக் கொடுக்கிறார்கள் இவ்வகுப்புகளில்.
கற்றுக்  கொள்பவர்கள்தாம் மூலதனத்தை
வாசிக்க வேண்டும்.ஒருவர் தாமே சுயமாக
மூலதனத்தை வாசிக்க, புரிந்துகொள்ள
வழி வகுப்பவை இவ்வகுப்புகள்.

கற்றலும் கற்பித்தலும்   உயர்ந்த செயல்பாடுகள்.
எனவே அந்த அடிப்படையில் (கற்றல்-கற்பித்தல் என்ற 
அடிப்படையில் ) இவ்வகுப்புகள்
வரவேற்கத் தகுந்தவை.

மூலதன வகுப்புகள் தொடக்கப் பள்ளி வகுப்புகள் அல்ல.
அவை முனைவர் பட்ட வகுப்புகள். அடிப்படை
மார்க்சியம், பொருளாதாரம் ஆகியவற்றில்
நன்கு தேர்ச்சி பெற்ற பிறகுதான் மூலதனத்தைக்
கற்க இயலும். மேலும் மூலதனம் ஒரு
இலக்கியமும் ஆகும்.மூலதனக் கல்வி 
ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களில்
ஒரு குறிப்பிட்ட அளவு தேர்ச்சியைக் கோருவது ஆகும்.

மார்க்ஸ் மிகச் சிறந்த இலக்கியச் சுவைஞர்
மட்டுமல்லர்; அவர் மிகச் சிறந்த
படைப்பிலக்கியவாதியும் ஆவார்.
மார்க்சின் மூலதனத்தில் சேக்ஸ்பியர்
வெகுவாக இடம் பெறுவார். ஜெர்மானியக் கவிஞர்
கதே, இத்தாலியக் கவிஞர் தாந்தே ஆகியோரின்
மேற்கோள்களும் மூலதனத்தில் வெகுவாக
இடம் பெற்றுள்ளன. தாந்தேயின்
"DIVINE COMEDY "யின் கவிதை வரிகள்
மூலதனத்தில் இடம் பெற்றுள்ளன.
மூலதனத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும்
அதன் வாசிப்பு இன்பத்தை ( TEXTUAL PLEASURE )
நுகரவும் இலக்கியப் பயிற்சி அவசியம், குறிப்பாக
மறுமலர்ச்சிக் கால இலக்கியங்களில்.

மூலதனமும் தொல்காப்பியமும் 
---------------------------------------------- 
மூலதனத்தைத்  தொல்காப்பியத்துடன் 
ஒப்பிட முடியும்.இந்த வரியைப் படித்தவுடன் 
நுனிப்புல் வாசகர்கள்  துள்ளிக் குதிக்கலாம்.
தமிழ் இலக்கணம் கூறும் வடிவ உவமை, 
வண்ண உவமை, தொழில் உவமை, பண்பு உவமை 
ஆகியவற்றை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

கற்றல், கற்பித்தல் மட்டுமின்றி,
தற்கால நடப்புடன் பொருந்துதல் 
என்பதிலும் மூலதனத்தையும் 
தொல்காப்பியத்தையும் ஒப்பிட முடியும்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் 
கூறும் நல்லுலகில் தொல்காப்பியம் கற்றவர்கள் 
வெகு சிலரே.தமிழ் அறிஞர்கள், ஆய்வு மாணவர்கள்,
தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்றவர்கள் 
என்று தொல்காப்பியம் பயின்ற  வட்டம் 
மிகவும் சுருங்கிய ஒன்று . தமிழ் நாட்டுப் பல்கலைக் 
கழகங்களில் முதுகலை வகுப்புகளின் 
பாடத்திட்டத்தில்தான் தொல்காப்பியம்   
இடம் பெற்றுள்ளது.இளங்கலை வகுப்பு வரை 
நன்னூல்தான்.( நன்னூல் என்பது பவணந்தி முனிவர் 
இயற்றிய இலக்கண நூல்).

சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கலைஞரின் 
தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீட்டுக்கு 
நான் சென்றிருந்தேன்."ரோமாபுரிப் பாண்டியன்"
போன்றோ திருக்குறளுக்கான கலைஞர் உரை 
போன்றோ இருக்கும் என்று நம்பிப் பலரும் 
தொல்காப்பியப் பூங்கா நூலை வாங்கினர்.
அஃது ஓர் இலக்கண நூல் என்று அறிந்து 
அதை வாசிக்க இயலாமல் 
ஏமாற்றம் அடைந்தனர்.எனது தி.மு.க நண்பர்கள் 
சிலர் தாங்கள் வாங்கிய நூலை என்னிடம் 
ஒப்படைத்து விட்டனர்.ஒரு கட்டத்தில் என்னிடம்  
இப்படிப் பத்து நூல்கள் சேர்ந்து விட்டன.
    
நான் இளம்பூரணம், சேனாவரையம் 
வாயிலாகத் தொல்காப்பியம் கற்றவன்.
எனவே "கலைஞம்" எனக்குப் பெரிதாகப் 
பயன்படவில்லை. ( சேனாவரையரின் உரை   
சேனாவரையம் என்பதுபோல், கலைஞரின் 
உரை  கலைஞம் எனப்படும்.).முந்திய 
வாக்கியத்தின் மூலம் நான் எவ்விதத்திலும் 
கலைஞரின் மாண்பைக் குறைத்து விடவில்லை 
என்பதைப் பதிவு செய்கிறேன்.

"மியா இக மோ மதி இகும் சின்" என்னும் 
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்"    
   (தொல், இடையியல், நூற்பா:759)
என்கிறது தொல்காப்பியம்.

"மியா இக மோ மதி அத்தை இத்தை 
வாழிய மாள   ஈயாள  முன்னிலை அசை"
என்கிறது நன்னூல். மொழி தொடர்ந்து 
இயங்கிக் கொண்டிருப்பது.எனவேதான் 
காப்பியமும் நன்னூலும் வேறுபடுகின்றன.
எனினும் இவை இரண்டும் கூறும் முன்னிலை 
அசைகள் எவையும் இன்று வழக்கில் இல்லை.
("காமம் செப்பாது கண்டது மொழிமோ" 
என்பதில் வரும் மோ என்பது முன்னிலை அசை) 

தமிழ் கற்ற அனைவரும் ஓரளவு 
நன்னூல் கற்றிருப்பது இயற்கை.ஆனால் 
தொல்காப்பியத்தின் நிலை அவ்வாறு அன்று.

"படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி 
புடை கெடப் போகிய செலவே புடைகெட 
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் 
முற்றின் ஆகிய புரத்திறை முற்றிய" 
...........................................................................
............................................................................
     (தொல் புறம் நூற்பா: 1007) 
என்றவாறு பதினான்கு துறைகளைக் கொண்ட 
வெட்சித்திணைக்குத் தொல்காப்பியம் கூறும் 
இலக்கணம் இன்று பொருந்துவது இல்லை.
(பகைவரின் பசுக்கூட்டங்களைக் கைப்பற்றும் 
செயல் குறித்துக் கூறுவது வெட்சித் திணை)

பெயரெச்சம் என்றால் என்ன?,
வினையெச்சம் என்றால் என்ன?,
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்துக்குச்  
சான்று தருக என்றெல்லாம் தமிழ்நாட்டுப் 
படிப்பாளிகளைக் கேட்டால்  99 விழுக்காட்டினர் 
கால் வழியே கழிந்து விடுவர் என்பதை 
அனைவரும் அறிவோம்.இத்தகைய சூழலில் 
தொல்காப்பியத்தைக்  கற்பிப்பது என்பது 
பகீரதப் பிரயத்தனம் ( HERCULIAN  TASK )
அன்றி வேறென்ன?

இது போன்றதுதான் மூலதனத்தைக் 
கற்பிப்பதும். மூலதனத்தைக் கற்பிப்பதற்கும் 
கற்பதற்கும் பெரு முயற்சியும்  
கடும் உழைப்பும் தேவை.

அதேபோழ்து, மூலதனம் கற்றல்-கற்பித்தல் 
என்ற நிகழ்வின் ஊடாக ஒரு கேள்வி எழுகிறது;
அது பேருருவம் (விசுவரூபம்) கொள்கிறது 
150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட 
மூலதனம் இன்றைய சூழலுக்கு எவ்வாறு 
பொருந்தும்? என்பதே அக்கேள்வி.
HOW FAR IT IS RELEVANT TODAY? என்கிற கேள்வி 
எங்கும் வியாபித்து நிற்கிறது.

மூலதனம் என்பது முதலாளித்துவ சமூக 
அமைப்பின் தோற்றம், வளர்ச்சி,இயக்கம் 
ஆகியவற்றின் விதிகளைக் கூறும் நூல். 
அவ்வளவே! (JUST THAT'S ALL!) 
மூலதனத்தில் கூறியவண்ணம் இன்று 
உலகில் எந்த நாட்டிலும் முதலாளித்துவம் 
தோன்றி வளரப் போவதில்லை. ஏனெனில் 
முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியமாக 
மாறி விட்டது, வளர்ந்து விட்டது. இதைத் தொடர்ந்து 
இந்த யுகம் ஏகாதிபத்திய யுகம் என்று 
அழைக்கப் படுகிறது. இந்த யுகத்துக்குப் 
பொருத்தமான மார்க்சியமாக லெனினியம் 
பரிந்துரைக்கப் படுகிறது (PRESCRIBED).  

இச்சூழலில்  மூலதனத்தைக் கற்பது என்பது 
வெறுமனே ஒரு கல்வியியல் ஆர்வமாகச் 
(ACADEMIC INTEREST)  சுருங்கி விடுகிறது. 
ஆகவே மூலதனத்தைக் கற்பிப்பதும் கற்பதும் 
செயலூக்கமிக்க ஒரு பெருத்த மார்க்சியச் 
செயல்பாட்டுக்கு வித்திடும் என்று கருதுவது 
பேதைமையாகவே முடியும்.

மார்க்சியக் கல்வியைப் பொறுத்த மட்டில் 
முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் 
ஆயிரம் இருக்கின்றன.முருக பக்தர்களைப் 
போல் மார்க்சியர்கள் நடந்துகொள்ள முடியாது. 
மார்க்சின் புகழ் பாடுவது மட்டுமே மார்க்சியம் அல்ல.

"கிடக்கிற வேலை கிடக்கட்டும்,
கிழவியைத் தூக்கி மணையில் வை"
என்ற கதையாக மூலதன போதனை 
முக்கியத்துவம் பெறுவது ஏன்?   
இதற்கான சமூக அவசியம் என்ன?
அழுத்தமாக முன்வைக்கப்படும் இக்கேவிகள் 
நியாயமான பதிலைக் கோருகின்றன.

இந்நிலையில் மார்க்சியக் கல்வி குறித்து 
மூத்த மார்க்சிய அறிஞர் திரு. கோவை ஞானி 
கூறுவதைப் பார்ப்பது இங்கு .மிகவும் பொருத்தமானது.

"மார்க்சியம் கற்போம்: தேடலோடும் 
திறனாய்வோடும்"  என்ற கட்டுரையில் 
அவர் கூறுவதாவது:-
(மார்க்சியத்துக்கு  அழிவில்லை என்ற நூல்,
புதுப்புனல் வெளியீடு; டிசம்பர் 2001)

"மார்க்சியம் கற்பதற்கு எளிய வழி என 
ஒன்று இல்லை. தேடலோடும் திறனாய்வோடும்தான் 
மார்க்சியத்தைக் கற்க முடியும்; செரித்துக் 
கொள்ள முடியும்.மார்க்சியம் கற்பதற்கு 
எளிய முறையில் எழுதப்பட்ட பாடநூல்கள் 
பயன்பட முடியாது.பன்முகப் பரிமாணங்களை 
உடைய மார்க்சியத்தை ஒற்றைப் பரிமாணமாகக் 
குறைத்துச் சுருக்கித் தருகிற பாடநூல் கல்வி 
ஆபத்தாகவும் முடியும்.சுருக்கமாக வகுப்பறைகளில் 
மார்க்சியத்தைக் கற்கவும் முடியாது."

திரு ஞானி தொடர்ந்து கூறுகிறார்: 
" நமக்கான மார்க்சியத்தை நாம் தேடித் 
திறனாய்வோடு கற்பதற்கு நாம் 
சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்."

திரு ஞானி கூறுவதில் இரண்டு விஷயங்கள் 
முக்கியமானவை.

ஒன்று: தேடல்.நமக்குப் பொருத்தமான  
மார்க்சியத்தை நாம் தேடிப்  பிடித்துப் படிப்பது.
(இந்தியச் சூழலில் மாவோவை ஆழ்ந்து கற்பது 
என்பது இதன் பொருள்).

இரண்டு; திறனாய்வோடு கற்பது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் 
பற்றிப் படிக்கும்போது, பல்வேறு 
நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் 
இக்கோட்பாட்டை நிராகரிப்பது ஏன் என்ற 
கேள்விக்கான  விடையுடன் படிப்பது.
சோஷலிசம் பற்றிப் படிக்கும்போது,
ரஷ்யாவில் லெனினும் ஸ்டாலினும் 
கட்டியது சோஷலிசம் அல்ல, 
முதலாளித்துவமே என்ற கணிப்பின் 
மெய்மையை ஆராயும் நோக்குடன் படிப்பது.

"ஆராய்ந்து அமைவுடைய கற்கவே"
என்கிறது தமிழ் நீதிநூல். இதைத்தான்
திரு ஞானியும் கூறுகிறார். நானும் அதை 
வழிமொழிகிறேன்.

பின்குறிப்பு:
---------------------- 
இக்கட்டுரை பெருமுயற்சி எடுத்து     
மூலதனத்தைக் கற்பிக்கும் 
தோழர்களுக்கு எவ்விதத்திலும் 
பங்கமாக அமைந்து விடக்கூடாது 
என்ற கவனத்துடன் எழுதப் பட்டது.
போதகர்கள், ஆசிரியர்கள், கற்பிப்பவர்கள் 
ஆகியோர் மீது பெருமதிப்புக் கொண்டிருப்பது 
என்பது என்னுடைய மரபணுக்களிலேயே 
அமைந்த ஒன்று. எனவே, மூலதனம் 
கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் 
இக்கட்டுரை அவர்களுக்குப் பங்கம் 
சேர்க்கவில்லை என்று தெளிவார்கள் 
என்று நம்புகிறேன்.

************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக