சனி, 29 அக்டோபர், 2016

நுகர்வோரின் குரல்வளையை நெரிக்கும் போக்கும்
ஒரு நுகர்வோராக தன் குமுறலை
வெளிப்படுத்திய ஜெயமோகனும்!
----------------------------------------------------------------------------------------------------
நுகர்வோர் உரிமை பற்றிய வரலாறு!
1986க்கு முன் நுகர்வோருக்கு உரிமை கிடையாது!
====================================================
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில்
1986இல்தான் இயற்றப்பட்டது (Consumer Protection Act 1986).
இச்சட்டத்தின்படி, மூன்று அடுக்குகளைக் கொண்ட
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான நுகர்வோர்
பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கப் பட்டன.
அதற்கு முன்பு, நுகர்வோர் என்பவர்கள் எந்த
உரிமையும் அற்ற சதைப் பிண்டங்களாகவே
நடத்தப்பட்டு வந்தார்கள்.

ஆரம்பத்தில், உற்பத்திப் பொருட்கள் (products) மட்டுமே
இச்சட்டத்தின் வரம்பில் கொண்டு வரப்பட்டு இருந்தன.
பின்னர், பல்வேறு சேவைகள், வங்கிச் சேவை,
டெலிகாம் சேவை  உள்ளிட்டு இச்சட்டத்தின்
வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு, நுகர்வோர்
உரிமைகள் அங்கீகரிக்கப் பட்டன.

1990களில் டெலிகாம் சேவை நுகர்வோர் பாதுகாப்பு
வளையத்திற்குள் கொண்டுவரப் பட்டபோது,
அதற்கான ஒப்பந்தத்தில் அன்றைய டெலிகாம்
தொழிற்சங்கம் கையெழுத்திட்டது. இது நாடு
முழுவதும் ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியது. வாயில் கூட்டங்களில் ஊழியர்கள்
தொழிற்சங்கத் தலைவர்களை எதிர்த்து கண்டன
கோஷங்கள் எழுப்பினர்.

தந்திப் பகுதியில் ஊழியர்களின் கொந்தளிப்பு
அதிகமாக இருந்தது. இந்தியத் தந்திச் சட்டம்
(Indian Telegraph Act  1885) பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்
இயற்றப் பட்டது. அச்சட்டம், "தந்திகளின் துல்லியத்திற்கு
உத்தரவாதம் கிடையாது" (accuracy of telegrams is NOT guaranteed)
என்று அறிவித்து இருந்தது.

அதாவது, "சுமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது" என்று
ஒருவர் தந்தி கொடுத்து, " சுமதிக்கு பெண்
குழந்தை பிறந்தது" என்று அந்தத் தந்தி போய்ச்
சேருமானால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எந்த
இழப்பீட்டையும் கோர முடியாது.

நுகர்வோர் சட்டம் வந்த பின்னால், பாதிப்புக்கு
உள்ளான நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
என்றும், அந்த இழப்பீடு தவறு செய்த ஊழியரின்
சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்
என்றும் நிலைமை மாறியது. இது ஊழியர்களிடம்
கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதே போன்று
வங்கிச் சேவையில் குறைபாடு இருந்தால்,
தவறிழைத்த வங்கி ஊழியரின் சம்பளத்தில்
இருந்து நுகர்வோருக்கான இழப்பீடு பிடித்தம்
செய்யப்படும் என்று சட்டம் வந்தது.

இவ்வாறு நுகர்வோருக்கான இழப்பீடு வழங்கும்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட  டெலிகாம், வங்கி
ஊழியர்களின் சங்கங்களான NFTE, AIBEA ஆகியவையும்
இச்சங்கங்களின் பொதுச் செயலர்களான தோழர்கள்
ஓ.பி. குப்தா, வெங்கடாச்சலம் ஆகியோரும்
ஊழியர்களின் கண்டனங்களைச் சந்தித்தனர்.
ஆயினும், சமூகப் பொறுப்புடைய ஒரு தொழிற்சங்கம்
ஊழியர்களையும் நுகர்வோரையும் சமமாகக்
கருதல் வேண்டும் என்ற புரிதலை தொழிற்சங்கப்
பொறுப்பாளர்களான நாங்கள் எல்லாம் ஊழியர்களிடம் ஏற்படுத்தினோம்.

இந்த வரலாற்றை இவ்வளவு விஸ்தாரமாகச் சொல்வதன்
காரணம், நுகர்வோர் உரிமைகள் பற்றிய ஒரு
அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தும் பொருட்டே. நிற்க.

தற்போது, ஜெயமோகன் தொடர்பிலான நிகழ்வில்,
ஒரு வங்கிச் சேவை நுகர்வோரான ஜெயமோகன்
தமக்கு வங்கி வழங்கிய சேவையில் உள்ள
குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, தமது குமுறலை
வெளிப்படுத்துகிறார். இதற்கு அவருக்கு நூறு சதம்
உரிமை உண்டு. இது சட்டப்படியானது.

நோய் மனங்களே இதில் குறை காண முடியும்.
நுகர்வோர் உரிமை குறித்த எந்தப் புரிதலும் அற்றவர்களே
தற்குறிகளே இதில் குறை காண முடியும்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL (BSNL தொழிற்சங்கம்), சென்னை.
*************************************************************

வரும்; நிச்சயமாக வரும். ஏனெனில் அது "குமுறல்".
இங்கு பயன்படுத்தப் பட்டுள்ள "குமுறல்" என்ற
சொல்லாட்சியைக் கவனிக்கவும். ஒரு தொழிற்சங்கத்
தலைவராக, நுகர்வோர் பாதிப்பு குறித்த கணக்கற்ற
வழக்குகளில், ஊழியர்களின் சார்பாக, துறை சார்ந்த
விசாரணைகளில் (domestic inquiries) வாதாடி இருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் பல நிகழ்வுகளில்,
ஊழியர்களை இழிவாகத் திட்டியது உண்டு. ஆனால்,
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அவை பற்றி அக்கறை
கொள்வதில்லை.    

      

அடுத்து, "பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே
மோசமானது மாதிரி" என்று தோழர் ஜெயமோகன்
எழுதவில்லை. அது உங்கள் கற்பனை. அவர் ஒரு
பொதுத்துறையில் பணியாற்றியவர். பொதுத்துறைகள்
பற்றி நன்கு அறிந்தவர். பொதுத்துறையில் பணியாற்றிய
நாங்கள் அனைவரும் எங்கள் குறை-நிறைகளை நன்கறிவோம்.
எனவே, தோழர் ஜெயமோகன் சொல்லாததைச்
சொன்னதாகக் கூற வேண்டாம்.

ஒரு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் 25 ஆண்டு காலம்
பணியாற்றி, தொழிற்சங்க முன்னோடியாக இருந்து,
நடைபெற்ற அனைத்து வேலைநிறுத்தங்களிலும்
உணர்வு பூர்வமாகப் பங்கேற்று, வேலைநிறுத்தத்திற்கு
ஆதரவு தேடிப் பல கூட்டங்களில் பேசிய தோழர்
ஜெயமோகனை நாங்கள் அறிவோம். ஒரு தொழிற்சங்க முன்னோடியாக, அவரது track record போற்றுதலுக்கு உரியது.
அது குறித்து சான்றிதழ் வழங்க வேண்டியது நாங்களே
தவிர, மற்றவர்கள் அல்ல.
**
உலகப் புரட்சி பேசிய சிலர் கருங்காலிச் சங்கமான
INTUCயில் அடைக்கலமான போது, தோழர் ஜெயமோகன்
உறுதியாக எங்களுடன் (NFTE BSNL) நின்றார். அவர் எங்கள்
சங்கத்தின் தூண்களில் ஒருவராக இருந்தார் என்பது வரலாறு.


குட்டி முதலாளித்துவக் காடையர்கள் வன்மத்துடனும்
வெறியுடன் தங்களின் சீழ் பிடித்த வக்கிரத்தை வெளிப்படுத்தும்போது, அவர்களோடு சரிக்குச் சரியாக
மல்லுக்கு நிற்பது மூடத்தனம் என்பதால், தோழர்
ஜெயமோகன் மன்னிப்புக் கோரி, புத்திசாலித் தனமாக
இந்த விவகாரத்தை முடித்துக் கொண்டிருக்கலாம்.
நாங்கள் அக்கறை காட்டுவது ஜெயமோகன் என்ற
தனிநபர் மீதல்ல. அவர் எழுப்பிய ஒரு பிரச்சினை மீது.
எனவே தோழர் ஜெயமோகன் பிரச்சினையை முடித்துக்
கொண்ட பிறகும் இதை வளர்த்தக் கூடாது என்று
எவர் ஒருவரும் எங்கள் தொழிற்சங்கத்திற்குக் கட்டளை
இட  முடியாது.

திரு சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
தாங்கள் குட்டி முதலாளித்துவ நிலையில் இருந்து கொண்டு
இந்த விஷயத்தைப் பார்க்கிறீர்கள்; நாங்கள் பாட்டாளி
வர்க்க நிலையில் நின்று கொண்டு பார்க்கிறோம்.
எனவே இவ்விரு பார்வைகளிலும் பாரதூரமான
வேறுபாடு இருப்பது நியாயமே. இருவேறு உலகத்து
இயற்கை என்கிறார் வள்ளுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக