வெள்ளி, 20 மார்ச், 2015

(2) தமிழர் திருமணத்தில் தாலியும் 
தாலி அணிவது குறித்து 
தந்தை பெரியாரின் வழிகாட்டுதலும்!
----------------------------------------------------------------------
பகுதி:இரண்டு  
ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் 
சுயமரியாதைத் திருமணங்கள்! 
------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------
1925இல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் 
தொடங்கினார். சுயமரியாதைத் திருமணம் என்ற 
பண்பாட்டுப் புரட்சித் திட்டத்தை அறிவித்தார். இது முற்ற 
முழுக்க பெரியாரின் மண்டைச் சுரப்பு மட்டுமே. வேறு யாரும் 
இப்படிச் சிந்தித்ததுகூடக் கிடையாது.இந்தியத் துணைக்கண்டம் 
இப்படி ஒரு பண்பாட்டுப் புரட்சியை இதற்கு முன்னர் கண்டதும் 
இல்லை; கேட்டதும் இல்லை. இன்றைக்குத் தொண்ணூறு
ஆண்டுகளுக்கு முன்பு, 1925இல், தமிழ்ச் சமூகம் 
எவ்வளவு அறியாமை-மூடநம்பிக்கை-வறுமை-கல்வியின்மை 
நிறைந்ததாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கும் 
போதுதான், பெரியாரின் புரட்சியை அந்தக் காலச் சூழலுடன் 
பொருத்திப்பார்க்கும் போதுதான், சுயமரியாதைத் 
திருமணங்களின் மகத்துவம் புரியும்.  
--
ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது போல, சு.ம திருமணங்களில் 
பல்வேறு புரட்சிகரக் கூறுகள் அடங்கி இருந்தன.
(1) சம்ஸ்கிருத மந்திரங்கள் கிடையாது. (இதன் மூலம் 
சமஸ்கிருதம் தேவ பாஷை என்ற கருத்தியலின் மீது 
கத்தியைப் பாய்ச்சினார் பெரியார்.)
(2) பார்ப்பனப் புரோகிதர் கிடையாது. (இதன் மூலம் 
சூத்திரனை விடப் பார்ப்பான் உயர்ந்தவன்,பார்ப்பான் இல்லாமல் 
சூத்திரனால் வாழ முடியாது என்ற கருத்தியல் தகர்கிறது).
--
(3) நீதிமன்றங்கள் உறுதி செய்த சடங்கான சப்தபதி சடங்கு 
உள்ளிட்ட வேறு எந்தச் சடங்குகளும் கிடையாது.(இதன் மூலம் 
சூத்திரனின் பண்பாட்டு அடிமைத்தன  விலங்குகளை 
உடைக்கிறார் பெரியார்).
(4) மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலி கட்டுவது கிடையாது.
மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வார்கள், அவ்வளவே,
(இதன் மூலம் பெண்ணும் ஆணும் சமம்  என்று 
சமூகத்துக்கு உணர்த்துகிறார் பெரியார்).
--      
1925இல் சு.ம திருமணங்கள் சட்டப்படி செல்லாதவை. சொத்துத் 
தகராறு ஏற்பட்டு, நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தால்,
சு.ம திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகளுக்குச் 
சொத்துரிமை இல்லை என்பதே அன்றைய நிலை. இந்நிலை 
1967 வரை நீடித்தது. 1967இல் அறிஞர் அண்ணா முதல்வர்   
ஆனதும் சு.ம திருமணங்கள்  செல்லும் என்று சட்டம் 
இயற்றினார். நாற்பதாண்டு கால அவலம் முடிவுக்கு வந்தது.
--
1925-1947 காலக்கட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருத்த 
காலத்தில், சு.ம திருமணம் செய்வதற்கு, வலிமையான 
புரட்சிகர உணர்வு வேண்டும். பெரும் புரட்சிக்காரன்தான் 
சு.ம திருமணம் செய்ய முடியும். இன்று போல் அது 
சுலபம் அல்ல. செல்லுபடியாகாத திருமணத்தை, பெற்ற 
குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு இல்லாத திருமணத்தை,
மிகுந்த நெஞ்சுரமும் போர்க்குணமும் கொண்டவர்கள் 
மட்டுமே செய்ய முடியும். அங்கொன்றும் இங்கொன்றுமாக 
சு.ம திருமணங்கள் அபூர்வமாகவே நடைபெற்ற காலத்தில்,
ஒட்டு மொத்த சமூகத்தையும் பகைத்துக் கொண்டு, உற்றார் 
உறவினரைப் பகைத்துக் கொண்டு சு.ம திருமணம் செய்பவன் 
மாபெரும் சமூகப் போராளியாக இருத்தல் வேண்டும். 
அப்படியானால், பெரியாரின் புரட்சி 
எவ்வளவு பிரும்மாண்டமானது என்பதை இன்றைய 
தலைமுறை உணரவேண்டும்.
-- 
பெரியார் பண்பாட்டுப் புரட்சியை நடத்திக் கொண்டு 
இருந்தபோது, இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் என்ன 
செய்து கொண்டு இருந்தார்கள். வன்மத்துடனும் 
காழ்ப்பு உணர்ச்சியுடனும் பெரியாரை வசைபாடிக் 
கொண்டு இருந்தார்கள். பார்ப்பன காங்கிரசுடன் சேர்ந்து 
கொண்டு,கட்சி அணிகளிடம் திராவிட இயக்கத்தின் 
மீதான வன்மத்தை வளர்த்துக் கொண்டு இருந்தார்கள்.
இதன் மூலம் சமூகப் புரட்சியில் இருந்து அன்னியப்பட்டு 
நின்றார்கள்.
​------------------------------------------------------------------------------------------
பகுதி: இரண்டு முற்றியது. அடுத்து பகுதி மூன்று.
-----------------------------------------------------------------------------------------
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
*************************************************************888   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக