செவ்வாய், 17 மார்ச், 2015

மார்க்சிஸ்ட்களின் தலையை வழுக்கை ஆக்கிய
மூன்று உலகக் கோட்பாடு பற்றிய விவாதம்!
---------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------------------------
மூன்று உலகக் கோட்பாடு (Three Worlds Theory) என்பது
1970களில் மாவோ முன்மொழிந்த கோட்பாடு. சார்பியல் கொள்கை
(Theory of relativity) என்பது எப்படி ஐன்ஸ்டின் வகுத்த
கோட்பாடோ, அதுபோன்றே, மூன்று உலகக் கோட்பாடு
மாவோ வகுத்த கோட்பாடு ஆகும்.
--
வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் முதல்
உலகம் ஆகும். வல்லரசு அல்லாத பிற பணக்கார நாடுகள்,
குறிப்பாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகியவை இரண்டாம்
உலகம் ஆகும். இந்தியா போன்ற ஏழை நாடுகள் அதாவது
சுரண்டப்படும் எல்லா நாடுகளும் மூன்றாம் உலகம் ஆகும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் ஒன்றிணைந்து
முதல் உலக நாடுகளை எதிர்க்க வேண்டும். இதுதான்
மாவோவின் தத்துவம்.
--
இந்தக் கோட்பாட்டை ஐ.நா சபையில் அன்றைய சீனத்
துணைப் பிரதமர் டெங் சியோ பிங் விளக்கிப் பேசினார்.
( speech by Deng, Vice Premier,China in UN General Assembly
on April 1974). சீனாவின் அரசுத் தினசரியான பீப்பிள்ஸ்
டெய்லியில் இக்கோட்பாடு வெளியிடப் பட்டது.
--
மாவோ 1976 செப்டம்பரில்தான் மறைகிறார். அதற்குப் பல
ஆண்டுகளுக்கு முன்பே இக்கோட்பாடு மாவோவால்
வகுத்தளிக்கப் பட்ட ஒன்று. மாவோவின் முழு அனுமதி
யுடன்தான் டெங் இக்கோட்பாட்டை ஐநா சபையில்
விளக்குகிறார். எனவே இக்கோட்பாடு டெங் சியோ பிங்கின்
இடைச்செருகல் என்பது முழு மூடத்தனம் ஆகும்.
--
இக்கோட்பாடு வெளியிடப் பட்டதுமே, அல்பேனிய அதிபரும்,
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் ஆகிய அன்வர் ஹோக்ஸா
மாவோவைக் கண்டித்தார். மூன்று உலகக் கோட்பாட்டை
பிற்போக்கானது என்று நிராகரித்த அவர் அதற்கு மாற்றாக
வேறு ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். தம் வாழ்நாளின்
பெரும் பகுதி முழுவதும் ஸ்டாலினை ஆதரித்தும் மாவோவை
எதிர்த்துமே பேசி வந்த அன்வர் ஹோக்ஸா, மாவோவை
ஒரு மார்க்சிஸ்ட் என்றே ஒத்துக் கொள்ளாதவர் என்பது
குறிப்பிடத் தக்கது.
--
மூன்று உலகக் கோட்பாடு இந்தியாவில் நக்சல்பாரிகள்
நடுவே பெரும் கவனிப்பைப் பெற்றது. நக்சல்பாரிக்
குழுக்கள் நடுவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெருத்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
மூன்று உலகக் கோட்பாட்டை ஆதரிப்போர் எதிர்ப்போர்
என்று நக்சல்பாரி இயக்கமே இரண்டு முகாம்களாகப்
பிளவுபட்டது. விளைவு, மார்க்சிஸ்ட்கள் பலரின் தலை
வழுக்கை ஆனது.
--
உலகின் மாபெரும் மறக்க முடியாத நிகழ்வுகளுள் ஒன்று
என வர்ணிக்கப் படும், அமெரிக்க அதிபர் நிக்சனின் சீன
விஜயம் 1972 பெப்ரவரியில் நிகழ்ந்தது. நிக்சன்-மாவோ
சந்திப்பு, உடன்பாடு, வணிக, பொருளாதார, அரசியல்
ஒப்பந்தங்கள் ஆகியவற்றால் உலக சோஷலிச முகாம்
பெரிதும் அதிர்வுற்றது.பல சோஷலிச நாடுகள் மாவோவைக்
கண்டித்தன.இதனால் சோஷலிச முகாமில் மாவோ
செல்வாக்கு இழந்தார். இந்த நெருக்கடியில் இருந்து
மீளும் பொருட்டே, மாவோ மூன்று உலகக் கோட்பாடு
என்ற பெயரில் மார்க்சியமற்ற  ஒரு கோட்பாட்டை
முன்மொழிந்தார்.    
--
உலக சோஷலிச முகாம் முழுவதிலும் மாவோவின் இக்
கோட்பாடு விவாதிக்கப் பட்டது.விவாதித்த பின்னர்
நிராகரிக்கப் பட்டது. தோன்றிய வேகத்திலேயே
இக்கோட்பாடு மறைந்தும் விட்டது. இந்தியாவில்
மட்டும்தான் இது தலையில் தூக்கி வைத்துக்
கொண்டாடப் பட்டது. THE MOST DISCREDITED THEORY
OF THE WORLD என்று மார்க்சிய அறிஞர்களால்
வர்ணிக்கப் பட்ட இக்கோட்பாடு, சீனாவை விட,
இந்தியாவில்தான் அதிகமாகப் போற்றப் பட்டது என்பது
இந்திய மார்க்சியர்களின் 'தத்துவ அறிவு'க்கு ஒரு
சான்று.
---
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நக்சல்பாரிகள் மற்றும்
CPM அணிகள் நடுவே பெரும் பூகம்பமாய் வெடித்த
இக்கோட்பாடு பற்றி இளைய தலைமுறை மார்க்சிஸ்ட்களுக்கு
எதுவும் தெரியாது. மேலும் குழிப் பிணத்தைத் தோண்டி
எடுத்து மாரடிக்க எவரும் தயாராக இல்லை.
--------------------------------------------------------------------------------------------------------
***************************************************************888
    
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக